May 18, 2006

திராவிட தமிழன்?

திராவிட தமிழர்கள் வலைத்தளம் இது குறித்த அறிவிப்பை முத்துவின் தளத்தில் கண்டேன். முத்துவிடம் இருந்து இப்படியொரு முயற்சியை நான் எதிர்பார்க்கவில்லை! இன்றைய உலகமயச் சூழலில் இந்த வாதம் எந்த அளவிற்கு எடுபடும் என்றும் தெரியவில்லை. எனினும் இது குறித்து சிறிதளவாவது பரிசீலிப்பது நல்லது.

இந்தியா ஜாதிகளைக் கொண்ட சமூக அடித்தளத்தை கொண்டிருக்கிறது. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்காது. அதே போல் ஆரியர் - திராவிடர் என்ற வாதங்களும் 100 ஆண்டுகளாக உலா வருகிறது. குறிப்பாக பிராமணர்களை ஆரியர்கள் என்றும், பிராமணரல்லாதவர்களை திராவிடர்கள் என்றும் விளக்கம் சொல்லப்படுகிறது.

இதைத் தவிர வேறொரு விளக்கமும் சொல்லப்படுகிறது. திராவிடம் என்றால் ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களைக் கொண்டது. இதையே திராவிட நாடு என்று பெரியார் - அண்ணா போன்றவர்கள் அடையாளம் காட்டி. அடைந்தால் திராவிட நாடு இல்லையேல்... என்று ஒரு கோஷத்தை முன்வைத்தனர். இந்த கோஷத்தின் மூலம் விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக வீறுகொள்ள வேண்டிய இம்மக்களை ஆரியம் - திராவிடம் என்று பேசி வெள்ளையர்களுக்கு ஆதரவாக நின்றதைத்தான் வரலாறு கண்டது.
பெரியாரின் திராவிட நாடு ஒரு கனவாகவே மறைந்து விட்டது. அதே போல் அவரின் கடவுள் எதிர்ப்பும் அண்ணாவால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோஷத்தின் மூலம் சாம்பலாக்கப்பட்டது. தற்போது முத்து போன்ற நண்பர்கள் திராவிட தமிழன் என்று கூறுவது கண்டு நகைப்புத்தான் வருகிறது.

முதலில் இவர்கள் கூறும் இந்த சிந்தனை அதாவது, திராவிட தமிழன் என்று கூறுவதன் மூலம் முதல் பிரிவினையை செய்து விட்டார்கள். திராவிடத்திற்கு உள்ளேயே பிரிவினை. இதனை மற்ற திராவிடர்கள் (எனக்கு திராவிடத்தில் உடன்பாடு இல்லை) எப்படி உணர்வார்கள். அதாவது, மலையாளி திராவிடர்கள், கர்நாடக திராவிடர்கள், ஆந்திர திராவிடர்கள் இதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

அடுத்து திராவிட தமிழர்கள். தமிழர்கள் என்று இவர்கள் சொல்லும் போது யாரை தமிழர்கள் என்று சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை. ஜாதிய நிலப்பிரபுத்து முதலாளித்துவ சமூகத்தில் ஒரு ஜாதி இன்னொரு ஜாதிக்கு எதிராக களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இதில் எவ்வாறு ஒற்றுமைக் காண வேண்டும் என்று பார்ப்பதற்கு பதிலாக திராவிட தமிழகர்கள் என்று பொதுவாக கூறுவதன் மூலம் ஒற்றுமை உண்டாகுமா?

நேரடியாக கேள்வியை தொடுக்கிறேன். இன்றைக்கும் திமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராக தமிழர்களான மேல் ஜாதியினர் தான எதிராக இருக்கின்றனர். இதனை மறுக்க முடியுமா? எனவே இந்த பொதுவான வரையறை என்பது கூட சமூக தளத்தில் உள்ள முரண்பாட்டை மூடி மறைக்கும் மாயா வாதத்தைதான் கொண்டு வருகிறது.

சரி! இவர்களது தேவைக்கு திராவிட தமிழன் தேவப்பட்டார் அடுத்து ஆரிய தமிழனும் வருவான், அதற்கடுத்து திராவிட தமிழ் வன்னியன், திராவிட தமிழ் முதலியார், திராவிட தமிழ் செட்டியார், திராவிட தமிழ் தலித்... இப்படியே அடிக்கிக் கொண்டே போகலாம். அவரவரர் தரப்பிற்கு ஏதோ ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யும்.

இந்தியா 21ஆம் நூற்றாண்டை நோக்கி வேகமாக பயணிக்க வேண்டும் என்று போராடுகிற இந்த தருணத்தில், அதுவும் உலகமயச் சூழலில் ஜாதி, மதம் இவைகள் எல்லாவற்றின் கண்ணிகளும் வெகு வேகமாக வேறறுக்கப்பட்டு வருவதை இவர்கள் ஏன் உணரவில்லை? ஒரு தரப்போடு களம் காணுவது முரண்பாடுகளை அதிகரிக்கத்தான் உதவிடுமே தவிர, ஒற்றுமையை உருவாக்கிட உதவிடாது. எனவே இத்தகைய முயற்சியை இந்த நண்பர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இறுதியாக ஜாதி, மதம், இனம் இதன் பெயரால் தளம் இயங்குவது படிப்படியாக பாசிசத்திற்கு துணை புரியும்!

52 comments:

Muthu said...

கருத்துக்கு நன்றி.

முன் வைத்த காலை பின்வைப்பதாக இல்லை.

நோக்கம், கொள்கை எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

திராவிடர்களின் கடும் எதிர்ப்பாளரான தாங்கள் இப்படி சொல்வது எங்களுக்கு ஆச்சரியமும் இல்லை.

சந்திப்பு said...

முன் வைத்த காலை பின்வைப்பதாக இல்லை.
-----------------------------------
பெரியார் - அண்ணா போன்ற பெரும் திராவிட இயக்கத் தலைவர்களின் தோல்விக்குப் பின்னும் நீங்கள் இவ்வாறு அடம் பிடிப்பது சிறுபிள்ளைத்தனமானது...
-----------------------------------

திராவிடர்களின் கடும் எதிர்ப்பாளரான தாங்கள் இப்படி சொல்வது எங்களுக்கு ஆச்சரியமும் இல்லை.

-----------------------------------
முத்து! மனிதகுலம் முழுமையையும் நேசிப்பவன் என்ற முறையில் சொல்கிறேன். என்றைக்கும் திராவிட மக்களுக்கு மட்டுமல்ல; எந்த இனப்பிரிவினருக்கும் நான் எதிரியல்ல. உழைக்கும் மக்களின் ஒற்றுமைதான் இன்றைய பிரதான தேவை என்பதை உணர்த்தவே விரும்புகிறேன். இன்றைய உலகமயச் சூழலில் நசுக்கப்படும் மக்களின் பக்கமே நான் நிற்க விரும்புகிறேன். இதில் தமிழன், தெலுங்கன் போன்ற போர்வைக்குள் மறைந்துக் கொண்டு - இனத்தின் பெயரால் செய்யப்படும் அட்டூழியங்களுக்கு துணைப் போவதை விரும்பவில்லை. உதாரணமாக ஈழத்தில் பிரபாகரனின் எல்.டி.டி.ஈ. செய்வதும் இதுதான். தமிழன் தமிழனையே கொல்வது... இனத்தின் பெயரால் கட்டமைக்கப்படும் எந்த சமூகத்திலும் அமைதி நிலவாது. எனவே நான் அமைதியின் பக்கம்!
திராவிட தமிழனே! (தவறாக எண்ணிட வேண்டாம்)
பறையர், பள்ளர், சக்கிலியர், அருந்ததியர், குருமன்சு போன்ற ஒடுக்கப்படும் தலித் - பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்கு யார் தடையாக இருக்கிறார்கள்? (மலையாளியா? தெலுங்கனா?) அதை விடுங்கள் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டகச்சியேந்தல் - தேர்தல் நடத்தப்படாமல் தலித்துக்கள் அதிகாரத்திற்கு வராமல் யாரால் தடுக்கப்படுகிறது. திராவிட தமிழனே உங்கள் பதில் என்ன? நீங்கள் ஒடுக்கப்படுவர்கள் பக்கமா? ஒடுக்குபவர் பக்கமா?
-----------------------------------

இரா.சுகுமாரன் said...

//திராவிடத்திற்கு உள்ளேயே பிரிவினை.//

ஆம் உண்மைதான்.

//மலையாளி திராவிடர்கள், கர்நாடக திராவிடர்கள், ஆந்திர திராவிடர்கள் இதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.//

தேசிய இனம் என்பது என்ன என்பது தொடர்பாக மார்க்சு, எங்கெல்சு, லெனின் உள்ளிட்ட யாரும் வரையறுக்கவில்லை.

ஆனால், ஸ்டாலின் தேசிய இனம் என்பது, ஒரே மொழி, வரலாற்று ரீதியான நிலப்பரப்பு, கலாச்சாரம், ஒரே பொருளாதார சூழல் என்று வரையறுத்தார்.

எனவே தனி தேசிய இனமாக குறிப்பிடப்படுவது சரி. அவர் திராவிடன் என்ற வார்த்தையை மட்டுமே வைத்து இருக்கிறாரே தவிர மற்றவகையில் அவர் தமிழ் தேசியத்துக்குள் வந்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்.

சீனு said...

அட போங்க சார். தி.மு.க. ஆரம்பிக்கப்பட்ட பொழுதே திராவிடம் நீர்க்கத்துவங்கிவிட்டது. இப்பொழுது அது வெறும் கானல் நீர்.

இரா.சுகுமாரன் said...

//பறையர், பள்ளர், சக்கிலியர், அருந்ததியர், குருமன்சு போன்ற ஒடுக்கப்படும் தலித் - பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்கு யார் தடையாக இருக்கிறார்கள்? (மலையாளியா? தெலுங்கனா?) அதை விடுங்கள் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டகச்சியேந்தல் - தேர்தல் நடத்தப்படாமல் தலித்துக்கள் அதிகாரத்திற்கு வராமல் யாரால் தடுக்கப்படுகிறது. திராவிட தமிழனே உங்கள் பதில் என்ன? //

இங்கே பேசப்படுவது (திராவிட)தமிழினம் பற்றி. இது தமிழனத்திலுள்ள இந்துத்துவ சாதிய முரண்பாடு இது இன முரண்பாடு அல்ல.

அதனால் இங்கு இந்துதுவததை ஒழிப்போம் என்ற கோரிக்கையை வைக்கலாம்.

சந்திப்பு said...

நன்றி சுகுமாறன்.

நீங்கள் கூறியிருப்பது மிகச் சரியானது. தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து லெனின் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். நான் ஒன்றிரண்டு புத்தகங்களை படித்துள்ளேன். இதில் நான் புரிந்து கொண்டு ரஷ்யாவில் ஜாரின் ரஷ்ய தேசிய இனம் மற்ற தேசிய இனங்களை அனைத்து விதத்திலும் மிகக் கடுமையாக ஒடுக்கியது. இன்றைக்கு கருப்பர்களை அமெரிக்கா - பிரான்சு போன்ற மேலை நாடுகள் ஒடுக்குவது போல். அநேகமாக இதைவிடக் கொடுமையானது. ஆனால், இந்தியச் சூழலில் எந்த இனமும் யாரையும் ஒடுக்குவதில்லை. இங்கே ஒடுக்குமுறை என்பது ஜாதிய வடிவில் அமைந்துள்ளது. அத்துடன் வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று கோசம் போட்டவர்கள்தான் இன்றைக்கு மத்தியிலும் செம்மையான ஆட்சி அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள் என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள்! இதனால் திராவிட தெலுங்கர்களும், திராவிட மலையாளிகளும் வருத்தத்தில் இருப்பதாக கேள்வி! சரியா சுகுமாறன்.

லக்கிலுக் said...

/////முதலில் இவர்கள் கூறும் இந்த சிந்தனை அதாவது, திராவிட தமிழன் என்று கூறுவதன் மூலம் முதல் பிரிவினையை செய்து விட்டார்கள். திராவிடத்திற்கு உள்ளேயே பிரிவினை. இதனை மற்ற திராவிடர்கள் (எனக்கு திராவிடத்தில் உடன்பாடு இல்லை) எப்படி உணர்வார்கள். அதாவது, மலையாளி திராவிடர்கள், கர்நாடக திராவிடர்கள், ஆந்திர திராவிடர்கள் இதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.////

அவர்கள் வேண்டுமானால் திராவிடத் தெலுங்கர்கள், திராவிட கன்னடத்தார்கள், திராவிட மலையாளிகள் என்று Blog ஆரம்பித்துக் கொள்ளட்டுமே.....

ஆரிய மாயையை விரட்டவே இந்த அமைப்பு தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது....

நாளுக்கு நாள் இந்த அமைப்புக்கு கூடிவரும் ஆதரவே எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி!!!

சந்திப்பு said...

சீனு அப்படிப் போடுங்க!....

அருண்மொழி said...

சந்திப்பு அவர்களே,

முத்து எதற்காக வலைத்தலத்தை ஏற்படுத்தினார் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஒத்த கருத்துடையவர்கள் கூடும் இடம் அது. "திராவிடம் சம்பந்தப்படட விஷயங்களை உலகிற்கு கொண்டுச்செல்ல் வாருங்கள் திராமுமு வலைத்தளம்.

சாதி,மதம்,ஊர் ஆகியவை தடையில்லை.பிறப்பால் எந்த சாதியில் இருந்தாலும் தமிழரின்,திராவிடரின் இருப்பை அங்கீகரிக்கும் எவரும் இதில சேரலாம்."

பல நாடுகளில் இருந்து தங்களுடைய கருத்துக்களை முன் வைக்கப்போகின்றனர். இது எப்படி தவறான செயல் ஆகும் என எனக்கு தெரியவில்லை. எங்களை புலிகளுடன் ஒப்பிட்டு பேசுவது கொஞ்சம் ஓவராக தெரிகிறது.

//பறையர், பள்ளர், சக்கிலியர், அருந்ததியர், குருமன்சு போன்ற ஒடுக்கப்படும் தலித் - பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்கு யார் தடையாக இருக்கிறார்கள்?//

உங்களின் கோபம் புரிகிறது. திராவிட இயக்கங்கள்தான் இவைகளுக்கு காரணம் என்று சொல்கிறீர்களா?. ஆம் என்றால் இதை பற்றி ஒரு பதிவிடுங்கள். கலந்துரையாடுவோம்.

இதை ஒரு விவாதக்களமாகவும் எடுத்துக்கொள்ளலாம். இங்கு யாரும் வீச்சரிவாளுடன் வரவில்லை.

சந்திப்பு said...


ஆரிய மாயையை விரட்டவே இந்த அமைப்பு தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது....

Lucky Look
இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி சொல்லப் போறீங்களோ! திராவிட கொழுந்து கலைஞர் கருணாநிதியும், திராவிட தாய் (ஆரிய) அம்மாவும் பா.ஜ.க. எனும் ஆரிய கட்சியோடு கொஞ்சி, குலாவி - ஒட்டி உறவாடியதை மறந்து விட்டீர்களா? ஏன் மோடித்துவ வெறியாட்டம் பாசிச வெறியாட்டம் போட்டபோது கூட கலைஞர் மவுனமாக இருந்தாரே இதையெல்லாம் மறந்து விட்டீரா? அல்லது அம்மா அந்த மோடிக்கு மூடிசூட்ட சென்றாரே இதைதான் மறந்து விட்டீரா?

குமரன் (Kumaran) said...

சந்திப்பு அவர்களே. உங்களை 'புனித பிம்பம்' என்று முத்து (தமிழினி) சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அப்படி செய்யாமல் திராவிடர்களின் கடும் எதிர்ப்பாளர் என்று உங்களுக்கு முத்திரை குத்துகிறார். வியப்பாக இருக்கிறது. அவர் சொல்லும் கருத்துக்கு ஒரு எதிர் கருத்து வந்தால் எதிர் கருத்து சொல்பவருக்கு ஏன் இப்படி முத்திரை குத்துகிறாரோ? அப்படி செய்யும் போது மற்றவருக்கும் அவருக்கும் என்ன வேறுபாடு?

இரா.சுகுமாரன் said...

//தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து லெனின் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.//

ஆனால் தேசிய இனம் எது என அவர் வரையறை செய்யவில்லை. அதை ஸ்டாலின் தான் செய்தார்.

சந்திப்பு said...

சுகுமாறன் இந்துத்துவத்தை ஒழிப்போம். இந்த கோஷத்தை மிக வலுவாக கொண்டு சென்றிட வேண்டியுள்ளது. இந்துத்துவத்தை முற்றிலும் வேறறுக்கும் வரை. ஆனால், இவர்களின் திராவிட தமிழன் முழக்கமே இந்துத்துவத்திற்கு (மனுவாதத்திற்கு) உரம் போடுவது போல் உள்ளது. அதனால்தான் இந்த தளத்தையே, இந்த கருத்தையே கைவிடுங்கள் என்று கூறுகிறேன்.

Muthu said...

லக்கிலுக்,

விவாதம் வேண்டாம்.நண்பர் சந்திப்பை பொறுத்தவரை அவர் திராவிடத்தை வெறுத்தாலும் நாம் தோழர்களை வெறுப்பதாக இல்லை.

தோழர்களுக்கு போகிற போக்கில் கிண்டல் அடிப்பவர்களுக்கு பதில் கொடுக்கவேண்டியதின் முக்கியத்துவம் தெரியாது.

ஆகவே லக்கிலுக் விவாதம் வேண்டாம்

Muthu said...

அருண்மொழி.

நன்றி...

சந்திப்புவின் கருத்துக்களுக்கு பதில் சொல்லும் இடமாகவும் உண்மையை தேடும் இடமாகவும் திராமுமு வலைத்தளம் இருக்கும்.

முத்துகுமரன் said...

சந்திப்பு,

தேசிய இனங்களின் எழுச்சி என்பது வர்க்கப்போராட்டத்திற்கு எதிரானதும் சமத்துவத்திற்கு எதிரானதும் என்று கருதுவீர்களேயானால் மேற்கொண்டு பேச எதுவும் இல்லை.

விரிவாக பின்பு பதிலிடுகிறேன்

சந்திப்பு said...


அப்படி செய்யும் போது மற்றவருக்கும் அவருக்கும் என்ன வேறுபாடு?

நன்றி குமரன். முத்து ஒரு வேளை உணர்ச்சிவசப்பட்டு பதிந்திருக்கலாம் என்றே இதை கருதுகிறேன். நான் தெளிவாக கூறியுள்ளேன். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் போற்றுதலுக்கு உள்ளானவையே. இதில் ஒடுக்கப்பட்டவர்கள் (தொழிலாளி - முதலாளி) பக்கம் நிற்பதும். மொத்த சமூகத்தையும் மேம்படுத்துவதே இன்றைய தேவை!

இரா.சுகுமாரன் said...

//திராவிட தமிழன் முழக்கமே இந்துத்துவத்திற்கு (மனுவாதத்திற்கு) உரம் போடுவது போல் உள்ளது.//

திராவிடம் ஆரியத்தின் சீரழிப்பால் சாதியத்தை உள்வாங்கியது என்பது உண்மை தான்.

ஆனால் அவர் சொல்லும் "திராவிட தமிழன் முழக்கம்" மனுவாதம் அல்ல.

சந்திப்பு said...


தேசிய இனங்களின் எழுச்சி என்பது வர்க்கப்போராட்டத்திற்கு எதிரானதும் சமத்துவத்திற்கு எதிரானதும் என்று கருதுவீர்களேயானால் மேற்கொண்டு பேச எதுவும் இல்லை.

முத்துக்குமரன். நான் ஒருபோதும் அப்படி நினைக்கவில்லை. நிச்சயம் ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படும் தேசிய இனங்களிடையே எழுச்சிதேவைத்தான். ஆனால் இங்கே இந்திய சூழலில் இனவாதம் பேசுவது என்பது வர்க்கப் போராட்டத்திற்கு நிச்சயம் ஊறு விளைவிக்கக்கூடியதும், குழப்பம் உண்டாக்கக்கூடியதும்தான். பொதுவாக தேசிய இனம் குறித்த விவாதமே ரஷ்யாவில் சோசலிச கட்டமைப்பு உருவானதற்கு பின் உருவானதுதான். ரஷ்ய சூழலும், ஐரோப்பிய சூழலும், இந்திய சூழலும் வேறு வேறானது. எனவே எந்தச் சூழலில் எந்த கோஷத்தை முன் வைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது முற்போக்கானதா? அல்லது ஊறுவிளைவிப்பதா என்பதை தீர்மானிக்க முடியும். அந்த அடிப்படையில் இந்திய சூழலில் திராவிட - தமிழ் தேசியங்கள் குழப்பம் விளைவிப்பவை. இது சமூகத்தை பின்னுக்கு இழுப்பவைதான்.
நன்றி முத்துக்குமரன்.

சந்திப்பு said...


ஆனால் அவர் சொல்லும் "திராவிட தமிழன் முழக்கம்" மனுவாதம் அல்ல.

சுகுமாறன் நானும் அவ்வாறு கருதிட வில்லை. என்னுடைய வாதம் இதுதான்.
1. இனத்தின் அடிப்படையில் கருத்தை முன் வைப்பது. இன மோதல்களை உருவாக்கிடவே செய்யும்.
2. ஒருவேளை இன ஒடுக்கல் இருந்தால் அதனை முன் வைக்கலாம். அது தவறில்லை.
3. இங்கே இவர்கள் கூறுவதெல்லாம் பிராமணீத்துக்கு எதிரான வாதம் என்று கூறிக் கொண்டே, தங்களையறியாமல் தவறான பாதைக்குச் செல்வது. இது இந்திய சூழலில் பல முரண்பாட்டை உருவாக்கிடும்.
4. உலகமயச் சூழலில் உலகளாவிய கார்ப்பரேட் சதிகளுக்கும், சுரண்டலுக்கும் எதிராக அனைத்து தரப்பினரையும் அணிதிரட்டுவதுதான் இன்றைய பிராதான கடமையாக இருக்கும். எனவே இந்த போராட்டத்தை - சூழலை திசை திருப்பவதாக இத்தகைய இனவாதம் மாறிவிடக் கூடாது!

சந்திப்பு said...


ஒத்த கருத்துடையவர்கள் கூடும் இடம் அது. "திராவிடம் சம்பந்தப்படட விஷயங்களை உலகிற்கு கொண்டுச்செல்ல் வாருங்கள் திராமுமு வலைத்தளம்.

சாதி,மதம்,ஊர் ஆகியவை தடையில்லை.பிறப்பால் எந்த சாதியில் இருந்தாலும் தமிழரின்,திராவிடரின் இருப்பை அங்கீகரிக்கும் எவரும் இதில சேரலாம்."

நன்றி அருள்மொலி.

தங்களது எண்ணம் சிறப்பானது. அதாவது ஒத்த கருத்தின் அடிப்படையில் இணைவது. செயல்படுவது. இந்த தளத்தின் நோக்கம் இது மட்டும்தானா? என்பதை முத்து விளக்கிட வேண்டும்.

இது இயல்பாகவே ஆரியருக்கு எதிரான கங்குகளை கக்குவதாகதான் இருக்கும். அதாவது மோதலுக்கு அடிபோடுவது. அடுத்து நீங்கள் தமிழன் என்று பொதுவாக கூறுகிறீர்கள். இதற்கு ஏதாவது வரையரை கூற முடியுமா? பிராமணர்களை நீங்கள் இந்த தமிழ் எல்லைக்குள் அடைக்கிறீர்களா? இதை முத்து ஏற்றுக் கொள்கிறாரா?

உலகம் முழுவதும் நடைபெறும் இன மோதல்களால் மக்கள் மாண்டுக் கொண்டு இருப்பதை நீங்கள் அறியவில்லையா? இதுபோன்ற சிறு சிறு விஷயங்கள்தான் பெரிய விஷயமாக மாறுவதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே எந்தவிதமான இன துவேஷத்திற்கும் இடம் கொடுத்திடக் கூடாது.

இரா.சுகுமாரன் said...

//இனத்தின் அடிப்படையில் கருத்தை முன் வைப்பது. இன மோதல்களை உருவாக்கிடவே செய்யும்.//

தேசிய இனக்கூறுகள் கூர்மை அடைவது என்பது தவிர்க்க முடியாதது.

சந்திப்பு said...


விவாதம் வேண்டாம்.


முத்து விவாதம் வேண்டாம் என்றால், பின் எதற்காக நீங்கள் ஒரு தளத்தை ஆரம்பிக்கிறீர்கள்! அதில் நீங்கள் மட்டுமே (அதாவது திராவிட தமிழகர்கள்) மட்டுமே கொஞ்சிக் கொள்வதற்கா?

முத்துகுமரன் said...

//அந்த அடிப்படையில் இந்திய சூழலில் திராவிட - தமிழ் தேசியங்கள் குழப்பம் விளைவிப்பவை.//

நன்றி சந்திப்பு.

சந்திப்பு said...

சுகுமாறன்

ரஷ்யாவில் தேசிய இனம் குறித்து லெனின் முன்வைத்த திட்டத்தால்தான் பல தேசிய இனங்கள் ரஷ்யாவுடன் இணைந்தன. அதே சமயம் சில தேசிய இனங்கள் பிரிந்தும் சென்றன. இன்றைய அனுபவம் காட்டுவதென்ன? ரஷ்யாவோடு தேசிய இனங்கள் ஒற்றுமையாக இருக்கும் போது அந்த தேசிய இனங்களின் வளர்ச்சி எப்படி இருந்தது? இன்றைக்கு எப்படி இருக்கிறது?

அதே போல்தான் இங்கும். (நான் இந்திய சூழலை மட்டுமே பேசுகிறேன்) தனித்தனி தேசிய இனங்களின் கூறுகள் வலுவடைந்தால், மோதல்களும், வன்முறையும்தான் பெருகிடுமே ஒழிய... எதையும் சாதிக்க முடியாது. இதைத்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்பார்த்து வருகிறது. இன அடிப்படையிலான மோதல் ஏகாதிபத்திய கழுகுகளுக்குதான் இறையாகும்.

முத்துகுமரன் said...

//முத்து விவாதம் வேண்டாம் என்றால், பின் எதற்காக நீங்கள் ஒரு தளத்தை ஆரம்பிக்கிறீர்கள்! அதில் நீங்கள் மட்டுமே (அதாவது திராவிட தமிழகர்கள்) மட்டுமே கொஞ்சிக் கொள்வதற்கா? //.

நட்பு முரண்கள் பகை முரண்களாகாது இருக்கத்தான். ஓரிரு வாக்கியங்களில் இந்த முரண்களை நீக்கிவிட முடியாது. சில நேரங்களில் மவுனம் என்பது அத்தியாவசியமாக இருக்கிறது. உங்கள் எதிர்ப்பை ஆரோக்கியப்பூர்வமாக அணுகுவதன் வெளிப்பாடுதான் இது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக எழும்பும் இரண்டு குரல்கள் எதிரெதிராக நின்று ஒலித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். மற்றபடி கண்ணே மணியே என்பதற்காகவும் சொகமாக முதுகு சொறிந்து விடுவதற்காகவும் ஏற்படுத்தவில்லை இந்த வலைத்தளம்.

யாருக்கும் காவடி தூக்குவது என்பதும் அதன் நோக்கமுமல்ல. காரண காரியமின்றி கலைஞரையோ திமுகவிற்கோ சப்பைக்கட்டு கட்ட போவதில்லை. இது ஒரு நண்பர்களுக்குள்ளான ஒருங்கிணைவு. அனைவருக்கும் சுயமான கருத்துகள் இருக்கிறது. சிந்தனைகள் இருக்கிறது. அதை விவாதித்து கொள்ள அடுத்தகட்டத்திற்கு சிந்தனைகளை நகர்த்திச் செல்ல ஒரு கருத்து பகிர்விடம்தான். தயக்கத்தின் காரணமாக கருத்தியல் தளத்தில் இயங்காமல் இருக்கும் நண்பர்களுக்கு களம் அமைக்கத்தான் இது. முற்றிலும் பன்முகத் தன்மை உடையது. அனைத்தின் ஆதாரமும் தமிழும் தமிழர் நலனும். தமிழோடு ஐக்கியப்படுத்தி கொள்ள, அடையாளப்படுத்தி கொள்ள விரும்பும் யாரும் இணையலாம். இது சாதி அடிப்படையில் அமைந்தது அல்ல.

Anonymous said...

சந்திப்பு,
தமிழில் என்னால் தட்டச்ச மிகவும் சிரமமாக உள்ளது.இருந்தாலும் ஒன்று மட்டும் சொல்ல விழைகிறேன்.

தவராக நினைக்கவேண்டாம்,நீங்கள் இடதுசாரித் தத்துவதையே சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டீர்கள் என அஞ்சுகிறேன்.

பார்ப்பனர்கள் யார்?

இந்தியாவில் பார்ப்பனர்கள் என்பவர் Status Group Capitalists என்று Max Weber என்பவர் தெளிவாக எழுதியிருக்கிறார்.(இதைத்தொட்டால் எங்கோ போகும். நேரமும் பொறுமையும் இல்லை ஐயா, மன்னிக்கவும்)

பார்ப்பனீய எதிர்ப்பை நீங்கள் ஆதரிக்காமல் இருப்பது என்பது உங்கள் விருப்பம். ஆனால் அந்த முயற்ச்சியைக் கைவிட வேண்டுவது, மிகப்பெரிய (கண்டிக்கப்பட வேண்டிய)முரண்பாடு என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

Muthu said...

குமரன்,

சந்திப்பு திராவிட இயக்கத்தின் கடும் எதிர்ப்பாளர் என்று சொல்வதில் என்னங்க ஆத்திரம் வேண்டி கிடக்கு?

ஏற்கனவே எனக்கும் அவருக்கும் இதில் பல விவாதங்கள் நடந்துள்ளது.ஆகவே அதை சொன்னேன்.

இதுவெல்லாம் தெரியாமல் வந்து ஏதோ கருத்து சொல்வதால்தான் நான் அவர்களை புனித பிம்பங்கள் என்கிறென்.

நண்பர் சந்திப்பு கண்டிப்பாக புனித பிம்பம் கிடையாது.

Muthu said...

சந்திப்பு,


விவாதம் வேண்டாம் என்று நான் சொன்னதன் அர்த்தம் உங்களுக்கு புரியாதது துரதிஷ்ட வசமானது.

திராவிடர் பெயரில் இயக்கம் ஆரம்பித்தால் அது ஆரியர்களுக்கு எதிர்ப்பு என்று நீங்களாக முடிவு செய்து ஏதாவது எழுதினால் அதை எதிர்க்கவேண்டாம் என்பதற்கான நான் சொன்னேன்.

சந்திப்பு said...


நட்பு முரண்கள் பகை முரண்களாகாது இருக்கத்தான்.


இயக்கவியல் அணுகுமுறை! வாழ்த்துக்கள் முத்துக்குமரன்...

Muthu said...

சந்திப்பு.

உங்களுடைய கட்டுரையின் ஒவ்வொரு எழுத்துக்கும் பதில் உண்டு.
விரைவில் உண்டு.எமது புதிய வலைத்தளத்தில் தருவோம்.


ஆனால் ஒன்று

புனித பிம்பங்களின் வலையில் விழவேண்டாம்.:)))

Muthu said...

சந்திப்பு.

இதை எல்லாம் எதிர்பார்த்தே வந்துள்ளோம். வாருங்கள்.விவாதிப்போம்.

Muthu said...

சந்திப்பு.

உங்களையும் இந்த அமைப்புக்கு அழைப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

சந்திப்பு said...

முத்து கொஞ்சம் எமோஷனை குறைக்கவும். கருத்துக்கு எதிர் கருத்துதான் சரியானதே தவிர! விவாதிக்கவே கூடாது என்று கூறுவது சட்டமன்றத்தில் ஜெயலலிதா பாணியைத்தான் நினைவூட்டுகிறது!

சந்திப்பு said...


உங்களையும் இந்த அமைப்புக்கு அழைப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.


முத்து தங்களது அழைப்புக்கு மிகுந்த நன்றி!

என்னைப் பொறுத்தவரையில் ஜாதி, மத, இன அடிப்படையில் இயங்கும் எந்த அமைப்பிலும், குழுவிலும் செயல்படுவது இந்த சமூக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்திட விரும்புகிறேன்.

எனவே, சமூகத்தில் சுரண்டப்படும் மக்களை சுரண்டலில் இருந்து பாதுகாத்து ஒரு சோசலிச சமூகத்தை கட்டியெழுப்பிட வர்க்க ரீதியான ஒற்றுமையை அரசியல் ரீதியாக வளர்த்தெடுப்பதே தலையாய கடமை!

எனவே, உலகமய ஏகாதிபத்திய சுரண்டல் தங்கள் வலையை வேகமாக உழைக்கும் மக்கள் மீது விரித்து வருகிறது. இந்த வலையில் இருந்து மக்களை மீட்டெடுத்து சுரண்டலற்ற, ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்காத ஒரு மாபெரும சமூக அமைப்பை ஏற்படுத்திட உங்களைப் போன்றவர்கள் பாடபட வேண்டும் என்று விரும்புகிறேன்.

உண்மையிலேயே இந்த சமூகத்தை மகத்தானதாக மாற்றிட, பல தரப்பினரையும் ஒன்றினைத்திட சோசலிச சித்தாந்தத்தை விதைத்திட நீங்களும் தற்போது நீங்கள் திட்டமிட்டிற்கும் திராவிட - தமிழர் மாயையில் இருந்து விடுபட்டு, அந்த தளம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Muthu said...

சந்திப்பு.

உங்கள் பதிவில் உள்ள எமோசன்கூட என் பதில்களில் இல்லை.:))

குமரன் (Kumaran) said...

//உண்மையிலேயே இந்த சமூகத்தை மகத்தானதாக மாற்றிட, பல தரப்பினரையும் ஒன்றினைத்திட சோசலிச சித்தாந்தத்தை விதைத்திட நீங்களும் தற்போது நீங்கள் திட்டமிட்டிற்கும் திராவிட - தமிழர் மாயையில் இருந்து விடுபட்டு, அந்த தளம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

//

ஆஹா. சந்திப்பு புனித பிம்பங்களின் வலையில் விழுந்துவிட்டாரே... ஐயகோ.

Muthu said...

சந்திப்பு.

1.எங்குமே இது ஆர்யர்களுக்கு எதிராக என்று குறிப்பிடபடவில்லை.

2. திராவிடம் என்பது இல்லை என்கிறீர்கள் நீங்கள்.இருக்கிறது என்கிறொம் நாங்கள்.

3.எமோசன் என்ற வார்த்தை எல்லாம் இங்கு அதிகம்.இதைப்பற்றிய என் அறிமுகபதிவை சரியாக படிக்காமல் நீங்கள் ஒரு பதிவு பொட்டதுகூட பிரச்சினை இல்லை.இன்னமும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் பேசுவது காமெடி.

விவாதம் வேண்டாம் என்று நான் கூறியதற்கு நான் ஏற்கனவே பின்னூட்டம் தந்துள்ளென். அதைபடிக்கவும்.உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக பதில் அளிக்கலாம்.என்ன அவசரம்?

Muthu said...

குமரன்,

நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.

Muthu said...

குமரன்,

சந்திப்பும் வுழுந்துட்டாரா...வுழுந்துட்டாரா..வுழுந்துட்டாரா....


வடிவேலு பாணியில் படிக்கவும்

சந்திப்பு said...

முத்து நீங்கள் செயல் தலைவராக இருப்பதை விட, கொ.பா.செ.வாக இருக்கலாம்!

Muthu said...

santhipu,

that post has been given to one Mr.neo

Anonymous said...

சந்திப்பு,

தமிழ்நாட்டில் அவன் அவன் சாப்பாட்டுக்கு சம்பாரிக்க தான் நேரம் இருக்கிறது.எவன் திராவிடம்-ஆரியன் கதைகளை பேசிக்கொன்டு இருக்கிறான் - அரசியல்வாதிகளையும் சில மடங்களையும் தவிர?

கொஞ்சம் நாளில் ஒன்றும் நடக்காது என்று தெரிந்தவுடன் போதை தெளிந்து விடும்.

"திராவிடம்" என்ற பெயர் வட-மொழி.சொந்தமாக பெயர் கூட இல்லாமல ஒரு "இனம்" இருக்கும்?

குழலி / Kuzhali said...

//"திராவிடம்" என்ற பெயர் வட-மொழி.சொந்தமாக பெயர் கூட இல்லாமல ஒரு "இனம்" இருக்கும்?//
சமுத்ரா இராமகி அய்யாவின் பதிவை இது தொடர்பான செய்திக்கு படிக்கலாம்.... திராவிடம் என்ற சொல்லாடலின் வரலாற்றை எழுதியுள்ளார், மேலும் சமுத்ராவின் சிறு வயதை(21 வயது) கணக்கில் கொண்டு இது மாதிரியான அவர்களது பேச்சை அரைவேக்காட்டு தனமான என்ற சொல்லாடலை தவிர்த்து அவரின் அறியாமையை விரைவில் தெளியும் என கருதுகிறேன்.

இந்த வயதின் துடிப்பு பேசுவதற்கு முன் யோசிக்க தோன்றாது,சரி பார்க்க தோன்றாது, எல்லாவற்றிற்கும் காரணம் திராவிட அரசியல் வாதிகள் தான் என்றும் கோபம் வரும், பல விடயங்கள் பார்க்க, படிக்க யோசிக்க தெளிவாகும். இது எப்படினு கேட்கின்றீரா நண்பர்கள் பலரின் அனுபவம் மற்றும் சொந்த அனுபவம் தான்

இனி சந்திப்பு அவர்களுக்கு, உலகில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் இந்திய தேசத்தில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் உண்டு, இங்கே திராவிடம்/தமிழ் எந்த இடத்திலும் தளத்திலும் சுரண்டலை அனுமதிக்கவில்லை, இன்னும் குறிப்பாக சொல்ல வருகிறேன், மார்க்சியமும் கம்யூனிசம் உலகலாவிய அளவில் உள்ள முதலாளி தொழிலாளி சுரண்டலை எதிர்த்து ஒரு ஆதர்ச சமுதாயத்தை உருவாக்க முயல்கிறது, இங்கேயும் அதே பிரச்சினைகள் ஆனால் அதன் வடிவம் வேறு, சுரண்டும்/ சுரண்டப்படும் சமுதாயங்கள் சாதியின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளன, இங்கே எந்த இடத்திலும் திராவிடம்/தமிழ் கருத்தாக்கங்கள் என்று கூறிக்கொண்டு ஒரு சாதிக்காரர்கள் மற்றொரு சாதிக்காரர்களை சுரண்டுவதை அனுமதிக்கவில்லை, அங்கே முதலாளி/தொழிலாளி வித்தியாசம் இங்கே ஆண்டை அடிமை வித்தியாசம், இன்னும் சரியாக சொல்லப்போனால் கம்யூனிசத்தின் மண்வாசனை வெளிப்பாடு தான் திராவிட/தமிழ் கருத்தாக்கம்...

கம்யூனிச,மார்க்சிய கோட்பாடுகள் இங்குள்ள பிரச்சினைகளுக்கேற்ற மாதிரி அமல்(implement) செய்யப்படவில்லையென்றால் ஆங்கிலப்படத்தை தமிழில் டப்பிங் செய்த மாதிரி தான் இருக்கும்.

தமிழ்- முகமூடி,குழலி பதிவுகளை முன்வைத்து என்று இது தொடர்பான பதிவை எழுத்தாளர் மாலன் எழுதியுள்ளார்....

மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

தமிழ் உணர்வு தமிழ் அறிவு இவற்றிடையே திட்டவட்டமான வேலிகள் கிடையாது. ஒன்றிலிருந்து கிளைப்பது மற்றொன்று. ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வது.

அதன் முழு பதிவின் சுட்டி இங்கே...

http://blog.360.yahoo.com/blog-ZNQAcr48eqejL3AYqfNnPeUWFtKeU4Rh?bid=219&yy=2006&mm=1&l=6&u=10&mx=32&lmt=5&p=156

Anonymous said...

பார்க்க:

கலைந்து போன திராவிடஸ்தான் கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20504155&edition_id=20050415&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20505061&edition_id=20050506&format=html

தொல்காப்பியத் தமிழன்
- சாமி சிதம்பரனார்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20506164&format=html

இரா.சுகுமாரன் said...

//தமிழ்நாட்டில் அவன் அவன் சாப்பாட்டுக்கு சம்பாரிக்க தான் நேரம் இருக்கிறது.எவன் திராவிடம்-ஆரியன் கதைகளை பேசிக்கொன்டு இருக்கிறான் - அரசியல்வாதிகளையும் சில மடங்களையும் தவிர?

ஆரியர்கள் ஆரிய உணர்வோடு தினமலரில் செயாவுக்கு ஆதரவு அளித்ததைப் போல, இனம் என்பது அதன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டுதான் உள்ளது.

//கொஞ்சம் நாளில் ஒன்றும் நடக்காது என்று தெரிந்தவுடன் போதை தெளிந்து விடும்.//

இது போதையல்ல, இன்றைய இடஒதுக்கீடு எதிர்ப்பு பிரச்சனைக்கூட அதன் தொடர்ச்சி தான்.

இது நீண்ட காலப்பிரச்சனை

இரா.சுகுமாரன் said...

இந்தியாவுக்கு ஒரே பிரதமர், ஒரே தேசியக்கொடி, ஒரே தேசிய கீதம், ஆனால் எங்கள் தமிழ்ப்படத்தை 7 வாரம் கழித்துத்தான் கர்நாடகாவில் ரிலீஸ் செய்யமுடியும். ஆனால் கோக், பெப்சி கம்பெனிகள் தங்கள் சரக்குகளை அங்கே விற்றுப் பணத்தை அள்ளிச் செல்ல முடிகிறது. இதற்குப் பெயர்தானா தேசிய ஒருமைப்பாடு?

- இயக்குனர் சீமான்

(இந்தியா டுடே தமிழ் மே 10, 2006 பக்கம் 5)

சல்மான் said...

// தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. //


நண்பர் குழலி,

இது சற்று மிகைப்படுத்தப்பட்டது போலில்லை?
வரலாற்றின் பக்கங்களில் ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள் தங்களை ஒன்றினைத்து போராடும் தளமாக தமக்கு பொதுவாக இருந்தவற்றை துணைக்கு அழைத்து கொண்டார்கள்: மொழி, இனம், பாதிப்பு, என பல பல. ஆகவே, மொழியோ, இனமோ ஒரு ஒன்றிணைக்கும் ஆயுதமாக மட்டுமே பயன்பட்ட வேளையில், இங்கு நீங்கள், மொழியை ஒரு போராட்டத்துக்கான உந்துவிக்கும் காரணியாக உருவகப்படுத்துகிறீர்களே!

மேலும், சந்திப்பு, இதே கருத்தைதான் (கம்யூனிசம் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை உந்துவிக்கும் காரணி. மொழி/இனம், அந்த அடிப்படை காரணியை உருவாக்கி தராது) சொன்னார் என நினைக்கிறேன்.

நட்புடன்,
சல்மான்

Amar said...

//சமுத்ரா இராமகி அய்யாவின் பதிவை இது தொடர்பான செய்திக்கு படிக்கலாம்.... திராவிடம் என்ற சொல்லாடலின் வரலாற்றை எழுதியுள்ளார், மேலும் சமுத்ராவின் சிறு வயதை(21 வயது) கணக்கில் கொண்டு இது மாதிரியான அவர்களது பேச்சை அரைவேக்காட்டு தனமான என்ற சொல்லாடலை தவிர்த்து அவரின் அறியாமையை விரைவில் தெளியும் என கருதுகிறேன்.//

திராவிடம் என்பது வடமொழி பெயர் தான் அய்யா.கொஞ்சமாவது பிஷப்.ராபர்ட்டுக்கு நன்றி காட்டுங்களேன்!
அவர் எழுதிய Comparative Grammar of Dravidian or South Indian Family of Languages - Second Edition 1875 - Reprinted by the University of Madras, 1961) என்ற புத்தகத்தில் அவரே ஏற்றிகொண்டுள்ள உன்மைதான் இது.அதாவது எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்ஸ்கிரத அறிஞர் குமரிலா என்பர் தமிழ் தெலுங்கு மொழிகளை "ஆந்திரதிராவிடபாஷா" என்று குறிப்பிட்டுள்ளதை ராபர் கால்டுவெல் அவர்கள் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

வயது பற்றிய பேச்சை நிறுத்துங்கள்.அது உங்களுக்கு தெவையில்லாதது.பேசிக்கொண்டு இருக்கும் விஷயத்தை பற்றி மட்டும் எழுதினால் போதுமானது - அது தான் நாகரீகமான பழக்கம் கூட - எங்க ஊரில்.

//ஆரியர்கள் ஆரிய உணர்வோடு தினமலரில் செயாவுக்கு ஆதரவு அளித்ததைப் போல, இனம் என்பது அதன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டுதான் உள்ளது. //

இதற்க்கு சாதி அரசியல் என்ற மற்றோரு பெயரும் உண்டு.எல்லோரும் ஒரே சாக்கடை தான்.இந்த சாக்கடை நாறுகிறது என்றால் அந்த சாக்கடையை பார் என்றால் என்ன செய்வது.....

சந்திப்பு said...


இன்னும் சரியாக சொல்லப்போனால் கம்யூனிசத்தின் மண்வாசனை வெளிப்பாடு தான் திராவிட/தமிழ் கருத்தாக்கம்...

குழலி இப்படிச் சொல்லிக் கொண்டுதான் சமூக முன்னேற்றத்திற்கு பலபேர் காலை வாரிக்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில்தான் இதனையும் பார்க்க முடிகிறது. கலைஞரும் அடிக்கடி நானும் பொதுவுடைமைவாதி, இடதுசாரிதான் என்று கூறிக்கொண்டே, கம்யூனிசத்தை வளராமல் பார்த்துக் கொண்டேன் என்று கூறுவதும் அவர்தான். இதுவெல்லாம் எழுதப்பட்ட வரலாறுகள். மறைக்க முடியாதது. மேலும் 1919இல் இருந்து தமிழகத்தில் திராவிடர்களின் ஆட்சிதான் (நீதிக்கட்சி ஆட்சி முதல் தற்போதைய கலைஞர் வரை) இருந்து வருகிறது. ஆனால் இன்னமும் திராவிட கருத்தாக்கவாதிகளால் ஜாதியத்திற்கு எதிரான உறுதியான நிலைபாட்டை எடுக்க முடியவில்லை. அமைச்சரவைகளே கூட ஜாதிய அடிப்படையில்தான் உருவாக்கப்படுகிறது. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியும் சாட்சிகளாய் உலா வருகிறது.

ஆனால், இந்தச் சூழ்நிலை வங்கத்திலோ, கேரளத்திலோ, திரிபுராவிலோ இல்லை. அங்கே பல வழிகளில் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மேம்பாடு அடைந்துள்ளனர். அதிகாரத்திற்கு வந்துள்ளனர். எனவே திராவிட கருத்தாக்கம் சமூக விடுதலைக்கு உதவாது. வர்க்க போராட்டம்தான் விடுதலை! எனவே திராவிட மாயையை விட்டொழியுங்கள். இது தமிழ் மக்களை புதை குழிக்கு தள்ளி விடும்.
நன்றி குழலி

இரா.சுகுமாரன் said...

///தமிழ்நாட்டில் அவன் அவன் சாப்பாட்டுக்கு சம்பாரிக்க தான் நேரம் இருக்கிறது.எவன் திராவிடம்-ஆரியன் கதைகளை பேசிக்கொன்டு இருக்கிறான் - அரசியல்வாதிகளையும் சில மடங்களையும் தவிர?///

//ஆரியர்கள் ஆரிய உணர்வோடு தினமலரில் செயாவுக்கு ஆதரவு அளித்ததைப் போல, இனம் என்பது அதன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டுதான் உள்ளது.//

//கொஞ்சம் நாளில் ஒன்றும் நடக்காது என்று தெரிந்தவுடன் போதை தெளிந்து விடும்.//

-//இது போதையல்ல, இன்றைய இடஒதுக்கீடு எதிர்ப்பு பிரச்சனைக்கூட அதன் தொடர்ச்சி தான்.

இது நீண்ட காலப்பிரச்சனை//-

உங்கள் பதில்
/இதற்க்கு சாதி அரசியல் என்ற மற்றோரு பெயரும் உண்டு.எல்லோரும் ஒரே சாக்கடை தான்.இந்த சாக்கடை நாறுகிறது என்றால் அந்த சாக்கடையை பார் என்றால் என்ன செய்வது...../

மீண்டும் நன்றாக படியுங்கள்

-/எவன் திராவிடம்-ஆரியன் கதைகளை பேசிக்கொன்டு இருக்கிறான்./-

என்று கேட்டதற்கு தினமலரை பாருங்கள் தெரியும் என்றேன். அதுதான் சாதிய சாக்கடையாக உள்ளது.

சந்திப்பு said...

நன்றி சாலமன்.