January 31, 2009

அனானியின் பின்னூட்டத்திற்கு சந்திப்பின் கண்ணோட்டம்

At 2:19 PM, Anonymous said...
அதெல்லாம் கெடக்கட்டும்னா.. ..நீங்க பேப்பர் வாங்கறேளா..இந்த Srilanka issue வுக்காக ஒரு பையன் உயிர மாச்சுண்டதாதகவல் வர்றதே.. நீங்க சித்த என்னன்னு கேட்டு எழுதப்படாதா..நன்னாஇருக்கு போங்கோ..

------------------------------------------
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குரனின் செயல் கடும் வருத்தத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றே. எனினும், தனிநபரின் இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட முடிவு... மேலும் சில உணர்வுகளை கிளறிவிடப் பயன்படலாம்! முற்போக்கு விதை தூவப்பட்ட மண் என்று பெருமையடித்துக் கொள்ளும் தமிழகத்தில் இவ்வாறான அரசியல் தற்கொலைகளும் மூடப்பழக்கத்தின் ஒரு வடிவமாகவே கருதுகிறேன். அரசியல் ரீதியாக - தனது கருத்துக்கு ஆதரவாக மக்கள் எழாதபோது ஏற்படும் விரக்தி கலந்த - உணர்ச்சி இதனை நோக்கி தள்ளியதோ என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. கொள்கை ரீதியாகவும் - அரசியல் ரீதியாகவும் - தத்துவார்த்த ரீதியாகவும் விவாதங்கள் இல்லாதபோது வெறும் இனவாத உணர்ச்சி மட்டுமே மேலிடும். இத்துடன் தனிநபர் வழிபாடும் மேலோங்கியிருப்பதைதான் அவ்வப்போது நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றது. அடுத்து நம்முடைய கலர் கலரான அரசியல்வாதிகள் இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வினை ஒன்றுபட்ட குரலோடு முன்வைப்பதற்கு மாறாக, தங்களது இனவாத அடையாள அரசியலுக்கு தூபம் போடுவதைத்தான் தமிழகத்தில் பார்க்க முடிகிறது. இலங்கையில் இனவாத பிரச்சனை கொழுந்து விட்டு எரிகிறது என்றால் தமிழகத்தில் தங்களது அடையாள அரசியலின் நெருக்கடியின் மணம் வீசுவதைத்தான் பார்க்க முடிகிறது. எனவே இலங்கை தமிழ் மக்களின் அரசியல் - பொருளாதார - சமூகப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தனி ஈழம் என்று முழக்கம் வைப்பதும், அதற்கு பயங்கரவாதத்தையே தனது தொழிலாய் மாற்றிக் கொண்ட எல்.டி.டி.இ.தான் தலைமை தாங்கும் என்று அதனை ஆதரிப்பதும், மறைமுகமாக ஆதரிப்பதுமாகவும், அங்கு சிங்கள இனவாதம் பேசினால் நாங்கள் என்ன குறைந்தவர்களா? என்று தமிழ் இனவாதம் பேசுவதும்தான் நடைபெறுகிறது. ஆனால் இதே எல்.டி.டி.இ.தான் இசுலாமிய தமிழ் மக்களுக்கும், மலையக தமிழ் மக்களுக்கும் எதிராக நின்றது என்பது மட்டுமல்ல அம்மக்கைளுயம் வேட்டையாடிது. அத்துடன் சக போராளி அமைப்பின் தலைவர்களையும் வேட்டையாடி தனது பயங்கரவாத குணத்தை வெளிக்காட்டியது. இதில் ராஜுவ் படுகொலையும் - 14 பேர் உட்பட பத்மநாப கொலையையும் தமிழ் மண்ணில் அரங்கேற்றியவர்கள்தான் இந்த பயங்கரவாதிகள் என்பதையெல்லாம் மறந்து விட்டு இன்றைக்கு கரடி போல் கத்துவதால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது. சந்தடி சாக்கில் புரட்சிகர அமைப்புகள்கூட மிகவும் பக்குவமாக தமிழ் இன அடையாளத்தை முன்வைத்துக் கொள்கிறது. பார்ப்பனீயம் எல்லாம் பேசி... தனது அணிகளை புல்லரிக்க வைக்கிறது. இந்த விசயத்தில் இதற்கான தீர்வு என்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிக அதிகாரங்களைக் கொண்ட தமிழ் மக்களுக்கான மாநில சுயாட்சியும் - இதில் அரசியல் - பொருளாதார - சமூக உரிமைகளை உள்ளடக்கியதாகவும் விரிவானதாகவுமான ஒரு அரசியல் தீர்வே பொருத்தமானது. இதனை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் இந்த போரில் தமிழ் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் உறுதியாக நிறைவேற்ற வேண்டும். எல்.டி.டி.இ. தொடர்ந்து தமிழ் மக்களின் ஆதரவை இழந்து... அம்மக்களை ஆயுத முனையில் கவசமாக முன்வைத்து செல்வதிலிருந்து தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு இவ்விசயத்தில் ராஜீய ரீதியில் தலையிட்டு - ஒரு அரசியல் தீர்விற்கான முன்முயற்சியை எடுத்திட வேண்டும். இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும். எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மிக அதிகமான அளவில் வெறியூட்டக்கூடிய முறையில் மிகைப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது. இதனை தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க அலறும் இந்த அரசியல் கட்சிகள்தான் இத்தகைய போதையூட்டும் வெறித்தனத்திற்கு தூபங்களைப் போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தங்களையும் இணைத்துக் கொண்டு குளிர் காய்பவர்கள் பலரும் உள்ளனர்...

January 22, 2009

எமிலி ஜோலாவின் காதல் கோமாளிகள்


எமிலி ஜோலா 19ஆம் நூற்றாண்டின் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர். பிரான்ஸ் தேசத்தை சேர்ந்த இவரது படைப்புகள் பிரஞ்சு மொழிக்கும், உலக இலக்கியத்திற்கும் சிறந்த பங்களிப்பாகும். தூய்மைவாத இயக்கத்தை சேர்ந்த இவரது படைப்புகள் பிரான்சில் பல அதிர்வுகளை உருவாக்கியது. இதனால் பல நேரங்களில் இவரது புத்தகங்கள் தடை செய்யப்பட்டதோடு தீக்கும் இரையாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாநா என்ற புதினம் அழியாப் புகழ்பெற்றதாக இன்னும் பேசப்பட்டு வருகிறது.


வ.உ.சி. நூலகம் சார்பில் வெளியான எமிலி ஜோலாவின் காதல் கோமாளிகள் எஸ். சங்கரன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 2004 இல் வெளிவந்தது. இப்புத்தகம் குறித்த அறிமுகத்தையும் - எனது விமர்சனத்தையும் இங்கு பகிர்ந்த கொள்கிறேன்.

காதல் கோமாளிகள் என்ற குறுநாவலின் மூலம் ஜோலா பிரஞ்சு தேசத்தின் உயர் நடுத்தர வர்க்கத்தின் போலியான வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறார். ஆக்டோவ் மூரட் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து புனையப்பட்ட இந்நாவலில் பல ஆண் - பெண் கதாபாத்திரங்கள் வந்துச் செல்கின்றன.

இவர்கள் அனைவரும் சமூகத்தில் தங்களை உயர்ந்த இடத்தில் உள்ளவர்களாக கருதிக் கொண்டவர்கள் என்பதுதான் வேடிக்கையானது. ஆக்டோவ் மூரட் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய மாளிகையைச் சுற்றிச் சுற்றியே கதை முழுவதும் நகர்கிறது. இந்த இடத்தை ஆக்டோவ் மூரட்டிற்கு - கம்பார்டன் அறிமுகப்படுத்தும் போது, "ரொம்ப வசதியான இடம், பெரிய மனிதர்கள் மட்டுமே தங்கும் இடம்" என்று கூறுவதோடு பெண் சம்பந்தப்பட்ட சமாச்சாரமே இங்கு கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார். அப்படி எதுவும் இங்கே நடக்கக்கூடாது என்று கூறுவதோடு, பிரான்சில் வெளியில் எல்லாம் கிடைக்கக்கூடியதே என்பதையம் அவர் சொல்லத் தவறவில்லை.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மேல் தளத்தில் தங்கியிருக்கும் மூரட் பெண்கள் விசயத்தில் அலை பாயும் மனதைக் கொண்டவர். அங்கே உண்மையான காதலர்களை காண்பது அரிதிலும் அரிதுதான். காதலையும், காதலர்களையும் தீர்மானிப்பது பணமாக இருந்தது. பணத்திற்காகவும் - அதிகமான வரதட்சணைக்காகவும் காதலை இழந்தவர்களை காண முடியும். அதில் ஒருவர்தான் மூரட்டின் நன்பர் கம்பார்டன். காஸ்பரின் என்ற பெண்ணை காதலித்தாலும் அவரை கைவிட்டு 30 ஆயிரம் பிராங்க் வரதட்சணைக்காக ரோசை கைப்பிடித்தவர்.

வரதட்சனை என்பது ஏதோ தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டும்தான் இருக்கிறது என்பதை பொய்யாக்கியது எமிலி ஜோலாவின் காதல் கோமாளிகள் நாவல். அநேகமாக உலகம் முழுவதுமே இப்படிப்பட்ட பல கட்டங்களை தாண்டித்தான் வரவேண்டியுள்ளது போலும், ஆம் வரதட்சணை என்பது கூட முதலாளித்துவம் பெற்றெடுத்த அம்சம்தானே!

அடுத்து இந்நாவலில் முக்கிய இடம் பெறுவது ஜாசரண்ட் குடும்பம், ஜாசரண்ட்டுக்கு இரண்டு பெண்கள் முதல்மகள் ஹால்டென்ஸ், இரண்டாவது மகள் பெர்த் பருவமடைந்த இந்த இரண்டு பேரையும் பத்திரமாக நல்லவொரு இடத்தில் கரை சேர்க்க வேண்டும் என்ற கவலை தாய் ஜாசரண்ட்டுக்கு. அவர்கள் குடும்பத்தில் வாட்டும் வறுமை ஒருபுறம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது மகள்களை பெரிய இடத்து வாலிபர்களிடத்தில் எப்படியெல்லாம் பேசி அவர்களை கைக்குள் கொண்டு வரவேண்டும் என்பதை தாயே தினந்தோறும் டியூசன் எடுக்காத குறையாக அர்ச்சித்துக் கொண்டேயிருப்பாள். இதில் ஒவ்வொருவரிடமும் ஒரு அனுபவத்தை கற்றுக்கொள்ளும் மகள்களின் செயல் பரிதாபத்தை வரழைப்பதாக இருந்தாலும் அக்கால சமூகத்தில் நிலவிய குடும்ப சூழ்நிலையை கண்முன்னே கொண்டு வருகிறது. இவர்கள் குறி வைக்கும் ஆண்கள் ஒவ்வொரும் குறி தவறிக் கொண்டே வருவார்கள் இதனால் பல நேரம் தாய் ஜாசரண்ட் மணம் வெறுத்துப் போய் மகளின் கையாகாலத தனத்தை திட்டித் தீர்ப்பாள். இறுதியில் இளைய மகள் பெர்த் அகஸ்ட்டியை கைப்பிடிப்பாள். இருப்பினும் இவர்களது மனவாழ்க்கையில் திருப்திகரமாக அமையவில்லை. பெர்த்தின் ஆடம்பரமான செலவுகள் அகஸ்டியை வாட்டியெடுப்பதும், அவளது செயல்களால் அவன் நிம்மதியிழப்பதும்... அவனது ஆண்மையை அவள் சந்தேகப்படுவதும் - சண்டையும் - சர்ச்சையுமாகவே இருக்கும்.

இந்நிலையில் ஆக்டோவ் மூரட் காத்திருந்த கிளிபோல அவளை கொத்திக் கொள்வதும்... அவனுடனான கள்ளக்காதல் வெளிச்சத்திற்கு வருவதால் அவனது கணவன் கொலை வெறியோடு அலைவதும்... இதனால் மனம் உடைந்து நொறுங்குகிறாள் பெர்த் அவள் மட்டுமல்ல. அவளது அம்மா ஜாசரண்ட்டும்கூடத்தான். பின்னர் பாதிரியாரிடம் சென்று உண்மைகளை கூறி பாவ மன்னிப்பு பெறுகிறாள் பெர்த்...

அந்த உயிர் குலக் குடியிருப்பில் இருந்த மேரியின் வாழ்க்கையும் ஆக்டோவ் மூரட்டிடம் சரணாகதியானது. மேரிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. இருந்தாலும் ஆக்டோவின் மீது அளவு கடந்த அன்பை பொழிந்தாள் மேரி. மேரிக்கும் அவரது கணவருக்கும் எட்டாம் பொருத்தமே நிலவியது (தினந்தோறும் சண்டைகள் நடந்துக் கொண்டேயிருக்கும்) இது கண்டு ஆக்டோவ் இரங்கினாலும்... மேரியை தன் வசப்படுத்திக் கொண்டான். மேரியும் ஆக்டோவுக்காக உண்மையான அன்பை செலுத்தினாள்.

இதேபோல் அந்த உயர்குல குடியிருப்பில் வேலை பார்த்து வந்த வேலைக்கார பெண்மணிகளின் லீலைகளும்... அங்கு வந்த உயர்குலச் சீமான்களின் கொட்டமும்... சகிக்க முடியாதது. இருந்தால் என்ன அந்த மாளிகையின் உள் அழகை யார் பார்க்கப் போகிறார்கள்? வெளியழகுத்தான் அதற்கு பெருமை சேர்த்துக் கொடுக்கிதே! அப்புறம் என்ன?

இருந்தாலும் ஆக்டோவ் வாலரிக்கும், ஜுசருக்கும் வலை வீசினான். ஆனால் இறுதி வரை வாலரி மாட்டவேயில்லை. ஜுசரோ ஆக்டோவிற்கு இடம் கொடுத்தாள். உறவு கொள்வதைத் தவிர வேறு எதை வேண்டுமானும் செய்துக் கொள் என்று தனக்கென ஒரு வரையறையை வைத்துக் கொண்டாள்.

இந்நிலையில் காஸ்பரினை காதலித்து கைவிட்ட கம்பார்டன் ஒரு கட்டத்தில் அவளோடு இணைந்து நிற்பதை ஆக்டோவ் காண்கிறான்.... இப்படித்தான் இந்த நாவல் முழுவதும் கதைகள் ஊடும் - பாவுமாக விரவிக் கிடக்கிறது. மொத்தத்தில் உயர் குலச் சீமான்களின் போலியான உணர்வற்ற - நடைபிணமான வாழ்க்கை எவ்வாறு அர்த்தமற்றதாகவும் - அவலம் நிறைந்ததாகவும் இருந்தது என்பதை கண்முன்னே கொண்டு வருகிறார் எமிலி ஜோலா...

ஓரிடத்தில் அந்த மாளிகையைப் பற்றி கூறும் போது... யார் வீடு கட்டினாலும் வெளியழகை மட்டும்தான் பார்த்துப் பார்த்து கட்டுகிறார்கள். ஆனால் உள்ளே அழகாக இருப்பது பற்றி கவலைப்டுவதில்லை என்று சொல்லிச் செல்வதே.... இந்த நாவலின் அச்சாணியாக சுழன்று சுழல்கிறது. ஒவ்வொருவரின் காதலும் எப்படி கோமாளித்தனமாக இருக்கிறது? அதில் அன்பும் உணர்ச்சியும் அற்ற காதலாக இருப்பதை நன்றாக படம் பிடித்துள்ளார் எமிலி ஜோலா.
அடித்தட்டு மக்களிடையே தங்களது வாழ்க்கைக்காக, வயிற்றுப் பிழைப்புக்காக செய்யப்படும் தவறுகளைக் கண்டு ஏளனமும் - ஏகடியமும் பேசும் உயர்குல சீமான்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை தனது இலக்கிய தொலைநோக்கி கொண்டு பார்க்கி்றார் ஜோலா.
கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் பெண்களையும் பொதுவாக்கி விடுவீர்கள் என்று பேசும் முதலாளித்துவ கூலி தத்துவவாதிகளைப் பார்த்து மார்க்ஸ் இவ்வாறு கேட்பார்: முதலாளித்துவம் அதனை ஏற்கனவே செய்து விட்டது என்று, அதாவது அனைத்தையும் வியாபார பொருளாக பார்க்கும் உங்களுக்கு பெண்களையும் அவ்வாறே பார்க்கத் தோன்றுகிறது என்று முகத்தில் அறைவார். எப்படி இந்த முதலாளித்துவ சமூகம் உறவுகளை சிதைக்கிறது - பணம் படுத்தும் பாடு எப்படிப்பட்டது என்பதையும் இங்கே அன்பை தேடுபவர்களுக்கு கிடைப்பதோ ஏமாற்றமே! என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. வாழ்த்துக்கள் ஜோலா!

தமிழில் இந்நாவலை மொழிபெயர்த்த எஸ். சங்கரன் பாராட்டுக்குரியவர். இருந்தாலும் மொழி நடையில் இன்னும் தளர்ச்சியிருக்க வேண்டும். ஒரு இறுக்கத்தை ஏற்படுத்துவது போன்ற உணர்வு மேலிடுகிறது. 80 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தை நல்ல முறையில் வடிவமைத்து வெளியிட்டுள்ளது வ.உ.சி. நூலகம், ஜீ.1, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை - 14, தொலைபேசி : 044-08476273, 9840444841 விலை ரூ. 30.

January 21, 2009

நயவஞ்சகமே, உன் பெயர்தான் முதலாளித்துவமா?

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல், புதிய தகவல் தொழில்நுட்பப் பொருளா தாரத்தில் இதுநாள்வரை வெளியில் தெரி யாது நடைபெற்றுவந்த ஊழல்களில் மாபெரும் கொள்ளையாகும். நிறுவனத் தின் கணக்குகள் பல ஆண்டுக் காலம் எவ்விதமான ஆய்வுக்கும் உட்படுத்தப் படாமல் மிகைப்படுத்தப்பட்டு காட்டப் பட்டிருப்பது நம்பமுடியாததாகும். இதன் பிரதானமான உரிமையாளர், நிறுவனத் தின் வருவாய் மற்றும் லாபம், கணக்குப் புத்தகங்களில் மிகப்பெரிய அளவில் மிகைப்படுத்திக் காட்டப்பட்டு வந்திருக் கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதானது, இந்நிறுவனத்தில் மிகப் பெரிய அளவில் கொள்ளை நடந் திருப்பதை மூடி மறைக்கும் விதத் திலேயே இருந்திருக்கிறது. 

பிரதமர், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத் தில் நடைபெற்றுள்ள ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரணை செய்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ‘மோசமான மோசடிகள் புலனாய்வு அலுவலகத்தை’ (ளுகுஐடீ-ளுநசiடிரள குசயரன ஐnஎநளவபையவiடிn டீககiஉந) கோரியிருக் கிறார். இவ்வாறு இதனைச் செய்திடும் அதே சமயத்தில், இதன் மூலம் மேற் கொள்ளப்படும் புலனாய்வானது, இந் நிறுவனத்தில் மோசடியாக செய்யப்பட்ட கணக்குகளை ஆய்வுசெய்வதோடு நின்றுவிடாது, மோசடி தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். சத்யம் நிறுவனத்தின் உரிமையாளரான ராம லிங்க ராஜு நிறுவனத்தில் வருவாய் அளவு 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள நிலையில், அவை கணக்குப் புத் தகங்களில் 24 சதவீதம் என்கிற அளவில் காட்டப்பட்டது என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கிறார். இவ்வாறாக சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இந்நிறுவனத்தில் மோசடி நடைபெற்றி ருக்கிறது. 

இந்நிறுவனத்தின் நிதிநிலைமை குறித்து ஒரு மிகைப்படுத்தப்பட்ட கணக்கு பொய்யாக வெளி உலகுக்குத் தெரியப் படுத்தப்பட்டதால், இந்நிறுவனத்தின் பங் குகளின் விலைகளும் பங்குச்சந்தையில் உயர்ந்த அளவில் இருந்திட வகை செய் தது. இதன்மூலம் இந்நிறுவனத்தின் பங் குகள் அதிக விலை போனது. இவ்வாறு மிகைப்படுத்தப்பட்ட விலைகளால் கிடைத்திட்ட லாபத்தைக் கொண்டு உண்மையான சொத்துக்களையும் வாங்கியிருக்க முடியும். 2001க்கும், நிறுவ னத்தில் மோசடி நடந்துள்ளது என்று வெளி உலகுக்குத் தெரியவந்த 2008 செப் டம்பருக்கும் இடையில் சத்யம் நிறு வனத்தில் ராஜு குடும்பத்தினர் பெற்றி ருந்த பங்குகள் 25.6 சதவீதமாக இருந் தது, 8.65 சதவீதமாக வீழ்ந்துவிட்டது. ராஜு குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு முன், 2009 ஜனவரியில் இது மேலும் வீழ்ச்சியடைந்து 5.13 சதவீதமாகக் குறைந்துவிட்டது. 

சத்யம் நிறுவனத்தின் நிதிநிலைமை மிகைப்படுத்தப்பட்டதன் மூலம், ராஜு குடும்பத்தைச் சேர்ந்த மற்ற எட்டு கம்பெ னிகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்திருக் கிறார்கள். மேய்டாஸ் பிராபர்டிஸ் மற்றும் மேய்டாஸ் இன்ஃப்ரா நிறுவனங்களும் இதில் அடங்கும். அவையும் புலனாய் வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

சத்யம் நிறுவனத்தின் தணிக்கை நிறுவனமான பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தின்(இந்நிறுவனம் இதற்கு முன் மாபெரும் ஊழல் - மோசடி யில் மாட்டிக்கொண்ட குளோபல் டிரஸ்ட் வங்கிக்கும் தணிக்கை நிறுவனமாகும்) பங்களிப்பும் மேற்படி ‘மோசமான மோசடி கள் புலனாய்வு அலுவலகத்தால்’ புல னாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் விசாரணையானது சத்யம் நிறு வனத்தில் முதலீடு செய்யப்பட்ட பொதுப் பணம் எப்படி ராஜு குடும்பத்தினரால் சூறையாடப்பட்டிருக்கிறது என்பதையும் ஆய்வு செய்திட வேண்டும். மேலும் ராஜு குடும்பத்தினருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் அரசாங்கம் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் அரசாங்க நிலத்தைத் தாரை வார்த்திருக்கிறது. அது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சத்யம் நிறுவனத்தில் பணியாற்றும் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் எதிர்கால நலன் சம்பந்தமாக கேள்விக் குறி உருவாகியிருப்பது இயற்கையே. ஊழியர்கள் தொடர்ந்து ஊதியம் வாங்கு வதை உத்தரவாதப்படுத்தக் கூடிய வகையில் அரசாங்கத்தால் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் சில பரிசீலனை செய்யப்படுவதாக அறிக்கைகள் வெளி யாகியிருக்கின்றன. ஊழியர்களின் நலன் காக்கப்படுவது அவசியம்தான். அதற் காக அரசு, மக்கள் வரிப்பணத்தை முத லீடு செய்திடக் கூடாது. இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிற பட்டியலில் காட்டியுள்ளபடி, ராஜு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று கம்பெனிகளுக்கு ரியல் எஸ்டேட் சொத்துக்கள் 17 ஆயிரம் ஏக் கருக்கு மேல் இருக்கின்றன. இவற்றை அரசு பறிமுதல் செய்து பணமாக மாற்றி அதன் மூலமாக ஊழியர்களின் நலன் களை பாதுகாக்க வேண்டும். 

உலக அளவில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள சத்யம் நிறுவனமானது 2002ஆம் ஆண்டு ஒரு முறையும் இப்போது 2008ஆம் ஆண்டு இரண்டாம் முறையும், “தங்கமயில் விருது” வாங்கியிருப்பது உலக அளவி லான பன்னாட்டு நிறுவன அமைப்பு களின் மகா மோசடி செயல்பாடுகளுக்கு மற்றுமோர் உதாரணமாகும். 

கடந்த காலங்களில் ஹர்சத் மேத்தா, யுடிஐ, கேத்தான் பரேக், ஜிடிபி போன்ற மெகா ஊழல் மோசடிகள் நடைபெற்ற ஒவ்வொரு சமயத்திலும் அரசாங்கமா னது முதலீட்டாளர்களைப் பாதுகாக்கி றோம் என்ற பெயரில் சில நடவடிக்கை களை மேற் கொண்டன. அத்தகைய ஊழல் மோச டிகளில் ஈடு பட்ட நபர்க ளின் சொத் துக்கள் மீது என்ன நட வடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டன என்று எந்தத் தகவல்களும் கிடையாது. சத்யம் நிறுவன ஊழலில் முதலீட்டாளர் களைப் பாது காக்கிறோம் என்ற பெய ரில் அரசாங்கம் மக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்திடக் கூடாது. சத்யம் நிறுவனத்தைக் காப் பாற்றிட பொதுத்துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டால், அந்த வங்கிகளுக்கு, அதற்கேற்ற வகையில் சத்யம் நிறுவனத் தின் பங்குகள் அளிக்கப்பட வேண்டும். எப்படிப் பார்த்தாலும், ராஜு குடும்பத்தாரின் கம்பெனிகளின் சொத்துக்களைப் பறி முதல் செய்து, அவற்றின் மூலம் ஊழியர் களைப் பாதுகாத்திடவும், இந்த மாபெரும் கொள்ளையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவும் நடவடிக்கைகள் மேற்கொள் வதே சாலப் பொருத்தமானதாகும்.

இறுதியாக, பிரதமரும் திட்டக் கமிஷ னில் உள்ள அவரது நெருங்கிய சகாக் களும் இனி வருங்காலங்களிலாவது, முதலாளித்துவ அமைப்பை உயர்த்திப் பிடிப்பதை விட்டொழித்திட வேண்டும். சத்யம் நிறுவனம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும், ‘நயவஞ்சகமே, உன்பெயர் தான் முதலாளித்துவமா’ என்பதை மீண் டும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக் கிறது. 

ஆந்திர அரசாங்கத்தால் சத்யம் மற் றும் அதன் குடும்ப உறுப்பினர்களுக்கு அளித்துள்ள நிலங்களின் விவரம்.



கம்பெனி இடம் ஓதுக்கப்பட்ட நிலத்தின் அளவு

சத்யம் பகதூர் பள்ளி, ரங்கா ரெட்டி 10.5 ஹெக்டேர்

ஹைடெக் சிட்டி,மாதாபூர் 12 ஹெக்டேர்

தொட்லகொண்டா 20 ஹெக்டேர்

விசாக் 6.7 ஏக்கர்

காபுலபடா 50 ஏக்கர்

மேய்டாஸ் கோபன்பள்ளி, ரங்காரெட்டி 15.96 ஹெக்டேர்

பிராபர்டிஸ் குண்ட்லா போச்சாம்பள்ளி, 

ரங்காரெட்டி 14.15 ஹெக்டேர்

பச்சாபள்ளி, ரங்காரெட்டி 29.9 ஹெக்டேர்

மேய்டாஸ் ஹைதராபாத் மெட்ரோ ரயில் 269 ஏக்கர்

இன்ப்ஃரா ஸ்டேஷன்கள். டிப்போக்கள்

மசூலிப்பட்டினம் போர்ட் ஆரம்பத்தில் 412 ஏக்கர்

பிராஜக்ட் கொடுக்கப்பட்டது. மொத்தம் ஒதுக்கப்பட்ட நிலத்தின் அளவு 

2172 ஏக்கர்

மொத்தம் 17.408.53 ஏக்கர்கள்


தமிழில்: ச. வீரமணி

January 20, 2009

மூட நம்பிக்கைக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும்: குஷ்பு






அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிபுதுப்பட்டு கிராமத்தில் ஒரு சிறுமிக்கும் தவளைக்கும் திருமணம் நடைபெற்றது. ஊர் நலன் கருதியே இந்தத் திருமணத்தை நடத்தி வைத்ததாக அந்த கிராமத்தினர் கூறியிருந்தனர்.

இதற்கு நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளம் பெண் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் குஷ்பு பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிக்கும் தவளைக்கும் நடத்தப்பட்ட திருமணத்தைப் பத்திரிகைகள் வாயிலாக அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஊர் நன்மைக்காகவும் ஊரில் உள்ளவர்களை நோய் தாக்காமல் இருப்பதற்காகவும் இந்தத் திருமணத்தை நடத்தியதாகக் கூறியிருக்கிறார்கள்.

விஞ்ஞானம் வளர்ந்து சந்திரயான் ராக்கெட்டைப் பறக்க விட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இதுபோன்று ஒரு திருமணம் நடந்திருப்பது மக்கள் இன்னும் மூட நம்பிக்கைகளில் சிக்கியுள்ளதையே காட்டுகிறது. இளம் தலைமுறைப் பெண்கள் பல துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். ரஜினியை வைத்து அவர் மகளே படம் எடுக்கிறார். இப்படி எவ்வளவோ வளர்ச்சிகள் ஏற்பட்டாலும் மக்கள் இன்னும் மூடப் பழக்க வழக்கங்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற மூடப் பழக்க வழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராகப் பெண்கள் போராடினால்தான் சமுதாயத்தில் மாற்றம் வரும்.

Thanks: www.dinamani.com

----------------------------------------------------------------

தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம்

Saturday, 17 January, 2009   12:58 PM

.

விழுப்புரம், ஜன.17: விழுப்புரம் தாலுகா கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிப்புதுப் பாட்டு கிராமத்தில் நேற்று இரவு தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் தாலுகா கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ளது பள்ளிப்புதுப் பட்டு கிராமம். இந்த கிராமத்தில் பழங்காலத்தில் காலரா நோய் பரவியதாகவும், அப்போது சிவன் தவளை உருவும், அம்மன் சிறுமி உருவும் எடுத்து அவர்களுக்கு திருமணம் நடத்தினால் காலரா நோய் குணமாகும் என்றும் மேலும் பரவாமல் இருக்கும் என்றும் கூறியதைத் தொடர்ந்து தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்தியதாக கூறப்படுகிறது.

 இதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக ஆண்டுதோறும் அந்த கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும்  வினோத திருமணம் நடத்தி வருகிறார்கள்.  இந்நிகழ்ச்சி நேற்று மாலை 4 மணி முதல் இரவு 7.30மணிவரை நடந்தது.

 திருமணத்தையொட்டி பள்ளிப்புதுப் பட்டு கிராமத்தில் வசிக்கும் சகோதர உறவினர்கள் கொண்ட குடும்பத்தினர் பெண் வீட்டாராகவும், மாமன் முறை குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டாராகவும் கருதப்பட்டனர் மாப்பிள்ளைவீட்டார் என்று கூறப்படும் தவளை சார்பில் சீர்வரிசையுடன் மாலை 4 மணிக்கு பெண் பார்க்க ஊர்வலமாக சென்று பெண்ணை பார்த்தனர்.

 பெண்ணுக்கு நகை, சீர்வரிசை மற்றும் வரதட்சணை குறித்து பேசினார்கள். இந்த திருமணத்திற்கு பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமுவின் மகள் விக்னேஸ்வரி (வயது 8) திருமணப்பெண்ணாக பெரியோர்களால்  நிச்சயிக்கப்பட்டார்.

 பின்னர் மாப்பிள்ளையான தவளையை தேடும் படலம் நடந்தது. கோவில் குளத்தில்  அதிக நேரம் தேடி ஒரு தவளையை பிடித்தனர்.அந்த தவளையை மாப்பிள்ளையாக கருதி மணமேடையில் வைத்தனர்.

 பெண்வீட்டார் சிறுமியை மணப்பெண்ணாக அலங்கரித்து தெருக்களில் அழைத்து வரப்பட்டு மண மேடைக்கு கிராம மக்கள் அழைத்து வந்தனர்.

 பள்ளிப்புதுப்பட்டு கிராம ஆரம்ப பள்ளி அருகில் அமைக்கப்பட்டு இருந்த மணமேடையில் மணமகன் தவளை, மணமகள் சிறுமி அமரவைக்கப்பட்டனர்.

 திருமண முறைப்படி மந்திரங்கள் ஓத  கிராம மக்கள் இரவு 7.30மணிக்கு தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடந்தது. தவளை சார்பில் பூசாரி சிறுமிக்கு தாலி கட்டினார். தாலி கட்டியபிறகு பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

 தவளைக்கும் பெண்ணுக்கும் இருவீட்டார் சார்பில் மொய்பணம் மற்றும் நகைகள் வரிசை வைக்கப் பட்டன. அப்போது கிராம மக்கள் வரிசைவைத்து நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு  விருந்து பரிமாறப்பட்டது.

 திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை தவளையை மறுபடியும் குளத்தில் விட்டுவிட்டனர்.  இந்த திருமணம் பற்றி கிராமத்தினர் கூறுகையில் காலம் காலமாக இவ்விதம் திருணம் நடந்துவருகிறது என்றார். மேலும் தவளை திருமணம் நடக்கவில்லை என்றால் அந்த குறிப்பிட்ட ஆண்டில் ஏதேனும் எந்த விதத்திலாவது தீங்கு ஏற்படும். அவ்வாறு நடக்காமல் இருக்கவும், நோயின்மை ஏற்படவும் இந்த திருமணம் நடத்திவருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

 அதோடு மட்டுமல்ல கடும் நோய் உள்ள சிறுமிக்கு இவ்விதம் திருமணம் நடத்தினால் நோய் தீர்ந்து விரைவில் திருமணம் நடக்கும்என்பதும் கிராம மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

January 08, 2009

காவியம் படைத்த அரசியல் கவிஞன்!


மில்டன் அரசவைக் கவிஞர் அல்ல; அரசியல் கவிஞர்! ஆங்கிலக் கவிகளில் தன்னிகரில்லா இடத்தைப் பெற்றிருப்பவர் ஜான் மில்டன். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்கு துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது.
மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. ‘மில்டனைப் போல் எழுதுகிறாயே!’என்று பிற எழுத்தாளர்களை பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.
மதவாதிகளும், பழமைவாதிகளும்,கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது,அவரது எழுத்துக்களை ‘தீ’ நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும்,பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும்.
இவர்கள் மட்டுமா? கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த ‘ஜான் மில்டனின்’ பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; ‘குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்’ என்று உண்மையை கண்டுரைத்த சார்லஸ்டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608 இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை - இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிருத்துவ கல்லூரியில் பயின்று, 1632 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் லத்தீன், எபிரேயம்,இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.
உலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்கு கிறித்துவத்தையும் - பைபிளையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலப் புகழ் பெற்ற படைப்புகளான ‘இழந்த சொர்க்கத்தையும்’, ‘மீண்ட சொர்க்கத்தையும்’எழுதுவதற்கு கருவானது.
கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும் நூல்களை கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ் பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார். அதில் குறிக்கத்தக்கது லூசிடாஸ் (Lycidas),கோமாஸ் (Comus)..
அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633-ஆம் ஆண்டு வெளியுலக பயணத்தை துவக்கினார். பிரான்ஸ்,இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, ‘உலகம் உருண்டையானது - சூரியனைச் சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது’ என்ற பேரூண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவை கண்டு அவருடன் உரையாடினார். இந்த சந்திப்பை தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாக கருதினார் மில்டன். இந்த சந்திப்பை தனது ‘இழந்த சொர்க்கம்’ என்ற காவியத்திலும் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு வர்ணித்திருப்பார்.
The broad circumference
Hung on his shoulders like the moon, whose orb
Trhough optic glass the Tuscan artist views
At evening, from the top of Fesole,... (Book 1, 286-290
‘டஸ்கன் கலைஞனால் தொலை நோக்கி வழியே முன்னிரவில் துழாவப்பெறும் சந்திரன் போல், சாத்தான் கேடயத்தின் அகன்றவட்டம் அவன் தோளில் தொங்கியது.” - (கம்பனும் மில்ட்டனும், எஸ். ராமகிருஷ்ணன், பக்.54)
கலிலியோ கண்ட உண்மை கடவுளுக்கு எதிரானது என்றுக் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைத்தனர் ஆட்சியாளர்கள். ஆனால், அவர் கண்ட உண்மையை தனது படைப்பிலும் கொண்டு வந்ததன் மூலம் மில்டன் மக்களை மாயையிலிருந்து விடுவிப்பதில் எந்த அளவிற்கு பங்காற்றினார் என்பதை உணர முடியும்.
இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக ரோமன் கத்தோலிக்க மதத்தை முன்னிறுத்தி, கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த முதலாம் சார்லஸ் மன்னராட்சியில் சர்வாதிகாரமும், அடக்குமுறையும் தலைவிரித்து ஆடின. இப்பின்னணியில் 1639இல் இலண்டன் திரும்பும் மில்டன் ஒரு பள்ளிக்கூடத்தை துவக்குகிறார். குறிப்பாக அக்காலக் கல்வி மதத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. இது குறித்து தனது அதிருப்தி தெரிவித்த மில்டன்1944 இல் ‘கல்வி’ (Of Education) குறித்து சிறந்த கட்டுரையொன்றை வெளியிடுகிறார். கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது.
சார்லஸ் மன்னராட்சியின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நாட்டு மக்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற வேண்டும் என்று சட்டம் இயற்றப்படுகிறது. இதை எதிர்த்து தூய்மைவாதிகளும் - புரோட்டஸ்டான்ட்கிருத்துவர்களும் தங்களது எதிர்ப்புணர்வை காட்டுகின்றனர். மதம் தங்களது தனிப்பட்ட விருப்புரிமைக்கு உட்பட்டது அதனை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க முடியாது என்று பல இடங்களில் கலகம் எழுந்தது. ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பின்னணியுடன், ஆட்சி அதிகார எந்திரத்தை கையில் வைத்திருந்த கொடுங்கோலன் சார்லஸ் மன்னன் புரோட்டஸ்டான்ட் மக்களை வேட்டையாடினான். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுமைகளை கண்ட மில்டன் மக்களுக்கான அரசியல் களத்தில் இறங்கி,தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக பல அரசியல் பிரசுரங்களை எழுதி குவித்தான். இது ஆட்சியாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஊட்டியது. அந்த நேரத்தில்தான் சார்லஸ்மன்னன் பத்திரிகை உரிமைக்கு வேட்டு வைக்கும் புதிய சட்டத்தை கொண்டு வந்தான். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. ஆட்சியாளர்களின் அனுமதியில்லாமல் எந்த துண்டுப் பிரசுரமும் வெளிவராது என்ற நிலையே நிலவியது.
மன்னராட்சியின் இந்த பத்திரிகை தடைச் சட்டத்தை எதிர்த்து ‘ஏரோபிஜிடிகா’ (Areopagitica)என்ற தலைப்பில் பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி ஒரு பிரசுரத்தை வெளியிட்டார் மில்டன். ‘ஒரு நல்ல புத்தகத்தை தடை செய்வது ஒரு மனிதனை கொல்லுவதற்கு ஒப்பாகும்’ என்று அதில் வலியுறுத்தியிருந்தார். நவீன காலத்தில் பத்திரிகை ஒடுக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட முதல் குரல் மில்டனின் குரல் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் படைகள் திரட்டப்பட்டு மன்னராட்சிக்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தம் தொடுக்கப்பட்டது. இதற்கு மில்டனும் தனது எழுத்தாற்றல் மூலமாக துணை நின்றார்.1644இல் சார்லஸ் மன்னனின் ஆட்சி முடிவுக்கு வந்து கொல்லப்பட்டான். பின்னர் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் முதல் ஜனநாயக அரசு இங்கிலாந்தில் அரியணை ஏறியது. இவரது அமைச்சரவையில் லத்தீன் மொழிக்கான செயலாளராக மில்டன் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் மில்டன், ‘கொடுங்கோல் மன்னர்களும் அவரது நீதிபதிகளும் கொல்லப்பட வேண்டியவர்களே’ என்ற தலைப்பில் எழுதிய அரசியல் பிரசுரம் மிகவும் புகழ்பெற்றது.
ஆலிவர் கிராம்வெல்லின் ஆட்சி குறுகிய காலமே இருந்தது. அவரது மறைவுக்குப் பின், 1658-இல் 2-ஆம் சார்லஸ் மன்னன் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து பழமைவாதத்தின் பிடிக்குள்சென்றது. குடியரசு ஆட்சிக்கு முழுக்கு ஏற்பட்டது. இந்நிலையிலும் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்ட மில்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டாம் சார்லஸ் மன்னன் ஆட்சியில் மில்டன் சிரச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்படுவார் என மக்கள் அஞ்சினர். மில்டன், ‘தான் இனிமேல் கவிதைகள் படைக்க விரும்புவதாக’ கூறியதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். இவ்வாறு அவர் விடுதலையாகி இருக்காவிட்டால் மில்டன் என்ற மகா கவியை இந்த உலகம் இழந்திருக்கும்.
1667 ஆம் ஆண்டு வாக்கில் இரண்டு கண் பார்வையையும் இழந்து விட்டார் மில்டன். இதனால் மிகவும் மனம் வருத்தமுற்ற மில்டன் தனது உலகம் இருண்டு விட்டதை உணர்த்தும் வகையில் “ஆன் ஹிஸ் பிலைன்ட் லெஸ்” (On His Blindness) என்ற கவிதை மூலம் வருந்துகிறார். கண்ணிருக்கும் போது செய்ய வேண்டிய பல கடமைகள் செய்ய முடியாமல் போனதே என்பதற்காக!
இருப்பினும், இதில் மனம் தளராத மில்டன்,தனது உதவியாளர் மூலம் தான் சொல்லச் சொல்ல பல்வேறு கவிதைகளை படைக்கிறார். இந்தக் காலத்தில்தான் ‘இழந்த சொர்க்கம்’(Paradise Lost) என்ற புகழ்மிக்க காவியத்தை1667-இல் படைத்தார் மில்டன். 12 காண்டங்கள் என்று சொல்லத்தக்க வகையில், 12புத்தகங்களாக 10,565 வரிகளைக் கொண்டஆங்கில மொழி நடையில் - கவிதை உலகில் ஒரு புது நடையை வழங்கி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார் மில்டன்.
குறிப்பாக இழந்த சொர்க்கம் காவியம் - பைபிள் கருவை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், அதில் அவரது புனைவு என்பது ‘கடவுளை வென்ற சாத்தான்’ என்ற பொருளுடக்கத்தை கொண்டு எழுதப்பட்டது. குறிப்பாக சாத்தானை ஒரு ஹீரோவாக மையப்படுத்தி புகழ்ந்துரைத்த முதல் இலக்கியம்தான் மில்டனின் இழந்த சொர்க்கம். இதற்காகவே இந்த புத்தகத்தை அன்றைக்கு மக்கள் தொடுவதற்கே அஞ்சினர். இதுவும் சாத்தானின் வடிவமே என்று அவதூறு கிளப்பினர் பழமைவாதிகள்.
விண்ணுலகில் சாத்தானுக்கும் - கடவுளுக்கும் சண்டை மூளுகிறது. கடவுளின் சேவர்களில் ஒரு பகுதி தேவர்கள் கூட சாத்தான் பக்கம் சாய்ந்து கடவுளுக்கு எதிராக போரிடுகின்றனர். இந்நிலையில் தோல்வியுள்ள சாத்தான் கூட்டத்தினர் மீளாக உறக்கத்தில் இருக்கையில்,புதிய உலகை படைக்கிறார் கடவுள். அதில் ஈடன் தோட்டத்தில் ஆதாமையும் - ஏவாளையும் படைக்கிறார். இந்த தோட்டத்தில் உள்ள அறிவுக் கனியை உண்ணக்கூடாது என்று கடவுள் அவர்களுக்கு கட்டளையிடுகிறார். இதை அறிந்து கொண்ட சாத்தான் விண்ணுலகிலிருந்து கடவுளால் படைக்கப்பட்ட புதிய உலகிற்கு வந்து ஈடன் தோட்டத்தில் உள்ள ஏவாளை மயக்கி அந்த அறிவுக் கனியை உண்பதற்கு தூண்டுகிறார். ஒரு கட்டத்தில் சாத்தான் ஒரு பாம்பின் உடலுக்குள் புகுந்து கொண்டு,ஏவாளிடம் சென்று மனிதனைப் போல் மிக அழகாக பேசுகிறது. பாம்புக்கு எப்படி பேச்சு வந்தது என்று ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பிய ஏவாளிடம் தான் அந்த அறிவுக் கனியை உண்டதாக கூறியதோடு, ஆதாம் அதை உண்பதற்கு தூண்டுகிறது. அது பாவம் என்று ஏவாள் மறுக்க, இல்லை; ‘பாம்பான நான் இந்தக் கனியை உண்டதால் மனிதனிப் பேச்சு திறமை கிடைக்கப்பெற்றேன். அதையே நீங்கள் சாப்பிட்டால் தேர்வர்களின் நிலைக்கு உயரலாம்’ என்று நயமாக பேசி தன்னுடைய வாதத் திறமையால் ஏவாளை அந்த அறிவுக் கனியை (ஆப்பிள்) சாப்பிட வைக்கிறார். அவ்வளவுதான்; இந்த கனியை சாப்பிட்ட பின் தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை ஏவாள்,ஆதமிடம் சொல்ல அவனும் ஏன் இதைச் சாப்பிட்டாய் என்று கேள்வி எழுப்பினாலும்,மனைவியின் அன்புக்கு கட்டுப்பட்ட ஆதாமும் அந்த கனியை சாப்பிடுகிறான். இந்த செயலின் மூலம் கடவுளின் திட்டத்தை முறியடிக்கிறான் சாத்தான். கனியை சாப்பிட்டதால் நிரந்தரமாக மனித குலம் பாவத்திற்கு உள்ளாகிறது. இதனால் அவர்கள் சொர்க்கத்தை நிரந்தரமாக இழக்கிறார்கள்; பாவத்திற்கு ஆளாகிறார்கள். பின்னர் ஆதாமும் - ஏவாளும் கடவுளிடம் இறைஞ்சுவதால் கடவுளின் குமாரன் மனித குலத்தில் பிறந்து அந்த பாவத்திலிருந்து விடுதலை பெறுவதாக கதை முடிகிறது. இதுதான் இழந்த சொர்க்கத்தின் மிகச் சுருக்கமான கதையம்சம்.
இந்த காவியத்தில் பல இடங்களில் சாத்தான் தனது அணிக்கு நம்பிக்கை ஊட்டுவதாக கூறப்படும் கவியம்சங்கள் மிக அற்புதமானவை.
What though the field be lots? All is not lost.
(களத்தை இழந்தோமல்லது; அனைத்தையும் இழந்தோமன்று) என்று கூறி நம்பிக்கை யூட்டுவதையும்,
Better to reign in Hell then serve in Heaven
(பொன்னுலகத்தில் தொண்டு புரிவதைக் காட்டிலும், நரகத்தில் ஆட்சி புரிவதே மேல்) என்று நயமாக எடுத்துரைத்து தனது அணிக்கு பலம் சேர்க்கிறார் மில்டன்.
400 வருடத்திற்கு முன் மதவாதிகளின் அரியாசனங்கள் கோலோச்சிய நேரத்தில், ‘சாத்தான் கடவுளை வென்றதாக’ காவியம் இயற்ற வேண்டும் என்றால் எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க வேண்டும் மில்டனுக்கு. அது மட்டுமல்ல; இந்த கதை குறித்து விமர்சகர்கள் கூறும்போது, ‘இதன் மூலம் சாத்தான் கடவுளை எதிர்த்து போராரிடுவது போல் மக்கள் மன்னர்களை எதிர்த்து போரிட வேண்டும்’ என்று தூண்டுவதாக வர்ணிப்பர்.
மில்டனின் ‘இழந்த சொர்க்கம்’ ஆங்கில கவிதை உலகில் முடி சூட முடியாத உயர்த்தில் இருக்கிறது என்றால் மிகையாகாது. மேலும் மில்டன் பார்வைகளை இழந்திருந்தாலும், தனது அறிவுக் கூர்மையால் தொடர்ந்து பல்வேறு படைப்புகளை கொண்டு வந்தார். இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு காவியம்‘மீண்ட சொர்க்கம்’ (Paradise Regained).
இது தவிர ஆங்கிலத்தில் சொனாட்டோ என்று சொல்லக் கூடிய 14 வரிகளைக் கொண்ட கவிதைகள் பலவற்றை எழுதி அதில் தனக்கென தனியிடைத்தை பிடித்துக் கொண்டவர் மில்டன்.
தனது இறுதி நாட்களில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மில்டன் என்ற மகத்தான கவி நவம்பர் 8, 1674 இல் மரனமடைந்தார்.
400 ஆண்டுகள் கடந்த பின்பும் மில்டனின் படைப்புகள் மனித குலத்திற்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஊட்டுவதாக உள்ளது. குறிப்பாக கலை கலைக்காகவே என்று இயங்குபவர்கள் மத்தியல் கலை மனிதனுக்காக என்றும் அது மாற்றத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கோடு படைப்புகளை வழங்கியவர் மில்டன் என்பதில் மனித குலம் பெருமைப்படத்தக்கது. இதில் இறுதியாக குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் எஸ்.ராமகிருஷ்ணனின் கம்பனும் - மில்டனும்,தொ.மு.சி.யின் வள்ளுவனும் - மில்டனும் போன்ற படைப்புகள் தவிர, தமிழில் மில்டன் குறித்து போதுமான அளவிற்கு அவரது படைப்புகள் தமிழாக்கம் செய்யப்படவில்லை என்பது தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு குறையாகவே உள்ளது. அவரது 400வது ஆண்டில் இதில் ஒரு சில படைப்புகள் வெளிவந்தால் அது அவருக்கு செய்யும் சிறப்பாகும்.


கே. செல்வப்பெருமாள்

January 06, 2009

தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயம்!

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் தற்போது தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தில் முத்திரைப் பதித்து வருகின்றனர். 1990களுக்குப் பிறகு தலித்திய அமைப்புகள் எழுச்சிகரமாய் ஏற்றம் பெற்று வருகின்றன. சாதிய இழிவுகளுக்கு எதிராகவும் - சனாதன மனு (அ)நீதிக்கு எதிராகவும் இவர்களது குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் உடனடியாக சமூக மாற்றம் யாருக்குத் தேவையோ இல்லையோ தலித் மக்களுக்கு இது அடிப்படையாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது. எனவே, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முதல் தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள் வரை நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துக் கொண்டு சாதிய நிலவுடைமைய அமைப்பை முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளனர். எனவே நமது போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்துவது என்பதோடு - முதலாளித்துவத்திலும் புரையோடிப் போய் கொண்டிருக்கக்கூடிய சாதியத்தையும் சேர்த்து வீழ்த்த வேண்டியுள்ளது. இந்தியாவில் சுதந்திரப் போராட்டக் காலம் தொட்டு சாதிய விடுதலைக்கான முழக்கத்தையும் முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கீழ்வெண்மணி இன்றைக்கும் அதற்கு சாட்சியமாய் நின்றுக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கீரிப்பட்டி முதல் உத்தப்புரம் வரை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வரும் போராட்டம் சாட்சியமாய் விளங்குகிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்முயற்சி எடுத்து செயலாற்றி வருகிறது. தலித் மக்கள் மட்டுமல்ல அடுக்கப்பட்ட மக்களில் அட மூட்டைகளாய் மாறிப்போன அருந்ததிய மக்கள் வரை... அவர்களுக்கான பிரச்சனைகளை முன்னின்று செயலாற்றி வருகிறது.

இதற்காக விரிவான அளவில் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்திற்கு முன்வரக்கூடிய பெரும் பகுதியினரை அணி திரட்டுவதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீவிரமாய் செயலாற்றி வருகிறது. அமைப்புகள் உருவாவதும், அமைப்புகள் காணாமல் போவதும் சமகாலத்தில் நிகழக்கூடிய வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடுகள் என்பதை வரலாறு அறிந்தவர்கள் உணர்வர்.

இந்நிலையில் வளர்ந்து வரும் தலித் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை சீர்குலைக்க துவங்கியுள்ளது ம.க.இ.க. (எஸ்.ஓ.சி.) கும்பல். தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது ஏதோ வாக்கு வங்கி அரசியல் நடத்துவதற்காக துவங்கப்பட்டதாக கொச்சைப்படுத்துகிறது. இவ்வாறு குற்றம் சுமத்துவது ஆட்சியாளர்கள் அல்ல. அவர்கள் கூட இவ்வாறு சொல்லத் துணிய மாட்டார்கள். சொல்வது புரட்சியை (தமிழகத்திலோ - இந்தியாவிலோ) கொண்டு வருவதற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை அமெரிக்காவில் வாங்கி வந்திருக்கும் ம.க.இ.க. தொடை நடுங்கிகள்தான். (பார்க்க வினவு-ஏகலைவன் கமெண்ட்)
இவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்ல. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததியர் பேரவை... என்று அனைத்து தலித் அமைப்புகளையும் முதலாளித்துவ அமைப்புகளாகவும் - சாதிய அமைப்புகளாகவும் பார்க்கும் சனாதன - பார்ப்பனீய மனோபாவத்தின் வெளிப்பாடே! மொத்தத்தில் இந்த ம.க.இ.க. குழு தலித் மக்களின் எதிரியே! இதனை ஏமாற்றுவதற்காகவே தலித் அடையாளத்தோடு பவனி வருகிறது ம.க.இ.க.

உண்மை என்ன? இவர்களது சுய முகம் என்ன என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டிய அவசியமான ஒன்று... இந்த ம.க.இ.க. (எஸ்.ஓ.சி. தொடை நடுங்கி நக்சலிச) புரட்சியாளர்களின் உண்மை முகம் என்ன என்று யாருக்கும் தெரியாது? நான் தொடர்ந்து குற்றம் சுமத்தும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று. இவர்கள் யாருக்கும் சொந்தப் பெயர் இல்லை. எல்லாம் போலிப் பெயரில் - போலி முகமூடியுடன் செயலாற்றுவதுதான்.
அது தலைமை முதல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் தொண்டர்கள் வரை.... சரி இதில் உள்ள மற்றொரு ரகசியத்தையும் இங்கே சொல்லுவது பொருத்தமாக இருக்கும். ஏதோ இவர்கள் பார்ப்பனீத்தை எதிர்ப்பதற்கு பிறந்தவர்கள் போல் பேசுவார்கள்... ஆனால் அது நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புவதற்கே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவர்களது தலையே ஒரு பார்பனீயத் தலைமைதான். குறிப்பாக வல்லபேச என்கின்ற பார்ப்பனர் மருதையனாகவும், ரெங்கராஜன் என்கின்ற பார்ப்பனர் வீராச்சாமியாகவும் மாறியது ஏன்? அதுவும் மருதையன், வீராச்சாமி எல்லாம் தலித் அடையாளத்துடன் கூடிய பெயர்கள் என்பதை மறக்கக் கூடாது? இதுதான் மர்மம். ஏதோ தாங்கள் எல்லாம் தலித் மக்களின் நண்பர்கள் போல் காட்டிக் கொள்ளும் போலி மனோபாவம். உத்தப்புரத்திலாகட்டும்... கல்கேரியாகட்டும்... எந்தக் கிராமத்திலாவது தலித் மக்கள் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகும் போது அங்கே களத்தில் நின்று போராடிய வரலாறு இவர்களுக்கு உண்டா? இல்லை! மாறாக பிரச்சாரத்திற்காக சிதம்பரத்தை எடுப்பார்களே தவிர களத்தில் இறங்க மாட்டார்கள் இந்த போலி புரட்சியாளர்கள்.

இதேபோல்தான் இவர்கள் கியூபாவையும், கியூப புரட்சியும் எப்படி நடந்தது என்று போகிற போக்கில் கேள்வி எழுப்புவார்கள். தங்களை நக்சலிசத்தின் உண்மை வாரிசாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால் கியூப வழியில் கடந்த 30 ஆண்டு காலமாக களத்தில் என்ன செய்தார்கள்? புதிய ஜனநாயகம் பேசி சிறு பத்திரிகைகளோடு மோதுவதும் - சி.பி.எம்.க்கு எதிராக அவதூறு பேசி ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் புரிவதைத் தவிர! இவர்களது தொழில் பேசுவது நக்சலிசம் ஆனால் சீர்குலைப்பது வர்க்கப் போராட்டத்தை!

அடுத்து இந்த தொடை நடுங்கி புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தை பன்னித் தொழுவம் என்று தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களை எல்லாம் ஓட்டுப் பொறுக்கி என்பார்கள்! இதன் மூலம் இவர்கள் செய்வது என்ன? இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் கோடிக்கணக்கான மக்களை முட்டாள்கள் என்று திட்டுவதுதான். கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் எங்கெல்லாம் செயல்படுகிறார்களோ அங்கெல்லாம் செயல்படுவார்கள்! இது இவர்களுக்கு பொறுந்தாது! ஏனென்றால் இவர்கள் சி.ஐ.ஏ.-வால் உருவாக்கப்பட்ட சீர்குலைவு என்.ஜீ.ஓ. கம்யூனிஸ்ட்டுகள். அதனால்தான் இவர்கள் நக்சலிசம் பேசி - அதற்காக தங்களது போராடிக் கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் தியாகத்தின் மீது சவாரி செய்து கொண்டிருப்பவர்கள்!

இந்த மகஇக என்.ஜீ.ஓ.க்கள் தற்போது இணையத்தின் மூலம் புரட்சியை நடத்துவதற்கு கனா கண்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தங்களது அணிகளுக்கு இணையத்தில் எப்படி செயல்படுவது என்று வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 2 டசன் ம.க.இ.க. போலி புரட்சியாளர்கள் தற்போது இணையத்தில் செயலாற்றி வரும் புதிய எழுத்தாளர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை இணையத்தில் இருந்தும் - எழுத வருவதிலிருந்தும் வெளியேற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அதாவது இணையத்திலும் ஆள் புடிக்கிறேன் பேர் வழி என்று கிளம்பி... எல்லாத்துக்கும் நான் சொல்றதுதான் சரி! என்கிற பார்ப்பனீய பாசிச மனோபாவத்தில் அடாவடி அடித்துக் கொண்டிருக்கும் வினவு மற்றும் ம.க.இ.க.- எஸ்.ஓ.சி. தொடை நடுங்கிகளை அடையாளம் காண்பீர்! இவர்கள் தலித் அடையாளத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கும் பார்ப்பனீயத்தின் மறுவடிவ புரட்டர்களே என்பதை!

புத்தகம் பேசுது... புத்தகம் பேசுது.... புத்தகம் ஏதோ பேசத் துடிக்குது!

எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் கிராமப்புற மக்களின் இதய வாசல் திறக்கப்பட்டது 1995-1998களில். அறிவொளி இயக்கப் பாடல்கள் எழுத்தறிவற்ற மக்களின் பார்வைகளையும் - சிந்தனைகளையும் திறந்துவிட்டது. புதிய வாசல்களும் - வெளிச்சமும் அவர்கள் வாழ்வில் இடம் பெற்ற காலம் அது. அறிவொளி இயக்கம் சென்ற கிராமங்களில் எல்லாம் - தன்னார்வம் மிக்க தொண்டர்களும் - சமூகத்தின் விடியலுக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தயார் என்று முன்னுக்கு வந்த மாணவர்களும் - மாணவிகளும் ஏராளம்! ஏராளம்!... இன்று அதன் மூலம் விழிப்புணர்வு பெற்றவர்கள் தங்களது வாசிப்புத் தளத்தை விரிவாக்கியுள்ளனர். இதில் களப்பணியாளர்களாக பணியாற்றியவர்கள் இந்த சமூகத்தின் ஆல விருட்சமாய் தலைவர்களாய் உயர்ந்துள்ளனர்...

அந்த இயக்கத்தின் பாடல்களில் ஒன்றுதான்
புத்தகம் பேசுது...
புத்தகம் பேசுது...
புத்தகம் பேசுது...

புத்தகம் ஏதோ பேசத் துடிக்குது
உன்னிடம் வந்து இருக்கத் துடிக்குது...

ஆ... ஆ.... இ.... ஈ.... படி படி
அது முன்னேற்றத்தின் முதல்படி...

என்று உயிர் எழுத்துக்களுக்கு உயிர்ப்பூட்டியது அறிவொளி இயக்கம் என்றால், தற்போது தலைவர்களாய் - சமூக மாற்றத்திற்கான போராளிகளாய் களத்தில் நின்று அரசியல், தத்துவம், பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், மார்க்சியம், தலித்தியம், பின்நவீனத்துவம், பெண்ணியம்... என்று இந்த சமூகத்தின் தோற்றுவாய்களாய் மலர்ந்துள்ள கருத்துக்களை எதிர்கொண்டு - ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைத்து இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நமக்கு வழிகாட்டியாய்... படிக்கத் தூண்டும் தூண்டு கோலோய் எழுந்து நிற்கிறது புத்தகம் பேசுது மாத இதழ்.



அறிவுத்துறை பெருக்கத்திற்கு ஏற்ப - மக்கள் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு விடை தேடும் புத்தகங்கள் நாள்தோறும் ஏராளமாய் வந்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு தொழில்நுட்பமும் ஒரு காரணம். தமிழகம் முழுவதும் எண்ணற்ற பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் வெளியீடுகளை செழுமைப்படுத்தி வருகிறது. புதிய புதிய இளம் எழுத்தாளர்களின் சிந்தனையோட்ட மலர்களாய் புத்தகங்கள் பூத்துக் குலுங்குகிறது. எதை வாங்குவது... எதை விடுவது? எந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று அத்தனையும் அறிந்து கொள்ள வழிகாட்டுகிறது புத்தகம் பேசுது.

அது மட்டுமா? ஒவ்வொரு இதழிலும் தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்கள் - அரசியல்வாதிகள் - ஆய்வாளர்கள் - சிந்தனையாளர்கள் என்று அவர்களது பேட்டிகளையும் சுமந்து வருகிறது புத்தகம் பேசுது. இதனால் நமக்கு வழிகாட்டிகளாய் உள்ள தலைவர்கள் பதித்த பாதைகளையும் - அவர்கள் படித்த புத்தகங்களையும் நாம் அறிந்து கொள்ள முடிவதோடு... அவர்களது உள்ளத்தை தொட்ட புத்தகங்களையும் - மாற்றத்தை கொடுத்த புத்தகங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இதுதான் புத்தகம் பேசுது இதழின் மிகச் சிறந்த சிந்தனை.

உள்ளூர் சிந்னையாளர்கள் மட்டுமல்ல; உலகச் சிந்தனையாளர்களின் படைப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது புத்தகம் பேசுது இதழ்.

அது மட்டுமல்ல எந்த பதிப்பகம் என்ன மாதிரியான புத்தகங்களை வெளியிடுகிறது? வெளியிட்டுள்ளது என்று அறிந்து கொள்வதற்கு மாதந் தோறும் விலைப் பட்டியலுடன் - புத்தகப் பட்டியலையும் நமக்காக சுமந்து வருகிறது புத்தகம் பேசுது.

சிந்தனையை கூர் தீட்டிக் கொள்வோர்க்கு சொர்க்கவாசல் திறப்பது போல் திறக்கவுள்ளது 32வது சென்னை புத்தக கண்காட்சி, (செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, பச்சையப்பன் கல்லுரி எதிரில், சென்னை) வருகிற ஜனவரி 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில்...

சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு - பாரதி புத்தகாலயம் சார்பில் வெளிவரும் புத்தகம் பேசுது இதழுக்கான ஆண்டு சந்தா சிறப்புச் சலுகையுடன் வழங்க உள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆண்டு முழுவதும் புத்தகங்கள் நம்முடைய பேசுவதற்கு ஒரே வழி புத்தகம் பேசுது இதழை உங்கள் இல்லத்தின் விருந்தினராக அல்ல உறுப்பினராக மாற்றுங்கள்...

புத்தகம் பேசுது
மாத இதழ்
ஆண்டுச் சந்தா ரூ. 75
(வழக்கமான ஆண்டு சந்தா தொகை ரூ. 120)

புத்தக கண்காட்சியில் கடை எண் : S-32

இந்த சந்தா சென்னை புத்தக கண்காட்சி நடைபெறும் காலம் வரை மட்டுமே என்பதால் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு புத்தகம் பேசுது இதழின் உறவினராக நீங்கள் மாறலாம்.
சந்தா அனுப்ப வேண்டிய முகவரி
புத்தகம் பேசுது
411, அண்ணா சாலை
தேனாம்பேட்டை
சென்னை - 600 018.
தொலைபேசி : 24332424
நாகராஜன் : 94449 60935

டி.டி. அல்லது மணி ஆர்டர் "bharathi puthakalayam" என்ற பெயருக்கு எடுக்க வேண்டும்.