May 15, 2009

சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்

இந்திய நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளை கடந்த பின்பும், தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள், கொடுமைகள் தொடர்கின்றன. அத்துடன், புதிய, புதிய வடிவங்களில் தீண்டாமை வன் செயல்கள் தலையெடுத்து வருகின்றன. நிலப்பிரபுத்துவச் சமூகத்தின் எச்சமாய் தொடர்கின்ற சாதிய வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் இந்தியப் பெரு முதலாளித்துவம் முடிவுக்கு கொண்டுவராமல், அதனை நீரூற்றி பல்வேறு வடிவங்களில் பாதுகாத்து, வளர்த்து வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சாதி அரசியல் தனது கால்களை ஆழமாய் பதித்துள்ளது - வாக்கு வங்கியின் அட்சயப் பாத்திரமாக சாதி அடையாளம் கருதப்படுகிறது; எனவே, இவற்றை தங்களது சுயலாபத்திற்காக பேணி வளர்த்து வருகின்றனர் முதலாளித்துவ அரசியல் கட்சிகள். மறுபுறத்தில், கடந்த 3000 ஆண்டுகளாக சாதிக் கொடுமைகளை எதிர்த்தப் போராட்டங்கள் வலுவாக நடந்து வருவதையும் பார்க்க முடியும். பௌத்தம் தொடங்கி, ஜோதிபாபூலே, டாக்டர் அம்பேத்கர், நாராயணகுரு, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உட்பட சமூக சீர்திருத்த வாதிகளும், அரசியல் ரீதியாக கம்யூனிஸ்ட்டுகளும் சாதி ஒழிப்பில் தங்களை ஈடுபடுத்தி போராடி வந்திருக்கின்றனர். இருப்பினும் 'சாதி ஒழிப்பு' என்பது சமூகத்திலும், அரசியலிலும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இருந்தாலும், அது முதன்மையான அஜண்டாவாக மாறவில்லை. அதேசமயம், சாதியை எவ்வாறு ஒழிப்பது? என்பது குறித்து பல போக்குகளைக் கொண்ட தத்துவார்த்த சிந்தனைகள் இம்மண்ணில் வேர்பிடித்துள்ளன. அது அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மத அடிப்படையிலும் கூட அமைந்துள்ளதை நம்மால் காண முடியும். குறிப்பாக, டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகள் இதில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அதேபோல், தென்னகத்தில், சுயமரியாதை - சமதர்ம இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த பெரியாரின் திராவிட இயக்கச் சிந்தனைகள், கேரளத்தில் நாராயணகுரு, அய்யன்காளி போன்றோரின் சிந்தனைகள் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றன.

இப்பின்னணியில், தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான சிங்காரவேலரின் 'சாதி ஒழிப்பு' சிந்தனைகள் மிக முக்கியமான குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்துள்ளது. சாதி குறித்து இந்தியாவில் மார்க்சிய அடிப்படையில் ஒரு சரியான புரிதலை முதன் முதலில் ஏற்படுத்தியவர் சிங்காரவேலர். மகாத்மா காந்தி, அயோத்திதாச பண்டிதர், பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற சாதி ஒழிப்பு போராளிகள் செயல்பட்ட அதே காலகட்டத்தில் செயல்பட்ட சிங்காரவேலரின் சிந்தனைகள் 'சாதி ஒழிப்பில்' எவ்வாறு ஒரு அறிவியல் பார்வை கொண்டதாக இருந்தது என்பதும், சாதியம் ஏன் இந்தியாவில் இன்னும் வேறோடிக் கொண்டிருக்கிறது; அதன் இருப்புக்கான காரணம் என்ன? என்பதை மார்க்சியப் பார்வையில் அதனை அணுகுவதோடு, சாதி ஒழிப்புக்காக நாம் செய்ய வேண்டிய வேலைகள் என்ன? என்பதையும் விஞ்ஞானக் கண்கொண்டு அணுகுவதை உணர முடியும். சீனப் புரட்சி நாயகன் மாவோ 'நூறு பூக்கள் பூக்கட்டும்' என்ற சிந்தனைக்கேற்ப மாற்றுச் சிந்தனையாய், சிவப்பு மலரின் நறுமணம் வீசும் சிந்தனையாய் சிங்காரவேலரின் சிந்தனைகள் மலர்ந்திருப்பதை காணலாம்.

திராவிட இயக்கம் முதற்கொண்டு தலித் இயக்கங்கள் வரை கம்யூனிஸ்ட்டுகள் மீது வைக்கக்கூடிய அவதூறுகளில் ஒன்றுதான், “கம்யூனிஸ்ட்டுகள் வர்க்கம் பேசுவார்கள், அவர்களுக்கு வர்ணம் தெரியாது”. அதாவது, “வர்க்க பேதம் பார்க்கும் கம்யூனிஸ்ட்டு களுக்கு சாதிய ஏற்றத்தாழ்வு தெரியாது” என்ற விஷமத்தனமான கருத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி தங்களது தத்துவப் பார்வையை விரித்துரைப்பார்கள். மறுபுறத்தில், கம்யூனிஸ்ட்டு களோ தலித் இயக்கங்களையும், திராவிட இயக்கங்களையும், சாதி ஒழிப்பு அமைப்புகளையும் நேச சக்தியாக அடையாளம் கண்டு, அவர்களோடு இணைந்து இயக்கம் கண்டு சாதி ஒழிப்பு என்கின்ற நிலப்பிரபுத்துவ காலத்திய கொடுமையான ஏற்றத்தாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க களத்தில் நின்று போராடிக் கொண்டிருப் பதை வரலாறு அறியும்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இந்திய சாதி அமைப்பு குறித்து ஓரிடத்தில் கூறும்போது, “உலகில் முதன் முதலில் சோசலிச புரட்சி நடந்தது ரஷ்யாவில்தான்; ஆனால், இது நடந்திருக்க வேண்டிய நாடு இந்தியா; சாதிய வேறுபாடுகளால் இப்புரட்சி இங்கே நடைபெறவில்லை” என்று கூறுவார்.

மேற்கண்ட கருத்தின் மூலம் சிங்காரவேலர் உணர்த்துவது என்ன? இந்திய புரட்சிக்கு ஒற்றுமையாய் ஒன்றிணைய வேண்டிய தொழிலாளிகள், விவசாயிகள், சிறு விவசாயிகள் வர்க்கம் சாதி ரீதியாக சிதறுண்டு போயிருக்கிறது. தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் கருவியாக சாதியத்தை முதலாளித்துவம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்திய தொழிலாளிகளின் ஒற்றுமைக்கு முதன்மையான எதிரியாய் சாதி இருக்கிறது என்ற கருத்தைத்தான் அவர் இவ்வாறு எடுத்துரைக்கிறார்.

1925 டிசம்பரில், கான்பூரில் நடைபெற்ற முதலாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு தலைமையேற்ற சிங்காரவேலர், தன்னுடைய தலைமையுரையில் இந்திய சமூகத்தில் நிலவும் கொடுமையான சாதிய சமூக அமைப்பு குறித்து மார்க்சிய பார்வையில் கீழ்க்கண்டவாறு அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்:


“தீண்டாமைப் பிரச்சனையை நாம் ஆராய்வோம். அப்பிரச்சனை குறித்து நம் கட்சியின் நிலை குறித்து என் கருத்தைக் கூறுகிறேன். கம்யூனிசக் கொள்கையைப் பார்க்குமிடத்து தீண்டாமைப் பிரச்சனை முற்றிலும் பொருளாதாரப் பிரச்சனை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகுப்பினர் ஆலயங்களிலும் அல்லது குளங்களிலும் அல்லது தெருக்களிலும் அனுமதிக்கப்படுகிறார்களா என்பது நமது சுயராஜ்ஜியப் போராட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சனையன்று. சுயராஜ்ஜியம் வரும்போது, இச்சமூக, மதத்தகுதியின்மைகள் தாமாகவே வீழ்ச்சியடையும். கம்யூனிஸ்ட்டு களுக்கு ஜாதியோ சமயக் கோட்பாடுகளோ கிடையா. இந்துக்கள், முஸ்லீம்கள் அல்லது சிறித்துவர்கள் அவைகளைப் பற்றி எத்தகைய சொந்தக் கருத்துக்களையும் கொண்டிருக்கலாம். கோடிக்கணக்கிலுள்ள இவ்விந்திய மக்களின் தீண்டாமைப் பிரச்சனை சிறப்பாகப் பிணைந்துள்ளது. அவர்களது பொருளாதாரச் சார்பு நிலை தீர்க்கப்பட்டவுடனேயே, தீண்டாமை என்ற சமூகக் கறை மறையத்தான் போகிறது. நிலவுடைமையில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வே கோடிக்கணக்கான அடக்கியொடுக்கப்பட்ட இவ்வகுப்பாரின் அடிமைத்தனத்திற்குத் தலையாய காரணமாகும். கோயில்கள், குளங்கள், சாலைகள் இவைகளைப் பயன்படுத்தும் உரிமை பெற்று விட்டாலே சமூகத்தில் இந்த அவல நிலையிலுள்ளவர்கள் வளமார்ந்த சகோதரர்களுக்கு நிகராக உயர முடியாது. தீண்டாமைப்பிரச்சனை என்பதே சிறப்பாக விவசாயப் பிரச்சனையாகும். இந்தப் பொருளாதாரச் சார்புடைமையிலிருந்து விடுபட்டாலொழிய, தீண்டாமையொழித்தலென்ற பேச்சு இழிவானதும் நேர்மையற்றதுமாகும். நம் சகோதரர்களை நேர்மையற்ற, இரக்கமற்ற முறையில் நடத்துவது குறித்துப் பகட்டாக, மாற்றம் வேண்டாதவன் பேசுகிறான். ஆனால் அவர்கள் பட்டினி, கடும் பசியால் துன்புறும் இல்லங்கள் பற்றி குறிப்பிடுவதை விழிப்புடன் தவிர்க்கிறான். சமூக அநீதிகளை எதிர்த்துப் பெரிதும் பேசுகின்ற இந்தியச் சீர்திருத்தக்காரன் நாட்டின் கோடிக்கணக்கான நமது விவசாயத் தொழிலாளர்களைப் பணக்காரர்கள் பொருளாதார இழிநிலை சிறைக்குள் வைத்திருப்பதைப் பற்றி வாளாவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியச் சீர்திருத்தக்காரனின் பணக்கார மனப்பான்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.”
(சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு வாழ்வும் சிந்தனையும், கே. முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியம், பக்கம்385, வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை-18)


மேற்கண்ட உரையில் இந்தியாவில் நிலவும் தீண்டாமைப் பிரச்சனைக்கு அடிப்படை காரணமாக இருப்பது நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு நீடிப்பதும், குறிப்பாக நிலமற்ற கூலி அடிமைகளான தாழ்த்தப்பட்ட மக்கள், சொந்தக் காலில் நிற்பதற்கு விவசாய நிலங்கள் கிடைப்பதன் மூலம்தான் உண்மையான விடுதலை அவர்கள் வாழ்வில் கிட்டும். இதர உரிமைகள் எல்லாம் வெறும் பேச்சாகத்தான் இருக்கும் என்று ஆணித்தரமாக தனது வாதத்தை எடுத்துரைத்துள்ளார் சிங்காரவேலர்.


மேலும், இந்தியாவில் நீடித்து நிலைபெற்று புரையோடிப் போயிருக்கும் சாதிய கட்டுமானத்தின் அஸ்திவாரம் எவ்வளவு பலமானது என்பதை மிக எளிமையாக விளக்கியிருப்பார் சிங்காரவேலர். ஒரு கட்டிடத்தை உடைத்தெறிய வேண்டும் என்றால், அதன் அஸ்திவாரம் எவ்வளவு வலுவானது என்பதை நாம் கண்டறிய வேண்டும். இதனை முதலில் கண்டறிந்தால்தான் சம்மட்டியைக் கொண்டு அந்தக் கட்டிடத்தை சிதைக்கலாமா? புல்டோசரைக் கொண்டு இடிக்கலாமா? அல்லது வெடிவைத்து வேரோடு தகர்க்கலாமா? என்பதை முடிவு செய்ய முடியும்.


“ஆயிரம் வருஷங்களாக ஜாதியில்லாத மகமதியர் நமது நாட்டை ஆண்டும், 200 வருஷமாக ஆங்கிலேயர் நமது நாட்டைக் கைப்பற்றியும், இன்றுவரை ஆண்டுவந்தும், ஜாதியொழியவில்லை. கடந்த 50 வருஷங்களாகச் சீர்திருத்தக்காரர்கள் ஜாதியை ஒழிக்கப் பிரயத்தனப்பட்டுவந்தும், ஜாதிக் கொடுமை குறைந்தபாடில்லை. காங்கிரஸ் சென்ற 10 வருஷமாக, தீண்டாமை ஒழிய வேண்டுமெனத் திட்டங்கள் போட்டும், எல்லாம் வாய்த்திட்டமாகவும், பேப்பர் திட்டமாகவுமே கிடக்கின்றன.”
அத்துடன், “ஜாதியொழியாமைக்கு முக்கியக் காரணம், ஜாதியைப் பாராமுகமாய்ப் பார்த்து வரும் அரசுகளென அறிக.”

(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி-1, பக்கம் 322-323, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


அதாவது, மேற்கண்ட பல்வேறு மத, தத்துவச் சிந்தனைகளைக் கொண்ட ஆட்சியாளர்கள் நீண்டகாலம் ஆட்சி புரிந்து வந்தாலும் ஏன் சாதியைத்தை தகர்க்க முடியவில்லை! நிலப்பிரபுத்துவ சமூகத்தைத் தாங்கிப் பிடித்த ஆட்சியளர்கள், அரசுகள் ஜாதியை ஒழித்திட எந்தவிதமான திட்டமும் இன்றி, நிலப்பிரபுத்துவ சுரண்டலின் காப்பாளர்களாக சேவகம் புரிந்ததுதான் அடிப்படைக் காரணம் என்று சிங்காரவேலர் அறுதியிட்டு தனது வாதத்தை முன்வைக்கிறார்.


தகர்க்க முடியாத எஃகுக் கோட்டையாக சாதியம் மாறியதற்கு சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட அரசுகளும், அதற்கு துணை நிற்கும் மனுநீதி போன்ற தத்துவங்களும்தான். இத்தகைய எஃகுக் கோட்டையை தகர்ப்பதற்கான அஸ்திரம் என்ன? என்பது குறித்து சிங்காரவேலர் பின்னர் குறிப்பிடுவதை பார்க்கலாம்.


சாதியம் என்பது இந்தியாவில் மட்டும் தோன்றிய கருத்தியலா? உலகில் வேறு நாடுகளில் சாதியம் தோன்றவில்லையா? இக்கேள்விக்கு ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் சாதிய கட்டமைப்பு நீடித்ததையும் அவைகள் எவ்வாறு ஒழிக்கப்பட்டன என்பது குறித்தும் சிங்காரவேலர் கூறுவதைப் பாருங்கள்:


“ஜப்பான் தேசத்தில் ஒருவித தீண்டாதார் இருந்து வந்தார்கள். அவர்கள் பெயர் அயினோ (Aino). அவர்களும் நமது நாட்டு தீண்டாதாரை நடத்துவதுபோல் நடத்தப்பட்டு வந்தார்கள். அந்நாட்டில் சாமுரெ (Samurai) என்ற உயர்குலத்தோர் நமது நாட்டுப் பிராமணரைப் போல் அவ்வூர் தீண்டாதாரை நடத்தி வந்தனர். 60 வருஷத்திற்கு முந்தி ஜப்பானியருக்கு ஓர் புது உணர்ச்சி வந்ததை முன்னிட்டு சாமுரே அனைவரும் தங்கள் தன்னல வாழ்வை (Exclusivenes) விட்டு அயினோக்களைத் தங்கள் சமூக வாழ்க்கையில் சகல சமத்துவத்துடன் வாழ்ந்துவர அவர்களுடைய பொருளாதாரத் தாழ்வை நீக்க வேண்டிய வசதிகளைவுண்டு பண்ணியதின் காரணமாக இன்று, ஜப்பான் தேசம் வல்லரசுகளில் வொன்றாக மதிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கில நாட்டிலும், ஆங்கில பிரபுக்கள் தங்கள் தேச சாமான்ய ஜனங்களை, பண்டைக் காலத்தில், ஓர் விதமான தீண்டாதாரைப் போல் நடத்தி வந்தார்கள். ஆனால், சில நூற்றாண்டுகளாக செல்வந்தர் கிளர்ச்சியால், பல துறைகளிலும் விலக்கப்பட்டிருந்த சாமான்ய ஜனங்கள் சற்று பொருளாதார பெருக்கைப் பெறவும், ஆங்கில தீண்டாமையொழிந்து சாமான்ய மக்கள், ஏறக்குறைய பல சமத்துவங்களை அனுபவிக்க இடம் கொடுத்தது.
பிரஞ்சு தேசத்திலும், மற்ற உலக முழுமையுமே, பொருளாதார விடுதலையால், பாமர மக்கள் சிற்சில சுதந்திரங்களையு பெற நேர்ந்தது. மனித குலம் சுகமுடன் வாழ வேண்டுமானால், பல கோடிப் பல்லாயிர பாமர மக்களின் பொருளாதார தாழ்வு நீங்க யாவருக்கும் பொருளாதார சமத்துவம் வரவேண்டுமென அறிக. எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்.”

(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், பக்கம் 61, வெளியீடு : பாரதி புத்தகாலயம்)


உலகம் முழுவதிலும் சாதிய சமூக அமைப்பு இந்தியாவில் உள்ளது போல், வெவ்வேறு விதமாக இருந்துதான் வந்திருக்கின்றன. நிலப்பிரபுத்துவ சுரண்டல் அமைப்பின் ஆணி வேராக சாதியம் நிலைபெற்றிருக்கிறது. ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் உட்பட்ட நாடுகளில் நடைபெற்ற முதலாளித்துவப் புரட்சி இவற்றிற்கு முடிவு கட்டியுள்ளது. சாதி சமூக அமைப்பு தகர்க்கப்பட்டிருக்கிறது - பொருளாதாரத் தாழ்வே இவற்றிற்கு அடிப்படை காரணியாக இருந்தது என்பதை சிங்காரவேலர் விளக்குகிறார்.


நால்வருண அமைப்பும் வர்க்கச் சிந்தனையும்


சாதியத்தின் ஆணி வேராக இருக்கும் “வர்ணாசிரமத்தை”, “மனு தர்மத்தை” வெறும் சாதிகளின் அடுக்குகளைக் கொண்ட கட்டுமானத்தை கொண்டதாக மட்டுமே பார்க்கும் போக்குதான் பெரும்பாலும் இருக்கிறது. இந்த சாதிய அடுக்கிற்குள் ஒன்றிணைந்து நிற்கக்கூடிய பொருளாதார ஏற்றத்தாழ்வை சமூக சீர்திருத்த சிந்தனையைக் கொண்ட சாதி ஒழிப்பு எதிர்ப்பாளர்கள் பார்க்க மறுப்பதையும் நடைமுறையில் காண முடிகிறது. இது அவர்களது வர்க்கத்தன்மையற்ற சாதி எதிர்ப்பு கொள்கையைத்தான் காட்டுகிறது. இது குறித்து சிங்காரவேலர் கூறும் போது,


“ஜாதியும் பொருளாதார நட்பிலேயே கலந்துள்ளது. நான்கு வருணத்தார்களாகிய பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்களுக்குள் ஏற்பட்ட வேற்றுமை பொருளாதாரத்தையொட்டியே ஜனித்திருக்க வேண்டும். எப்படியெனில் கடை வருணத்தாராகிய சூத்திரன் ஏழையாகவே இருந்து வந்திருக்கிறான். இன்றைக்கும் பிராமணர்கள், பெரும்பான்மை சூத்திரர்களைவிட பொருள் பெற்றிருப்பதை பார்க்கலாம். எந்தக் கிராமத்திலும் பிராமணர்கள்தான் செல்வத்திலும், செல்வாக்கிலும் மிகுந்தவர்கள்.
ஆதிவேத காலத்திலும், பிராமண ஜாதியர்கள் செல்வாக்கைப் பெற்றிருந்ததை ரிக் வேத சம்ஹீதைகளில், 'யானை மேல் பொன்னைக் கொண்டு போக வேதியன் பெற்றான்' எனவும் கூறியுள்ளது. மற்ற ஜாதியாலும் அடுத்தாற்போல் செல்வத்தைப் பெற்று இருத்தலால், அந்தந்த வர்ணத்தார் பொருள் படைத்துள்ள ஜாதிப் பதவிகளைப் பெற்றுள்ளார். கடைசியில் நின்ற சூத்திரன் பொருளற்றவனாதலால், கஷ்ட வேலை செய்து பிழைக்க நேரிட்டது. இவனுக்கும் கடையாயுள்ள பஞ்சமனோ (ஐந்தாம் ஜாதியான்) எந்தப் பொருளும் இல்லாத தோஷத்தால் கிராமத்திற்கு அப்புறம் கிடத்தப்பட்டிருக்கிறான்.”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 388-389, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


இன்றைய சாதி எதிர்ப்பு ஆதரவாளர்கள் பெரும்பாலோர், சாதி எதிர்ப்பு உணர்வினை வெறும் பிராமண எதிர்ப்பு உணர்வாகவும், மனுநீதிக்கு எதிரான உணர்வாகப் பார்க்கும் சடங்குத்தனமானப் பார்வைதான் மிஞ்சுகிறது. ஆனால், அதற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வினை, சுரண்டல் மனப்பான்மையினை அம்பலப்படுத்தத் தவறுகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வினை உருவாக்கிய பொருளாதார உடைமைத் தனத்தை காணத்தவறுவது, ஒடுக்கப்பட்ட கடைநிலை மக்களாகிய தாழ்த்தப்பட்ட மக்களிடையே வர்க்கத்தன்மையற்ற உணர்ச்சிவயப் பட்ட சாதிப் பார்வைக் கொண்டதாக மாற்றும் போக்கே காணப்படுகிறது.


இதற்கு தமிழகத்தில், பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கத்தை நடத்திய நீதிக்கட்சியை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவர்களது நோக்கம் ஒட்டுமொத்த சாதியையும் ஒழிப்பது அல்ல; மாறாக, பார்ப்பனர்களின் அரசியல் - பொருளாதார செல்வாக்கில் தங்களுக்கு உரிய பங்கை நிலைநாட்டிக் கொள்வது தானே தவிர வேறு ஏதும் இல்லை. இதிலிருந்து மாறுபட்டதன்மை கொண்டது தான் சிங்காரவேலர் மற்றும் பெரியாரால் உருவாக்கிய சுயமரியாதை - சமதர்ம இயக்கம். இன்றைய திராவிட இயக்கங்கள் சுயமரியாதை - சமதமர்ம இயக்க பாரம்பரியத்தை கைகழுவி விட்டு, நீதிகட்சி பாரம்பரியத்தை சுவீகரித்துக் கொண்டதாக மட்டுமே உள்ளது. அதனால்தான் தமிழகத்தில் 40 ஆண்டுகால திராவிட இயக்கத் தலைமையிலான ஆட்சி கோலோச்சியிருந்தாலும் தீண்டாமை தணிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.


சாதி என்பது ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது, ஒன்றைவிட ஒன்று தாழ்ந்தது என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பல அடுக்குகளை உள்ளடக்கியதாகும். இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டைகளாக ஒட்டுமொத்த சாதிய சமூகத்தின் சுரண்டல் சுமைகளால் அமுக்கப்பட்டவர்களாக, அழுத்தப்பட்டவர்களக மாற்றப்பட்டுள்ளனர்.


அத்துடன் நிற்காமல், தீண்டாமை பிரச்சனை குறித்து நன்கு ஆராயும் சிங்காரவேலர் வர்க்கத்தன்மையற்ற பகட்டுத்தனமான தீண்டாமை ஒழிப்பு சீர்திருத்தவாதிகளின் சிந்தனை கூர் மழுங்கிப் போயுள்ளது குறித்து கீழ்க்கண்டவாறு நேரிடையாக கேள்வி எழுப்புகிறார்:


“தீண்டாமை, தீண்டாமை என்ற பூச்சாண்டியைக் காட்டிக் கொண்டு, தாழ்த்தப்பட்டிருக்கும் மக்களை அதனால் திருப்தி அடையும்படி ஏமாற்றப்போகின்றார்களா? தீண்டாமை மாத்திரம் நீங்கினால், தீண்டாமையால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு வறுமையும், பிணியும், அறியாமையும் நீங்கிவிடுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், பக்கம் 13, வெளியீடு : பாரதி புத்தகாலயம்)


மேற்கண்ட கேள்வியின் மூலம் தீண்டாமை ஒழிப்பின் அடிப்படை “பொருளாதார உரிமையே” அன்றி வேறொன்றில்லை என்று உறுதியாக நம்புகிறார். இந்த பொருளாதார உரிமையைப் பற்றி பேசாத எந்த தீண்டாமை ஒழிப்புச் சிந்தனையும் போகாத ஊருக்கு வழிகாட்டுவதாகவே இருக்கும்.


சாதியால் பலனடைவது யார்?


மேலும், கடவுள், மதம், சாதி போன்றவைகள் எல்லாம் கற்பனையானவை. இவைகள் அனைத்தும் பொருளற்ற தன்மை கொண்டது என்பதை சிங்காரவேலர் கீழ்க்கண்டவாறு உரைக்கிறார்:


“கடவுள் எனுஞ் சொல், மதமென்ற சொல், ஜாதியbன்ற சொல் முதலிய சொற்கள் கற்பனா சொற்களென அறிதல் வேண்டும். ஆதலின், மனிதன் பேசும் வன்மையால், இவ்வித கற்பனா சொற்களை சிருஷ்டி செய்து கொள்ள, துர்அதிர்ஷ்டம் பெற்றன். மற்ற மிருகாதிகள் பேசுந்திறமையைப் பெறாமையால், கற்பனை செய்ய முடியவில்லை.
ஆதலின் மிருவர்க்கங்கள் யாவும் கடவுள், ஜாதி, மத கற்பனைகள் இல்லாமல், பல கோடி வருஷங்களாக, சுகித்து வாழ்ந்து வருகின்றன. மனினோவெனில், பேசுந்திறமையை நல்வினியோகப்படுத்தி வந்ததோட, கற்பனைகளாலும், புராணக் கட்டுக்கதைகளாலும் தனக்கே தீங்கிழைத்துக் கொள்ள, கடவுளென்ற பதத்தையும், ஜாதி என்ற பதத்தையும், மதமென்ற பதத்தையும் சிருஷ்டித்துக் கொண்டான். இதுதான் இந்த சொற்களின் சரித்திரம்.”
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், பக்கம் 58, வெளியீடு : பாரதி புத்தகாலயம்)


அதாவது, கடவுள், மதம், சாதி போன்றவற்றால் மனிதனுக்கு தீங்குகள் ஏற்பட்டதும், சண்டை சச்சரவுகள் பெருகியதே ஒழிய வேறு நன்மைகள் ஏதும் ஏற்படவில்லை. எனவே இந்த பொருளற்ற சிந்தனைகளை மனிதகுலம் விட்டொழித்து நன்மை செய்ய வேண்டும் என்று அறிவியல் பூர்வமாக எடுத்துரைக்கிறார். வேண்டுமானால், சாதியை தூக்கிப் பிடிக்கும் உயர் சாதிக்காரர் களுக்கு வேண்டுமானால் பொருளாதாயம் கிடைக்கலாம்; அதேபோல் மதத்தை வளர்த்து வரும் புரோகிதர்களுக்கும், மத குருமார்களுக்கு வேண்டுமானால் ஆதாயம் கிட்டலாம்; சுரண்டல் பேர்வழிகளுக்கு இது சுகமளிக்கலாம்; ஆனால், இதனைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு எந்தவொரு லாபமும் இல்லை என்று அறிவியல் பூர்வமாக விளக்குகிறார். அத்துடன் மேற்கண்ட சொற்கள் அனைத்தும் “பொருளற்ற” வெறுஞ் சொற்கள் என்றே விளக்குகிறார்.


சாதி, மதம் போன்றவற்றின் தொடர்ந்த நீட்டிப்பிற்கு அடிப்படை காரணிகளில் ஒன்று; “சொந்த வாழ்க்கையில் - இல்வாழ்வில் அதனைக் கடைப்பிடிப்பது” என்று விமர்சித்து அதன் வேரை தொட்டுக் காட்டுகிறார். ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், பூப்பெய்துதல், காதுகுத்துதல்... போன்று பல்வேறு நிகழ்வுகளில் சாதியமும், மதமும் தங்களுக்கு உரிய இடத்தை தக்க வைத்துக் கொள்கிறது. மனிதனின் இல்வாழ்க்கையில் அதனை இல்லாமல் போக்கும் வரை அதன் பிடியில் தளர்ச்சியை ஏற்படுத்திட இயலாது என்பதைத்தான் சிங்காரவேலர் சுட்டிக் காட்டுகிறார்.


காந்தியும் - தீண்டாமை ஒழிப்பும்


மற்றொரு இடத்தில், தீண்டாமை குறித்து பொருளுள்ள ஒரு கேள்வியை சிங்காரவேலர் எழுப்புகிறார். குறிப்பாக மகாத்மா காந்தி தாழ்த்தப்பட்ட மக்களை “அரிஜன்” என அழைத்தார். அதாவது, அரியின் ஜனங்கள் - கடவுளின் குழந்தைகள் என அழைத்தார். இருந்தாலும் என்ன மகாத்மா சொல்லிவிட்டதால் தீண்டாமை ஒழிந்து விட்டதா? இல்லையே! அதுமட்டுமா? சுதந்திரப்போராட்டக் காலத்தில் 'சமபந்தி போஜனம்' என்று போடுவார்கள். அதாவது அனைவருக்கும் சமமாக விருந்து படைப்பதைத்தான் இவ்வாறு கூறுகிறார்கள். இருந்தாலும் என்ன தீண்டாமை ஒழிந்து விட்டதா? அல்லது சமபந்தி போஜனத்தில் கலந்து கெண்டவர்கள்தான் அதனை விட்டு விட்டார்களா? இத்தகைய நடவடிக்கைகளில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் இதுபோன்ற நடவடிக்கைகளாலேயே சாதியத்தை ஒழித்து விட்டிருக்கலாமே! ஏன் முடியவில்லை? இதைத்தான் சிங்காரவேலர் வானில் பெரும் இடியிடிப்பதுபோல் கேட்கிறார், “தீண்டாதானை தீண்டி விட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா?” என்று கேள்வி எழுப்புவதோடு நின்று விடாமல், இவ்வளவு ஆண்டுகளாக இந்தத் தீண்டாமையால் வந்த வறுமையும், ஏழ்மையும் தலித்துக்களை தீண்டுவதால் ஒழிந்து விடுமா என்று கேட்பதில்தான் உண்மையான அர்த்தம் பொதிந்துள்ளது.


எனவே தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய பிரச்சனை என்பது வெறும் தீண்டாமை மட்டுமல்ல; அதனுடன் சேர்ந்துள்ள வறுமையும், ஏழ்மையும்தான் என்று தனது வர்க்கப் பார்வையை 1930களிலேயே சிங்காரவேலர் முன்வைத்துள்ளார். எனவே, தீண்டாமை ஒழிப்பு என்பது அவர்களது வறுமையையும், வாட்டத்தையும் போக்கும் முதல் படியிலிருந்து தொடங்க வேண்டும் என்பதைத்தான் சிங்காரவேலர் அப்படி கூறுகிறார். வர்க்க ஏற்றத்தாழ்வால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் வறிய நிலைக்கு, கடை நிலைக்கு, தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்று மார்க்சிய அணுகுமுறையோடு இப்பிரச்சனையை அணுகுகிறார் சிங்காரவேலர்.


அடுத்து, காந்தியின் சுயராஜ்ய கனவுகள் எல்லாம் முதலாளிகளின் ராஜ்யமாகவே இருக்கும். அது ஏழைகளுக்கும், தலித்துக்களுக்கும் ஒருபோதும் பயன்தராது என்று அன்றைக்கே காந்தியத்தின் வர்க்கத்தன்மை குறித்து அம்பலப்படுத்தினார் சிங்காரவேலர். மேலும், இந்தியாவிற்கான சுதந்திரம் குறித்த பேச்சுவார்த்தைகள் எழுந்தபோது, நடைபெற்ற வட்டமேஜை மாநாடு குறித்தும், அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு இருந்தன என்பனவற்றை சிங்காரவேலர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.


“வட்டமேஜை மாநாட்டில் ஆங்கிலப் பிரதிநிதிகளும், தேசியப் பிரதிநிதிகளும், தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதிகளும் சேர்ந்து நமது இந்தியத் தேசத்தில் வழங்கவேண்டிய அரசியல் திட்டமொன்றைத் தயாரித்து வருகின்றார்கள். முதலில் அரசியல் பாதுகாப்புகளை யோசித்து (1) சொத்துரிமை, (2) மதசமூக உரிமை, (3) ஜாதி உரிமைகளை அந்தந்தப் பொருளுடையோருக்கும், அந்தந்த ஜாதியாருக்கும் அரசியல் பாதுகாப்பு அளிக்கப்படுமென்று தீர்மானித் திருக்கின்றார்கள். இதன் பொருள் என்னவெனில் சொத்து, மதம், ஜாதி இம்மூன்றும் சமூக ஏற்பாட்டில் (Social System) எந்த மாறுதலும் செய்யப்படாதென்பதே.”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 397, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


மேற்கண்ட கருத்தை அம்பலப்படுத்தும் சிங்காரவேலர், அத்துடன் நிற்காமல், வட்டமேஜை மாநாட்டுத் தீர்மானத்தை தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மை நிலையிலிருந்து விமர்சிப்பது கீழே பார்ப்போம்:


“6 கோடி பேர் தீண்டப்படாதவர்களென்றும், தாழ்த்தப்பட்டவர்க ளென்றும், ஒடுக்கப்பட்டவர்களென்றும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த 6 கோடி மக்களுக்கு ஒரு செண்டு நிலமாவது தங்களுக் கில்லையாதலால் இவர்களுக்கு எவ்வித சொத்தைப் பாதுகாக்க நமது வட்டமேஜை கூட்டத்தால் சொத்தைப் பாதுகாக்கும் திட்டத்தை முதன்முறையாக அரசியல் திட்டத்தில் செய்ய மனம் வந்தது என்று கேட்கின்றோம்?
சொத்துவொன்றில்லாத ஏழையனாதிகளாகிய 2000 லட்சம் பேருக்கு என்னத்திற்காகச் சொத்து பாதுகாப்பு வேண்டுமெனவும் கேட்கின்றோம். சொத்தில்லாத பஞ்சை, பனாதிகளுக்கு வேறெந்தப் பாதுகாப்பும் செய்யாமல் சொத்து பாதுகாப்பு செய்யத்தான் நமது எம்.சி. ராஜாவும், அம்பேத்கரும் வட்டமேஜைக்குட் புகுந்திருக்கின்றனர்களா என்று கேட்கின்றோம். உணவு இல்லாதவனுக்கு உணவு கிடைக்கப் பாதுகாப்பும், ஆடை இல்லாதவனுக்கு ஆடை கிடைக்கப் பாதுகாப்பும், வீடில்லாதவனுக்குக் வீடு கிடைக்கப் பாதுகாப்பும், ஞானமில்லாத வனுக்குக் கல்வி கிடைக்கப் பாதுகாப்பும், வேலை இல்லாதவனுக்கு வேலை கிடைக்கப் பாதுகாப்பும் செய்வதன்றோ, சமதர்ம ராஜரீக முறையாகும்?
இதை எல்லாம் விட்டு விட்டுச் சொத்து யாதென்றுமில்லாதானுக்குச் சொத்து பாதுகாப்பும், மதமில்லாதவனுக்கு மத பாதுகாப்பும், ஜாதியில்லாதனுக்கு ஜாதி பாதுகாப்பும் செய்ய திட்டம் செய்வதென்றால், இதைவிட பயித்தியக்காரத்தனம் என்ன இருக்கின்றது?”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 398-399, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


மிக எளிமையாக, அதே சமயம் ஆழமாக சிங்காரவேலர் எழுப்பிய கேள்விக்கான விடையின் திசைவழியில் கூட சாதி ஒழிப்பு இயக்க ஆதரவாளர்கள் நகராதது வருத்தத்திற்குரிய விஷயம்தான். சாதிய சமூகம் இன்றைக்கும் இந்தியாவில் உயிர் வாழ்வதற்கு அடிப்படையே, சொத்துரிமை என்பதுதான். கடந்த 3000 ஆண்டுகளாக ஆதிக்கசாதிகளின் கையிலிருந்த அதே நிலைதான் தற்போது வேறு, வேறு வடிவங்களில் தலை தூக்குகிறது. இந்திய சுதந்திரமும், இந்திய அரசியல் சட்டமும் இதில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏன் இன்று வரைக்கும் கல்வி மற்றும் வேலை பெறும் உரிமையைக் கூட அடிப்படை உரிமையாக அரசியல் சட்டத்தில் உத்திரவாதப்படுத்தப்படவில்லை. நிலவு டைமை இன்னும் தகர்க்கப்படவில்லை என்பதோடு மட்டுமல்ல; முதலாளித்துவ நிலச்சீர்திருத்தம் கூட இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசுகள் உள்ள மேற்குவங்கம், கேரளம், திரிபுரா தவிர வேறெங்கும் அமலாக்கப்படவில்லை என்பதே இன்றைய 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் எதார்த்த நிலை. அது மட்டுமல்ல; சாதி மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற உத்திரவாதத்தையும் இவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். சாதி ஒழிப்பு என்பது இவர்களின் முதன்மையான அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்ல; இதுதான் தீண்டாமை என்ற நோய் இந்தியாவில் நீடிப்பதற்கான அடிப்படை.


இதனை அடிப்படையாகக் கொண்டுதான் சிங்காரவேலர் சாதி ஒழிப்புக்கு மிகவும் அடிப்படையானது எது என்று கீழ்க்கண்டவாறு உரைப்பதை பார்க்கலாம்:


“ஜாதியொழியாமைக்கு முக்கியக் காரணம், ஜாதியை பாராமுகமாய்ப் பார்த்து வரும் அரசுகளென அறிக. ஜாதியை ஆதரிக்கும் அரசுகள் எதுவாயினும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யமாய் இருந்தாலும் சரி அல்லது காந்தி சுயராஜ்யமாய் இருந்தாலும் சரி, அல்லது மிதவாதிகளின் டொமீனின் (Dominion) அரசாய் இருந்தாலும் சரி அல்லது ஜஸ்டிஸ் கட்சியின் கான்ஸ் டிடூஷனல் டிமாக்கிரஸியாய் இருந்தாலும் சரி, அல்லது பெசந்தம்மையின் ஹோம்ரூலாய் (Home Rule) இருந்தலாலும் சரி, நமது இந்திய நாட்டை விட்டு ஜாதியொழிப் போவதில்லை.
எப்போது ஜாதி ஒழியுமென்றால், ஜாதியும் மதமும் அற்ற நமது சுயமரியாதையோர் கோரும், சமதர்ம ஆட்சி பாமர மக்களுக்கு ஏற்பட்டால் அப்போதுதான்....”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 323, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


3000 ஆண்டுகளாக சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும், தலித் என்றும் பல்வேறு பெயர்களில் தீண்டப்படாத மக்களாக மாற்றியதோடு, அவர்களை ஏதும் அற்றவர்களாக மாற்றிய இந்த சமூக அமைப்பில் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்னும் கூட தலித்துகளுக்கு அதே நிலை நீடிக்கிறது என்றால் இதற்கு யார் காரணம்? இந்தியாவை ஆளும் நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பிடியை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டிருப்பதால்தான் இந்திய ஆட்சியாளர்களால் அதிலிருந்து தப்ப முடியவில்லை என்ற உண்மையை அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்திய சுதந்திரப் போரில் பல லட்சக்கணக் கான மக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் கூட, அந்த மக்கள் வர்க்க ரீதியாக அணித்திரட்டப்படாததன் விளைவாகவும், தங்களுக்கு ஆதரவாக அந்த மக்களை பயன்படுத்திக் கொண்ட காங்கிரசும், முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சக்திகளும் சுதந்திர இந்தியாவிலும் தலித்துக்களையும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களையும் சுரண்டுவதற்கும், தாங்கள் சுரண்டி சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தை மேலும் பெருக்கிக் கொள்வதற்கு வழியுள்ள ஒரு நாடாக இந்தியாவை எப்படி மாற்றுவது என்ற நோக்கத்தில்தான் தற்போதைய இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பாதுகாப்பு அரணாக அவர்களுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


இந்திய அரசியல் சட்டத்தில், “தீண்டாமை ஒரு குற்றம், ஒரு பாவச் செயல்” என்று எழுதி வைத்ததால் மட்டும் தீண்டாமை விட்டதா, இல்லையே? ஒழியாது! மாறாக, அந்த நிலமற்ற, சொத்துக்களற்ற மக்கள் குறைந்தபட்சம் தங்களது வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் அளவிற்கான வாழ்க்கையை உத்திரவாதம் ஏற்படாத வரையில், ஆதிக்க சாதிகளின் அடிமை சேவகர்களாக தலித்துக்கள் இருப்பதிலிருந்து விடுதலையடைப் போவதில்லை. எனவேதான், மார்க்சிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகள் சிங்காரவேலர் காலம் தொட்டு இப்பிரச்சனையை வெறும் சாதியப் பிரச்சனையாக மட்டும் அணுகாமல், அதற்குள் ஒளிந்து கொண்டுள்ள வர்க்கப் பிரச்சனைகளையும் கூர்மையாக நோக்கு கின்றனர். வர்க்கப் பிரச்சனையை மறைத்துவிட்டு சாதி ஒழிய வேண்டும், சாதி ஒழிய வேண்டும் என்று கனா காண்பவர்கள் உண்மையில் ஆதிக்க சாதிக்கும், சாதி அடிமைத்தளையில் உள்ள மக்களை சுரண்டிக் கொழுக்கும் பெரும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சக்திகளின் மறைமுக காப்பாளர்களாக திகழ்கின்றனர். அத்தகைய மறைமுக சேவையைத்தான் சில சாதி ஒழிப்பு பித்தர்கள் செய்து வருகிறார்கள். அவர்களது நோக்கம் சரியாக இருக்கலாம். பார்வை சரியாக இல்லாவிட்டால், வெறும் பிதற்றலாக முடிவது இயற்கைதானே!


மதமும் ஜாதியும்


தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து பல்வேறு கோணங்களில் ஆராயும் சிங்காரவேலர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதம் ஒன்று இல்லவே இல்லை என்று ஆணித்தரமாக தனது வாதத்தை எடுத்துரைப்பதை கீழே நோக்கலாம்:


“நமது 6 கோடி தாழ்த்தப்பட்டவர்களுக்கு மதம் ஒன்று இருப்பதாகச் சொல்ல முடியாது. அவர்கள் இந்துக்கள் அல்ல. இந்துத் தெய்வங்களை அவர்கள் தொழ முடியாது. இந்து கோயில்களில் நுழைய முடியாது. இந்துக் குளங்களில் அவர்கள் குளிக்க முடியாது. இந்து தெய்வங்களாலும், கோயில்களாலும், குளங்களாலும் ஆதரிப்புவொன்றுமில்லாத தீண்டாதாருக்கு மதபாதுகாப்பு ஏன் வேண்டும்? மதமில்லாதவர்களுக்கு மதபாதுகாப்பினால் என்ன பிரயோசனம்? இந்து தெய்வங்களைத் தொழ முடியாத, இந்து கோயில்களில் நுழைய முடியாத, இந்து குளங்களிலும், கிணறுகளிலும் குளிக்க முடியாத, ஏழு கோடி பஞ்சமர்களுக்குச் சமயப் பாதுகாப்பு என்னத்திற்கு?”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 399, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


இத்துடன் நிற்காமல், தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் வாழும் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கும் சிங்காரவேலர் அவர்களது கோயில் நுழைவு போன்ற கோரிக்கைகள் குறித்தும் எழுப்பும் கேள்விகள் சிந்திக்கத்தக்கது.


“இன்னொரு கூச்சல் பத்திரிகைகளில் எழுகின்றது. கோயிலைத் திறந்து விடுங்கள்; குளங்களைப் பொதுவாக விடுங்கள்; பஞ்சமர்களை வீதிகளில் போக விடுங்கள் என்று காசி முதல் ராமேஸ்வரம் வரை கூக்குரல் போடுகின்றார்கள். இதனால் என்ன லாபம்? என்று கேட்கின்றேன். கோயிலையும், குளங்களையும் பஞ்சமர்களுக்குத் திறந்து விட்டால் அவர்களுக்கு என்னாகும் என்று கேட்கின்றேன்? அவர்கள் வயிறு நிரம்புமா? அவர்கள் குழந்தைகளுக்கு வயிறு நிறையப் பால் கிடைக்குமா? அவர்கள் பெண்களுக்குப் பிரசவ உதவி (Minimum Comforts) கிடைக்குமா? அவர்கள் வாழ்வுக்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகள் (ஆiniஅரஅ ஊடிஅகடிசவள) என்ன ஏற்படுமெனவும் கேட்கின்றேன்?
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பஞ்சமர்களுக்குக் கோயிலைத் திறந்து விடுவதும், குளங்களைத் திறந்து விடுவதும், பஞ்சமர்களுக்கு உயிரை விடுகின்றேன் என்று சொல்வதும் நமது 5 கோடி ஏழை பஞ்சமர்களை இனியும் மூட பக்தியிலும், மூட நம்பிக்கையிலும், தரித்திரத்திலும், அறியாமையிலும் தாழ்வடைந்து கிடந்து உழலச் செய்யும் தந்திரமென அறிக.”

(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, பக்கம் 399, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14.)


இதேபோல், இன்னொரு இடத்தில் தலித்துக்கள் இந்து மதத்தை விட்டு விலகி வேற்று மதத்திற்கு மாறினால் அவர்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்ற வாதத்தில் உள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டுகிறார். அதாவது, “ஒரு மூடத்தனத்தில் இருந்து இன்னொரு மூடத்தனத்திற்கு மாறுவதால் என்ன பயன் என்று” வினா எழுப்பும் சிங்காரவேலர், ஒரு மதத்தைச் சேர்ந்த சுரண்டலாளரின் அடிமை என்பதிலிருந்து இன்னொரு மதத்தின் புதிய அடிமையாக மாறுவதைத் தவிர வேறு என்ன ஏற்படப் போகிறது என்று கேள்வி எழுப்புகிறார்.


காந்தியின் உண்ணாவிதம்


அதேபோல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தலித்துக்களுக்கு தனி வாக்காளர் தொகுதி தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இதே கோரிக்கை சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுந்தபோதுதான், மகாத்மா காந்தி அவர்கள், எரவடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். தலித்துக்களுக்கு தனி வாக்காளர் தொகுதி ஒதுக்குவது என்பது அவர்களை இந்துக்களில் இருந்து பிரித்துச் செல்வது என்று காந்தி கருதினார்.


இத்தகைய கோரிக்கை குறித்து அன்றைக்கே சிங்காரவேலர் மார்க்சிய அடிப்படையில் இதனை அணுகி காந்தியின் உண்ணாவிரதம் ஒரு தற்கொலை முயற்சி - சிறு பிள்ளைத்தனமானது என்று இடித்துரைத்துள்ளார். அதாவது? தலித்துக்களுக்கு கூடுதல் தொகுதிகள் தந்து விடுவதால் ஒன்றும் யாரும் குறைந்து விடப்போவ தில்லை என்று சொல்வதோடு, இவ்வளவு நாட்கள் நீங்கள் எல்லாம் அமைச்சர் மற்றும் இதர பொறுப்புகளில் இருந்து எதைச் செய்தீர்கள் அவர்களுக்காக என்று கேள்வி எழுப்புவதோடு, அந்த கோரிக்கைக்கு வலுவான ஆதரவாளராக அன்றைக்கு திகழ்ந்தவர் சிங்காரவேலர்.


தொழிலாளி வர்க்கத்திற்கு பொருத்திய இதே விஷயத்தை சிங்காரவேலர் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஹெஜிமனி (Hegemony) எவ்வாறு இந்தியாவில் உள்ளது என்பதை வெகுச் சிறப்பாக அம்பலப்படுத்துகிறார்.


“ஜாதியும், மதமும் சொத்துரிமையும், முதலாளிகள் தங்கள் செல்வத்தையும் செருக்கையும், ஆதிக்கத்தையும், உரிமையையும், காப்பதற்குக் கட்டிக்கொண்டிருக்கும், கோட்டை மதில்கள் என அறியவேண்டும். இவ்வாயில்கள் திறந்து இருக்கும்வரை சமதர்மம் நிலையாதெனவும் அறிதல் வேண்டும்.”
(ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம், தொகுதி -1, வெளியீடு : தென்னக ஆய்வு மையம், சென்னை - 14 )


இப்படி பல்வேறு கோணங்களில் சாதியின் பிடிமானம் எவ்வாறு உள்ளது? அதனை எதிர் கொள்பவர்கள் வைக்கும் வாதங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த சிங்காரவேலர் தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் மார்க்சியப் பார்வையில் வழிகாட்டியுள்ளார். இது என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. அதனை அவரது எழுத்துக்கள் மூலமே கீழே பார்க்கலாம்.


சாதியை ஒழிப்பதற்கு அரசியல் தீர்வுதான் அடிப்படையானது என்பதை வலியுறுத்தும் சிங்காரவேலர், அத்துடன் நிற்காமல் மக்களிடையே ஒரு மெய்ஞான உணர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார். மெய்ஞான உணர்ச்சி என்றால், சமூகத்தைப் பற்றியும், மனித உடலியல் மற்றும் இயற்கை சார்ந்த விஷயங்கள் குறித்தும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திட வேண்டும் என்பதோடு, குழந்தைகளிடத்தில் இத்தகைய அறிவியல் பார்வையை போதிப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுவதோடு சோசலிச சமூகத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உண்மையான விடுதலை கைகூடும் என்று வலியுறுத்தி அதனை செயலாக்கம் செய்திட வேண்டும் என்று உரைக்கிறார்.


“ஜாதி வேற்றுமையொழிய வேண்டுமானாலும், ஜாதிக் கொடுமை களால் தீண்டாமை, பொது ஸ்தாபனங்களில் நுழையாமை, ஜாதிக் கட்சி மற்றும் பல வகையான கொடுமையுள்ள கட்டுதிட்டங்களை ஒழிக்குமாறு சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும். இதனடுவில் பாமர மக்களுக்கு மெய்ஞானம் உண்டாகும்படிப் பல நூல்களை இந்தப் பாஷைகளில் இயற்றியும், சினிமா மூலமாகவும், ஆகாய தொனிகள் மூலமாகவும், பாமர மக்கள் வாழும் கிராமங்களில் உலக உற்பத்தி, ஜீவ உற்பத்தி, பிரபஞ்ச உற்பத்தி, வான சாஸ்திரம், பூகோள சாஸ்திரம், பூர்வ மனித சாஸ்திரம், வைத்திய நூல் முதலிய சிறந்த ஞானங்களைக் கொண்டு மூடப்பக்தி ஜாதிபக்தி, மதபக்தி ஒழியுமாறு முயற்சித்தல் வேண்டும்.”
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், பக்கம் 49-50, வெளியீடு : பாரதி புத்தகாலயம்)


மற்றொரு இடத்தில் சிங்காரவேலர் கூறுகிறார், இந்த ஜாதி வித்தியாசங்களையும், மத வித்தியாசங்களையும், பொருளாதார வித்தியாசங்களையும் ஒழிக்க வேண்டும் என்றால் தொழிலாளிகள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துக் கொள்ளும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அமையவேண்டும். சாதி, மத, கடவுள் நம்பிக்கைகளற்ற ஆட்சி நிலைக்கும்போதுதான் இவற்றை சமூக்திலிருந்து ஒழிப்பதற்கான முதற்படியில் காலடியெடுத்து வைக்க முடியும் என்று.


“உண்மை சுதந்திரம் பெற வேண்டுமாயின் பொது ஜன சுயராஜ்யம் நிலைக்கப் பாடுபட வேண்டும். இந்த சுயராஜ்யத்தில் பொது மக்களின் வறுமையும், தரித்திரமும் முதலில் வொழியுமாறு சமூகத் திட்டங்கள் செய்ய வேண்டும். மக்கள் கற்பனைகளும் ஜாதி வேற்றுமைகளும் இந்திய சமூக வாழ்விலிருந்து பற்றவே யொழிதல் வேண்டும்.”


என்று வலியுறுத்தி அரசியல் ரீதியாக சோசலிச சமூகத்தில்தான் இந்த ஜாதிய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று வலியுறுத்தும் சிங்காரவேலர் இதற்காக தீர்மானமுள்ள வேலைகளை (பாசிட்டிவ் ஒர்க்) செய்ய வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.
(நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? ம. சிங்காரவேலர், வெளியீடு : பாரதி புத்தகாலயம்)


சிங்காரவேலர் சுட்டிய வழியில் சாதி ஒழிப்பு இயக்கங்களும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் களத்தில் ஓரணியாய் - வர்க்க ரீதியாக அணித்திரள்வதும், சாதியொழிப்பு போராட்டங்களை பொருளதார கோரிக்கைகளோடு ஒன்றிணைப்பதும், சுரண்டல் வேர்களை அம்பலப்படுத்துவதன் மூலமே சமூகத்தில் அரசியல்-பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி தீண்டாமைக்கு தீ வைக்க முடியும். இதற்கு, சிங்காரவேலர் சுட்டிக்காட்டிய தீர்மானமுள்ள வேலையை நோக்கியதாக நமது பயணங்கள் அமையட்டும்!

கே. செல்வப்பெருமாள்

May 04, 2009

கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு! கருணாநிதியின் புளுகு 2 நாளைக்கு!


"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு" என்பது தமிழ் சொல்வழக்கு. அதுபோல ஆளும் திமுக அரசு எதைத் தின்றாவது பித்தம் தெளிய வேண்டும் என்பது போல், எதைச் செய்தாவது தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தில்லு முல்லுகளை செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் மூன்று முன்னர் மாநகர பேருந்துகளின் கட்டம் குறைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறய திமுக மீது அனைத்து எதிர்க்கட்சிகளும், ஜனநாயக உள்ளங்களும் கடுமையாக கண்டித்தன. தமிழக தேர்தல் கமிஷனும் இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்று தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் இது குறித்து புகார் செய்தது.
மறுபுறத்தில் இது குறித்து கருணாநிதியும், கே.என். நேருவும் ஆளுக்கு ஆள் மாறி, மாறி "நாங்கள் ஏற்றவும் இல்லை இறக்கவும் இல்லை" என்று லாலி பாடியதோடு 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்த நடைமுறையைத்தான் கடைப்பிடிக்கிறோம் என்று அபாண்டமான பொய்யை சுமத்தினார்கள்.
மறுபுறத்தில் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தான் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் இது குறித்து வலுவான கண்டனத்தை தெரிவித்ததோடு, இவ்வளவு நாள் ஏற்றிய கட்டணங்களை திமுகவினர் கொள்ளையடிப்பதற்கும், பொய் கணக்கு எழுதி அந்தப் பணத்தை சுருட்டிக் கொள்வதற்கும் செய்யப்பட்ட சதி வேலை என்பதை அம்பலப்படுத்தினார்.
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் மே தினக் கூட்டத்தில் சென்னையில் உரையாற்றியபோது, சென்னை மாநகரத்தில் மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு நாளைய வருமானம் 1.75 கோடி என்றும், தற்போது கட்டணம் குறைக்கப்பட்ட பின்னர் அது 1.25 கோடி மட்டுமே வருமானமாக உள்ளது என்று கூறியதோடு சென்னை மாநகரத்தில் மட்டும் நாள்ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்படுவதாக அம்பலப்படுத்தினார்.
இதன் மீது மத்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளரை அழைத்து விசாரித்தது. தற்போது இன்று காலை முதல் திடீரென்று ஏற்கனவே இருந்த அதே நிலைக்கு பேருந்து கட்டணங்கள் உயர்ந்து விட்டது. டீலக்ஸ் பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்றும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாய் என்றும், எம். சர்வீசில் குறைந்தபட்ச கட்டணம் 2.50 ரூபாய் என்றும் மாறிவிட்டது. நாங்கள் ஏற்றவும் இல்லை இறக்கவும் இல்லை என்று வசனம் பேசியவர்கள் தற்போது முகத்தில் கரியை பூசிக் கொண்டுள்ளனர். இது யாரை ஏமாற்றுவதற்காக இந்த நடவடிக்கை. அதுவும் போக்குவரத்து மந்திரி நேரு கூறும்போது, பேருந்துகளை தேவைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அதிகப்படுத்தி பயன்படுத்தினோம் என்று வினோதமான விளக்கம் கூறினார். அது சரி தற்போது ஏன் அதைச் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் வெள்ளை கலர் போர்டு பேருந்துகளையாவது அதிகமாக இயக்கலாமே! ஏன் முடியவில்லை. கொள்ளைக்காரன் புத்தி கொள்ளையடிக்கத்தான் போகும் என்பதுபோல தமிழக அரசு மறைமுகாக பிக்பாக்கெட் அடிக்கத் துணிந்து விட்டது. மக்கள் உங்கள் முகத்தில் கரியை பூச காத்திருக்கிறார்கள்.
கால் முளைத்து, சிறகு முளைத்து பறக்கும் பேருந்து கட்டணம் தமிழக அரசின் சாதனைகளிலேயே தலயாய சாதனைதான்! யாருமே ஏற்றாமலேயே தானாக ஏறிக் கொள்ளும் அதிசயம் தமிழகத்தில் மட்டும்தான் - அதுவும் கருணாநிதி ஆட்சியில் மட்டும்தான் நடக்கக்கூடியது.

May 01, 2009

மே தின வாழ்த்துக்களும்! நாம் சந்திக்கும் நெருக்கடிகளும்!!

உலகம் 123வது மே தினத்தை சிறப்போடு கொண்டாடி வருகிறது. மே தினம் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாள். எட்டு மணி நேரத்தை பெற்றெடுத்த வீரத் திருநாள். 1886-இல் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரத்தில் உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தால் பெற்றெடுத்ததே எட்டு மணி நேர வேலை. உழைக்கும் வர்க்கம் தனது உயிர் வாழ்தலுக்காக முதலாளித்துவத்துடன் ஓயாது, ஒழிச்சலின்றி போராட வேண்டியிருக்கிறது. அன்று மட்டுமல்ல; இன்றும்தான். முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டும் வரை இந்தப் போராட்டத்திற்கு ஓய்வே கிடையாது!

உலகம் இன்றைக்கு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்று பிரச்சாரப்படுத்தப்படுகிறது. இது ஏதோ, திடீரென்று யாருக்கும் தெரியாமல் ஏற்பட்டதுபோல் ஊடகங்களின் வழியாக ஊடுருவுகிறது. யாரால் தோற்றுவிக்கப்பட்டது இந்த நெருக்கடி? இதனால் பாதிக்கப்படப்போவது யார்? என்ற கேள்விகள்தான் மக்கள் மனதில் முட்டி மோதவேண்டியவை. ஆனால், மக்களின் மனங்களில் எல்லாம் ‘பொருளாதார நெருக்கடி’ என்று கண்ணீரை கசிய வைத்து விட்டது முதலாளித்துவம்.

உலக ‘நிதி மூலதனத்தை’ தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ள, பன்னாட்டு பெரு முதலாளிகளும், ஏகாதிபத்திய சுரண்டல் சக்திகளும், பணத்தை வைத்து பணத்தை பெருக்க வைத்தன. பணங்கள் அனைத்தும் பணம் காய்க்கும் மரங்களாக மாறின அவர்களுக்கு, பணம குட்டிப்போடும் அபூர்வ எந்திரமாக மாறியது முதலாளிகளுக்கு; அதாவது, பணத்தை உற்பத்தி மூலதனமாக மாற்றுவதற்கு பதிலாக, பணத்தையே பெருக்க வைக்கும் கலையை கற்றதன் விளைவே இன்றைய நெருக்கடி.

உதாரணமாக, 10 ரூபாய் மட்டுமே விலை மதிப்பு கொண்ட பென்சில் ஒன்றை 100 ரூபாய் மதிப்புக் கொண்டதாக மாற்றினர். இந்த பணம் பெருக்கும் மந்திர சூதாட்டம் நடைபெற்றது பங்கு வர்த்தகத்தில், 10 ரூபாய் பொருளின் மதிப்பு ஒவ்வொரு நாளும் செங்குத்தாக உயர்ந்துக் கொண்டே சென்று அது 100 ரூபாயை எட்டியதும்; பணத்தை வைத்து பணத்தை பெருக்கிய பங்கு வர்த்தக சூதாடிகளான - காளைகளும், கரடிகளும் தாங்கள் பெற்ற கொள்ளை லாபத்தை மாயமாய் வேறு ஒரு தொழிலில் திருப்பும்போது திடீரென்று பென்சிலின் உண்மை விலையான ரூ. 10-லிருந்து ரூ. மூன்றுக்கு மாறிவிட்டால் என்ன நடக்கும் பென்சிலின் மீது 100 ரூபாய் மூலதனம் இட்டவரின் பணம் திடீரென மயமாய் 97 ரூபாய் காணாமல் போய்விடும். இது எங்கே போனது? யாருக்கு போனது? என்பதுதான் கேள்வி! இப்படித்தான் பெரும் நிறுவனங்களும், பன்னாட்டு வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் பணத்தை வைத்து சூதாட ஆரம்பித்து மதிப்பிழந்த மண்ணுக்கு கூட விண்ணை விலைக்கு வாங்கும் அளவுக்கு உயர்த்தி பின்னர் அதை அப்படியே தொப்பென்று போட்டு விட்டன. இப்படி ஏற்பட்டதுதான் இந்த முதலாளிய நெருக்கடி. அதாவது, இதனை உருவாக்கியது சொத்தாசை பெற்ற முதலாளிகள். இதில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடமில்லை! எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்தான்.


அமெரிக்காவில் இப்படித்தான் வங்கிகள் ஏராளமானவர்களுக்கு வீடு வாங்குவதற்கு கடன் கொடுக்கிறோம். அதற்கு நீங்கள் எந்த டாக்குமெண்டும் காட்ட வேண்டாம்! ஏன் எங்களுக்கு அதனை திருப்பி அடைக்க வழியிருக்கிறதா? என்று கூட நாங்கள் பார்க்க மாட்டோம் என்று ஆசை வார்த்தைகள் காட்டி. கடனை தலையில் கட்டி, அந்த வீட்டையும் பங்கு மார்க்கெட்டில் ஏலம் விட்டு பணத்தை பெருக்கி... பெருக்கி... ஊதி... ஊதி.... ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறியதுதான் இந்த நெருக்கடி. தற்போது பணம் கொடுத்த வங்கிகள் திவாலாகி விட்டது. 10 கோடி ரூபாய் விற்ற வீடுகள் இன்றைக்கு ஒரு லட்சத்திற்கு விலை போகிறது என்றார் பாருங்கள்! பணத்தின் விளையாட்டை! தற்போது இந்த ஒரு லட்சம் கொடுத்து வீடு வாங்குவதற்கு கூட அமெரிக்காவில் ஆள் இல்லையாம்! அதாவது அவர்கள் உருவாக்கிய நெருக்கடி சூறைக்காற்றாய் அவர்களை பூமராங் போன்று தாக்குவதோடு உழைக்கும் மக்களையும், அப்பாவிகளையும் வீதிக்கு தள்ளி விட்டது.

இதனால் என்னென்ன விளைவுகள் தற்போது ஏற்பட்டுள்ளன?
உலகின் கோடீஸ்வர நாடான அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளைக்கு 17,000 வேலைகள் காலியாகின்றன. அதாவது, 17,000 பேர் வீதிக்கு தள்ளப்படுகிறார்கள். வேலை பார்த்த நிறுவனங்களிலிருந்து கழுத்தை பிடித்து தள்ளுகிறார்கள். இந்த எண்ணிக்கை டிசம்பர் 2008லிருந்து துவங்கி கடந்த 5 மாதங்களில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் வேலையிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு 800 பேர் வேலையிழப்பதாக பத்திரிகையாளர் பி. சாய்நாத் கூறுகிறார்.

அமெரிக்காவில் தொடங்கிய இந்த வேலை பறிப்பு நடவடிக்கை - அதாவது முதலாளிகளின் சிக்கன நடவடிக்கை என்றாலே அது தொழிலாளிகளின் கழுத்தில் சுருக்கு கயிற்றை மாட்டுவது என்று அர்த்தம். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 7,72,000 பேர் வேலையிழந்துள்ளனர் அமெரிக்காவில். உலகிலேயே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா மாறிக் கொண்டிருக்கிறது. 7.2 சதவிகிதம் வேலையின்மை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. உண்மையில் இது 15 சதவிகிதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பொருளாதார நெருக்கடியால் அனைத்து தொழில்களும் ஆட்டம் கண்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் இதன் தாக்கம் எந்த அளவிற்கும் குறையாத வகையில் சுனாமி அலைகளைப் போல் தாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் ஐ.டி. துறையில் மட்டும் இரண்டு லட்சம் வேலைகள் பறிபோயுள்ளனர். மேலும் ஒரு லட்சம் பேர் வரும் ஆண்டுகளில் வேலையிழப்பர் என்று கூறப்படுகிறது. இது தவிர, டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் என்று பெருந்தொழில்கள் எல்லாம் இன்றைக்கு தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இதன் பக்க விளைவாக 5 பேர் முதல் 100 பேரை வரை செய்யும் சிறு தொழில்கள் எல்லாம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உற்பத்தியில்லாமல் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இது தவிர பல இடங்களில் கடுமையான சம்பளவெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வேலை! ஓ.டி., இன்சென்டிவ் என்று வேலைபார்த்த அசோக் லேலண்ட் தொழிலாளர்களின் வருமானம் 20,000த்திற்கும் குறையாமல் இருந்தது. இன்றைக்கு அவர்களின் வருமானம் 5,000த்திற்கு சென்று விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைச் சூழலுக்கு பழக்கப்பட்டு விட்ட தொழிலாளர்கள். தற்போதைய பண நெருக்கடியால் குடும்பத்தில் நிம்மதியிழந்து தவிப்பது பெரும் கதையாக மாறிக்கொண்டுள்ளது. இவைகள் ஒருபுறம் என்றால், சென்னை - ஸ்ரீ பெரும்புத்தூரில் உள்ள ஹூண்டாய் மோட்டர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலளிகள் தங்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை வேண்டிய இரண்டு - மூன்று ஆண்டுகளாக களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். விளைவு என்ன? சங்கம் வைக்க உரிமையில்லை என்று நிர்வாகம் மறுக்கிறது. இதனால் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் பந்தாடப்படுகின்றனர். பழிவாங்கப்படுகின்றனர். 65 பேரை வேலை நீக்கம் செய்துள்ளது நிர்வாகம். 34 பேரை இடைநீக்கம் செய்துள்ளனர். 7 பேரை வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளது. 1500 கேஷூவல் தொழிலாளிகளை பணி நீக்கம் செய்துள்ளது. தற்போது சங்கம் வைக்கும் உரிமை வேண்டி கடந்த ஒரு வாரகாலமாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளிக்கு ஆதரவாக சிஐடியூ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் நின்று போராடி வருகிறது. அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நேரடியாக இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, இதற்காக நாடு தழுவிய முறையில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தை ஓயாமல் ஒளிபரப்பிய ஊடகங்கள் பாதிக்கப்படும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக சில நிமிடங்கள் கூட ஒளிபரப்ப முன்வருவதில்லை என்பதிலிருந்தே இவர்களின் வர்க்கத்தன்மையை அறிய முடியும்! முர்டோக் போன்றவர்களின் முரட்டுக்கரங்கள்தான் ஊடகங்களை கட்டுப்படுத்துகின்றன. இதற்கு இந்திய ஊடகங்களும் எந்தவிதத்திலும் சளைக்காதவர்கள் அல்ல.


எனவே, இந்த மே தினம் என்பது சவால்கள் மிகுந்த மே தினமாக நம்முன் நிற்கிறது. முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்டது கரையோர அப்பாவி மீனவர்கள் என்பதுபோல் தொழிலாளிகளும், உழைக்கும் மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் மன்மோகனாமிக்ஸ், சிதம்பர நடனம் மற்றும் அத்வானி வகையறாக்களை இந்த தேர்தலில் தோல்வியடைச் செய்வது இந்த மே தினக் கடமையாக நம் முன் நிற்கிறது. மாற்று அரசு ஒன்று மத்தியில் ஆட்சியமைப்பதன் மூலமே இந்த நெருக்கடியிலிருந்து சிக்கித் தவிக்கும் மக்கள் மூச்சு விடுவதற்கான ஆரோக்கியமான காற்று சுவாசிப்பதற்கு கிடைக்கும்! மே தின சபதமேற்போம்! பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கொள்கை ஏஜண்டுகளான காங்கிரஸ் - பாஜகவை வீழ்த்துவோம்! மூன்றாவது மாற்றை மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவோம்!

April 30, 2009

ஓட ஓட துரத்தும் வாக்குகளும்! கலர் மாறாத கருணாநிதியும்!


சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களிலும், துணைநகரங்களிலும் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பல்வேறு நிறங்களில் இயக்கப்பட்டு வருகிறது. வெள்ளை கலர் போர்டு, ம;"சள் கலர் போர்டு, பச்சை கலர் போர்டு, நீலக்கலர் போர்டு, எம்-சர்வீஸ், டீலக்ஸ், ஏ.சி. பேருந்து என்று விதவிதமான கலர்களில், விதவிதமான கட்டணங்களை மறைமுகமாக உயர்த்தி கொள்ளையோ கொள்ளை என்று நாள்தோறும் கொள்ளை அடித்து வந்தது திமுக அரசும்-போக்குவரத்து கழகங்களும். கடந்த ஒன்னறை ஆண்டுகளாக மக்கள் படும் அவதியை சொல்லி மாளாது. குறிப்பாக முதியவர்கள், படிப்பறிவற்றவர்கள், கிராமப்புறத்தினர், வறிய நிலையில் உள்ளவர்கள் இந்தப் பேருந்தில் ஏறிவிட்டால் பேந்தப் பேந்த முழிப்பதும், கண்டக்டரிடம் தகராறும்தான் வழக்கமான ஒன்றாகிப் போனது. கையில் காசில்லாதவர்கள் கால் நடையாக நடக்கவே பழக்கப்படுத்திக் கொண்டனர்.
மாநகர மக்களுக்கோ இந்தப் பேருந்துகளை விட்டால் வேறு வழியே இல்லை. இருக்கிற ஷேர் ஆட்டோக்களும் குறைந்த தூரத்திற்கு 7 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தி மக்களை ஆட்டோவுக்குள் திணித்துச் செல்லும் காட்சிகள் அடிமைகால சமூகத்தை நினைவூட்டுவதாகவே உள்ளது.

4000 மாதச் சம்பளம் பெறும் ஒருவர் பேருந்து கட்டணத்திற்கே மாதந்தோறும் 600 முதல் 900 ரூபாய் வரை செலவிடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மாநகரங்களில் தள்ளப்பட்டனர். இதனால் கடன் சுமையும், மனச்சுமையும் ஏறியதே தவிர மக்கள் வாழ்க்கை உயரவில்லை. ஒரு பக்கத்தில் ஒரு ரூபாய் அரிசி தனது ஆட்சியின் சாதனை என்று பறைசாற்றும் கருணாநிதி மறுபுறத்தில் பிக்பாக்கெட் கொள்ளையன் போல் மக்களிடம் 5 ரூபாய் கொள்ளையடிப்பது எந்த வகையில் நியாயம் என்று மக்கள் கேட்டுக் கொண்டேயிருந்தனர்.
மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. மே 13-ம் நாள் மக்கள் வாக்களிக்கத் தீர்மானித்து விட்டனர். தேர்தல் நாள் நெருங்க நெருங்க கருணாநிதிக்கு பிரஷர் கூடிக்கொண்டே செல்கிறது. முதலில் இலங்கைப் பிரச்சனையில் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல 4 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி மக்களிடம் அம்பலப்பட்டுப்போனார்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் அதிரடியாக மேற்கண்ட கலர் கலர் பேருந்துகளின் கட்டணங்களை எல்லாம் வெள்ளை போர்டு பேருந்து கட்டணத்திற்கு குறைத்துவிட்டார் ஒரே ஒரு ரகசிய உத்தரவின் பேரில். இது தொடர்பாக மக்களுக்கு எந்த அறிவிப்பும் கூட செய்யவில்லை. திருட்டுத்தனமாக இப்படி விலை குறைப்பதால் வாக்குகள் தனது பெட்டிக்குள் நிரம்பிவிடும் என்ற நப்பாசைதான் காரணம். காலையில் வேறு வழியில்லாதவர்கள் டீலக்ஸ் பேருந்தில் ஏறி போக வேண்டிய ஊருக்கு டிக்கெட் கேட்கும்போது, அவர் வழக்கமாக கொடுக்கும் 10 ரூபாய் டிக்கெட் கொடுக்காமல் 5 ரூபாய் டிக்கெட் கொடுக்க மக்களுக்கு சந்தேகம் எழுந்து விட்டது. "ஏம்பா நான் தி நகர் போறேன் அதுக்குப்போய் 5 ரூபாய் டிக்கெட் கொடுக்குறீயே" என்று கேட்க. அப்புறம் நடத்துனரும் நகைப்புடன் இப்ப எல்லாம் ஒரே கட்டணம்தான் என்று சொல்ல. மக்கள் ஆகா கருணாநிதியின் நாடகமே நாடகம்தான்! என்று புளகாங்கிதம் அடைந்தார்கள். ஆட்சியாளர்களை ஓட ஓட துரத்தும் வல்லமை படைத்தது ஓட்டு. இதனால் மனம் மாறினார் கருணாநிதி ஆனால் அவரது கலர்தான் மாறவில்லை!

நமது வாக்குகள் மாற்றத்திற்கான வாக்குகளாக அமையட்டும்! மத்தியில் மாற்றாட்சி அமைந்திட மூன்றாவது மாற்றை கொண்டுவர, வாக்குத் தவறிய ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட நமது வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும். காங்கிரஸ்-திமுக கூட்டணியையும், மதவாத பா.ஜ.க. கூட்டணியையும் புறமுதுகிட்டு ஓடவைப்போம்! தேசத்தை காக்கும் இடதுசாரிகளின் பங்கேற்போடு மத்தியில் நல்லாட்சி அமைந்திட வாக்களிப்பீர் தமிழகத்தில் அதிமுக அணிக்கு

April 29, 2009

ஒபாமாவுக்கு சாவேஸ் கொடுத்த புத்தகம்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷால் "டெவில்-பேய்" என்று அழைக்கப்பட்டவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ். அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா, மாற்றத்தின் குறியீடாக சித்தரிக்கப்பட்டவர்.
இந்நிலையில் அமெரிக்க நாடுகளின் மாநாடு ஏப்ரல் 17-18 தேதிகளில், டோபாகோ-டிரீனிடாட்டில் நடைபெற்றது. இதில் 34 நாடுகள் கலந்து கொண்டனர். குறிப்பாக இம்மாநாட்டில் கியூபா மீதான தடையை நீக்கக்கோரும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு "லத்தீன் அமெரிக்காவின் வெளிப்படையான வேதனைகள்" (Open Veins of Latin America) என்ற புத்தகத்தை வழங்கினார்.
இப்புத்தகத்தை எழுந்து நின்று, கைகுலுக்கி சாவேசிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஒபாமா, "நான் நினைக்கிறேன் இது சாவேசின் புத்தகங்களில் ஒன்று என" கூறியதோடு, "என்னுடைய புத்தகம் ஒன்றை உங்களுக்கு கொடுக்கிறேன்" என நகைச்சுவையோடு கூறினார்.

இந்தச் செய்தி பரவ ஆரம்பித்த சில மணிநேரங்களில் "லத்தீன் அமெரிக்காவின் வெளிப்படையான வெதனைகள்" என்ற புத்தகத்தின் விற்பனை கொடிகட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது. உருகுவே எழுத்தாளரான இடுரானோ காலியானோவால் ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகம் 1971-இல் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கிலப் பதிப்பு 1972-ல் வெளிவந்தது.
அமேசான் டாட்காம் நிறுவனத்தின் வியாபார பட்டியலில் 54,295 இடத்தில் இருந்த இப்புத்தகம் 24 மணி நேரத்தில் 6வது இடத்திற்கு வந்து விட்டது, தற்போது இது இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டது. ஒரே ஒரு வாரத்தில் இதன் விற்பனை உச்சத்திற்கு சென்று விட்டது. லட்சக்கணக்கான பிரதிகள் வெகு விரைவாக விற்றுத் தீர்ந்துவிட்டது.
லத்தீன் அமெரிக்காவின் வரலாற்றை சொல்லும் இப்புத்தகம், கடந்த 500 ஆண்டுகாலமாக அமெரிக்கர்களாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளாலும் எப்படி ஒட்டச் சுரண்டப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. லத்தீன் அமெரிக்காவிலிருந்து லோடு கணக்கில் தங்கமும், மலைபோல் வெள்ளியும், பெட்ரோலிய பொருட்களும், கோகோ, பருத்தி, ரப்பர், பழங்கள், அலுமினியம், நிக்கல், என்று அனைத்து கனிமவளங்களையும் எப்படி சுரண்டிச் சென்றனர் என்பதை விளக்குகிறது இப்புத்தகம். பல்வேறு கனிம வளங்களைக் கொண்ட லத்தீன் அமெரிக்காவில் மட்டும் 28 பேர் வசிக்கின்றனர். இவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையிலும், ஏழ்மையிலும் துன்பப்படுவதோடு, மோசமான ஸ்லம் பகுதி என்று சொல்லக்கூடிய வகையிலான வாழ்க்கையையே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய வறுமையை லத்தீன் அமெரிக்க பகுதிகளில் ஏற்படுத்தியது யார் என்ற கேள்விக்கு அமெரிக்காவும் - பிரிட்டனும் என்று இப்புத்தகம் எடுத்துரைக்கிறது.
இப்புத்தகம் குறித்து சாவேஸ் கூறும்போது, "லத்தீன் அமெரிக்காவின் வரலாற்றைச் சொல்லும் இப்புத்தகம், வரலாற்றை கற்றுக் கொள்வதற்கு உதவுவதோடு, வரலாற்றை உருவாக்கிடவும் உதவுகிறது" என்று கூறுகிறார்.
மொத்தத்தில் புதிய வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும் லத்தீன் அமெரிக்கா கியூபாவின் சுவடுகளை பின்பற்றி வெனிசுலா, பொலிவியா, பிரேசில், ஈக்குவாடர் என்று வரிசையாக இடதுசாரிகளின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன. வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கைக்கொண்டு உலகின் போராடும் சக்திகளுக்கு ஊக்க மருந்தாக திகழ்கிறது.
மறுபுறத்தில் உலக ஏகாதிபத்தியத்தின் சாம்ராஜ்யமாக திகழ்ந்த அமெரிக்காவின் பொருளாதாரம் இன்றைக்கு ஆட்டம் கண்டுள்ளது. அதன் பணச்சூதாட்டம் அப்பாவி மக்களை வீதிக்கு தள்ளியுள்ளது. கோட்டீஸ்வர நாட்டின் குடிமகன்கள் இன்றைக்கு வீதிகளில் கையேந்திக் கொண்டிருக்கின்றனர். அன்றைக்கு சோவியத் யூனியன் வீழ்ந்தபோது அதற்காக உலகம் முழுவதும் பெரும் பிரச்சாரத்தை கட்டவிழித்து விட்ட அமெரிக்காவும் அதன் எடுபிடிகளும் தற்போதைய நெருக்கடி குறித்து கள்ள மெளனம் சாதிக்கின்றனர். இருப்பினும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடியின் ஊடாக அதனை உணர்ந்துக் கொண்டுள்ளனர்.
லத்தீன் அமெரிக்காவை சுரண்டிய கைகள்தான் தற்போது 123-ஹைடு சட்டத்தின் மூலம் அணுசக்தி ஒப்பந்தம் மூலம் இந்தியாவை சுரண்டி திவாலான பொருளாதாரத்தை நிலைநிறுத்த துடிக்கிறது அமெரிக்காவும் - பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும். இதற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது காங்கிரசும் - பாஜகவும். எனவே இத்தேர்தலில் இவர்களை மூழ்கடிப்பதன் மூலமே தேசத்தை சுரண்டலிலிருந்து காப்பாற்ற முடியும். நமது வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும் காஸ்ட்ரோ - சாவேசின் பாதையில் அடிவைக்கும் முதல் அடியாக மாறிட உங்கள் வாக்குகள் அதற்கு பயன்படும்.

April 27, 2009

வாக்களிப்பீர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு!


அன்பான நன்பர்களே, நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மூன்றாவது மாற்று அரசை அமைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதனுடன் அணிச்சேர்ந்துள்ள இடதுசாரி - ஜனநாயக அணிக்கும் வாக்களிப்பீர்! தமிழகத்தில் அஇஅதிமுக தலைமையில் இடம் பெற்றுள்ள சிபிஐ, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு வாக்களிப்பீர்! 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்வீர்! பாதைகள் அனைத்தும்... வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும். கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் வலுவான போராட்டத்தை நடத்தியதை நாடு அறியும். குறிப்பாக நம்முடைய வெளியுறவுக் கொள்கைகைய அமெரிக்காவின் காலடியில் அடகுவைத்ததோடு, அணு சக்தித்துறையில் நமது சுயச்சார்பை கேள்விக்குள்ளாக்கிய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு எதிராக உறுதியுடன் போராடியது இடதுசாரி கட்சிகள். இவர்களது கொள்கைகளுக்கு ஒத்தூதியது திராவிட முன்னேற்றக் கழகம். அத்துடன் மதவாத பாஜக தொடர்ந்து மதக்கலவரங்களை ஏற்படுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும் தீவிரவமாக பிளவுபடுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை எதிர்த்து உறுதியாக போராடியது இடதுசாரி கட்சிகள். எனவே அந்த கொள்கை உறுதியோடு எதிர்காலத்தில் வலுவான இந்தியாவை - உழைக்கும் மக்களுக்கான இந்தியாவை உருவாக்கும் பாதையை அமைத்திட மூன்றாவது மாற்றை தேர்வு செய்வீர்!

April 22, 2009

இலங்கை : அப்பாவும், அன்பு மகனும்!


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மு.க. ஸ்டாலின், இலங்கை பிரச்சனை தொடர்பாக பேசும் போது,

'இலங்கை பிரச்னையை அரசியல் ரீதியாக கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை' இலங்கை பிரச்னையை அரசியல் ரீதியாக கிளப்பி விட்டுள்ளனர். மக்கள் இதை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை. இலங்கை பிரச்னையில் தி.மு.க., 1956 முதல் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். மதுரைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதல்வர் 30 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக வெற்றி இடங்களை மட்டும் குறிப்பிட்டிருக்கலாம். மனித நேய மக்கள் கட்சி இரண்டு லோக்சபா தொகுதிகளுடன், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டனர். ஒரு லோக்சபா தொகுதி மட்டும் தருவதாக முதல்வர் கூறினார். அதை அவர்கள் ஏற்கவில்லை. பா.ம.க.,- கம்யூ., கட்சிகள் விலகி சென்றதால் தி.மு.க., கூட்டணி பலவீனமாகி விடவில்லை. அவர்கள் சென்றதால் செலவு குறைவு. வரவு அதிகம். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும். வேறு கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது."


மகன் மேற்கண்டவாற கூற, அதிர்ந்துப்போன அப்பா (மு. கருணாநிதி)

"இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சிவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

இப்படிக் கூறியுள்ளார்.

தி.மு.க.வின் இன்றைய முதல்வரும், வருங்கால முதல்வரும் இலங்கை பிரச்சனை தொடர்பாக என்னதான் நினைக்கிறார்கள். அல்லது தமிழக மக்கள் இலங்கைத் தொடர்பாக தீரத்துடன் எதிர்கொள்ளும் மனநிலையை உதாசீனப்படுத்தும் விதமாக மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். அத்துடன் நிற்காமல், ஏற்கனவே இருந்த தோழமைக் கட்சிகள் தற்போது இல்லாமல் போனதால் செலவு மிச்சமாம்! அது அவருக்கே வெளிச்சம். தேர்தல் செலவுகளுக்காக மார்க்சிஸ்ட்டுகள் ஒருபோதும் திமுகவிடமோ அல்லது வேறு கட்சிகளிடமோ கையேந்தி கிடந்த வரலாறு கிடையவே கிடையாது? மொத்தத்தில் திமுகவின் தேர்தல் ஜனநாயகமே பணநாயகமாகத்தான் உள்ளது என்பதை ஸ்டாலினே அம்பலப்படுத்தியுள்ளார்.


ஆரம்பத்தில் பிரபாகரனை பயங்கரவாதி என்ற கருணாநிதி, பின்னர் எனது நெருங்கிய நன்பர் என்று கூறினார். காங்கிரசிலிருந்து எதிர்ப்பு கிளம்பவே மாற்றிக் கொண்டு பத்திரிகை மீடியா திரித்து விட்டதாக கூறியதோடு, நான் அவ்வாறு கூறவில்லை என்று நாளொரு பல்டி அடித்துக் கொண்டுள்ளார். காங்கிரசசோ தற்போது ஒரு அடி முன்னே பாய்ந்து திமுகவின் பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை பிரச்சனையை தீர்க்க வேண்டிய மத்திய ஆட்சியாளர்களே வெட்கம் கெட்ட முறையில் பந்த்தை ஆதரிக்கிறோம் என்று வேஷம் போடுவது ஏனோ? அதனால்தான் "மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் சென்னை பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அமெரிக்காவுடன் அணு உடன்பாட்டிற்காக வருடக் கணக்கில் காதல் கொண்டீரே அதில் ஒரு பகுதி நேரத்தையாவது இலங்கை பிரச்சனை தீர்வதற்கு செலவிட்டீரா? என்று கேள்வி எழுப்பினார்." மொத்தத்தில் தமிழக மக்கள் இந்த தேர்தல் களத்தில் காங்கிரஸ் - திமுகவை பல்டி அடிக்க செய்வார்கள்.

திமுகவின் தேர்தல் சாகசம் கண்டு நாடே சிரித்துக் கொண்டிருக்கிறது!

தி.மு.க.வின் தேர்தல் ஜனநாயகம்!

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட்டுகள் துப்பாக்கிமுனையில் வாக்குகளை பெறுவதாக குற்றம் சுமத்திய கருணாநிதியின் தேர்தல் ஜனநாயகம் எப்படி உள்ளது என்பதை இன்றைய தினமணியில் வெளியான கீழ்க்கண்ட செய்தியினை படித்து அறிந்து கொள்ளவும். இதுதான் கருணாநிதியின் உண்மை முகம்!


மேலும், இலங்கை விவகாரத்தில் ஏப்ரல் 23 அன்று பொதுவேலை நிறுத்தம் என்று நாடகம் ஆடியுள்ளார் கருணாநிதி. உண்மையென்னவென்றால், அன்றைய தினம் மதுரையில் 59வது வார்டு கவுன்சிலரான தோழர் லீலாவதி கொலை செய்யப்பட்ட தினம். அன்றைய தினத்தில்தான் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கூட்டம் மதுரையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களும் உரையாற்ற உள்ளார்கள். இந்நிலையில் அந்தப் பொதுக்கூட்ட நிகழ்வை அன்றைய தினத்தில் சீர்குலைக்கும் நோக்கோடுதான் கருணாநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது அரசியல் சாதூர்யம் யாருக்கு வரும்! அவருக்கு நிகர் அவரே! அவரது சாணக்கியத்தனம் எல்லாம் நாட்டு மக்களுக்கானதா? அல்லதது தனது மக்களுக்கானதா? என்பதை மக்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள். அதுமட்டுமா? இன்றைய தினம் விலைவாசி உயர்வு என்பது இந்தத் தேர்தலில் முதன்மையான பிரச்சனையாக முன்னுக்கு வந்துள்ளது. ஆன்லைன் டிரேடிங் என்பதும் பதுக்கல் பேர்வழிகளாலும்தான் விலைவாசி விண்ணுக்கு ஏறியது. மத்திய அரசியல் இருந்த கருணாநிதி என்றைக்காவது ஒருநாளாவது இது குறித்து கவலைப்பட்டிருப்பாரா? இன்றைய தினம் அவரது கலையெல்லாம் இந்தத் தேர்தலில் எப்படி கரையேறுவது என்பதுதான். காங்கிரசுடன் சேர்ந்து பயணிக்கும் திமுக ஒரு மூழ்கும் கப்பல் என்பதை தமிழக மக்கள் எப்போதோ தீர்மானித்துவிட்டனர்.

April 17, 2009

தலித் மக்களுக்காக கண்ணீர் வடிக்கும் அத்வானி!


ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்! அந்தக் கதையாக, பா.ஜ.க. பிதமர் வேட்பாளர் அத்வானிக்கு தலித்துகள் மீது கரிசனம் வந்து விட்டது. டாக்டர் அம்பேத்கரின் 118வது பிறந்த நாளையொட்டி, "தலித் சேதன ரத யாத்திரை" ஒன்றை துவக்கி வைத்துள்ளார்.
தேர்தல் வந்து விட்டாலே பா.ஜ.க.வுக்கு என்ன செய்வது என்றே புரியாது? ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு ரத யாத்திரை நடத்துவது பா.ஜ.க.வுக்கு வழக்கம். ஏற்கனவே நடத்திய "ரத யாத்திரைகள்" எல்லாம் ராமரின் பெயரால் நடத்தப்பட்டு ரத்த யாத்திரையாக முடிந்தது. ராம ஜன்ம பூமி என்று கதைவிட்டு அப்பாவி இந்து மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்தி, மதவெறி அஜன்டாவை முன்வைத்த பா.ஜ.க. இசுலாமிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்தி 3000த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களை கொலை செய்து மதவெறி ரத்தத்தில் மூழ்கடித்தது.
பா.ஜ.க.வின் சாயம் மக்களிடம் எடுபடவில்லை. ராம ஜன்ம பூமி என்று கதையளந்த உத்திரப்பிரதேசத்திலேயே அதனை ஓட விட்டனர் மக்கள். ஒவ்வொரு தேர்தலிலும் பின்னடைவை சந்தித்த பா.ஜ.க. தற்போது உத்திரப்பிரதேசத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
வட மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனது தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே வரும் தருவாயில், தற்போது தலித் மக்களின் நன்பனாக தன்னை முன்னிலைப்படுத்த துடிக்கிறது பா.ஜ.க.!
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில், ஹரியானாவில் செத்துப்போன மாட்டின் தோலை உரித்தற்காகவே விஸ்வ ஹீந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் நான்கு தலித் அப்பாவி வாலிபர்களை கல்லால் அடித்தே கொன்றார்கள். பா.ஜ.க.விற்கும் ஆர்.எஸ்.எஸ்.சிற்கும் ஒரு தலித்தின் உயிரை விடவும் பசுவின் உயர் மேலானது என்ற சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்கள் அல்லவா! அதனால் ராமபக்தர்கள் அன்றைக்கு தலித்துக்களின் உயிரை பலிகொடுத்து தனது சித்தாந்தத்திற்கு புத்துயிர் ஊட்டினர்.
அத்துடன் நின்றார்களா! மகாராஷ்டிர மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில் பெளத்த மதத்தைத் தழுவிய - சுயகாலில் நின்ற தலித் போட்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன்கள் என்று நான்கு பேரை நேருக்கு நேர் கற்பழித்து - சின்னாபின்னப்படுத்தி - நிர்வாணப்படுத்தி கொலை செய்தார்களே உயர்சாதி ஆதிக்க வெறிர்கள். இதனைக் கண்டு நாடும், நாட்டு மக்களும் கொதித்து எழுந்த போது அந்த பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும்., பா.ஜ.க. எம்.பி.யும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக வாயை மூடிக்கொண்டிருந்தார்களே அதன் பின்னால் ஒளிந்துக் கொண்டுள்ள தத்துவம் என்ன? இந்துத்துவ சனாதன மதவெறி சித்தாந்தம்தானே!
அப்போதெல்லாம் தலித் மக்களைப் பற்றி கவலைப்படாத பா.ஜ.க. தேர்தல் நேரத்தில் திடீரென தலித் மக்கள் மீது கரிசனம் காட்டுவதென்ன! இது கசாப்புக் கடையில் காந்தியின் படம் தொங்கவிட்டிருப்பது போலத்தான் பா.ஜ.க. தனது ஓட்டு வங்கியை பெருக்கிக் கொள்ள தலித் ஆதரவு வேடம் பூண்டிருக்கிறது. ஏற்கனவே குஜராத்தில் காந்திய தத்துவத்திற்கு புதை குழி தோண்டிய பா.ஜ.க. காந்தியின் ராமராஜ்யமே எங்களது இந்துத்துவம் என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கையில் தற்போது தலித்துக்களின் சகோதரர்களாக தன்னை அடையாளப்படுத்த முனைகிறார் அத்வானி.
இந்துத்துவம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்களையும், புராணங்களையும், கட்டுக்கதைகளையும், ஏன் மனுதர்மத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த மனுதர்மம்தான் தலித்துக்களை பார்க்கக் கூடாது, தொடக் கூடாது, பேசக் கூடாது, படிக்கக் கூடாது, ஒரு தலித்தை ஒரு மேல்ஜாதி பார்ப்பனன் கொலை செய்தால் அதற்கு தண்டனை வெறும் ஆடு, மாடுகளை கொல்லுவது போன்று என்று கருதி மன்னித்து விடலாம் என்று கூறிய அந்த சனாதர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவத்திற்கு சொந்தக்காரர்தான் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானி.
உண்மை இப்படியிருக்கும் போது, ஏன் இந்த போலி வேடம்! யாரை ஏமாற்ற இந்த போலி வேடம்! தலித் மக்களின் இடஒதுக்கீடு உட்பட அனைத்திற்கும் வேட்டு வைக்கும் பா.ஜ.க. தலித் மீது பரிவு காட்டுவது வேடிக்கையிலும் வேடிக்கைதான். அது மட்டுமா? மகாராஷ்டிரத்தில் உள்ள மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்ற போது அதற்கு வானத்திற்கும் பூமிக்கும் எகிறிக் குறித்து சண்ட மாருதம் செய்தவர்கள்தான் இந்த இந்துத்துவாவாதிகள். எனவே, ஆர்.எஸ்.எஸ்.சின் அடிமையான அத்வானி தலித் நன்பனாக வேடம் பூணுவது தலித் மக்களை ஆட்சிக்கு வந்த பின் ஒடுக்குவதற்காகத்தனே ஒழிய வேறில்லை!
ஒடுக்கப்பட்ட மக்களே உஷார் ஓநாய் வருகிறது! வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல நம்மையே இரையாக்குவதற்காக!

April 16, 2009

ரோமாபுரி பாண்டியனும் மன்னர் மன்மோகனும்!


நாடாளுமன்றத் தேர்தல் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கவுள்ளது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆட்சி புரிந்த காங்கிரசும், ஆட்சியை இழந்த பா.ஜ.க.வும் - இரண்டையும் நிராகரித்து மக்களுக்கான மாற்றை முன்வைக்கும் இடதுசாரி - ஜனநாயக சக்திகளும் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் முக்கோணமாய் மோதிக் கொண்டிருக்கின்றன.

தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எதற்காக வாக்களிக்க வேண்டும்? என்று வாக்காளர்களை சிந்திக்க வைப்பதற்கு மாறாக, பா.ஜ.க.வும் - காங்கிரசும், அத்வானிக்கும் - மன்மோகன் சிங்குக்கும் இடையில் நடைபெறும் குடும்பச் சண்டையாய் மாற்றிவிட்டன.

கடந்த ஐந்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் அலங்கோலம் பற்றி பா.ஜ.க. இதுவரை வாயே திறக்கவில்லை. மறுபுறத்தில், காங்கிரசும் பா.ஜ.க. எப்படியெல்லாம் பொறுப்பற்ற எதிர்க்கட்சியாக செயலாற்றியது என்பதைப் பற்றியும், அதன் மதவெறியால் நாடும், நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டது குறித்தும் வாய் திறக்கவில்லை. இரண்டும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகளல்லவா?

மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் என்னவாகும்? எனவே, பக்குவமாய் திசை திருப்பினார் அத்வானி. தொடையை தட்டிக் கொண்டு 'மன்மோகன் சிங் லாயக்கற்றவர் - வீக்கானவர்! என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தத் தயாரா' என்று மல்லுக்கட்ட. தேர்தல் விவாதமே திசை திருப்பிப் போனது.

அப்புறம் என்ன? பதிலுக்கு மன்மோகன் - 'என்னுடன் விவாதிப்பதற்கு உனக்கு என்னத் தகுதி இருக்கிறது' என்று கேட்க,

அடுத்த கட்டத்தில் அத்வானி, 'காங்கிரஸ் கிழக்கட்டைகளின் கட்சி என்று சொல்ல,' பதிலுக்கு ராகுலும், பிரியங்காவும் பரிதாபமாக 'நாங்கள் எல்லாம் கிழமா?' என்று அப்பாவித்தனமாக அத்வானியைப் பார்த்து கேட்டது.

அத்தோடு விட்டாரா அத்வானி, 'மன்மோகன் ஒரு தலையாட்டி பொம்மை, சோனியாவால் ஆட்டிவிக்கும் பொம்மை. சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவர்' என்று கூற,

இதுவரை சும்மா இருந்த அம்மையார் சோனியா களத்தில் இறங்கி, 'அத்வானி ஒரு ஆர்.எஸ்.எஸ். அடிமை. உன்னால் எதையும் சொந்தமாக கழட்ட முடியாது' என்று ஒரு குண்டை வீச...

இந்தக் களோபரத்தில் குழம்பிப்போன மன்மோகன் தான் ஒரு ஞான சூன்யம் என்பதை நிரூபித்து விட்டார். நேற்றைய தினம் நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, "மாநில கட்சிகள் வளர்ச்சிக்கு எதிரானவை. இதனால் தேசிய கட்சிகள் பாதிக்கப்படுகிறது. நிலையான ஆட்சிக்கு மாநில கட்சிகள் உதவாது" என்று ஒரே போடு போட்டுவிட்டார்.

என்னதான் இருந்தாலும் மன்மோகன் சிங் ஒரு உலகவங்கி உருவாக்கிய சித்தாந்தத்தின் கையாள்தானே. அவருக்கு இந்தியாவின் அரசியல் அமைப்பு பற்றியோ அல்லது அரசியல் பற்றியோ என்ன பெரிதாக கவலை இருந்து விடப்போகிறது. அமெரிக்காவும், அந்நிய மற்றும் உள்நாட்டு பன்னாட்டு - பெரும் நிறுவனங்கள் தாங்கள் விரும்புகிறபடி கொள்ளையடிப்பதற்கு ஒரு நிரந்தரமான ஆட்சி தேவை. அதற்கு ஏற்ப ஒரு நிரந்தர ஆட்சி தேவை என்ற கனவைதான் மன்மோகன் இப்படி கொட்டியுள்ளார்.

ஐய்யா டாக்டர் மன்மோகன் சிங். இதற்காகவே காங்கிரசை மக்கள் மீண்டும் புதை குழியில் தள்ளுவார்கள். "இந்தியா ஒரு கூட்டாட்சி ஜனநாயக நாடு. இது பல நாடுகளைக் கொண்ட ஒரு நாடுதான்." பல்வேறு கலாச்சாரம், மொழி, ஏற்றத்தாழ்வான வளர்ச்சி போன்றவற்றைக் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நாடு." எனவே, இந்த நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களின் நலனுக்கு ஏற்ப, அந்தந்த மக்களின் நலன்களை முன்னிறுத்தும் மாநில கட்சிகள் நாள்தோறும் தோன்றுவது இயல்பானது. மக்கள் யார் மீது நம்பிக்கை வைக்கிறார்களோ? அல்லது மக்களின் தேவைகளை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்கள் பின் மக்கள் நிற்பார்கள். இதுதான் ஜனநாயகம்!

ஆனால் மன்மோகன் இது புரியாமல், தான் மன்னராவதற்கு மாநில கட்சிகள்தான் தடையாக இருக்கிறது என்று புரிந்து கொண்டு. மாநில கட்சிகள் மீது பாய்ந்துள்ளார். அதாவது கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவையும், பல மாநிலங்களையும் ஆண்ட கட்சிதான் காங்கிரஸ். அதனால்தான் நாட்டில் உண்மையில் ஏற்படவேண்டிய வளர்ச்சி பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தற்கொலையில் துவங்கி, பசியோடும், பட்டினியோடும், சத்தாண உணவுகள் கிடைக்காமையாலும் நோயாலும் மடிந்து வருகின்றனர் இந்திய மக்கள். ஒரே சீரான கல்வியை இந்தியாவில் இதுவரை அரசாண்ட காங்கிரசால் வழங்க  முடியவில்லை. தொழில் வளர்ச்சியும் அதே கதிதான். இதனால் உருவானதே வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கும் பிரச்சனைகள் துவங்கி காஷ்மீர் வரையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் உருவாக்கியது காங்கிரஸ்தான். எனவே, யார் வளர்ச்சிக்கு மத்தியில் தடையாக இருந்தார்களோ அவர்களே தற்போது மாநில கட்சிகள்தான் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என்று மண்ணை அள்ளிப் போடுவது எதனால்?

காங்கிரசுக்கும் - பா.ஜ.க.வுக்கும் மூன்றாவது மாற்றாக மாநில கட்சிகள் பெரும் சவாலாக உருவெடுத்து ஒரு கட்சி ஆட்சிக்கு சாவு மணி அடித்து விட்டதும். ஒரு உண்மையான கூட்டாட்சி மலர்வதற்கு வழி ஏற்படுத்தியதுமே காங்கிரசுக்கு வயிற்றெச்சல் அதனைத்தான் மன்மோகன் உளறிவிட்டார்.

தமிழகத்தில் உள்ள பாண்டிய மன்னன் கருணாநிதி, எப்போதும் மாநில சுயாட்சிக்கு தான் உறுதியாக பாடுபடுவதாக மார்தட்டுவார். இப்போது மன்மோகன் சிங் மாநில கட்சிகளே கூடாது என்கிறாரே என்னப் பன்னப் போகிறார்? கட்சியை காங்கிரசுடன் இணைத்து விடப்போகிறாரா? அல்லது நானே வீராதி வீரர் என்று கவிதை வசனம் எழுதி மாநில சுயாட்சியை காக்கப் போகிறாரா? மதுரையில் உள்ள பாண்டிய மன்னரைப் பற்றியே சதா காலமும் யோசிக்கும் கருணாநிதிக்கு மாநில சுயட்சி பற்றிதான் கவலை எழுமா என்ன!

மத்திய அரசு மாநிலங்களுக்கு 50 சதவிகித நிதி ஒதுக்க வேண்டும் என்று சும்மா உதார் விடும் கருணாநிதி, தனது அரசாட்சியின் கீழ் இருக்கும் உள்ளாட்சிகளுக்கு வெறும் 9 சதவிகிதம் மட்டுமே பிச்சைப் போடுகிறார். இவர்தானே மன்மோகனை எதிர்த்து விடப்போகிறார்! இவரது வீராப்பு எல்லாம் பாண்டியர்கள் மீதுதான் இருக்குமே ஒழிய மன்மோகன் மீது இருக்காது!

April 14, 2009

தீண்டாத குழந்தைகளும் அம்பேத்கர் பிறந்த நாளும்!

ஏப்ரல் 12, 2009 அன்று "சிங்காரவேலர் 150வது பிறந்த ஆண்டு" சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் "கவிதை வட்டத்தினர்". இக்கூட்டத்திற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். "சிங்காரவேலரும் சாதி ஒழிப்பும்" என்ற தலைப்பில் நான் பேசினேன். கூட்டம் நடைபெற்ற இடம் சென்னை, தண்டையார் பேட்டையில் உள்ள, இரத்தினசபாபதி தெருவில் உள்ள, "எஸ்.சி.-எஸ்.டி. சமூக சேவகர் மையம்" என்று குறிப்பிட்டிருந்தது. அந்த இடத்திற்கு சென்றவுடனேயே சென்னை நகரில் இன்றும் நீடிக்கும் "தீண்டாமை வடிவம்" தனது கோர பற்களை காட்டி சிரித்துக் கொண்டிருந்தது.
1938-ல் துவக்கப்பட்ட இச்சங்கம் இன்று தாழ்த்தப்பட்டோர் மக்களின் நலனுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. 70 வயதை எட்டியிருந்த அந்த கட்டிடம் அதன் முதுமையையும், சேவையையும் ஒருசேர உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தது. தற்போது அரசு உதவியுடனும் பல சமூக நல சேவகர்களின் உதவியுடனும் இச்சங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட மாணவர்களின் விடுதியாக தற்போது செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இங்கு தங்கியிருக்கின்றனர். நான் கண்ட காட்சி வியப்பாக இருந்தது. கிட்டத்தட்ட 65 குழந்தைகள் 12 வயதுக்கு கீழே இருந்த குழந்தைகள்தான் அங்கே தங்கி படித்து வருகின்றனர். பெரும்பாலான குழந்தைகளின் உடலில் சட்டையில்லை. வெறும் உடம்புடன் இருந்த காட்சியும், எண்ணையை பார்க்காத பரட்டைத் தலையும், அதனால் வந்த செம்பட்டை முடியும், கண்களில் வறட்சியும், வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புடன் இக்குழந்தைகள் இங்கே தங்கி படித்து வருகின்றனர். அக்குழந்தைகள் தங்குவதற்கும், உணவுக்கும் அந்த விடுதியில் உத்திரவாதம் செய்யப்படுகிறது. வெளியில் சென்று அக்குழந்தைகள் படித்து விட்டு மாலையில் விடுதி திரும்ப வேண்டும்.
ஓடி, ஆடி இந்த உலகத்தை ரசிக்க வேண்டிய இந்தக் குழந்தைகள் ஒட்டு மொத்தமாய் இந்த விடுதிக்குள் கூண்டுக் குருவிகளாய் அடைபட யார் காரணம்? பெற்றவர்களா? அல்லது பெற்றவர்களை ஏழ்மையில் தள்ளி ஏதும் இல்லாதவர்களாக்கிய இந்த அரசுகளா? ஆளும் வர்க்கமா? குற்றவாளி அரசும் - அதனை ஆளும் வர்க்கங்களும்தான்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு அநேகமாக மாற்று உடை கூட இருக்குமா என்பதுகூட சந்தேகம்தான். அவர்களது உடைகளை அந்த சிறுவர்களே துவைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை தாலாட்டுவதற்கும், சீராட்டுவதற்கும் அந்தக் குழந்தைகளுக்குள்ளேதான் நடைபெற வேண்டும். சரி! பள்ளிக்குச் செல்லும் அந்தக் குழந்தைகளுக்கு (இவர்கள் எல்லாம் திங்கட் கிமைக்கு ஒரு யூனி பார்மும், மற்ற நாட்களுக்குவேறு கலர் யூனிபார்மும், டையும் கட்டிக் கொண்டு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு டாட்டா காட்டிச்செல்லும் பள்ளிகள் அல்ல - எல்லாம் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடம்தான்) தக தகவென்று மின்னும் கலர் கலரான பாலித்தீன் பையில் அடைக்கப்பட்டிருக்கும் லிட்டில் ஹார்ட்சும், லேஸ், கார்ன் பிளக்ஸ், ஜெம்ஸ், டோரா புஜீ, சூப்பர் ஸ்டார், லுக்ஸ், குர்குரே, டைமண்ட், ஏன் வேர்கடலை பர்பி இவையெல்லாம் தீண்ட முடியாத பொருட்கள் இவர்களுக்கு. எல்லாம் பகல் கனவுதான். அவர்களுக்கான பாக்கெட் மணியை யார் தருவார்கள்.

சில நேரங்களில் பெற்றோர்கள் உள்ள குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ வரும் போது கிடைக்கும் சில்லறை காசுகளை வைத்துக் கொண்டுதான் தானும், தனது நண்பர்களும் இதுபோன்ற நொறுக்குத் தீனிகளை சுவைக்க வேண்டும்.
ஒரு விளையாட்டுத் திடல் உள்ளது. அதுவும் தனது வயதான தண்மையை வெளிக்காட்டிக் கொண்டுள்ளது. அதாவது, அந்த வெண்யைமான மண் ஆப்பிரிக்கன் கலருக்கு மாறிவிட்டிருந்தது. அந்த மாணவர்களின் நிறத்திலிருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் தான் வித்தியாசப்படக் கூடாது என அது நினைத்திருக்கலாம். அவர்களது விளையாட்டுக்கள் எல்லாம் ஓடி ஆடுவதும், மண்ணில் புரள்வதும்தான். செஸ், கேரம், கிரிக்கெட், கோலி, பம்பரம், ஏற்றம், இறக்கம், இராட்டினம், உடற் பயிற்சி எல்லாம் கனவில் மட்டுமே! அவர்களால் போகோ, சுட்டி, ஜெட்டெக்ஸ் டி.வி. எல்லாம் பார்க்க முடியாது. மொத்தத்தில் குழந்தைகளுக்கே உரிய அனைத்தையும் இழந்த நிலைதான் இவர்களுக்கு இப்படி வளரும் மாணவர்களால் எப்படி ஒரு சிறந்த சமூகத்தை படைக்க முடியும்! ஆட்சியாளர்களுக்கு இது தெரியாதா?
இந்த ஹாஸ்டலில் 1-ம் வகுப்பு முதல் + 2 படிக்கும் மாணவர்கள் வரை தங்கலாம். தங்கிக் கொண்டுள்ளனர். தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை என்பதால் அவர்கள் எல்லாம் ஊருக்குச் சென்று விட்டதாக கூறினார்கள்.
இங்குள்ள மாணவர்கள் ஒருவருக்கு அரசாங்கம் ஒரு நாளைக்கு 5 ரூபாய் ஒதுக்குகிறதாம். இந்த ஐந்து ரூபாயில் அந்த மாணவர்கள் மூன்று வேளையும் தரமான சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்றால் உலகில் இதைவிட வேறு கின்னஸ் சாதனை இருக்க முடியுமா? ஆனால் தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகள் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 12 ஒதுக்கப்படுகிறது. இதுவே குறைவு என்பது வேறு கதை இருந்தாலும், ஒதுக்கப்பட்டு, சீண்டப்படாமல் இருக்கும் இந்த குழந்தைகளின் எண்ணிக்கை கைதிகளின் எண்ணிக்கையை விட மிக மிகக் குறைவாகவே இருக்கும். அப்படியிருக்கும் போது பெரியாரின் வழிவந்த, அண்ணாவின் வழி வந்த திமுக ஆட்சியாளர்களால் ஏன் இதை உயர்த்த முடியாதா? ஏதே தோ இலவசம் என்று வாரி வழங்கும் இந்த ஆட்சியாளர்கள் இந்தக் குழந்தைகளுக்கு வருடத்திற்கு நான்கு சட்டைகளும், கால் சட்டைகளும், இரண்டு ஜோடி செருப்பும், போஷாக்கான உணவும் கொடுத்து ஒரு நல்ல கல்வியும் கொடுத்து உயர்த்த முடியாதா? தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நாலெல்லாம் பாடுபடுகிறோம் என்று கூறுவதெல்லாம் இதுபோன்ற ஹாஸ்டல்களை பார்க்கும் எவருக்கும் அது பெரும் பொய் என்றே தோன்றும்.
இன்றைக்கு டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று ஒரு நாள் ஒருவேளை அந்தக் குழந்தைகளுக்கு சில கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய இனிப்புகள் வழங்கப்படலாம். தீண்டாமை ஒழிப்புக் குறித்து வீராவேசமான பேச்சுக்கள் பேசலாம். ஆனால் அந்த மாணவர்களின் எதிர்கால வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றால் அது அரசால் மட்டுமே முடியும். ஆட்சியாளர்களால் மட்டுமே முடியும்!
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ஒரிடத்தில் கூறுகிறார், "தீண்டாமையை தீண்டி விட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா என்று? அதாவது தீண்டாமை ஒழிந்து விட்டால், அந்த தீண்டாமையால் ஏற்பட்ட வறுமையும், நோயும், கல்வியின்மையும், வேலையிண்மையும், வீடின்மையும், சொத்தின்மையும் ஒழிந்து விடுமா?" என்று கேட்கிறார். அதுதான் நினைவுக்கு வருகிறது இந்த விடுதியைப் பார்க்கும் போது. தாழ்த்தப்பட்ட, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஏன் கிராமப்புறத்தில் படித்தாலே ஆதிக்க சாதியினருக்கு பிடிக்காத என்ற நிலையிலிருந்து சென்னை மாநகரத்திற்கு வந்து தனது கல்வியைத் தொடர நினைக்கும் இந்த மாணவர்களுக்கு ஆரோக்கியமான, ஒரு சராசரி மாணவன் வீட்டில் என்னென்ன வசதிகளை அனுபவிப்பானோ அதுபோன்ற குறைந்தபட்ச வசதிகளை இந்த அரசால் ஏற்படுத்த முடியதா? என்பதே எனது கேள்வி!

அரசின் முயற்சியை வலியுறுத்தும் அதே தருணத்தில், சமூகத்தில் ஓரளவு உயர்வு பெற்றவர்கள் இதுபோன்ற குழந்தைகளின் கல்விச் செலவினையும், அவர்களுக்கான உடை போன்றவற்றையும் வழங்கி உயர்த்திட முன்வருவதும் அத்தியாவசியமாகிறது. திருப்பதி வெங்கடாசல பெருமாளுக்கு கோடிக்கணக்கில் காணிக்கையாகவும், சபரிமலை ஐயப்பனுக்கு வாரி வாரி வழங்கும் நமது பக்தர்கள் கோவிலின் சொத்துக்களை பெருக்க வைக்க உதவிடுமே ஒழியே வேறு எதற்கும் பயன்படப்போவதில்லை. இப்படி வீண் விரயம் செய்யும் பொருளுதவிகளை இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவலாமே!
மேற்கண்ட கருத்துக்கள் உடனடி நிவாரணம் மட்டுமே! இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்பது சமூக மாற்றத்தால் மட்டுமே நிகழும். ஒரு மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்துவதன் மூலமும், நிலமற்ற ஏழை - எளிய தலித் உட்பட இதர பகுதி மக்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கான இதர உதவிகளையும் புரிந்து சட்ட ரீதியான பாதுகாப்புகளையும் வழங்குவதன் மூலமே நிரந்தர விடுதலைக்கு வழிவகுக்கும். இருட்டு விடியும் வரை தற்காலிகமாக மின்சார பல்பாக தொண்டாற்றலாமே! மேலும் ஆளும் ஆட்சியாளர்களை இதுபோன்ற விசயங்களில் கவனம் செலுத்திட வலுவான போராட்டங்கள் அத்தியாவசியம். இதுவே டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளில் நாம் முன்னெடுக்க வேண்டிய கடமையாக கருதுகிறேன்.

April 10, 2009

நவீன அடிமைகள்!

அதிகாலை 06.00 மணிக்கெல்லாம் பட்டாளத்தில் உள்ள வீரர்களைப் போல தலையில் மஞ்சள் கலர் ஹெல்மெட்டுகளை மாட்டிக் கொண்டு, கையில் பெரிய, பெரிய ஸ்டீல் பாத்திரத் தூக்குகளை தூக்கிக் கொண்டு ஆளுக்கும், காலுக்கும் சம்பந்தம் இல்லாத அழுக்கடைந்த சட்டைகளையும், பேண்ட்டுகளையும் அணிந்து கொண்டு வாயில் பீடியுடன் டாய்லெட் போவதற்கு உட்காருவதைப் போல் வரிசையாக உட்கார்ந்து காத்திருக்கின்றனர் தங்களை ஏற்றிச் செல்லும் பேருந்தின் வருகைக்காக. இனிமேல் இந்த வண்டி தேறாது என்ற நிலையில் டிராவல் ஏஜண்டுகளால் கைவிடப்பட்ட ஓட்டை - ஒடைசலான அந்த பேருந்துகள்தான் தற்போது இவர்களின் சொகுசு வாகனங்கள்.
யார் இவர்கள், எதற்காக இவர்கள் இப்படி காத்திருக்கின்றனர் என்ற கேள்வி மேலிடாமல் இல்லை. இவர்கள் எல்லாம் வெளி மாநிலத்திலிருந்து அழைத்துவரப்பட்ட கூலித் தொழிலாளர்கள். பீகார், சட்டீஸ்கர், ஒரிசா போன்ற மாநிலங்களிலிருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் கூலித் தொழிலாளர்களாக, காண்ட்டிராக்ட் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை துறைமுகம், எம்.ஆர்.எல்., திருவொற்றியூர் - எண்ணூரில் உள்ள இரும்பு ஆலைகள், சென்னை பெருங்குடியில் உள்ள நவீன ஐ.டி. கட்டிடங்களைக் கட்டும் தொழிலாளர்களாகவும், சாலைகளை தோண்டி புதுப்பிக்கும் தோழர்களாகவும், பாதாள சாக்கடை முதல் அனைத்து கீழ்நிலைத் தொழில்களில் ஈடுபடும் புதிய ரக பிசாசுகளைக் (முதலாளிகள் இவர்களை இப்படித்தான் அழைக்கின்றனர்)கண்டுப்பிடித்துள்ளனர் நமது காண்ட்டிராக்டர்களும், முதலாளிகளும்.
நாள் முழுவதும் வற்றலும், தொற்றலுமாக - எலும்பும், தோலுமாக இருக்கும் அந்த தொழிலாளர்கள் குறைந்தது 12 நேரத்திற்கு மிகாமல் வேலை செய்கின்றனர். அதுவும் கடினமான வேலைகளில் அமர்த்தப்படுகின்றனர். நமக்கெல்லாம் மாதத்திற்கு 30 நாட்கள் என்றால், இவர்களுக்கு மட்டும் 50 நாட்கள். என்ன வித்தியாசமாகத் தெரிகிறதா ஆம் அப்படித்தான் கணக்கு. இவர்களுக்கு ஒரு மாதக் கணக்கு என்றால் 50 நாட்கள் என்று அர்த்தம். இந்த 50 நாட்களுக்கு கொடுக்கப்படும் கூலி எவ்வளவுத் தெரியுமா? 4000 முதல் 4500 வரை மட்டுமே. 17-18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும், இங்கிலாந்திற்கும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பிடித்துவரப்பட்ட அடிமைகள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வருவார்கள். கப்பலில் கையிலும், காலிலும் விலங்குகள் பூட்டப்பட்டு பல்வேறு அடுக்குகளை அமைத்து அதில் கட்டிப்போட்டுக் கொண்டு வருவார்கள். சில நேரங்களில் பல அடிமைகள் நோய்வாய்ப்பட்டோ, அல்லது துன்புறுத்தப்பட்டோ இறப்பதும் நடக்கும். அப்போதுகூட பக்கத்தில் அவரது கையில் இணைக்கப்பட்டுள்ள கைதிகள் அந்த பிணத்துடனேயே பயணம் செய்ய வேண்டி வரும். சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் கப்பல் முழுவதும் வீசும். அந்தக் காட்சிகளைத்தான் தற்போது சென்னை மாநகரமும், தமிழகத்தின் முக்கிய நரங்களும் சந்தித்து வருகின்றன என்றால் மிகையாகாது.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து கோவளத்திற்கும், கேளம்பாக்கத்திற்கும் புறப்படும் பேருந்துகளில் 50 சதவிகிதம் பேர் வெளி மாநில தொழிலாளர்களே! மறைமலை நகர் முதல் ஹுண்டாய் கார் கம்பெனி வரை பல பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் காண்டிராக்ட் அடிமைகளாக இந்தத் தொழிலாளிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.
மேலும், கேளம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடி கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் இத்தொழிலாளர்களுக்கு பன்றி குடிசைகள் போன்று வெறும் தகர கொட்டாய்கள் அமைத்து ஒரு அறைக்கு 5 முதல் 10 பேர் வரை தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு குளிப்பதற்கும், கழிப்பிடத்திற்கும் கூட போதுமான தண்ணீர் கூட கிடைக்காத நிலையே நீடிக்கிறது. அது மட்டுமா? ஒரு ரூபாய் அரிசியைக் கொண்ட இவர்களது காலம் ஓட்டப்படுகிறது. மேலும் இத்தொழிலாளர்கள் பக்கத்து ஊர்களில் உள்ள காலியிடங்களில் காலைக் கடனை கழிப்பதற்கு சென்றால் அங்குள்ளவர்கள் துரத்துவதும், கல்லால் அடிப்பதும்கூட நடக்கிறது. ஏன் இவர்களை ஊருக்குள்கூட செல்வதற்கு அனுமதிப்பதில்லை. கார்ப்பரேட் முதலாளிகளும், காண்டிராக்ட் கொள்ளையர்களும் இவர்களுக்கு தேவையான அடிப்படையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. உண்மையில் கல்லைக் கொண்டு அடிக்க வேண்டியவர்கள் இந்த நவீன கொள்ளையர்கள்தான்.
பல இடங்களில் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யும் தொழிலாளிகள் விபத்துக்களால் மரணம் அடைவதும் நிகழ்கிறதாம். அப்படிப்பட்ட சூழலில் வேலை செய்யும் நிறுவனமோ? அல்லது காண்டிராக்டரோ பொறுப்பேற்பதில்லை என்றும் கூறப்படுகிறது. பல மரணங்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைப்பதும் நடப்பதாக கூறப்படுகிறது.
சென்னை துறைமுகத்தில் பணியாற்றும் இதுபோன்ற வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இராயபுரத்தில் ஒரு திருமண மண்டபம் எடுத்து அங்கேயே 100க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்துள்ளனர். இத்தகைய நரக வாழ்க்கைகூட இந்தத் தொழிலாளர்களுக்கு சுகம் அளிப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் ஒரிசாவிலும், பீகாரிலும், சத்தீஸ்கரிலும், இன்னும் பல மாநிலங்களில் உள்ள இதுபோன்ற சாதாரண உழைப்பாளி மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பையோ அல்லது பாதுகாப்பான வாழ்க்கையேயோ ஏற்படுத்திக் கொடுக்காத மாநில அரசுகளும், 60 ஆண்டு காலம் நாட்டை ஆண்ட காங்கிரசும், இதுபோன்ற தொழிலாளர்களை வைத்தே பில்லினியர்களாகவும், டிரில்லினியர்களாகவும் கணக்கை காட்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுமே இவர்கள் விஷயத்தில் முதல் குற்றவாளிகள்.
சென்னை உட்பட தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தொழிலாளர்கள் இதுபோன்ற நவீன அடிமைகளாக பணிபுரிகின்றனர். உலகமயச் சுரண்டலுக்கு கிடைத்துள்ள நவீன பிசாசுகளாய் முதலாளிகள் இவர்களை பார்க்கின்றனர்.
60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் எதை சாதித்தது காங்கிரசும், பா.ஜ.கவும். - இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்தியா ஒளிர்கிறது என்று கூறிய பா.ஜ.க. இன்றைக்கு அதனை அப்படியே மறந்து விட்டு, அத்வானி ஆட்சிக்கு வந்தால் ஐ.டி. துறையில் பல லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கப் போவதாக வாய்ச்சவடால் அடிக்கிறார். இதுபோன்ற அடிமட்டத் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள். ஐ.டி. பார்க்கில் புல் வெட்டுவார்களா? புல் புடுங்குவார்களா? என்பது அத்வானிக்கே வெளிச்சம்.
ஏன் திமுக அரசு மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறது. சென்னையில் உருவாகிக் கொண்டிருக்கும் மாநில அரசின் தலைமைச் செயலகம் உருவாக்கும் பணியில் கூட இத்தகைய தொழிலாளர்களே ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களது வாழ்க்கைக்கும், பாதுகாப்புக்கும் தமிழக அரசு ஏதாவது உத்திரவாதம் செய்துள்ளதா? அல்லது முறையான கூலியை இந்தத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு உத்திரவாதம் செய்துள்ளதா? என்ற கேள்வியை இந்த நேரத்தில் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அது மட்டுமா? எதிர்கால முதல்வர் என்றும், இளையவர் மு.க. ஸ்டாலின் என்ன சொன்னார், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சட்டக் கூலியான ரூ. 80 வழங்க வேண்டும் என்று போராடிய போது, போராடியவர்களைப் பார்த்து, இவர்கள் தூண்டி விடுகிறார்கள் என்றும், புரோக்கர்களாக செயல்படுகிறார்கள் என்றும் கூறினார். இதுதான் எதிர்கால முதல்வரின் கரிசனப் பார்வை! அதாவது மாநில அரசால் தீர்மானிக்கப்பட்ட சட்டக்கூலியைக் கூட ஒழுங்காக வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல வேண்டியவர். கொள்ளையர்களுக்கு துணை போகும் போது, இவர்கள் எப்படி வெளி மாநிலத் தொழிலாளர்களை கண்டு கொள்ளப் போகிறார்கள். கண்டு கொள்வார்கள். ஒருவேளை இந்த தொழிலாளர்களை வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரும் தரகர் வேலையைக் கூட திமுகவினர் எடுத்துள்ளார்களோ என்னவோ! என்ற சந்தேகமே மேலிடுகிறது.
மொத்தத்தில் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களை பாதுகாத்திடும் கடமையாற்ற, இவர்களுக்காக குரல் கொடுக்க, தமிழக தொழிலாளி வர்க்கம் எழவேண்டும். அப்போதுதான் இவர்களைப் பயன்படுத்தி சுரண்டும் இந்த கூட்டத்திற்கு வேட்டை வைக்க முடியும். ஓட்டு கேட்கும் காங்கிரசே, பா.ஜ.க.வே, திமுகவே உங்கள் ஆட்சிகளின் அலங்கோலமே மேற்கண்ட அவலம் என்று பறைசாற்ற வேண்டிய நேரமாகவே இதனை கருதுகிறேன்.

April 08, 2009

அழகிரி நர்த்தனம் ஆடும் கருணாநிதி!


மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் மகன் அழகிரியை நிற்க வைத்து, முடிசூட்டு விழா நடத்திட கனா கண்டு கொண்டிருக்கும் கருணாநிதி, எளிமையின் இலக்கணமாக திகழும் பி. மோகன் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பிணி பிடித்தவர்போல், பித்துபிடித்து அஞ்சாநெஞ்சருக்கு ஆபத்பாந்தவனாக தொடைதட்டி உடன்பிறப்புகளை உசுப்பிவிட்டுள்ளார். இதற்கு அண்ணாவையும் துணைக்கழைத்து தேர்தல் களம் காண அல்ல மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராக போர்க்களம் புகுவதற்கு கூர் தீட்டியுள்ளார் கருணாநிதி.

இன்று முரசொலியில் "பூச்சாண்டி பொம்மை" என்ற தலைபில் அவரது எழுதுகோல் சிந்திய மைக்கு எத்தனை பேர் இரத்தம் சிந்த வேண்டியிருக்குமோ? அல்லது எத்தனை உயிர்கள் இதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்குமோ? என்றே எண்ணத் தோன்றும் யாருக்கும்! எப்போதெல்லாம் இவர்கள் அரசியலுக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் அண்ணாவை துணைக்கு அழைப்பது வாடிக்கை! தோற்றால் பெரியார் வழி! வெற்றி பெற்றால் அண்ணா வழி என்று முழங்கிய கருணாநிதி எத்தனைமுறை தோல்வி கண்டாலும் உடன்பிறப்புகளின் கட்டளைக்கு இணங்க பணியாற்றுவதாக பிதற்றும் நவீன தசரதனாய் உலாவருபவர்தானே! ஆனால் இப்போது அண்ணாவை துணைக்கு அழைத்திருப்பது அஞ்சாநெஞ்சருக்கு ஆலவட்டம் சூட்டுவதற்காக. இதற்காக தங்களது உடன்பிறப்புகளை தியாகத்திற்கு அறைகூவி அழைக்கிறார்! எதற்காக அழகான தோட்டத்தில் மாங்கனிகளை பறிப்பதற்காக, பூக்களை கொய்வதற்காக அல்ல! தேர்தலில் போட்டியிடும் மகன் வெற்றியை ஈட்ட திருமங்கலத்தில் செய்திட்ட திருகுதாளங்களுக்கு தடையேதும் வந்தால் அவற்றை எப்படியேனும் முறியடித்திடுங்கள் என்ற அழைப்புதான் கருணாநிதியின் உணர்வில் கலந்து உடன்பிறப்புகளுக்கு கட்டளையாய் பிறப்பித்திருக்கிறது "பூச்சாண்டி பொம்மை".

கருணாநிதியின் அறிக்கையைப் பாருங்கள்! மிகுந்திருக்கும் கவலை நாட்டைக் காப்பதற்காக அல்ல. அழகிரியை காப்பதற்காக என்று தெரியும்!

"அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா அச்சமாக இருக்கிறது! போட்டிக்கு நாள் குறிப்பதற்கு முன்பே புஜங்களைத் தட்டிக் கொண்டல்லவா; பொய்ப் புகார்களை அடுக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்; வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!

அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும். "இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே'' என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது."


வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள் என்று அவதூறுகளை அள்ளி வீசியிருக்கும் இந்த பட்டா கத்தி பைரவர்களின் சுயமுகம் உள்ளாட்சித் தேர்தலில் நாறிப்போனதை நாடறியும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலல்ல - உள்ளாட்சித் தேர்தலில் பட்டாக் கத்திகள்தானே வாக்காளர்களாய் மாறியது.


ஜனநாயகத்தின் காவலராய் வேடம் பூண்டிருக்கும் கருணாநிதியின் கபட வேடம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவன் உதயகுமாரின் வடிவில் தமிழக மக்களின் கண்முன் எப்போதும் நிழலாடிக் கொண்டேயிருக்கும். "டாக்டர்" கலைஞர் என்பதற்கு பின்னாள் மறைந்திருக்கும் உதயகுமாரின் "தியாகத்தை" நாடறியும். பெற்றவர்களையே விற்றவர்களாக்கிய கருணாநிதி வங்கத்தில் துப்பாக்கி ஏந்தி வாக்கு சேகரிப்பதற்காக சிந்துபாத் கதை கூறுவதை பாலகரும் நகைப்பர்.


மத்தியிலே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் கூட்டாளியாய் இருந்த ஆட்சியாளர் கருணாநிதி மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது வாக்குபதிவு அதிகாரிகள் உட்பட வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நடத்தப்பட்டதும், நான்கு நாள் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டு பகுதி பகுதியாய் நடத்தப்பட்டபோதும் துப்பாக்கியேந்திய வாக்கு சேகரிக்கும் தொண்டர்களையோ அல்லது வாக்குப் பெட்டிகளை கடத்திச் செல்லும் அஞ்சாநெஞ்சர்களையோ காண முடியவில்லை தேர்தல் கமிஷனால். அவர்கள் காணாததை கருணாநிதி கண்டு விட்டார் என்றால் அவரது கண் நல்லகண்தான்!


சென்னை மாநகர தேர்தல் உட்பட உள்ளாட்சி தேர்தல் களம் அஞ்சாநெஞ்சர்களின் அடியாட்களால் அமர்க்களமாய் நடத்தியதை தமிழகம் அறியும். அதற்கு விலை கொடுக்க தற்போது தமிழக மக்கள் தங்களது புத்தியை கூர் தீட்டிக் கொண்டுதான் உள்ளார்கள். சென்னையிலேயே ஓட்டை ஏற்பட்டு 14-ல் 7 தொகுதி காணாமல் போன கருணாநிதிக்கு மதுரையில் அழகிரியின் டெபாசிட் காணாமல் போகுமோ என்ற அச்சத்தால் வந்த எச்சம்தான் அந்த அறிக்கை.

அடுத்து கூறுகிறார் கருணாநிதி, "மதுரையில் சங்கரராக நின்று சவுராட்டிரர்களின் வாக்குகளைப் பெற்றிட அள்ளிக் கொட்டிய வெள்ளிப்பணம் பற்றித் தெரியாதா யாருக்கும்-அந்தத் தொகுதியில் மனம் கூசாமல் இஸ்லாமியர் வாக்குகளைப் பெற்றிட குல்லாய் அணிந்து சென்ற காட்சியை மதுரை மக்கள் தான் மறக்க முடியுமா?"

தேர்தலுக்கு தேர்தல் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தையும், கள்ளப் பணத்தையும், ஸ்பெக்ட்டிரம் ஊழல் பணத்தையும், ஏன் வீராணம் பணத்தையும் கூட விட்டு வைக்காமல் தண்ணீராய் செலவழிக்கும் கட்சியெது என்று தமிழக தாய்மார்கள் அறிவார்கள்! குல்லாய்களை மட்டுமல்ல, சிலுவைகளையும் சுமந்து காவடி தூக்கி பா.ஜ.கவுக்கு வெஞ்சாமரம் வீசி, குஜராத் பாசிச படுகொலைகளை கண்டிக்காமல் மவுனம் காத்து இந்துக்களின் ஓட்டுக்களை பத்திரமாய் காத்திட அத்வானியையும் - வாஜ்பாயையும் - மோடியையும் காவடியாய் சுமந்த கதையை நாடு அறியும். பதவிக்காய் குல்லா போடுபவர்கள் யாரென்று! நாய் கவிதை பாடி நட்பு பாராட்டிய உலகத் தமிழனின் ஒப்பற்ற பிரதிநிதியாரென்று உலகத் தமிழர்களுக்கு நன்றய் தெரியும்! கூடா நட்பின் பிரதிநிதி கருணாநிதியே என்று!

பாவமாம் அஞ்சாநெஞ்சர். மதுரையில் அவரது கைங்கரியம் மதுரை மக்கள் நன்றாக அறிந்தது தானே! அட்டாக் பாண்டியனும் - அஞ்சாநெஞ்னும் ஒரே உரையில் உள்ள இரு கத்திகளென்று. தினகரன் பத்திரிகையில் கொலையுண்ட 3 பத்திரிகையாளர்களுக்கும், தினகரன் ஊழியர்களுக்கும் அட்டாக்பாண்டியனை ஏவிய கை எதுவென்று தெரியாதா? முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணனின் கொலைக்கு பின்னணியில் இருந்தவர் யாரென்று போலீசாருக்குத்தான் தெரியாதா! 59வது வட்ட மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியின் கொலைக்கு பின்னிருந்த - ஊக்கம் கொடுத்த அஞ்சாநெஞ்சன் யார் என்று தெரியாதா?


மதுரை மக்களே வாக்களியுங்கள் உங்களிடம் வாக்கு எனும் கூர்மையான ஜனநாயக வாள் இருக்கிறது. அதனை தைரியமாக பயன்படுத்துங்கள் ஜனநாயகம் தழைத்திட, மதுரையை காப்பாற்றிட! பணத்தை வைத்து அரசியல் நடத்துபவர் மோகன் அல்ல! பணத்தை மட்டுமே வைத்து அரசியல் நடத்துபவர் அஞ்சாநெஞ்சரே! என்று உறக்கச் சொல்லும் மதுரை மக்களே உங்களது வாக்கு எதிர்கால சமூகத்தை நல்ல வழியில் செலுத்தப்போகும் துடுப்புச் சீட்டு.