February 24, 2007

பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு உதவுமா? சென்னை சங்கமம்!




சென்னையில் டிஸ்கொத்தேக்களும், பாப் இசை நிகழ்ச்சிகளும், இரவு நேர கூத்தடிப்புகளும் கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கும் வேளையில், உலகமயமாக்கல் சுழலில் சிக்கித் தவிக்கும் சென்னைவாசிகளை சற்றே ஆசுவாசப்படுத்தியுள்ளது “சென்னை சங்கமம்”.


தமிழக அரசின் பண்பாட்டு மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை ஏற்பாட்டின் கீழ் சென்னை முழுவதும் மூன்று பேருந்துகளில் வலம் வரும் கிராமிய கலைஞர்கள் சென்னை தெருக்களை கலக்கோ கலக்கு என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.







மறந்துப்போன அல்லது மறக்கப்படிப்பட்ட பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், பறையடி, வில்லிசை என தமிழ் மக்களின் மரபில், வாழ்வியல் சூழலுக்கேற்ப வளர்ச்சியுற்ற கலைகள் இன்றைக்கு தேய்ந்தும் - ஓய்ந்தும் போயுள்ள சூழலில் அவைகளுக்கு புனர் வாழ்வளிக்கும் முயற்சியில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று சொல்லலாம்.


மார்கழி கச்சேரிகளை மட்டுமே பார்த்துப் பார்த்து சலிப்புற்ற அரங்கங்கள் தற்போது நடைபெறும் ‘சென்னை சங்கமத்தில்’ அதிரும் வேட்டுக்களாய் புறப்படும் இசையில் துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.


நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கலைவானர் அரங்கம், மியூசிக் அகாடமி, தியாகராயர் ஹால், தி. நகர் - நடேசன் பூங்கா, கே.கே. நகர் - சிவன் பூங்கா, மயிலை மாடவீதி, பெசன்ட் நகர் கடற்கரை, இராயபுரம் - ராபின்சன் பூங்கா, கோட்டூர்புரம் பூங்கா, நாகே°வரராவ் பூங்கா - மயிலாப்பூர், அண்ணாநகர் - டவர் பார்க் என்று சென்னை முழுவதுமே மாலை நேரங்களில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ணப் பூக்களாய் கிராமிய கலைஞர்களின் கலைத் திறனால் புதுப்பொலிவு கண்டுள்ளது.






சரி விஷயத்திற்கு வருவோம்! நான் குடியிருக்கும் வடசென்னை - இராயபுரத்தில் நடைபெறுவதால் அங்கேயே போய் கலந்து கொள்ளலாம் என்று நண்பர்கள் சிலருக்கு செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு வரச்சொல்லி விட்டு, நானும் ராபின்சன் பூங்காவை நோக்கி வேக வேகமாக சென்றேன். மாலை 5.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் என்று நிகழ்ச்சிநிரலில் குறிப்பிட்டு இருந்ததால், எங்கே ஏதாவது ஒரு நிகழ்ச்சியை தவற விட்டு விடுவோமோ என்ற பதட்டத்தில் சென்றவனுக்கு பூங்காவில் நுழைந்தபின்தான் மன நிம்மதி கிடைத்தது.


நேரம் 5.45 ஆகியும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவில்லை. கலைஞர்களின் தயாரிப்புகள் மிக ஜரூராய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்குள் நான் அழைத்த நன்பர்கள் வராததால், அவர்களை மீண்டும் எ°.எம்.எ°. மூலம் தொல்லை கொடுக்க ஆரம்பித்தேன். ஒரு வழியாக மூன்று பேர் அரங்கத்திற்கு வந்து சேர்ந்தனர்.


நண்பர் ஹரி என்னைப் போலவே மிக வேகமாக நிகழ்ச்சியைக் காண ஆவலாக வந்தவர். அங்கே வேக, வேகமாக நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தவர்கள் சென்ற திசையில் அவரும் நடக்க ஆரம்பித்து விட்டார். ஐய்யோ என்னப்பா நிகழ்ச்சியை பார்க்க இவ்வளவு வேகமாக போறாங்களே என்ற ஐய்யத்தோடு... அப்புறம்தான் தெரிந்தது அந்த டியூப்லைட்டுக்கு அவர்கள் நடை பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று.


எப்படியோ நாங்கள் மேடைக்கு வெகு முன்னால் அமர்ந்து கொண்டோம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொன்னரசு கனகராஜ் வருவதற்கு தாமதமாகியது. இருப்பினும் ஒருவழியாக, கோவில்பட்டி ஐயம்மாள் வல்லுப்பாட்டோடு நிகழ்ச்சி ஆரம்பமானது... அவங்களுக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 20 நிமிடம்தான்... அப்பாடா இங்கேயாவது 20 நிமிடம் கொடுத்தாங்களே என்ற தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தார்.


அவருடைய வல்லின் வலைகளைப் போல், அவரது அவரது கையில் இருந்த கோல் ஏதோ ஏ.ஆர். ரகுமான் டிரம்ஸ் வாசிப்பதுபோல் சுழன்று சுழன்று வில்லினை கொஞ்சிச் சென்றது அற்புதமாக இருந்தது. அவரது கதை “கம்ம இராமாயணத்தை’ மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டது. குழந்தை பிறந்ததும், கல்வி பயில சென்றதோடு.... அவரது நிகழ்ச்சி முடித்துக் கொள்ள வைக்கப்பட்டது!




ஆஹா! என்ன அற்புதமான வில்லிசை இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறதே! என்ற ஏக்கம்தான் நம் மனதை வாட்டியது. பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய வில்லிசை குறித்து பயிற்சியளித்தால் வில்லிசைக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். இருப்பினும் இவைகளை நவீன வடிவத்தோடு பயன்படுத்திடவும்,


வளர்த்தெடுக்கவும் வேண்டும். இது அனைத்து கலைகளுக்கும் பொருந்தும். அடுத்து வந்தது தேவராட்டம், இசையை அதன் அடி நாதத்தில் இருந்து மீட்டெத்து இசைத்ததுபோல் இருந்தது. தேவராட்டம் ஆடுவதற்கு ஏற்ப அந்த மேடை இன்னும்கூட விசாலமாக அமைக்கப்பட்டிருந்தால், அவர்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தியிருக்க முடியும்!


கலைமாமணி தேன்மொழியின் நையாண்டி மேளம். இதனை நையாண்டி மேளம் என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்றுத் தெரியவில்லை! நான் பார்த்துக் கொண்டிக்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வில் இப்படித்தான் பிரதிபலித்தது. ‘பரதத்திற்கு சவாலாக’ வேகத்தோடு, விவேகமாக, சாகசம் புரியும் நோக்கத்தில் அமைந்ததுபோலவும், பரதத்தை நையாண்டி செய்வதுபோலவும்தான் தெரிந்தது. தேன்மொழியின் ஆட்டத்தால் ராபின்சன் பூங்காவே புதுப் பெலிவு பெற்றது. நிகழ்ச்சியை பார்க்க வந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு - தேன்மொழியின் சாகசம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. கலசத்தை வைத்துக் கொண்டு அவர் ஆடிய ஆட்டமும், துளிகூட முகத்தில் சோர்வோ அல்லது அளுப்போ இல்லாமல் 30 நிமிடத்திற்கும் மேல் ஜெலித்துக் கொண்டிருந்தார். இதுபோன்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகளை அனைத்து கல்லூரிகள் தோறும் கொண்டுச் சென்றிட வேண்டும். நவீன நடனம் எல்லாம் இதன் முன் தூள் தூளாகியதை பார்க்க முடிந்தது.


தேன்மொழியின் ஆட்டத்தை சுவைத்த நொடிகளிலேயே, கலைமாமணி விநாயகத்தின் காவடியாட்டம் வந்து விட்டது. ஆய்யோ! விநாயகத்தின் தலையில் பூமிப்பந்து சூழலுவது போல் காவடி சுற்றி சுற்றி வந்தது. அவர் சொல்லுவதையெல்லாம் அந்த காவடி கேட்டது என்றுதான் சொல்ல வேண்டும். காவடியை தோளில் இருந்து, தலைக்கு ஜம்ப் செய்ய வைக்கும் போது என்னா....... பேலன்°... ஆட்டம் என்றால் இதுவல்லவா என்று மெய் சிலிர்க்க வைத்தது. சென்னையில் அம்மா பிறந்த நாளுக்கு பால் குடமும், சிந்து காவடியும் தூக்கிக் தூக்கி பார்த்த மக்களுக்கு விநாயகத்தின் காவடி சிந்தனையை கிறங்க வைத்தது. இத்தகைய அரிய கலைகளையெல்லாம் சினிமாவில் புகுத்திடவேண்டும். கலைகளுக்கு உள்ளோ போட்டியைப் போல் நம் ஹீரோக்களை பயன்படுத்தினால், இத்தகைய கலைககள் புதிய எல்லைகளைத் தொடும்...


அடுத்து வந்தது, மதுரை - அலங்கா நல்லூர் வேலுவின் பறையாட்டம்... பறை என்றாலே இங்கே ஏதோ சாவு மேளமாக பார்த்துப் பழகியவர்களுக்கு அது போர் முரசும் கொட்டும், திருமண சடங்கு முதல் பூப்பெய்துதல் வரை அனைத்துக்கும் வாழ்வின் அங்கம் என்பதை உணர்த்தினார் வேலு. வேலு குழுவினரின் உற்சாகமான ஆட்டத்தை எந்த படத்திலும் காட்சியாக வைக்க முடியாத அளவிற்கு அவர்களது உற்சாகம் பொங்கியது. கிட்டத்தட்ட 30 மணி நேரத்திற்கும் மேல் ஏதோ ஒரு இலட்சம் வெடியை வைத்தார் போன்று விதவிதமான அடிகளை அடித்து இராயபுரத்தையே அதிர வைத்து விட்டார்கள் வேலு குழுவினர்.


அதேபோல், மயிலாட்டமும், குயிலாட்டமும், குதிரையாட்டமும் குழந்தைகளை குஷிப்படுத்தியது. அடுத்து வந்தது நாயட்டம்... இது இறக்குமதி கலை! இதை ஏன் இதற்குள் நுழைத்தார்கள் என்றுத் தெரியவில்லை! நாயாட்டம் பார்ப்பதற்கு நல்லாயிருந்தாலும், அதன் கலாச்சாரம் மேலை நாட்டுத் தன்iயோடுதான் இருந்தது. ஏன்? நான் புனர்தலைக்கூட பட்டும் படாமல் காண்பித்தார்கள்... இதுபோன்ற கலைகள் இந்த மண்ணிற்கு வேண்டவே வேண்டாம் அதற்குத்தான் இருக்கிறதே டிஸ்கொத்தோ.... கொட்டம்போடும் கொழுப்பேறிய கும்பலுக்கு வேண்டும் என்றால் இது தேவைப்படலாம்.


நம் மரபு என்று சொல்லும் போதே! அது கிருஷ்ணரும், இராமரும் இல்லையல்லவா! காளியாத்த - மாரியாத்தா - முன்னிகன்னியம்மன்.... எனவே, காளியாட்டமும் இல்லாமல் இல்லை. இரண்டு காளிகளின் நடனம் கலையுணர்வோடு - சிலிர்ப்பூட்டும்படியாக இருந்தது. கொடுமைக்கு எதிரான காளியின் நடனமாக இது சித்தரிக்கப்பட்டிருக்கிறது.


அடுத்து வந்தது லைட் மியூசிக்.. இதை ஏன் சேர்த்தார்கள் என்பதும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கே வெளிச்சம்! தெருவெல்லாம் இந்த லைட் மியூசிக் போட்டுப் போட்டே அதுதான் நம் கலை என்பதுபோல் மாற்றி விட்ட இந்த சூழலில், கிராமிய கலையோடு இதை சேர்த்ததன் மூலம் இதனுடைய வாழ்நாளை இன்னும் கூட்டி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்!


இறுதியாக சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தினாலும் வடசென்னைக்கு ஒரு விதமாகவும், தி. நகர், மயிலாப்பூர் போன்ற இடங்களுக்கு வேறு ஒருவிதமாகவும் இந்த நிகழ்ச்சிகள் அமைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தி. நகரில் நாதஸ்வரம், வோக்கல், தேவாரம் திருப்புகழ், குழந்தைகள் கதை நேரம், கதை கேளு பாப்பா போன்ற மிக லைட்டான நிகழ்ச்சிகளை மட்டுமே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இங்கே மண்ணின் மனம் கமழும் கலைகள் வருவதற்கு தடையே போட்டுள்ளார்கள் என்பது அந்த நிகழ்ச்சி நிரலை பார்த்தாலே புரிகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கனிமொழி இதற்கு எப்படி இறையானார் என்பது அவருக்கே வெளிச்சம்.


அத்தோடு, பெசன்ட் நகரில் இதைவிட பெரிய கூத்தே நடந்துள்ளது. ரெயின்போ பிரிட்ஜ், ராக் மியூசிக், கார்த்திக் ஹார்ட் பீட்ஸ், ராக் பேன்ட் இந்த கலைகள் எல்லாம் எந்த காலத்தில் தமிழ் கலையானது! மொத்தத்தில் சென்னை சங்கமத்தின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும் அதன் ஆரம்ப செயல்பாடு மண்ணின் மனம் கமழும் கலைகளை உயிர்ப்பதாக இல்லை! இது ஏதோ சென்னை வாசிகளை இன்னொரு வகையில் சாந்தப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.

சென்னை சங்கமம் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் வைத்திருக்கும் பின்னணி பேனர்கள் செயற்கையாகவே டிஜிட்டல் பேனரில் அமைக்கப்பட்டுள்ளது. ஏன் நம்முடைய ஓவியக் கல்லூரி மாணவர்களை பயன்படுத்தியிருந்தால், அவர்களது கைவண்ணமும் வெளியில் வந்திருக்குமே! கலைஞருக்கு இதுவெல்லாம் தெரியாமல் போனதா! அல்லது தெரியப்படுத்தாமல் போனார்களா?

வடசென்னையும் - தென் சென்னையும் கலை - கலாச்சாரத்தில் இரண்டு எதிர் எதிர் புலன்கள் போல் செயல்படுகிறது.


எப்படியிருந்தாலும் தமிழக அரசின் இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. இருப்பினும் இது கலைஞரின் ஆட்சி! இவற்றையெல்லாம் சீர்தூக்கி பார்க்கும் செயல்திறன் அவருக்கு மிக அபாரம்! பண்பாட்டுத்தளத்தில் இழந்ததை மீட்கும் தருணம் தேவையே! அதே சமயம் ஆதிக்க பண்பாட்டாளர்களை சாந்தப்படுத்தும் முயற்சிபோல் இந்த வித்தியாசம் தெரிகிறது. எதிர்காலத்தில் இவைகள் களையப்படும் என நம்பிக்கை கொள்வோம்! இல்லையெல் களையெடுக்கப்படலாம் நம் மண்ணின் கலைஞர்களால்.... வளர்க மக்கள் கலை! மண்ணின் கலை!!


February 20, 2007

சிறுகதை - அத்தை

அத்தை
குழந்தைகள் பட்டாளம் சுசி அத்தையைச் சுற்றி எப்போதும் வட்டமடித்தபடியே இருக்கும். அத்தையின் அன்பு மழையில் கட்டுண்டிருக்கும் குழந்தைகள், மொட்டை மாடியில் நிலவு வெளிச்சத்தில் பேசிக் கொண்டே இருப்பதில் அலாதி பிரியம்.
அத்தையின் முகத்தில் சூரிய கதிர்களை மிஞ்சும் பிரகாசத்தை எப்போதும் பார்க்க முடியும். ஒளிப்பட்டால் மலரும் பூக்களைப் போல் சக தோழிகளையும், குழந்தைகளையும் பார்த்தவுடன் ஒளி வீசும் கண்களோடு, சிரித்த முகத்துடன் பேசத் துவங்கி விடுவார். அத்தை பேச்சில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அத்தைக்கு மட்டும் திருமணமாகியிருந்தால், இந்நேரம் இரண்டு - மூன்று குழந்தைகளுக்கு தாயாகியிருப்பார். தன் பள்ளித் தோழிகளுக்கு மட்டுமல்ல; அத்தை பார்த்து வளர்ந்த வாண்டுகளுக்கு கூட திருமணம் ஆகிவிட்டது.
அத்தைக்கு ஐந்து அண்ணண்கள், ஒரு தம்பி, இரண்டு அக்கா என பெரிய ரத்தவுறவு இருந்தது. அவர்களது பிள்ளைகளையெல்லாம் வளர்ப்பதில்தான் அத்தையின் வாழ்க்கை இன்பகரமாக! ஓடிக்கொண்டேயிருந்தது! அத்தைக்கு மட்டும் திருமண ஆசை இல்லாமலா இருக்கும்! அத்தை 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது காலில் ஏற்பட்ட சிறு காயம்தான் அவரது வாழ்க்கையை நிரந்தர ஊனமாக்கி விட்டது.
அத்தையின் காயத்தை ஆற்றுவதற்கு பார்காத டாக்டரில்லை, போடாத மருந்தில்லை; ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொரு வைத்தியம் மட்டுமா சொன்னார்கள்! நோயின் பெயரைக்கூட மாற்றிக் கொண்டே இருப்பார்கள்... இப்படியே இருபது வருடங்கள் ஓடி விட்டது. இருந்தாலும் என்ன அத்தையின் மிருதுவான உள்ளமும், பால்வடியும் முகமும் அப்படியேதான் இருந்தது!
அத்தையின் காலில்தான் ஊனம் ஏற்பட்தேயொழிய மனதில் அல்ல!
கலகலப்பான உள்ளத்தோடு வீட்டு வேலைகளை கவணிப்பதோடு, தன்னுடைய வேலைகளையும் தானே செய்துக் கொள்வார். ஊனமுற்றோர் சான்றிதழ் பெறுவதற்காக வருடம் முழுவதும் அலையவேண்டியிருந்தது அப்போதுகூட, நம்மால் யாருக்கும் தொந்தரவு கூடாது என்று உறுதியான மனதோடு, குருதி வழியும் நொந்துப்போன கால்களோடு சான்றிதழ் பெறுவதில் வெற்றி பெற்றார்! பலமுறை அலைந்ததில் சில புதிய தோழிகளையும் நண்பராக்கிக் கொள்ள தவறவில்லை.
ஒருமுறை, அத்தை இரண்டு நாட்களாக காணாமல் போய்விட்டார்! உறவினர் வீடுகளில் இருந்து, பல இடங்களில் தேடிப் பார்த்தாகி விட்டது. காவல் நிலையத்தில் கூட காணவில்லை என புகார் கொடுத்து விட்டார்கள், அத்தை மனம் உடைந்து ஏதாவது செய்துக் கொண்டாரோ என்றுகூட பேசத் துவங்கி விட்டனர்... மூன்றாவது நாள் காலையில் அத்தை சவகாசமாக வீட்டுக்கு வந்து விட்டார்! என்ன ஏது என்று அலறியடித்துக் கொண்டு கேட்டபோது, கன்னியாகுமரிக்கு போகனும்னு நினைச்சேன் போய்ட்டு வந்துட்டேன்னு சாதாரணமாக கூறியது அப்படியே என்னுள் பதிந்து விட்டது.

எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கெள்ளும் அத்தை, தான் நினைத்ததை உடனே செய்து விடுவார் அப்படிப்பட்ட குணம் படைத்தவர்.அத்தையின் முறைப் பையன் ஒருமுறை திருமணம் செய்துக் கொள்ள முன்வந்தபோது கூட வேண்டாம் என மறுத்து விட்டவர்! எப்படியோ, அவருக்குள் அந்த ஆசை குடிகொண்டு விட்டது!

தான் ஏதாவது முடிவு எடுத்து விட்டால் அதனை வெளியே சொல்வதற்கும் தயங்கியதில்லை!எப்படி அத்தை திடீர்னு உங்களுக்கு திருமண ஆசை வந்தது என்று கேட்க! 'சும்மா இப்படியே இவ்வளவு நாள் ஜாலிய இருந்துட்டேன்! சரி திருமணன்னு சொல்றாங்களே அதுல என்ன சந்தோஷம் இருக்குதுன்னு பாக்கலாம்னுதான்...' என மிகச் சாதாரணமாக, அதே ஒளி வீசும் கண்களோடு, சிரித்த முகத்தோடு வெளிப்படுத்தினார்... ஒரு பக்கம் அத்தையின் ஆசையில் அர்த்தம் இருந்தாலும், இந்த மனிதர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லையே என்ற குழப்பம்....

அத்தையின் அம்மாவுக்கும் வயசாகிக் கொண்டே இருந்தது. 'சரி! பொண்ணு ஆசைப்படறா... அவளுக்கும் கல்யாணம்னு ஒண்ணு ஆயிட்டா... அவ குழந்தை, குட்டின்னு காலத்தை ஓட்டிடுவா! அண்ணன், தம்பின்னு... யாரையும் நம்ப வேண்டியதில்லப்பார்னு...' அத்தையின் அம்மா கூறியதில் அர்த்தம் இருந்தது.

அத்தையின் திருமண ஆசை பற்றி உறவினர்களிடமும், நண்பர்களிடமும் ஏன் கல்யாண மாலையில் கூட பதிவு செய்து வைத்து விட்டார்கள்... 'அட எம்பொண்ணுக்கு எந்த ஜாதியா இருந்தாக்கூட பரவாயில்லை... ஆனா இந்துவா இருக்கணும்...' அவ்வளவுத்தான் என்பது வரையில் வந்து விட்டார்கள்.

பல பேர் வருவதும், போவதுமாக இருந்தார்கள்! அத்தை குடும்பத்தில் வசதிக்கு ஒன்றும் குறையில்லை. இருந்தாலும் என்ன! ஜாதகம்தான் பொருந்தவில்லை என்று... தள்ளிக் கொண்டே வந்தது....இந்நிலையில், நாகர்கோவில் சந்திரனுக்கு ஊனமான பெண்தான் திருமண பொருத்தமாக அமையும் என்று ஜாதகத்தில் சொல்லியிருந்தார்களாம்!

அத்தையின் விலாசத்தை கண்டுபிடித்து சென்னைக்கு வந்து சந்திரனும், அவரது அம்மாவும் பெண் பார்த்து விட்டுப் போனார்கள். ஊருக்கே பிடிக்கும் அத்தையை மாப்பிள்ளைக்கு பிடிக்காமல் போகுமா!சந்திரன் ஊருக்கு போனதும் அத்தையின் நினைவாகவே இருந்தார்! தினந்தோறும் அத்தைக்கு போன் போட்டு அன்பு மொழியில் நேசமாக பேசுவார்! அத்தை வெளிப்படையானவர், எதையும் மறைக்காமல், ஒன்று விடாமல் அப்படியே வாண்டுகளிடம் சொல்லி விடுவார்.

புதிய சந்திரனுக்கு இதயத்தில் இடம் கொடுத்து விட்டார் அத்தை! அப்புறமென்ன! நட்சத்திரம் சிகிதமாக இருக்கும் இரவு சந்திரன் ஏக்கமாகி விட்டது!"

அத்தைக்கு ஆசையாக புடவை எடுக்கப்போன சந்திரன், பிறகு சென்னை பெண்கள் எல்லாம் சுடிதார்தான் போடுவார்கள் என யோசித்து சுடிதாரும், புடவையுமாக எடுத்து வைத்து விட்டார். அத்தோடு நிற்கவில்லை! 'ஐன்டீனின் ஒளி தியரி புதிய காதலர்களுக்கு கைகொடுக்காமலா போய்விடும்' கூடவே ஒரு புதிய செல் போனையும் வாங்கி மொத்தமாக அத்தைக்கு அனுப்பி வைத்து விட்டார்!

ஐன்°டீனிடம் சார்பியல் தியரி குறித்து கேட்டபோது, அவர் அளித்த விளக்கம் மிக அழகானது! "அழகான பெண்ணிடம் இரண்டு மணி நேரம் பேசினால் அது இரண்டு நிமிடம் போல் இருக்கும்; அதே நேரம் எரியும் அடுப்பின் மீது இரண்டு நிமிடம் உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் போல் இருக்கும்" என்று கூறினார்...

அதேபோல் செல்போனின் ஒளிகள் நாகர்கோவிலுக்கும், சென்னைக்கும் ரன்னெடுத்தே சோர்ந்து போகும் அளவிற்கு நாள்தோறும் நான்கு மணி நேரத்திற்கு குறையாமல் அவர்களது பேச்சுவும், கும்மாளமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.ஏன்டீ, இன்னுமா தூக்கம் வரலை உனக்கு! அப்படி என்னதான் பேசுவீயோ அவனோடு... என்று தன் தாயே கூறுமளவிற்கு அவர்களது பேச்சு நடு ஜாமத்திலும் நீடிக்கும்...

அத்தையோடு யாராவது பையன்கள் பேசும்போது கூட, 'டேய், என்னடா நீ கூட மாமா மாதிரியே பேசுற...' என்கிற அளவிற்கு எங்கும், எதிலும் சந்திரனையே சுற்றி சுற்றி வந்தார் அத்தை...அத்தையின் சந்தோஷம் அவருக்கு மட்டுமா? வாண்டுகளுக்கும், தோழிகளுக்கும்தான்!

திருமண தேதி எப்போது என்ற அளவிற்கு அவர்களது பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, சந்திரனின் வேகமான நடவடிக்கை வீட்டில் பெரிய பிரச்சினையாக மாறுகிறது... நீண்ட நாளாக கல்யாணம் ஆகாத சந்திரன் 'ஜாதகத்தையே மாற்றி பொருத்தம் செய்து விட்டார்!' என்பதுதான். அவ்வளவுதான், அவரது தாய் தன் ஒரே பிள்ளை இப்படி செஞ்சுட்டானே என்று புலம்பி.... புலம்பி.... புயலே வீசி விட்டது அவரது குடும்பத்தில்...

சந்திரனிடம் இருந்து இரண்டு நாட்களாக கால்கள் வராததால் உலகமே தன்னிடமிருந்து துண்டித்து விட்டதுபோல் துடித்தார் அத்தை! இரண்டு நாட்கள், இரண்டு வாரமாக மாறியது... காரணம் அறியாமல் துடித்தார்... எப்படியோ சந்திரன் வேலை பார்க்கும் இடத்தின் தொலைபேசி எண்ணை கண்டு பிடித்து அவருக்கு போன் போட்டுப் கேட்டபோது, 'சந்திரன் வெளி நாடு சென்று விட்டதாக கூறுகிறார்கள்...' என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்தார் அத்தை! எதற்கும் அசராத அத்தையின் ஒவ்வொரு பொழுதும் ஒரு வருடம் போல் கழிந்தது!

அத்தை நடந்த விஷயத்தையெல்லாம் தன் நண்பர்களோடு மனம் விட்டுப் பேச... 'சந்திரன் எங்கே என்ற கேள்விகள் தன் இதயத்தை முட்டிக் கொண்டே இருந்தது...' கூற, அத்தைக்காக எதையும் செய்யும் இளசுகள் கன்னியகுமரி எக்°பிர° வேகத்தில் நாகர்கோவில் சென்று விசாரித்ததில், 'சந்திரனின் குடும்பத்தினர் வேறு இடத்தில் பெண்ணை பார்த்து அதிரடியாக திருமணம் செய்து வைத்து விட்டார்கள்' என்ற தகவல் கிடைக்க! அதிர்ச்சியான இளசுகள் அத்தையிடம் இதனை எப்படி சொல்வோம் என துடித்தனர்...

அத்தையின் ஒவ்வொரு நொடியும் சந்திரனின் நினைவாகவே கழிந்தது... இரவில் தூங்குவதை விட அந்த கால் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு விண்ணில் முட்டிக் கொண்டே இருந்தது.... அத்தையின் மனதை திசை திருப்ப, 'ஹெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாற்றையும், பீத்தேவனின் இசை ஞானத்தையும் எல்லாம் கூறவோம்' இருந்தாலும் என்ன?

காதல் நோய்க்கு யாரால் மருந்திட முடியும்! காதல் ஒரு முறை உள்ளத்தில் புகுந்து விட்டால், கட்டாற்று வெள்ளம்போல் கரை புரண்டு ஓடிக்கொண்டே இருக்குமல்லவா! அணை போடாத வரை தடையேது காதலுக்கு!அத்தையிடம் எவ்வளவு நாளைக்கு மறைக்க முடியும் என தீர்மானித்த இளசுகள், மிக நிதாணமாக அத்தையிடம் நடந்ததை கூற, அத்தையின் கண்களில் காவிரி பாய்ந்ததோடு, அவரது இதயம் முதல் முறையாக ஊனமாகி விட்டது!

- கே. செல்வப்பெருமாள்