August 31, 2007

மலபார் கூட்டுப் பயிற்சியும் - வாஷிங்டன் விசுவாசமும்!


இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு தீவிரமான சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் உள்ளாகியுள்ள பின்னணியில், அடுத்த கட்ட சூட்டைக் கிளப்பியுள்ளது ‘மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி’. வருகிற செப்டம்பர் 4 முதல் 8 வரை வங்காள விரிகுடா பகுதியில் ‘மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி’ என்ற பெயரில் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ‘இந்தியா - அமெரிக்கா - ஜப்பான் - ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர்’ என ஐந்து நாடுகள் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது தேச பக்தியுள்ள அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளதோடு, ஆசிய பகுதியில் அதிகரித்து வரும் அமெரிக்கச் சார்பு இராணுவரீதியான தலையீடுகளால், ஆசிய கண்டத்தின் அரசியல் தட்ப - வெப்ப நிலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இடதுசாரி கட்சிகள் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து தங்களது ஆட்சேபனையை தெரிவிக்கும் போது, இந்த ஒப்பந்தத்தை தனித்துப் பார்க்க முடியாது என்று தெளிவுபடுத்தியதோடு, அதனை இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பு உடன்பாட்டு பின்னணியில்தான் இணைத்து பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போதை அணு சக்தி ஒப்பந்தத்தின் முன்னோடிதான் இந்த ‘இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு’ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த போது இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார். அவர் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்போகிறோம் என்பதைக் கூட இந்திய பாராளுமன்றத்திற்கோ, ஏன் இந்திய மக்களுக்கே கூட அரசல் - புரலாகக் கூடத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க புவிசார் அரசியல் சார்ந்த இராணுவ ஒப்பந்தத்தில் 1995ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது அன்றைய பிரதமர் நரசிம்மராவ் இதனை துவக்கி வைத்தார். அந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சிதான் தற்போதைய ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இந்த உடன்பாட்டின் மூலம் இந்தியாவை உலகளாவிய யுத்த தந்திர கூட்டாளியாக அமெரிக்கா மாற்றியுள்ளது.
தற்போது நடைபெறும் இந்த மலபார் கூட்டுப் பயிற்சியில், “18 அந்நிய கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதில் 13 கப்பல்கள் அமெரிக்க கப்பற் படையைச் சேர்ந்தது. அமெரிக்க நீர் மூழ்கி கப்பலான யு.எஸ்.எஸ். சிகாகோ, மற்றும் அணு சக்தி கப்பலான யு.எஸ்.எஸ். நிமிட்ஸ், யு.எஸ்.எஸ். கிட்டி ஹாக் ஆகிய முக்கிய போர்க்கப்பல்கள் இப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.” இந்த கப்பல்கள் அனைத்தும் உலக நாடுகளையும், உலக மக்களையும் மிரட்டுவதற்காகவும், தங்களது யானை பலத்தை நிரூபிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டவைகள். இதனை இந்திய கடல் எல்லைக்குள் பயிற்சியில் ஈடுபடுத்துவதன் மூலம், ஆசிய பகுதியில் உள்ள மக்களிடைய ஒருவித பய உணர்ச்சியையும், பிரம்மிப்பையும் உண்டாக்குவதே அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் நோக்கமாகும். அது மட்டுமின்றி, ஆசிய பகுதியில் பொருளாதார ரீதியாக பலம் பெற்று வரும் சீனாவை தங்களது யுத்த தந்திர எதிரியாக குறி வைத்திருக்கும் அமெரிக்கா, தன்னுடைய புதிய இராணுவ கூட்டணியின் பலத்தை உணர்த்தும் முகமாகத்தான் இந்த பயிற்சியில் ஈடுபட உள்ளது.மேலும் பயிற்சியில் ஈடுபட உள்ள கடல் எல்லை என்பது வர்த்க ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரமான பகுதியாகும். தற்போது 94,000 கப்பல்கள் இந்த கடல் வழிப் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளது. எதிர் காலத்தில் இது 1,41,000 ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. உலகில் நான்கில் ஒரு பகுதி எண்ணெய் வளம் இந்த கடல் வழியாகத்தான் கொண்டுச் செல்லப்படுகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கடல் எல்லையில் அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகளோடு இணைந்து கடற் பயிற்சியில் ஈடுபடுவது, நம்முடைய கடல் வழி உட்பட, யுத்த தந்திர ரீதியாக நம்முடைய கடற் பாதுகாப்பிற்கு எதிர் காலத்தில் இது அச்சுறுத்தலாக அமையும். இதனை நமது ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவர்களின் கவலையெல்லாம், இந்த கூட்டுக் கடற் பயிற்சிக்கு எந்தவித பங்கமும் வந்து விடக் கூடாது என்பதில்தான் கண்ணும் - கருத்துமாய் உள்ளனர். இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறும்போது, “இந்த கடற் கூட்டுப் பயிற்சி ஏதாவது ஒரு காரணத்தால் நிறுத்தப்படுமேயானால் அது சர்வதேச அளவில் இந்தியாவின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தாது என்று கூறுகிறார்” இவர்கள் பணியாற்றுவது இந்திய மக்களுக்கா? அல்லது அமெரிக்க எஜமானர்களுக்கா என்பதே புரியவில்லை!மேலும், இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளுக்கு எதிரானது என்பதை இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. கடந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஈராக்கில் நம்முடைய இராணுவ வீரர்களை பணியாற்றுவதற்கு அனுப்புவதற்கு எல்லா விதத்திலும் இசை தெரிவித்த பா.ஜ.க. பின்னர் நாடு முழுவதும் இதற்கு எதிராக எழுந்த கண்டன குரல்களைத் தொடர்ந்து பின்வாங்கியது நினைவுறுத்தலாம். எனவே இந்த ஒப்பந்தம் என்பது அமெரிக்க அரசியல் நலன் சார்ந்த ஒன்று; அவர்களது நலனை காப்பதற்காக எந்த நாட்டோடும் அவர்கள் மோதும் போது இவர்களின் இளைய மற்றும் இனிமையான கூட்டாளியாக இந்தியாவை மாற்றுவதுதான் அமெரிக்காவின் நோக்கம்.
குறிப்பாக, இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக “இரு நாடுகளும் புது யுகத்தில் நுழைந்துள்ளதாக அமெரிக்கா புகழ்ந்துரைத்துள்ளதோடு, இரு பெரும் ஜனநாயக நாடுகளும் இதன் மூலம் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம் - ஜனநாயக கூறுகள் - இராணுவம் - பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் உலகளாவிய வாய்ப்புகளை பயன்படுத்திட உறுதி பூண்டுள்ளதாக கூறுகிறது.”
அமெரிக்க ஜனநாயகம் எத்தகையது என்பதை உலகம் நன்கு அறியும். ஈராக்கிலும், ஆப்கானிலும் அவர்கள் எவ்வாறு ஜனநாயகத்தை நிலை நாட்டினார்கள்? இத்தகைய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அந்தந்த நாடுகளின் இறையாண்மையை தங்களது காலில் நசுக்கி கபளிகரம் செய்ததோடு, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்து அவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று அமெரிக்க ஜனநாயக சுதந்திர கொடியை பறக்க விட்டுள்ள கதை உலகம் முழுவதும் நாறிக் கொண்டுள்ளது. இத்தகைய கொலைகார கூட்டத்தோடு, இந்தியாவும் இணைந்து நின்று ஜனநாயகத்தை காக்கப்போகிறதாம்!
அமெரிக்காவின் தற்போதைய ஜனநாயக விரிவாக்கம் ஈரான் துவங்கி, வடகொரியா, சிரியா, கியூபா, வெனிசுலா என பட்டியல் போட்டு இந்த அசுரர்களை நசுக்க வந்த மகா அசுரனாக வேடம் தரித்துள்ளது அமெரிக்கா. தற்போது இவர்களின் கண் ஆசியப் பகுதியில் சீனாவின் மீதும் விழுந்துள்ளது. இவர்களோடு கூட்டுச் சேர்ந்துள்ள எந்த நாடாவது நிம்மதியாக வாழ்ந்தது உண்டா?இது தவிர உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் உலகு தழுவிய அளவில் தங்களது ஆக்டோபஸ் கால்களை பதித்து வரும் அமெரிக்காவோடு கூட்டுச் சேர்ந்து பயங்கரவாதத்தை எதிர்க்கப்போவதாக இந்த ஒப்பந்தம் கூறுகிறது!
மேலும், இரு நாடுகளும் தங்களது இராணுவ ரீதியான வர்த்தகத்தை விரிவாக்குவது என்றும் குறிப்பிடுகிறது. இந்தியா அமெரிக்காவுக்கு எத்தகைய ஆயுதத்தை வியாபாரம் செய்யப்போகிறது என்று நமக்குத் தெரியவில்லை! அமெரிக்காவின் ஒரு வழி வியபாரா நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதுதான் இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சம். குறிப்பாக இந்தியாவுக்கு பேட்ரியாட், எப் - 16, எப் - 18 போன்ற ஏவுகணைகளையும், இலகுரக விமானங்களையும், இதர ஆயுதங்களையும் தலையில் கட்டுவதன் மூலம் 100 பில்லியன் டாலர்களை வரும் 15 ஆண்டுகளில் கறக்கலாம் என்பதோடு, இதனைப் பயன்படுத்தி ஆசியப் பகுதியில் ஒரு இராணுவ வியாபார போட்டியின் மூலம் குளிர்காய்வதும், அதன் மூலம் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி பாதுகாப்பதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது.
இவைகள் தவிர இரு நாடுகளும் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது மற்றும் தொழில் நுட்பங்களை பரிமாறிக் கொள்வது மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுவது என இந்த ஒப்பந்தம் விரிவாக கூறிச் செல்கிறது.
இந்தியாவுக்கான ராக்கெட் மற்றும் அணு சக்தி தொழில்நுட்பத்தை தர மறுத்த நாடுதான் அமெரிக்கா என்பதை நாம் மறக்க முடியுமா? இந்த விசயத்தில் ஆபத்பாந்தவனாக ஓடி வந்து கிரியோஜினிக் என்ஜின்களை கொடுத்து நம்முடைய ராக்கெட் தொழில்நுட்பத்திற்கும், கூடங்குளத்தில் அணு மின் உலைகளை அமைப்பற்கும் வலுவூட்டியது முந்தைய சோசலிச சோவியத் ரஷ்யா என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.இறுதியாக, இதுபோன்ற இராணுவ கூட்டுப் பயிற்சிகளுக்கு பின்னே ஒளிந்துக் கொண்டுள்ள அமெரிக்காவின் உண்மையான நலன் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் 2006ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க இராணுவ கூட்டிற்கு எதிரான கூட்டத்தில் வலியுறுத்தியதை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும்.
‘சர்வதேச அளவில் இத்தகைய இராணுவ கூட்டுப் பயிற்சிக்கான திட்டம் ஒன்று அமெரிக்காவில் உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாறுகளைப் படித்தால், அங்கு எழுந்த, பல ஆயுதந்தாங்கிய கிளர்ச்சிகளை இப்படிப்பட்ட இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் மூலதான் ஒடுக்கினார்கள் என்பது தெரிய வரும். சிலி, பிரேசில், கவுதமாலா என்று பல நாடுகளில் இப்படித்தான் நடந்தது. ஒவ்வொரு நாட்டின் இராணுவ தளபதிகளும் அமெரிக்கா சென்று பயிற்சி பெற்றவர்கள்தான். அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் தங்களது நாட்டிற்கோ, மக்களுக்கோ விசுவாசமாக இருப்பதைவிட பென்டகனுக்கே கூடுதல் விசுவாசத்தோடு செயல்பட்டார்கள் என்பது வரலாறு”
அமெரிக்காவோடு பயிற்சி பெறுவதற்கு முன்னரே வாசிங்டன் மீதான விசுவாசம் நமது ஆட்சியாளர்களுக்கு வசீகரமாகியுள்ளது! எaனவே இந்திய - அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய மக்களுக்கும் - உலக மக்களுக்கும் எதிரானது என்பதை பறைசாற்றுவதோடு, இதற்கு எதிராக மக்களை எழுச்சியூட்டுவதும், அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு எதிராக செப்டம்பர் 4 முதல் 8 வரை நடைபெறும் பிரச்சார இயக்கத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதே நமது கடமையாகும்!
இது தொடர்பான முந்தைய கட்டுரைகள்

August 21, 2007

123 உடன்பாடும் அமெரிக்க நீலிக் கண்ணீரும்!


இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு நாடு முழுவதும் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அடுத்து என்ன நடைபெறப் போகிறது என்று நம்மை உற்று நோக்கியுள்ளன. அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம். குறிப்பாக இடதுசாரிகள் முன்வைத்துள்ள - எழுப்பியுள்ள கேள்விகளுக்கு - சந்தேகங்களுக்கு அரசு என்ன தீர்வு காணப்போகிறது?

தற்போது ஏற்பட்டுள்ள இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு யாருடைய நலனை முன்னிறுத்தியுள்ளது? எதிர்காலத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது? இதுவரை நாம் கடைப்பிடித்து வந்த அணி சேரா கொள்கை முதல் சுயேச்சையான வெளியுறவு கொள்கை வரை அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளது!

2005 ஆகஸ்டில் புஷ் - மன்மோகன் கூட்டறிக்கை வெளியிட்ட போதே இடதுசாரிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். இது நம்முடைய சுயேச்சையான அணு சக்தி மற்றும் இராணுவம் சார்ந்த நலனை பாதிக்கும் என்று அறுதியிட்டு கூறி வந்தன.

இந்த 123 உடன்பாட்டின் மூலம் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது? அமெரிக்காவுக்கு என்ன கிடைக்கப் போகிறது? இத்தகைய உடன்பாட்டை மேற்கொள்வதன் மூலம் ஏகாதிபத்திய சிலந்தி வலையில் நம்மை எவ்வாறு சிக்க வைக்க அமெரிக்கா முனைகிறது என்பதே பிரதானமானது.

இந்தியாவின் மின் சக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கு அணு மின் நிலையங்களாலேயே முடியும் என நமது ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே அத்தகைய மின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும் - அணு உலைகளை இயக்குவதற்கும் தேவைப்படும் யுரேனியம் மற்றும் அணு தொழில்நுட்பத்தை இதுபோன்ற ஒப்பந்தத்தின் மூலம் பெற முடியும் என்று கருதுகின்றனர். மேலும் அணு தொழில்நுட்பத்திலும் - அணு குண்டு சோதனையிலும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ள இந்தியாவை உலக நாடுகள் அணு சக்தியுள்ள நாடாக அங்கீகரிக்கவில்லை. எனவே அத்தகைய தனிமைப்படுதலிலிருந்தும் இது உதவும் என்று நமது ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

அதே சமயம் தற்போது இந்தியாவின் மின் சக்தியை பூர்த்தி செய்வதில் அணு மின்சாரத்தின் பங்கு என்பது வெறும் 3 சதம் மட்டுமே. 2020க்குள் இதனை 7 சதமாக உயர்த்த வேண்டும் என்பதே நமது ஆட்சியாளர்களின் கனவாக உள்ளது. இந்த குறைந்தபட்ச மின் தேவையை - அணுவை பயன்படுத்துவதற்காக சர்வதேச அளவில் நாம் எத்தகைய விலையை கொடுக்க வேண்டும் என்பதே தற்போது முன்னெழுந்துள்ள கேள்வி?

இது ஒரு புறம் இருக்க அமெரிக்காவோ இந்தியா பொக்ரானில் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அணு வெடிப்பு சோதனை செய்வதற்காக பல்வேறு விதமான தடைகளை விதித்தது. மேலும் இந்தியா இதுவரை நம்முடைய சுயேச்சையான அணு சக்தி நலனை காப்பதற்காக அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் நமது சுயேச்சையான பாதையில் நடைபோட்டு வருகிறோம். அமெரிக்கா நீண்ட காலமாக NPT-யில் யையெழுத்திட நீண்ட காலமாக நம்மை நிர்ப்பந்தித்து வருகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத எந்த நாட்டுடனும் அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தை செய்து கொள்வதில்லை நிலையை தற்போது இந்தியா விசயத்தில் தளர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் புதிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளதோடு - அமெரிக்காவே அந்த என்.பி.டி.க்கு சவக்குழி தோண்டி புதைத்து விட்டது என்று விமர்சிக்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு இந்தியா மீது ஏன் இந்த திடீர் கரிசனம் என்ற கேள்வியைத்தான் நாம் முதலில் எழுப்ப வேண்டியுள்ளது? மாறியுள்ள உலகச் சுழ்நிலையில் - ஆசியாவில் ஒரு வலுவான கூட்டாளி தேவை என அமெரிக்கா கருதுகிறது. அதன் அடிப்படையிலேயே அது இந்தியாவோடு தற்போது கூடி கொஞ்சுகிறது. தற்போது பொருளாதார ரீதியாகவும் - தொழில்நுட்ப - இராணுவ ரீதியாகவும் ஒரு பலமான நாடாக உருவெடுத்து வரும் சீனாவை எதிர் கொள்வதற்கு யுத்த தந்திர ரீதியாக இந்தியாவை பயன்படுத்துவதே அதன் நோக்கமாக மிஞ்சுகிறது. மேலும் தற்போது மத்திய ஆசியாவில் ஏற்பட்டு வரும் அரசியல் - பொருளாதார மாற்றம் குறிப்பாக ஈராக் ஆக்கிரமிப்பு. ஈரானை மிரட்டிக் கொண்டிருப்பது. ஆப்கானிஸ்தான் கைவசம் என தனது ஏகாதிபத்திய ஆக்டோபஸ் கரத்தை விரிவுபடுத்திடும் திட்டத்தில் இந்தியாவை பயன்படுத்துவது என்பதும் அதன் நோக்கமாக இருக்கிறது.

இந்த பின்னணியில்தான் இந்தியாவை தனது நம்பகமான கூட்டாளியாக அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அடிப்படையிலேயே அணு சக்தி உடன்பாட்டை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

இது தவிர இத்தகைய உடன்பாடு அமலுக்கு வரும் பட்சத்தில் இராணுவ ரீதியான வர்த்தகத்தில் இந்தியாவை ஈடுபடுத்துவதன் மூலம் 100 பில்லியன் டாலர் வரை அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான வாய்பும் கிடைக்கும். இதைத் தொடர்ந்து ஆயுத வியாபாரத்தில் நாம் இதுவரை கடைப்பிடித்து வந்துள்ள நிலையில் தலை கீழ் மாற்றம் ஏற்படும். இவ்வாறான ஆயுத போட்டியை ஏற்படுத்துவன் மூலம் ஆசியாவில் தங்களது ஆயுத வியாபாரத்தை வலுவாக நிலைநாட்ட உதவும் என கருதுகிறது.

இத்தகைய உள்ளார்ந்த நலன்கள் அமெரிக்காவிடும் இருக்கும் நிலையில் 123 அணு சக்தி உடன்பாட்டின் முலம் அது லகானை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டே இந்தியாவை இந்த உடன்பாட்டில் சிக்க வைத்துள்ளது.

இந்த 123 என்பது அமெரிக்க அணு சக்தி சட்டம் 123 பிரிவின் கீழ் வருவதால். அந்த பிரிவின் அடிப்படையில் - இந்தியாவை கட்டுப்படுத்த முடியும். அதாவது எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இந்த உடன்பாட்டையே முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆபத்தும் உள்ளது. அப்புறம் என்ன வழக்கமான சண்டித்தனம்தான்.

இந்த 123 தவிர இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டிற்காக ஹைட் ஆக்ட் (Hendry Hyde Act) ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த ஹைடு சட்டத்தின் மூலம் இந்தியாவை அனைத்து விதத்திலும் கட்டுப்படுத்த முடியும்.
குறிப்பாக எதிர் காலத்தில் இந்தியா அணு வெடிப்பு சோதனை எதிலும் ஈடுபடக் கூடாது என்பதும்.

அமெரிக்கா மற்ற நாடுகள் மீது புரியும் சண்டித்தனத்திற்கு துணை போக வேண்டும் என்பதும்.

குறிப்பாக ஈரான் விசயத்தில் அமெரிக்க நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும். தற்போது ஈரானோடு செய்து கெண்டுள்ள ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய் வழி எரிவாயு திட்டத்தை தூக்கி எறிய வேண்டும் என்பது உட்பட நிர்ப்பந்திக்கபடுகிறது.

மேலும் நமது சுயேச்சையான வெளியுற கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டு. அமெரிக்கா சொல்படி கேட்கும் சட்டாம் பிள்ளைத் தனத்திற்கு உட்பட வேண்டும் என ஹைடு சட்டம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு ஹைடு சட்டம் என்பது பல்வேறு அமெரிக்க நலன் சார்ந்த மறைமுக அஜண்டாகை கொண்டுள்ளது. எனவேதான் இந்த ஹைடு சட்டத்தை விரிவாக பரிசீலிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இதர இடதுசாரிகள் வலுவாக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.

இதற்கெல்லாம் மேலாக இது ஒரு அணு சக்தி ஒப்பந்தம் மட்டும் அல்ல. புவிசார் அரசியல். இராணுவம். யுத்த தந்திரம். பொருளாதாரம். வெளியுறவு கொள்கை என அனைத்து அம்சங்களையும் கொண்டது. மொத்தத்தில் இந்திய இறையாண்மையையே கேள்விக்கு உள்ளாக்கும் படு பயங்கரமான அதாள பாதாள உடன்பாடு இந்த 123. எனவேதான் இடதுசாரிகள் இதனை ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பான இதர நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாது என வலியுறுத்துகின்றனர்.

அதாவது இந்த 123 உடன்பாடு அமெரிக்காவோடு செய்து கொண்டாலும் இதனை முழுமையாக்க வேண்டும் என்றால் சர்வதேச அணு சக்தி கழகம் மற்றும் அணு சக்தி வழங்கும் குழுமத்துடன் ஒரு உடன்பாட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் பட்சத்தில் IAEA-ஐ.ஏ.இ.ஏ. நமது அணு உலைகளை அவர்களது கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டி வரும். மேலும் அணு சக்தியை கையாளுவது என்ற நமது சுதந்திர தன்மையை முற்றிலுமாக நாம் இழக்க வேண்டி வரும். எனவேதான் இந்திய அரசு இந்து உடன்பாடு குறித்து மேற்கண்ட நிறுவனங்களோடு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தக் கூடாது என உறுதியாக எதிர்த்து வருகிறது.

இந்தியாவின் சுயாதிபத்தியம் மற்றும் இறையாண்மை குறித்த அடிப்படை அம்சமாக இருப்பதால் இந்த விசயத்தில் சமரசம் என்பதை ஏற்க முடியாது. இதனை இடதுசாரிகள் தெளிவாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இந்திய பாராளுமன்றத்தில் விரிவான விவாதத்தையும் முழுமையாக நடத்த வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்துகின்றனர். பா.ஜ.க.வுக்கு இந்த விசயத்தில் அரசு எப்போது கவிழும் திண்ணை எப்போது காலியாகும் என்ற ஆர்வத்தை தவிர இந்திய இறையாண்மை குறித்த நலன்கள் எல்லாம் ஏதும் இல்லை. அதனால்தான் அவர்கள் பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை கோருகின்றனர். இந்த விசயத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அரசின் நிலையை இந்த இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டை ஏற்கவில்லை என்பது வெளிப்படையாக இருக்கும் போது ஓட்டெடுப்பு என்ற கேள்வியே எழவில்லை. அதனால்தான் இந்திய அரசு தார்மீக ரீதியாக பெரும்பான்மையான உறுப்பினர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த உடன்பாட்டை முழுமையான சந்தேகங்கள் தீரும் வரை அமலாக்க கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.

மேலும் தற்போதைய இந்திய அரசின் நிலைக்கு வழியமைத்து கொடுத்தவர்கள் இந்துத்துவ பா.ஜ.க.வினர் என்பதையும் நாம் மறக்க கூடாது.

இது தவிர சர்வதேச அளவில் ஈரான் NPT-என்.பி.டி.யில் கையெழுத்திட்ட நாடு. அந்த நாடே தன்னுடைய வளர்ச்சி பணிக்காக சிவில் அணு சக்தியை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா எத்தகைய முட்டுக் கட்டைகளை போட்டு வருகிறது என்பதை வெளிப்படையானது. அவர்களின் நிலைபாட்டுக்கு ஆதரவாக இந்தியாவை இரண்டு முறை ஐ.ஏ.இ.ஏ.வில் வாக்களிக்க வைத்தார்கள். இது இந்தியாவுக்கு வைக்கப்பட்ட ஆசிட் டெஸ்ட் என்று வேறு கூசாமல் கூறியது அமெரிக்கா. இதன் மூலம் அமெரிக்காவின் ஒரு கண்ணில் வெண்ணை - ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற இரட்டை கொள்கை அதன் வளர்ச்சிக்கும் - அதன் நலன் காப்பதற்குமே உதவிடும்! இதனை மன்மோகன் போன்ற அமெரிக்க ஆதரவாளர்களால் உணர முடியாது!

August 14, 2007

என் நினைவில் நின்ற சுதந்திர தினங்கள்!

60வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் இவ்வேளையில் என்னுடைய சிறு வயது முதல் நினைவில் நின்ற ஒரு சில சுதந்திர தின நினைவுகளையே இங்கே பதிவிட்டுள்ளேன். இது ஒரு சுயபுராணமே!
அநேகமாக எனக்கு 6 அல்லது 7 வயதிருக்கும். என்னுடைய அப்பா (கே. கண்ணன்) எங்கள் வீட்டின் வாசலில் கொடி கம்பத்தை நாட்டி, சுதந்திர தின கொடியேற்றுவார். அவர் ஆரம்பகால காங்கிர° இயக்க ஆதரவாளர் என்றாலும், காங்கிர° கட்சியின் சார்பில் நடைபெறும் இத்தகைய விழாவில் கலந்து கொண்டது இல்லை. ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டு வாசலிலேயே கொடியேற்றுவார். அந்த சுதந்திர தின கொடிக்கம்பம் நான்கு ஐந்து ஆண்டுகள் எங்கள் வீட்டு வாசலிலேயே இருந்தது. இதுதான் என்னுடைய அரசியல் ஈடுபாட்டின் துவக்கம். எனக்கு அப்போது எந்த கட்சியும் தெரியாது. காங்கிர° என்ற பெயரும் - சுதந்திர கொடி மட்டுமே தெரியும். இத்தகைய சுதந்திர நாளில் காலையில் எழுந்து குளித்து விட்டு, கொடியேற்றி, மிட்டாய் கொடுப்பதில் அலாதி பிரியம் இருக்கும். அப்போது கலர் கலரான கொஞ்சம் பெரிய சைசான ஆரஞ்ச் மிட்டாய்தான் பேம°. அதைதான் நாங்களும் கொடுப்போம்.
அதற்கடுத்த ஆண்டுகளில் எதிர் வீட்டில் இருக்கும் தற்போதைய சக தோழர் குப்பனுடன் இணைந்து கொடி ஒட்டுவது, தோரணம் கட்டுவது, °டார் செய்வது என என்னுடைய வேலைகள் தொடர்ந்தது.
அடுத்து, நாள் படித்த பள்ளியில் தூய சின்னப்பர் மகாஜன மேல்நிலை பள்ளி (அப்போது 8ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது) அநேகமாக நான் 5வது படிக்கும் போது என நினைவு. காலையில் அனைத்து மாணவர்களையும் ஒரே இடத்தில் குழுமச் செய்து, லெப்ட் - ரைட் - அட்டேன்சன் எல்லாம் போடச் சொல்லி பிறகு வெட்ட வெளியில் - நல்ல வெயிலில் உட்காரச் செய்து பாடல், நாடகம், கொடியேற்று நிகழ்ச்சி, உரை நிகழ்த்துவது என நடக்கும். அந்த நேரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய நாடகம் என்னை மிகவும் கவர்ந்தது. இதுபோன்ற வாய்ப்பு நமக்கும் தரமாட்டாங்களா என்ற நினைப்பும் இருந்தது. அது தவிர அங்கே மேடையில் பேசுபவர்களைப் பார்த்து இதுபோல் நாமும் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டது உண்டு. இப்போ என்னாங்கீறிங்களா.... அரசியல் பேச்சாளர்தான்...
அதேபோல் எங்கள் வீட்டருகே ஒரு இலவச டியூசன் சென்டர் இருந்தது. இந்த டியூசன் சென்டரிலும் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவாங்க... அப்ப நானும் நாடகத்தில் ஏதோ ஒரு பாத்திரத்தில் நடித்தேன். அது தவிர யோகாவும் மேடையில் குரூபாக்க செய்து காண்பித்ததாக ஞாபகம் இருக்கிறது. அந்த டியூசன் சென்டர் மறக்க முடியாதது. என்னுடைய அப்பா இறந்த செய்தியை கூட அந்த டியூசன் சென்டரில் இருந்தபோதுதான் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது எனக்கு வயது 11. (அது ஒரு ஆக்சிடெண்ட்) சுதந்திர தினத்திற்கு இரண்டு நாளைக்கு முன், அதாவது ஆக°ட் 13, 1981.
அதற்கு பிறகு வந்த சுதந்தர தின பங்கெடுப்புகள் எதுவும் நினைவில் நிற்பதாக இல்லை. பின்னர் நான் +2 முடித்த பிறகு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்தேன். எனக்கு அப்போது வயது 17. அதற்கு பிறகு வாலிபர் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தேன்.
அப்போது 1989ஆம் ஆண்டு சுதந்திர தின நாளில் இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அது எழும்பூரில் உள்ள பெண்கள் மேல் நிலைப் பள்ளி - நல்ல கொட்டும் மழையில் நானும், சகதோழர் கே. ராமமூர்த்தி, எம். முகமது அலி ஆகியோர் இரத்ததானம் செய்ய வந்தோம். கிட்டத்தட்ட 2000த்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்டனர். இரத்ததானம் செய்வதற்கு கொட்டும் மழையிலும் கூட்டம் முந்தியடித்துக் கொண்டு - போட்டிப் போட்டுக் கொண்டு ஒரு விதமான அர்ப்பணிப்பு உணர்வுடன் வந்திருந்தனர். இதில் பல பேர் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நானும் - ராமமூர்த்தியும் இரத்ததானம் செய்தோம். ரத்ததானம் செய்து விட்டு எழுந்து நிற்கும் போது சற்று மயக்கம் வந்தாற்போல் இருந்தது. அப்புறம் சரியாகி விட்டது. ரத்ததானம் செய்து விட்டு, அதை வீட்டுக்கு சொல்ல மாட்டோம். திட்டுவார்கள் என்ற பயம். அதுவும் எங்க அம்மா ரத்ததானம் செய்து விட்டு வந்திருக்கேன் என்றால் அழவே செய்து விடுவார்கள். ‘ஏன்டா நான் ஊட்டி ஊட்டி வளக்கிறேன்... நீ போய் இரத்தத்த கொடுத்துட்டு வந்துட்டீய...” என்று பாசத்தோடு திட்டுவார்கள் என்ற பயம். அதனால ரத்ததானம் செய்த அடையாளத்தை மறைப்பதற்காக கையில் ஒட்டியிருந்த பாண்டேசை பாதி வழியிலேயே கழட்டி எறிந்து விட்டோம். அப்புறம் பல பேருக்கு ரத்தம் கொடுத்துருக்கிறோம்.
அதற்கு அடுத்த வருடத்தில் எங்கள் பகுதி, திருவொற்றியூரிலேயே ரத்ததானத்திற்கு முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த முகாமிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது சகதோழர் எம். முகமது அலியின் தங்கை மைதீன் ரத்ததானம் செய்தது எங்களுக்கு வித்தியாசமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. அதுவும் ஒரு இசுலாமிய பெண் என்ற உணர்வு வேறு. அந்த முகாமில் இரத்ததானம் குறித்த நாடகம் ஒன்று விடியல் கலைக்குழு சார்பில் நடத்தப்பட்டது. அதை பார்க்கும் யாராக இருந்தாலும் இரத்ததானம் செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும்.
அதற்கு அடுத்த சுதந்திர தினம் ஒன்றில் (வருடம் சரியாகத் தெரியவில்லை) வாலிபர் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விளையாட்டு போட்டி நடத்தினோம். இதில் திருவொற்றியூர் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வாலிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது சக தோழர் அருண், இவர் கராத்தே பிளாக் பெல்ட் மற்றும் ஓட்டப் பந்தய வீரர். இருப்பினும் என்ன, நடைபெற்ற போட்டியில் நானும் கலந்து கொண்டு ஓடினேன் நான்காவது இடம் கிடைத்தது. அதை எல்லோரும் பாராட்டினர். வீரர்களுக்கு நடுவே நீ நல்லாதான் ஓடினேன் என்று... அன்று நடைபெற்ற அத்தனை நிகழ்ச்சிகளும் மிகவும் பசுமையானது.
அதற்கு பிறகு அறிவொளி இயக்கத்தில் பணியாற்றியபோது பள்ளி மாணவர்களை வைத்து சுதந்திர தின விழாக்களை கொண்டாடியதும் பசுமையான நினைவுகளாய் நினைவில் நிற்கிறது.
தற்போது நான் சி.பி.ஐ.எம். முழுநேர ஊழியராக பணியாற்றும் அலுவலகத்தில் வருடந்தோறும் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டாங்களில் கலந்து கொள்வது தொடர்ந்த நடைபெறுகிறது. இதில் பாரதியார் பாடல் முதல் சுதந்திர பாடல்கள் வரை கர்நாடிக் பின்னணி இசையோடு பாடும் பீட் கலைஞர்களின் குரல் என்னை கவர்ந்துள்ளது. அத்தோடு சுதந்திரப் போராட்ட வீரர் என். சங்கரய்யா போன்றவர்களோடு கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவைகள் இனிமையான நிகழ்சிகள். நாளைக்கும் தோழர் என். சங்கரய்யாதான் எங்கள் அலுவலகத்தில் கொடியேற்றுகிறார். முடிந்தால் அவருடந் ஒரு புகைப்படம் எடுத்து அதை நமது பதிவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

சாரி இறுதியாக இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
50வது சுதந்திர தினத்தை சிறப்பாக நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி தருணத்தில், நாங்களும் குறைந்தது 30 பேருக்கும் எங்கள் பகுதியில் சரியாக இரவு 12 மணியளவில் சுதந்திர தின தியாகிகளை நினைவு கூர்ந்து கோஷம் போட்டு சென்றது. அதில் சங்கர் தி.மு.க.வில் எங்களில் பகுதியில் இருந்த என்கின்ற இளைஞரும் உற்சாகமாக கோஷம் போட்டு வந்தார். அப்போதைய சேர்மன் விசுவநாதன் வீட்டருகே நின்று மிக சத்தமாக கோஷம் போட்டு விட்டு வந்தோம். சில நேரங்களில் இதுபோன்ற விஷயங்கள் அந்த நேரத்தில் பெரும் உணர்ச்சிகளை ஏற்படுத்தியது உண்டு.


உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளலாமே....

சுதந்திர எண்ணங்களும் தென்காசி படுகொலைகளும்!

நெல்லை மாவட்டம். தென்காசியில் பட்டப்பகலில் காலை 10.00 மணியளவில் ஆறு பேர் ஓட. ஓட வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தை மட்டுமல்ல. தமிழகத்தையே உலுக்குகிறது.


மத மோதல்களே இந்த சம்பவத்தின் பின்னணியாக செயல்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரை படுகொலை செய்தவர்கள் இவரது நன்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படுகொலையை தொடர்பாக ஹனிபா மற்றும் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் அப்துல்லா இந்து மதத்திலிருந்து முஸ்லீமாக மதம் மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து தென்காசி நகர த.மு.மு.க. தலைவர் மைதீன் சேட்கானை அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்றனர். இதில் வெட்டுக்காயங்களுடன் அவர் தப்பித்து விட்டார்.


இந்நிலையில் இந்த தரப்பினருக்கும் இடையில் இன்று பட்டப்பகலில் நடைபெற்ற மோதலில் இருவரும் அரிவாள் மற்றும் வெடிகுண்டுகளுடன் மோதிக் கொண்டனர். இதில் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் இரு தரப்பிலும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அது மத மோதலாக உருவெடுக்குமா என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது.


தேசத்தின் 60வது சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் இருக்கும் நிலையில் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரது உள்ளத்தையும் உலுக்கியெடுக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் 150வது ஆண்டு விழாவையும் சேர்த்து கொண்டாடி வரும் இவ்வேளையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தி நாட்டின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான இந்துக்களும் - இஸ்லாமிய சகோதரர்களும் செய்த மகத்தான தியாகங்களை நினைவு கூறும் மகத்தான நிலையில் நெல்லை சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.


இச்சம்பவத்தின் தாக்கம் மேலும் பரவாமல் இருக்க அரசு உரிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தென்காசி நகர மக்களின் இயல்பான வாழ்க்கை திரும்புவதற்கு ஏற்ப அனைத்துக் கட்சி மற்றும் அனைத்த மதத் தலைவர்களைக் கொண்ட ஒற்றுமை ஊர்வலங்கள் உட்பட அனைத்துவிதமான நல்லிணக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.


மத மோதலை தூண்டும் விதத்தில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கையினை அரசு எடுத்திட வேண்டும். சுதந்திரப் போரின் தியாகங்களை உரிய முறையில் இளைஞர்களுக்கும் - குழந்தைகளுக்கும் கொண்டுச் செல்ல வேண்டும். மத அடிப்படைவாத அமைப்புகளின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு இறையாகாமல் தடுத்திட மதச்சார்பற்ற - ஜனநாயக சக்திகள் விழிப்புடன் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


மேலும் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் தலை தூக்கியுள்ள சமூக விரோத செயல்களுக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தமிழக மக்களை அச்சத்தின் படியில் தள்ளியுள்தை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் இதுவே தமிழகத்தின் இன்றைய முதன்மையான தேவையாகிறது.



இது தொடர்பான இதர பின்னணி செய்திகளுக்கு:






August 10, 2007

தஸ்லீமாவை தாக்கிய இசுலாமிய காட்டுமிராண்டி கூட்டம்!


வங்கதேச புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் வங்க மொழியில் எழுதிய ஷூத் என்ற நாவல் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு செல்லுக்கு செல்லு என்ற பெயரில் நேற்றைய தினம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர் மையத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஸ்லீமா நஸ்ரினும் கலந்து கொண்டார்.


இந்நிலையில் மஜிலீஸ் இத்திஹதுல் முஸ்லீமன் என்ற இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அப்சல்கான். அஹமத் பாசா. மோசம் கான் புத்தக வெளியீட்டு அரங்கத்திற்குள் நுழைந்து மிக மோசமான. தகாத வார்த்தைகளால் தஸ்லீமா நஸ்ரினை திட்டியதோடு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அரங்கத்தில் இருந்த பத்திரிகையாளர்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தலையிடாமல் இருந்திருந்தால் அவர்கள் கொலையும் செய்தீருப்பார்கள் போலும். அந்த அளவிற்கு கொலை வெறித்தனத்தோடு அதுவும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் குண்டர் படையாக மாறி கையில் கிடைத்த பூத்தொட்டிகள். புத்தகம். சேர் என அனைத்தையும் தூக்கி வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் தஸ்லீமா நஸ்ரின் படுகாயம் அடைந்துள்ளார். அத்துடன் நிகழ்ச்ி ஏற்பாடு செய்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தஸ்லீமாவின் புத்தகம் இசுலாமுக்கு எதிரானது என்ற பெயரில் புனித தாக்குதல் நடத்தியுள்ள இந்த பாசிச குண்டர்களின் செயல் காட்டு மிராண்டித்தனமானது. அதுவும் ஒரு பெண்ணைப் போய் தாக்குவதற்கு துணிந்த இந்த பேடிகளை - கேடிகளை கழுவில் ஏற்ற வேண்டும்.


பாசிசம் இந்து மதத்தின் வடிவில் மட்டுமல்ல அது இசுலாமிய மதத்தின் அடிப்படையிலும் வரலாம். மொத்தத்தில் எந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் அது மனித குலத்திற்கே விரோதமானது. இந்த விசயத்தில் சிறுபான்மை - பெரும்பான்மை என்று பார்க்க கூடாது.


தஸ்லீமா மீது தாக்குதல் தொடுத்த இந்த காட்டு மிராண்டிகளின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக சட்டரீதியான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறிக்க வேண்டும்.


ஜனநாயக இந்தியாவில் ஒரு கருத்துக்கு எதிராக மாற்றுக் கருத்தை முன் வைத்தால் அதை கருத்து ரீதியாக எதிர் கொள்ள திராணியற்ற பாசிஸ்ட்டுகள் வன்முறையை கையிலெடுப்பது - கொலை வெறியோடு பாய்வது போன்ற நடவடிக்கைகள் அவர்களது இரத்தத்தில் ஊறியது.

இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற இந்த காட்டு மிராண்டிகள் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம் - வெளிப்பாட்டு உரிமைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இத்தகைய காட்டு மிராண்ட எம்.எல்.ஏ.க்களை இந்திய அரசியல் சாசனத்தை மீறய குற்றத்திற்காகவும் - பொது இடத்தில் கொலை வெறித் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காகவும் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். பல விசயங்களில் மூக்கை நுழைக்கும் நீதித்துறை இந்த விசயத்தில் வேடிக்கை பார்க்காமல் களத்தில் இறங்குமா?


இப்படித்தான் குஜராத்தில் சந்திர மோகன் என்ற மாணவனின் ஓவிய சுதந்திரத்திற்கு எதிராக சங்பரிவார பாசிஸ்ட்டுகள் தாக்குதலை தொடுத்தனர்.
பாசிச சிந்தனை வளர்ச்சிக்கு எதிரான என்பது மட்டும் அல்ல ஜனநாயகத்திற்கும் - மனித நேயத்திற்கும் கூட எதிரான. இத்தகைய பாசிஸ்ட்டுகளை கலைஞர்கள் - ஜனநாயக எண்ணம் கொண்டோர் மற்றும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றினைந்து வலுவாக எதிர்க வேண்டும்.

பாசிச தாக்குதலின் இன்னொரு முகம்

கலாச்சார பாசிசத்தின் நிர்வாண சிந்தனை!

August 08, 2007

ரயில் பயணிகள் கைதும்! இராமதாசின் மவுனமும்!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் 2011 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்திடவும், 2016இல் பா.ம.க. தலைமையிலான ஆட்சியமைத்திடவும் சபதமேற்றுள்ளார். அவரது விருப்பத்திற்கு யாரும் குறுக்கே நிற்க முடியாது.
இதற்காக பல்வேறு சாகசங்களை டாக்டர் ராமதாஸ் சமீப காலத்தில் புரிந்து வருகிறார். மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்ட கட்சியாக பா.ம.க.வை முன்னிறுத்த படாதபாடுபடுகிறார். தாமிரபரணி தண்ணீர் பிரச்சனை, டைடானியம் தொழிற்சாலை, சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கல்வி கட்டணம், மது ஒழிப்பு என பல முனைகளில் அதிரடி அரசியலை நடத்தி வருகிறார். மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக நாள்தோறும் ஏதாவது ஒரு ஆர்ப்பாட்டத்திலும் முகம் கொடுத்து வருகிறார்.
இருப்பினும் இராமதாசின் கண்ணுக்கு புலப்படாத பிரச்சனையாக இருப்பது இரயில் பயணிகள் பிரச்சனை மட்டுமே! அவரது கட்சியை சார்ந்த இரா. வேலு இணையமைச்சராக உள்ள இரயில்வே துறையில் கடந்த ஒரு மாதமாக பல லட்சம் பயணிகள் அவதிப்பட்டு, வேறு வழியில்லாமல் சென்னை புறநகரில் நாள்தோறும் ஏதாவது ஒரு வழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் ஆண்கள் - பெண்கள் - அலுவலகத்திற்கு சொல்வோர் - மாணவர்கள் - கூலித் தொழிலாளிகள் - கூடை வியாபாரிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
15 லட்சத்திற்கு அதிகமான பயணிகள் சென்னை மற்றும் புறநகர் இரயில்களில் நாள்தோறும் பயணிக்கின்றனர். இரயில்களை இயக்குவதில் ஏற்பட்டுள்ள நிர்வாக கோளாறு மற்றும் போதுமான இரயில்கள் இயக்கப்படாதது போன்ற பிரச்சனைகளே அடிப்படையானது. இதனை இரயில்வே நிர்வாகமும் - இரயில்வே அமைச்சரும் உணராமல் இருப்பார்களா? சாதாரண பயணிகளுக்கே தெரியும் இப்பிரச்சனைக்கு இதுவரை எந்தவிதமான தீர்வும் ஏன் காணப்படவில்லை?
மாறாக, இரயில்வே அமைச்சர் பயணிகளை ‘போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தனது அதிகார வர்க்க திமிர்த்தனத்தோடு மிரட்டியதோடு நிற்காமல், 30க்கும் மேற்பட்ட பயணிகளை கைது செய்து தனது அதிகாரத்தையும் வெளிக்காட்டியுள்ளார். இதில் 7 பெண்களும் அடங்குவர்.
இவர்கள் எல்லாம், ‘வேறு வேலையே இல்லாமல் இரயில் மறியல் செய்ய வந்தவர்களா?’ வேலைக்கு செல்வதற்காக வந்தவர்களை, உரிய நேரத்தில் இரயில்கள் இயக்கப்படாததால் பாதிப்புக்கு உள்ளானவர்கள். சம்பந்தப்பட்ட இரயில் நிலைய அதிகாரிகளின் அலட்சியத்தால் அவதியுற்றவர்கள். வேறு வழியே தெரியாத காரணத்தால் ஜனநாயக முறையில் எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதற்காக அவர்களை உள்ளே தள்ளிய இரயில்வே காவல்துறையின் செயல் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதோடு, அவர்களது கையாலாகத தனத்தையே இது வெளிப்படுத்துகிறது.பல்லாயிரக்கணக்கான பயணிகளிடம் தங்களது வித்தையை காட்டாத இந்த வீணர்கள். வெறும் 30 பயணிகளிடம் காட்டியிருப்பது வேடிக்கையாக உள்ளது.
இரயில்வே காவல்துறை பல்லவரத்தில் மறியல் செய்து கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்பதோடு, இரயில் பிரச்சனைக்கு விரைந்து உரிய தீர்வினை காண பயணிகள் அமைப்புகளோடு விவாதம் நடத்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
2011 இல் ஆட்சி கனவில் உள்ள டாக்டர் இராமதாஸ் இரயிலில் பயணம் செய்யும் 15 லட்சம் குடும்பங்களை இதன் மூலம் பகைத்துக் கொண்டுள்ளார். ஓடி, ஓடி மற்ற விஷயங்களை நேரடியாக பாவையிடும் டாக்டர் ஐயா இந்த விஷயத்தில் தலையை பூமிக்குள் விட்டுக் கொண்டு இருப்பது ஏனோ?
டாக்டர் இராமதாசின் அரசியல் எல்லாம் மாநில அரசுக்கு எதிராகத்தானே ஒழிய மத்திய அரசுக்கு எதிராக எப்போதும் நடத்தியதே இல்லை. அட வேற என்னங்க... ரிலையன்ஸ் விஷயத்தில் ஆர்ப்பாட்டம் - கண்டனங்களை எழுப்பிய இராமதாஸ் அதனை அமலாக்கிய மத்திய அரசுக்கு எதிராக ஏதாவது போராட்டம் நடத்தினாரா? அங்கே போய் கையெழுத்து போட்டு விட்டு கமுக்கமாக உட்கார்ந்திருக்கும் பா.ம.க. இங்கே வந்து சவுண்டு விடுவது மக்களை உச்... உச்... உச்சென்று உச்... கொட்ட வைப்பதற்காக!
இப்போதும் அப்படித்தான் மத்திய இரயில்வே நிர்வாகத்துக்கு எதிராக ஏதாவது கண்டனத்தை இவர் எழுப்பியிருப்பாரா!ஒருவேளை 2011 நெருங்கும் போது இதை செய்வார் என எதிர்பார்க்கலாம்!

August 02, 2007

பா.ம.க. மந்திரியின் அதிகார வர்க்க குரல்!

சென்னை புறநகர் இரயில் போக்குவரத்தில் தென்னக இரயில்வே நிர்வாகம் செய்த குளறுபடியால் திருவள்ளுர் - சென்னை. கும்மிடிப்பூண்டி - சென்னை இரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கும். அவதிக்கும் உள்ளாகியுள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாகவே இரயில்கள் சரியான நேரத்திற்கு புறப்படுவதும் இல்லை. வருவதும் இல்லை. மேலும் சிக்னல் என்ற பெயரில் பல மணி நேரம் இரயில்கள் நிறுத்தப்படுவதால் வேலைக்கு செல்லும் ஊழியர்களும். பள்ளி - கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


இரயில்வே நிர்வாகத்தின் இத்தகைய போக்கை கண்டித்து பயணிகள் தினந்தோறும் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தென்னக இரயில்வே நிர்வாகம் உரிய தீர்வினை மேற்கொள்ளாததால் இன்னும் பிரச்சினை நீடிக்கிறது.


இந்நிலையில் பா.ம.க.வைச் சேர்ந்த மத்திய இரயில்வே இணையமைச்சர் வேலு இன்றைய தினம் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணுவதற்கு மாறாக. பயணிகளை மிரட்டியுள்ளார். இனிமேல் பயணிகள் மறியல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் போல் உள்ளது. பா.ம.க. தன்னை ஒரு ஜனநயாக இயக்கம் என்று காண்பித்துக் கொண்டு போராடி வருகிற இந்நேரத்தில் அக்கட்சியை சார்ந்த இரயில்வே அமைச்சர் வேலுவின் பேச்சு அதிகாரவர்க்கத் தொனியில் ஒலிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. மாறாக அவர் மக்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண்பேன் என்று சொல்லியிருந்தால் மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஐ.ஏ.எஸ் போன்ற பதவியில் இருந்தவர்களை அரசியல்வாதிகளாக மாற்றினால் என்ன விளைவு உண்டாகும் என்பதற்கு வேலுவின் பேச்சே சாட்சி! மக்களின் உணர்வுக்கு துளிகூட மதிப்பளிக்காத இந்த அதிகார வர்க்க குரலுக்கு எதிராக வலுவாக கண்டனங்கள் எழவேண்டும்.


பா.ம.க. கடந்த காலத்தில் நடத்திய போராட்டங்களின் வரலாறு வேலுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதா? அல்லது தற்போது ரஜினிக்கு எதிராகவும் விஜயகாந்துக்கு எதிராகவும் நடத்திய போராட்டங்கள் என்ன ஜனநாயகத் தன்மை வாய்ந்ததா? அல்லது குஷ்புவுக்கு எதிராக நடத்திய அராஜக செயல்கள் எத்தனை? இதையெல்லாம் வேலு விமர்சிப்பாரா? மக்கள் போராட்டத்துக்காக வாழ்பவர்கள் அல்ல. வாழ்க்கையே போராட்டமாக மாறும் போது போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. இதையெல்லாம் ஐ.ஏ.எஸ். படிப்பில் வேலுவுக்கு யாரும் கற்றுத் தந்ததில்லை போலும்.


இராமதாஸ் இந்த இரயில் பயணிகள் பிரச்சினைக்கு என்ன சொல்லப் போகிறார்?