April 30, 2009

ஓட ஓட துரத்தும் வாக்குகளும்! கலர் மாறாத கருணாநிதியும்!


சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களிலும், துணைநகரங்களிலும் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பல்வேறு நிறங்களில் இயக்கப்பட்டு வருகிறது. வெள்ளை கலர் போர்டு, ம;"சள் கலர் போர்டு, பச்சை கலர் போர்டு, நீலக்கலர் போர்டு, எம்-சர்வீஸ், டீலக்ஸ், ஏ.சி. பேருந்து என்று விதவிதமான கலர்களில், விதவிதமான கட்டணங்களை மறைமுகமாக உயர்த்தி கொள்ளையோ கொள்ளை என்று நாள்தோறும் கொள்ளை அடித்து வந்தது திமுக அரசும்-போக்குவரத்து கழகங்களும். கடந்த ஒன்னறை ஆண்டுகளாக மக்கள் படும் அவதியை சொல்லி மாளாது. குறிப்பாக முதியவர்கள், படிப்பறிவற்றவர்கள், கிராமப்புறத்தினர், வறிய நிலையில் உள்ளவர்கள் இந்தப் பேருந்தில் ஏறிவிட்டால் பேந்தப் பேந்த முழிப்பதும், கண்டக்டரிடம் தகராறும்தான் வழக்கமான ஒன்றாகிப் போனது. கையில் காசில்லாதவர்கள் கால் நடையாக நடக்கவே பழக்கப்படுத்திக் கொண்டனர்.
மாநகர மக்களுக்கோ இந்தப் பேருந்துகளை விட்டால் வேறு வழியே இல்லை. இருக்கிற ஷேர் ஆட்டோக்களும் குறைந்த தூரத்திற்கு 7 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தி மக்களை ஆட்டோவுக்குள் திணித்துச் செல்லும் காட்சிகள் அடிமைகால சமூகத்தை நினைவூட்டுவதாகவே உள்ளது.

4000 மாதச் சம்பளம் பெறும் ஒருவர் பேருந்து கட்டணத்திற்கே மாதந்தோறும் 600 முதல் 900 ரூபாய் வரை செலவிடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மாநகரங்களில் தள்ளப்பட்டனர். இதனால் கடன் சுமையும், மனச்சுமையும் ஏறியதே தவிர மக்கள் வாழ்க்கை உயரவில்லை. ஒரு பக்கத்தில் ஒரு ரூபாய் அரிசி தனது ஆட்சியின் சாதனை என்று பறைசாற்றும் கருணாநிதி மறுபுறத்தில் பிக்பாக்கெட் கொள்ளையன் போல் மக்களிடம் 5 ரூபாய் கொள்ளையடிப்பது எந்த வகையில் நியாயம் என்று மக்கள் கேட்டுக் கொண்டேயிருந்தனர்.
மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. மே 13-ம் நாள் மக்கள் வாக்களிக்கத் தீர்மானித்து விட்டனர். தேர்தல் நாள் நெருங்க நெருங்க கருணாநிதிக்கு பிரஷர் கூடிக்கொண்டே செல்கிறது. முதலில் இலங்கைப் பிரச்சனையில் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல 4 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி மக்களிடம் அம்பலப்பட்டுப்போனார்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் அதிரடியாக மேற்கண்ட கலர் கலர் பேருந்துகளின் கட்டணங்களை எல்லாம் வெள்ளை போர்டு பேருந்து கட்டணத்திற்கு குறைத்துவிட்டார் ஒரே ஒரு ரகசிய உத்தரவின் பேரில். இது தொடர்பாக மக்களுக்கு எந்த அறிவிப்பும் கூட செய்யவில்லை. திருட்டுத்தனமாக இப்படி விலை குறைப்பதால் வாக்குகள் தனது பெட்டிக்குள் நிரம்பிவிடும் என்ற நப்பாசைதான் காரணம். காலையில் வேறு வழியில்லாதவர்கள் டீலக்ஸ் பேருந்தில் ஏறி போக வேண்டிய ஊருக்கு டிக்கெட் கேட்கும்போது, அவர் வழக்கமாக கொடுக்கும் 10 ரூபாய் டிக்கெட் கொடுக்காமல் 5 ரூபாய் டிக்கெட் கொடுக்க மக்களுக்கு சந்தேகம் எழுந்து விட்டது. "ஏம்பா நான் தி நகர் போறேன் அதுக்குப்போய் 5 ரூபாய் டிக்கெட் கொடுக்குறீயே" என்று கேட்க. அப்புறம் நடத்துனரும் நகைப்புடன் இப்ப எல்லாம் ஒரே கட்டணம்தான் என்று சொல்ல. மக்கள் ஆகா கருணாநிதியின் நாடகமே நாடகம்தான்! என்று புளகாங்கிதம் அடைந்தார்கள். ஆட்சியாளர்களை ஓட ஓட துரத்தும் வல்லமை படைத்தது ஓட்டு. இதனால் மனம் மாறினார் கருணாநிதி ஆனால் அவரது கலர்தான் மாறவில்லை!

நமது வாக்குகள் மாற்றத்திற்கான வாக்குகளாக அமையட்டும்! மத்தியில் மாற்றாட்சி அமைந்திட மூன்றாவது மாற்றை கொண்டுவர, வாக்குத் தவறிய ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட நமது வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும். காங்கிரஸ்-திமுக கூட்டணியையும், மதவாத பா.ஜ.க. கூட்டணியையும் புறமுதுகிட்டு ஓடவைப்போம்! தேசத்தை காக்கும் இடதுசாரிகளின் பங்கேற்போடு மத்தியில் நல்லாட்சி அமைந்திட வாக்களிப்பீர் தமிழகத்தில் அதிமுக அணிக்கு

April 29, 2009

ஒபாமாவுக்கு சாவேஸ் கொடுத்த புத்தகம்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷால் "டெவில்-பேய்" என்று அழைக்கப்பட்டவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ். அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா, மாற்றத்தின் குறியீடாக சித்தரிக்கப்பட்டவர்.
இந்நிலையில் அமெரிக்க நாடுகளின் மாநாடு ஏப்ரல் 17-18 தேதிகளில், டோபாகோ-டிரீனிடாட்டில் நடைபெற்றது. இதில் 34 நாடுகள் கலந்து கொண்டனர். குறிப்பாக இம்மாநாட்டில் கியூபா மீதான தடையை நீக்கக்கோரும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு "லத்தீன் அமெரிக்காவின் வெளிப்படையான வேதனைகள்" (Open Veins of Latin America) என்ற புத்தகத்தை வழங்கினார்.
இப்புத்தகத்தை எழுந்து நின்று, கைகுலுக்கி சாவேசிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஒபாமா, "நான் நினைக்கிறேன் இது சாவேசின் புத்தகங்களில் ஒன்று என" கூறியதோடு, "என்னுடைய புத்தகம் ஒன்றை உங்களுக்கு கொடுக்கிறேன்" என நகைச்சுவையோடு கூறினார்.

இந்தச் செய்தி பரவ ஆரம்பித்த சில மணிநேரங்களில் "லத்தீன் அமெரிக்காவின் வெளிப்படையான வெதனைகள்" என்ற புத்தகத்தின் விற்பனை கொடிகட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது. உருகுவே எழுத்தாளரான இடுரானோ காலியானோவால் ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட இப்புத்தகம் 1971-இல் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கிலப் பதிப்பு 1972-ல் வெளிவந்தது.
அமேசான் டாட்காம் நிறுவனத்தின் வியாபார பட்டியலில் 54,295 இடத்தில் இருந்த இப்புத்தகம் 24 மணி நேரத்தில் 6வது இடத்திற்கு வந்து விட்டது, தற்போது இது இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டது. ஒரே ஒரு வாரத்தில் இதன் விற்பனை உச்சத்திற்கு சென்று விட்டது. லட்சக்கணக்கான பிரதிகள் வெகு விரைவாக விற்றுத் தீர்ந்துவிட்டது.
லத்தீன் அமெரிக்காவின் வரலாற்றை சொல்லும் இப்புத்தகம், கடந்த 500 ஆண்டுகாலமாக அமெரிக்கர்களாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளாலும் எப்படி ஒட்டச் சுரண்டப்பட்டது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. லத்தீன் அமெரிக்காவிலிருந்து லோடு கணக்கில் தங்கமும், மலைபோல் வெள்ளியும், பெட்ரோலிய பொருட்களும், கோகோ, பருத்தி, ரப்பர், பழங்கள், அலுமினியம், நிக்கல், என்று அனைத்து கனிமவளங்களையும் எப்படி சுரண்டிச் சென்றனர் என்பதை விளக்குகிறது இப்புத்தகம். பல்வேறு கனிம வளங்களைக் கொண்ட லத்தீன் அமெரிக்காவில் மட்டும் 28 பேர் வசிக்கின்றனர். இவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையிலும், ஏழ்மையிலும் துன்பப்படுவதோடு, மோசமான ஸ்லம் பகுதி என்று சொல்லக்கூடிய வகையிலான வாழ்க்கையையே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய வறுமையை லத்தீன் அமெரிக்க பகுதிகளில் ஏற்படுத்தியது யார் என்ற கேள்விக்கு அமெரிக்காவும் - பிரிட்டனும் என்று இப்புத்தகம் எடுத்துரைக்கிறது.
இப்புத்தகம் குறித்து சாவேஸ் கூறும்போது, "லத்தீன் அமெரிக்காவின் வரலாற்றைச் சொல்லும் இப்புத்தகம், வரலாற்றை கற்றுக் கொள்வதற்கு உதவுவதோடு, வரலாற்றை உருவாக்கிடவும் உதவுகிறது" என்று கூறுகிறார்.
மொத்தத்தில் புதிய வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும் லத்தீன் அமெரிக்கா கியூபாவின் சுவடுகளை பின்பற்றி வெனிசுலா, பொலிவியா, பிரேசில், ஈக்குவாடர் என்று வரிசையாக இடதுசாரிகளின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன. வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கைக்கொண்டு உலகின் போராடும் சக்திகளுக்கு ஊக்க மருந்தாக திகழ்கிறது.
மறுபுறத்தில் உலக ஏகாதிபத்தியத்தின் சாம்ராஜ்யமாக திகழ்ந்த அமெரிக்காவின் பொருளாதாரம் இன்றைக்கு ஆட்டம் கண்டுள்ளது. அதன் பணச்சூதாட்டம் அப்பாவி மக்களை வீதிக்கு தள்ளியுள்ளது. கோட்டீஸ்வர நாட்டின் குடிமகன்கள் இன்றைக்கு வீதிகளில் கையேந்திக் கொண்டிருக்கின்றனர். அன்றைக்கு சோவியத் யூனியன் வீழ்ந்தபோது அதற்காக உலகம் முழுவதும் பெரும் பிரச்சாரத்தை கட்டவிழித்து விட்ட அமெரிக்காவும் அதன் எடுபிடிகளும் தற்போதைய நெருக்கடி குறித்து கள்ள மெளனம் சாதிக்கின்றனர். இருப்பினும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடியின் ஊடாக அதனை உணர்ந்துக் கொண்டுள்ளனர்.
லத்தீன் அமெரிக்காவை சுரண்டிய கைகள்தான் தற்போது 123-ஹைடு சட்டத்தின் மூலம் அணுசக்தி ஒப்பந்தம் மூலம் இந்தியாவை சுரண்டி திவாலான பொருளாதாரத்தை நிலைநிறுத்த துடிக்கிறது அமெரிக்காவும் - பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும். இதற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது காங்கிரசும் - பாஜகவும். எனவே இத்தேர்தலில் இவர்களை மூழ்கடிப்பதன் மூலமே தேசத்தை சுரண்டலிலிருந்து காப்பாற்ற முடியும். நமது வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும் காஸ்ட்ரோ - சாவேசின் பாதையில் அடிவைக்கும் முதல் அடியாக மாறிட உங்கள் வாக்குகள் அதற்கு பயன்படும்.

April 27, 2009

வாக்களிப்பீர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு!


அன்பான நன்பர்களே, நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மூன்றாவது மாற்று அரசை அமைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதனுடன் அணிச்சேர்ந்துள்ள இடதுசாரி - ஜனநாயக அணிக்கும் வாக்களிப்பீர்! தமிழகத்தில் அஇஅதிமுக தலைமையில் இடம் பெற்றுள்ள சிபிஐ, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு வாக்களிப்பீர்! 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்வீர்! பாதைகள் அனைத்தும்... வாக்குகள் அனைத்தும் மூன்றாவது மாற்றை நோக்கியதாக அமையட்டும். கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் வலுவான போராட்டத்தை நடத்தியதை நாடு அறியும். குறிப்பாக நம்முடைய வெளியுறவுக் கொள்கைகைய அமெரிக்காவின் காலடியில் அடகுவைத்ததோடு, அணு சக்தித்துறையில் நமது சுயச்சார்பை கேள்விக்குள்ளாக்கிய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு எதிராக உறுதியுடன் போராடியது இடதுசாரி கட்சிகள். இவர்களது கொள்கைகளுக்கு ஒத்தூதியது திராவிட முன்னேற்றக் கழகம். அத்துடன் மதவாத பாஜக தொடர்ந்து மதக்கலவரங்களை ஏற்படுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும் தீவிரவமாக பிளவுபடுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை எதிர்த்து உறுதியாக போராடியது இடதுசாரி கட்சிகள். எனவே அந்த கொள்கை உறுதியோடு எதிர்காலத்தில் வலுவான இந்தியாவை - உழைக்கும் மக்களுக்கான இந்தியாவை உருவாக்கும் பாதையை அமைத்திட மூன்றாவது மாற்றை தேர்வு செய்வீர்!

April 22, 2009

இலங்கை : அப்பாவும், அன்பு மகனும்!


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மு.க. ஸ்டாலின், இலங்கை பிரச்சனை தொடர்பாக பேசும் போது,

'இலங்கை பிரச்னையை அரசியல் ரீதியாக கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை' இலங்கை பிரச்னையை அரசியல் ரீதியாக கிளப்பி விட்டுள்ளனர். மக்கள் இதை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை. இலங்கை பிரச்னையில் தி.மு.க., 1956 முதல் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். மதுரைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதல்வர் 30 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக வெற்றி இடங்களை மட்டும் குறிப்பிட்டிருக்கலாம். மனித நேய மக்கள் கட்சி இரண்டு லோக்சபா தொகுதிகளுடன், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டனர். ஒரு லோக்சபா தொகுதி மட்டும் தருவதாக முதல்வர் கூறினார். அதை அவர்கள் ஏற்கவில்லை. பா.ம.க.,- கம்யூ., கட்சிகள் விலகி சென்றதால் தி.மு.க., கூட்டணி பலவீனமாகி விடவில்லை. அவர்கள் சென்றதால் செலவு குறைவு. வரவு அதிகம். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும். வேறு கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது."


மகன் மேற்கண்டவாற கூற, அதிர்ந்துப்போன அப்பா (மு. கருணாநிதி)

"இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சிவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

இப்படிக் கூறியுள்ளார்.

தி.மு.க.வின் இன்றைய முதல்வரும், வருங்கால முதல்வரும் இலங்கை பிரச்சனை தொடர்பாக என்னதான் நினைக்கிறார்கள். அல்லது தமிழக மக்கள் இலங்கைத் தொடர்பாக தீரத்துடன் எதிர்கொள்ளும் மனநிலையை உதாசீனப்படுத்தும் விதமாக மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். அத்துடன் நிற்காமல், ஏற்கனவே இருந்த தோழமைக் கட்சிகள் தற்போது இல்லாமல் போனதால் செலவு மிச்சமாம்! அது அவருக்கே வெளிச்சம். தேர்தல் செலவுகளுக்காக மார்க்சிஸ்ட்டுகள் ஒருபோதும் திமுகவிடமோ அல்லது வேறு கட்சிகளிடமோ கையேந்தி கிடந்த வரலாறு கிடையவே கிடையாது? மொத்தத்தில் திமுகவின் தேர்தல் ஜனநாயகமே பணநாயகமாகத்தான் உள்ளது என்பதை ஸ்டாலினே அம்பலப்படுத்தியுள்ளார்.


ஆரம்பத்தில் பிரபாகரனை பயங்கரவாதி என்ற கருணாநிதி, பின்னர் எனது நெருங்கிய நன்பர் என்று கூறினார். காங்கிரசிலிருந்து எதிர்ப்பு கிளம்பவே மாற்றிக் கொண்டு பத்திரிகை மீடியா திரித்து விட்டதாக கூறியதோடு, நான் அவ்வாறு கூறவில்லை என்று நாளொரு பல்டி அடித்துக் கொண்டுள்ளார். காங்கிரசசோ தற்போது ஒரு அடி முன்னே பாய்ந்து திமுகவின் பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை பிரச்சனையை தீர்க்க வேண்டிய மத்திய ஆட்சியாளர்களே வெட்கம் கெட்ட முறையில் பந்த்தை ஆதரிக்கிறோம் என்று வேஷம் போடுவது ஏனோ? அதனால்தான் "மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் சென்னை பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அமெரிக்காவுடன் அணு உடன்பாட்டிற்காக வருடக் கணக்கில் காதல் கொண்டீரே அதில் ஒரு பகுதி நேரத்தையாவது இலங்கை பிரச்சனை தீர்வதற்கு செலவிட்டீரா? என்று கேள்வி எழுப்பினார்." மொத்தத்தில் தமிழக மக்கள் இந்த தேர்தல் களத்தில் காங்கிரஸ் - திமுகவை பல்டி அடிக்க செய்வார்கள்.

திமுகவின் தேர்தல் சாகசம் கண்டு நாடே சிரித்துக் கொண்டிருக்கிறது!

தி.மு.க.வின் தேர்தல் ஜனநாயகம்!

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட்டுகள் துப்பாக்கிமுனையில் வாக்குகளை பெறுவதாக குற்றம் சுமத்திய கருணாநிதியின் தேர்தல் ஜனநாயகம் எப்படி உள்ளது என்பதை இன்றைய தினமணியில் வெளியான கீழ்க்கண்ட செய்தியினை படித்து அறிந்து கொள்ளவும். இதுதான் கருணாநிதியின் உண்மை முகம்!


மேலும், இலங்கை விவகாரத்தில் ஏப்ரல் 23 அன்று பொதுவேலை நிறுத்தம் என்று நாடகம் ஆடியுள்ளார் கருணாநிதி. உண்மையென்னவென்றால், அன்றைய தினம் மதுரையில் 59வது வார்டு கவுன்சிலரான தோழர் லீலாவதி கொலை செய்யப்பட்ட தினம். அன்றைய தினத்தில்தான் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கூட்டம் மதுரையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களும் உரையாற்ற உள்ளார்கள். இந்நிலையில் அந்தப் பொதுக்கூட்ட நிகழ்வை அன்றைய தினத்தில் சீர்குலைக்கும் நோக்கோடுதான் கருணாநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது அரசியல் சாதூர்யம் யாருக்கு வரும்! அவருக்கு நிகர் அவரே! அவரது சாணக்கியத்தனம் எல்லாம் நாட்டு மக்களுக்கானதா? அல்லதது தனது மக்களுக்கானதா? என்பதை மக்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள். அதுமட்டுமா? இன்றைய தினம் விலைவாசி உயர்வு என்பது இந்தத் தேர்தலில் முதன்மையான பிரச்சனையாக முன்னுக்கு வந்துள்ளது. ஆன்லைன் டிரேடிங் என்பதும் பதுக்கல் பேர்வழிகளாலும்தான் விலைவாசி விண்ணுக்கு ஏறியது. மத்திய அரசியல் இருந்த கருணாநிதி என்றைக்காவது ஒருநாளாவது இது குறித்து கவலைப்பட்டிருப்பாரா? இன்றைய தினம் அவரது கலையெல்லாம் இந்தத் தேர்தலில் எப்படி கரையேறுவது என்பதுதான். காங்கிரசுடன் சேர்ந்து பயணிக்கும் திமுக ஒரு மூழ்கும் கப்பல் என்பதை தமிழக மக்கள் எப்போதோ தீர்மானித்துவிட்டனர்.

April 17, 2009

தலித் மக்களுக்காக கண்ணீர் வடிக்கும் அத்வானி!


ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்! அந்தக் கதையாக, பா.ஜ.க. பிதமர் வேட்பாளர் அத்வானிக்கு தலித்துகள் மீது கரிசனம் வந்து விட்டது. டாக்டர் அம்பேத்கரின் 118வது பிறந்த நாளையொட்டி, "தலித் சேதன ரத யாத்திரை" ஒன்றை துவக்கி வைத்துள்ளார்.
தேர்தல் வந்து விட்டாலே பா.ஜ.க.வுக்கு என்ன செய்வது என்றே புரியாது? ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு ரத யாத்திரை நடத்துவது பா.ஜ.க.வுக்கு வழக்கம். ஏற்கனவே நடத்திய "ரத யாத்திரைகள்" எல்லாம் ராமரின் பெயரால் நடத்தப்பட்டு ரத்த யாத்திரையாக முடிந்தது. ராம ஜன்ம பூமி என்று கதைவிட்டு அப்பாவி இந்து மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்தி, மதவெறி அஜன்டாவை முன்வைத்த பா.ஜ.க. இசுலாமிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்தி 3000த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களை கொலை செய்து மதவெறி ரத்தத்தில் மூழ்கடித்தது.
பா.ஜ.க.வின் சாயம் மக்களிடம் எடுபடவில்லை. ராம ஜன்ம பூமி என்று கதையளந்த உத்திரப்பிரதேசத்திலேயே அதனை ஓட விட்டனர் மக்கள். ஒவ்வொரு தேர்தலிலும் பின்னடைவை சந்தித்த பா.ஜ.க. தற்போது உத்திரப்பிரதேசத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
வட மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனது தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே வரும் தருவாயில், தற்போது தலித் மக்களின் நன்பனாக தன்னை முன்னிலைப்படுத்த துடிக்கிறது பா.ஜ.க.!
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில், ஹரியானாவில் செத்துப்போன மாட்டின் தோலை உரித்தற்காகவே விஸ்வ ஹீந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் நான்கு தலித் அப்பாவி வாலிபர்களை கல்லால் அடித்தே கொன்றார்கள். பா.ஜ.க.விற்கும் ஆர்.எஸ்.எஸ்.சிற்கும் ஒரு தலித்தின் உயிரை விடவும் பசுவின் உயர் மேலானது என்ற சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்கள் அல்லவா! அதனால் ராமபக்தர்கள் அன்றைக்கு தலித்துக்களின் உயிரை பலிகொடுத்து தனது சித்தாந்தத்திற்கு புத்துயிர் ஊட்டினர்.
அத்துடன் நின்றார்களா! மகாராஷ்டிர மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில் பெளத்த மதத்தைத் தழுவிய - சுயகாலில் நின்ற தலித் போட்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன்கள் என்று நான்கு பேரை நேருக்கு நேர் கற்பழித்து - சின்னாபின்னப்படுத்தி - நிர்வாணப்படுத்தி கொலை செய்தார்களே உயர்சாதி ஆதிக்க வெறிர்கள். இதனைக் கண்டு நாடும், நாட்டு மக்களும் கொதித்து எழுந்த போது அந்த பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும்., பா.ஜ.க. எம்.பி.யும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக வாயை மூடிக்கொண்டிருந்தார்களே அதன் பின்னால் ஒளிந்துக் கொண்டுள்ள தத்துவம் என்ன? இந்துத்துவ சனாதன மதவெறி சித்தாந்தம்தானே!
அப்போதெல்லாம் தலித் மக்களைப் பற்றி கவலைப்படாத பா.ஜ.க. தேர்தல் நேரத்தில் திடீரென தலித் மக்கள் மீது கரிசனம் காட்டுவதென்ன! இது கசாப்புக் கடையில் காந்தியின் படம் தொங்கவிட்டிருப்பது போலத்தான் பா.ஜ.க. தனது ஓட்டு வங்கியை பெருக்கிக் கொள்ள தலித் ஆதரவு வேடம் பூண்டிருக்கிறது. ஏற்கனவே குஜராத்தில் காந்திய தத்துவத்திற்கு புதை குழி தோண்டிய பா.ஜ.க. காந்தியின் ராமராஜ்யமே எங்களது இந்துத்துவம் என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கையில் தற்போது தலித்துக்களின் சகோதரர்களாக தன்னை அடையாளப்படுத்த முனைகிறார் அத்வானி.
இந்துத்துவம் என்பது இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்களையும், புராணங்களையும், கட்டுக்கதைகளையும், ஏன் மனுதர்மத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த மனுதர்மம்தான் தலித்துக்களை பார்க்கக் கூடாது, தொடக் கூடாது, பேசக் கூடாது, படிக்கக் கூடாது, ஒரு தலித்தை ஒரு மேல்ஜாதி பார்ப்பனன் கொலை செய்தால் அதற்கு தண்டனை வெறும் ஆடு, மாடுகளை கொல்லுவது போன்று என்று கருதி மன்னித்து விடலாம் என்று கூறிய அந்த சனாதர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவத்திற்கு சொந்தக்காரர்தான் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானி.
உண்மை இப்படியிருக்கும் போது, ஏன் இந்த போலி வேடம்! யாரை ஏமாற்ற இந்த போலி வேடம்! தலித் மக்களின் இடஒதுக்கீடு உட்பட அனைத்திற்கும் வேட்டு வைக்கும் பா.ஜ.க. தலித் மீது பரிவு காட்டுவது வேடிக்கையிலும் வேடிக்கைதான். அது மட்டுமா? மகாராஷ்டிரத்தில் உள்ள மராத்வாடா பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்ற போது அதற்கு வானத்திற்கும் பூமிக்கும் எகிறிக் குறித்து சண்ட மாருதம் செய்தவர்கள்தான் இந்த இந்துத்துவாவாதிகள். எனவே, ஆர்.எஸ்.எஸ்.சின் அடிமையான அத்வானி தலித் நன்பனாக வேடம் பூணுவது தலித் மக்களை ஆட்சிக்கு வந்த பின் ஒடுக்குவதற்காகத்தனே ஒழிய வேறில்லை!
ஒடுக்கப்பட்ட மக்களே உஷார் ஓநாய் வருகிறது! வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல நம்மையே இரையாக்குவதற்காக!

April 16, 2009

ரோமாபுரி பாண்டியனும் மன்னர் மன்மோகனும்!


நாடாளுமன்றத் தேர்தல் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கவுள்ளது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆட்சி புரிந்த காங்கிரசும், ஆட்சியை இழந்த பா.ஜ.க.வும் - இரண்டையும் நிராகரித்து மக்களுக்கான மாற்றை முன்வைக்கும் இடதுசாரி - ஜனநாயக சக்திகளும் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் முக்கோணமாய் மோதிக் கொண்டிருக்கின்றன.

தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எதற்காக வாக்களிக்க வேண்டும்? என்று வாக்காளர்களை சிந்திக்க வைப்பதற்கு மாறாக, பா.ஜ.க.வும் - காங்கிரசும், அத்வானிக்கும் - மன்மோகன் சிங்குக்கும் இடையில் நடைபெறும் குடும்பச் சண்டையாய் மாற்றிவிட்டன.

கடந்த ஐந்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் அலங்கோலம் பற்றி பா.ஜ.க. இதுவரை வாயே திறக்கவில்லை. மறுபுறத்தில், காங்கிரசும் பா.ஜ.க. எப்படியெல்லாம் பொறுப்பற்ற எதிர்க்கட்சியாக செயலாற்றியது என்பதைப் பற்றியும், அதன் மதவெறியால் நாடும், நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டது குறித்தும் வாய் திறக்கவில்லை. இரண்டும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகளல்லவா?

மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் என்னவாகும்? எனவே, பக்குவமாய் திசை திருப்பினார் அத்வானி. தொடையை தட்டிக் கொண்டு 'மன்மோகன் சிங் லாயக்கற்றவர் - வீக்கானவர்! என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தத் தயாரா' என்று மல்லுக்கட்ட. தேர்தல் விவாதமே திசை திருப்பிப் போனது.

அப்புறம் என்ன? பதிலுக்கு மன்மோகன் - 'என்னுடன் விவாதிப்பதற்கு உனக்கு என்னத் தகுதி இருக்கிறது' என்று கேட்க,

அடுத்த கட்டத்தில் அத்வானி, 'காங்கிரஸ் கிழக்கட்டைகளின் கட்சி என்று சொல்ல,' பதிலுக்கு ராகுலும், பிரியங்காவும் பரிதாபமாக 'நாங்கள் எல்லாம் கிழமா?' என்று அப்பாவித்தனமாக அத்வானியைப் பார்த்து கேட்டது.

அத்தோடு விட்டாரா அத்வானி, 'மன்மோகன் ஒரு தலையாட்டி பொம்மை, சோனியாவால் ஆட்டிவிக்கும் பொம்மை. சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவர்' என்று கூற,

இதுவரை சும்மா இருந்த அம்மையார் சோனியா களத்தில் இறங்கி, 'அத்வானி ஒரு ஆர்.எஸ்.எஸ். அடிமை. உன்னால் எதையும் சொந்தமாக கழட்ட முடியாது' என்று ஒரு குண்டை வீச...

இந்தக் களோபரத்தில் குழம்பிப்போன மன்மோகன் தான் ஒரு ஞான சூன்யம் என்பதை நிரூபித்து விட்டார். நேற்றைய தினம் நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, "மாநில கட்சிகள் வளர்ச்சிக்கு எதிரானவை. இதனால் தேசிய கட்சிகள் பாதிக்கப்படுகிறது. நிலையான ஆட்சிக்கு மாநில கட்சிகள் உதவாது" என்று ஒரே போடு போட்டுவிட்டார்.

என்னதான் இருந்தாலும் மன்மோகன் சிங் ஒரு உலகவங்கி உருவாக்கிய சித்தாந்தத்தின் கையாள்தானே. அவருக்கு இந்தியாவின் அரசியல் அமைப்பு பற்றியோ அல்லது அரசியல் பற்றியோ என்ன பெரிதாக கவலை இருந்து விடப்போகிறது. அமெரிக்காவும், அந்நிய மற்றும் உள்நாட்டு பன்னாட்டு - பெரும் நிறுவனங்கள் தாங்கள் விரும்புகிறபடி கொள்ளையடிப்பதற்கு ஒரு நிரந்தரமான ஆட்சி தேவை. அதற்கு ஏற்ப ஒரு நிரந்தர ஆட்சி தேவை என்ற கனவைதான் மன்மோகன் இப்படி கொட்டியுள்ளார்.

ஐய்யா டாக்டர் மன்மோகன் சிங். இதற்காகவே காங்கிரசை மக்கள் மீண்டும் புதை குழியில் தள்ளுவார்கள். "இந்தியா ஒரு கூட்டாட்சி ஜனநாயக நாடு. இது பல நாடுகளைக் கொண்ட ஒரு நாடுதான்." பல்வேறு கலாச்சாரம், மொழி, ஏற்றத்தாழ்வான வளர்ச்சி போன்றவற்றைக் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நாடு." எனவே, இந்த நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களின் நலனுக்கு ஏற்ப, அந்தந்த மக்களின் நலன்களை முன்னிறுத்தும் மாநில கட்சிகள் நாள்தோறும் தோன்றுவது இயல்பானது. மக்கள் யார் மீது நம்பிக்கை வைக்கிறார்களோ? அல்லது மக்களின் தேவைகளை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்கள் பின் மக்கள் நிற்பார்கள். இதுதான் ஜனநாயகம்!

ஆனால் மன்மோகன் இது புரியாமல், தான் மன்னராவதற்கு மாநில கட்சிகள்தான் தடையாக இருக்கிறது என்று புரிந்து கொண்டு. மாநில கட்சிகள் மீது பாய்ந்துள்ளார். அதாவது கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவையும், பல மாநிலங்களையும் ஆண்ட கட்சிதான் காங்கிரஸ். அதனால்தான் நாட்டில் உண்மையில் ஏற்படவேண்டிய வளர்ச்சி பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தற்கொலையில் துவங்கி, பசியோடும், பட்டினியோடும், சத்தாண உணவுகள் கிடைக்காமையாலும் நோயாலும் மடிந்து வருகின்றனர் இந்திய மக்கள். ஒரே சீரான கல்வியை இந்தியாவில் இதுவரை அரசாண்ட காங்கிரசால் வழங்க  முடியவில்லை. தொழில் வளர்ச்சியும் அதே கதிதான். இதனால் உருவானதே வடகிழக்கு மாநிலங்களில் நீடிக்கும் பிரச்சனைகள் துவங்கி காஷ்மீர் வரையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் உருவாக்கியது காங்கிரஸ்தான். எனவே, யார் வளர்ச்சிக்கு மத்தியில் தடையாக இருந்தார்களோ அவர்களே தற்போது மாநில கட்சிகள்தான் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என்று மண்ணை அள்ளிப் போடுவது எதனால்?

காங்கிரசுக்கும் - பா.ஜ.க.வுக்கும் மூன்றாவது மாற்றாக மாநில கட்சிகள் பெரும் சவாலாக உருவெடுத்து ஒரு கட்சி ஆட்சிக்கு சாவு மணி அடித்து விட்டதும். ஒரு உண்மையான கூட்டாட்சி மலர்வதற்கு வழி ஏற்படுத்தியதுமே காங்கிரசுக்கு வயிற்றெச்சல் அதனைத்தான் மன்மோகன் உளறிவிட்டார்.

தமிழகத்தில் உள்ள பாண்டிய மன்னன் கருணாநிதி, எப்போதும் மாநில சுயாட்சிக்கு தான் உறுதியாக பாடுபடுவதாக மார்தட்டுவார். இப்போது மன்மோகன் சிங் மாநில கட்சிகளே கூடாது என்கிறாரே என்னப் பன்னப் போகிறார்? கட்சியை காங்கிரசுடன் இணைத்து விடப்போகிறாரா? அல்லது நானே வீராதி வீரர் என்று கவிதை வசனம் எழுதி மாநில சுயாட்சியை காக்கப் போகிறாரா? மதுரையில் உள்ள பாண்டிய மன்னரைப் பற்றியே சதா காலமும் யோசிக்கும் கருணாநிதிக்கு மாநில சுயட்சி பற்றிதான் கவலை எழுமா என்ன!

மத்திய அரசு மாநிலங்களுக்கு 50 சதவிகித நிதி ஒதுக்க வேண்டும் என்று சும்மா உதார் விடும் கருணாநிதி, தனது அரசாட்சியின் கீழ் இருக்கும் உள்ளாட்சிகளுக்கு வெறும் 9 சதவிகிதம் மட்டுமே பிச்சைப் போடுகிறார். இவர்தானே மன்மோகனை எதிர்த்து விடப்போகிறார்! இவரது வீராப்பு எல்லாம் பாண்டியர்கள் மீதுதான் இருக்குமே ஒழிய மன்மோகன் மீது இருக்காது!

April 14, 2009

தீண்டாத குழந்தைகளும் அம்பேத்கர் பிறந்த நாளும்!

ஏப்ரல் 12, 2009 அன்று "சிங்காரவேலர் 150வது பிறந்த ஆண்டு" சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் "கவிதை வட்டத்தினர்". இக்கூட்டத்திற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். "சிங்காரவேலரும் சாதி ஒழிப்பும்" என்ற தலைப்பில் நான் பேசினேன். கூட்டம் நடைபெற்ற இடம் சென்னை, தண்டையார் பேட்டையில் உள்ள, இரத்தினசபாபதி தெருவில் உள்ள, "எஸ்.சி.-எஸ்.டி. சமூக சேவகர் மையம்" என்று குறிப்பிட்டிருந்தது. அந்த இடத்திற்கு சென்றவுடனேயே சென்னை நகரில் இன்றும் நீடிக்கும் "தீண்டாமை வடிவம்" தனது கோர பற்களை காட்டி சிரித்துக் கொண்டிருந்தது.
1938-ல் துவக்கப்பட்ட இச்சங்கம் இன்று தாழ்த்தப்பட்டோர் மக்களின் நலனுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. 70 வயதை எட்டியிருந்த அந்த கட்டிடம் அதன் முதுமையையும், சேவையையும் ஒருசேர உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தது. தற்போது அரசு உதவியுடனும் பல சமூக நல சேவகர்களின் உதவியுடனும் இச்சங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட மாணவர்களின் விடுதியாக தற்போது செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இங்கு தங்கியிருக்கின்றனர். நான் கண்ட காட்சி வியப்பாக இருந்தது. கிட்டத்தட்ட 65 குழந்தைகள் 12 வயதுக்கு கீழே இருந்த குழந்தைகள்தான் அங்கே தங்கி படித்து வருகின்றனர். பெரும்பாலான குழந்தைகளின் உடலில் சட்டையில்லை. வெறும் உடம்புடன் இருந்த காட்சியும், எண்ணையை பார்க்காத பரட்டைத் தலையும், அதனால் வந்த செம்பட்டை முடியும், கண்களில் வறட்சியும், வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புடன் இக்குழந்தைகள் இங்கே தங்கி படித்து வருகின்றனர். அக்குழந்தைகள் தங்குவதற்கும், உணவுக்கும் அந்த விடுதியில் உத்திரவாதம் செய்யப்படுகிறது. வெளியில் சென்று அக்குழந்தைகள் படித்து விட்டு மாலையில் விடுதி திரும்ப வேண்டும்.
ஓடி, ஆடி இந்த உலகத்தை ரசிக்க வேண்டிய இந்தக் குழந்தைகள் ஒட்டு மொத்தமாய் இந்த விடுதிக்குள் கூண்டுக் குருவிகளாய் அடைபட யார் காரணம்? பெற்றவர்களா? அல்லது பெற்றவர்களை ஏழ்மையில் தள்ளி ஏதும் இல்லாதவர்களாக்கிய இந்த அரசுகளா? ஆளும் வர்க்கமா? குற்றவாளி அரசும் - அதனை ஆளும் வர்க்கங்களும்தான்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு அநேகமாக மாற்று உடை கூட இருக்குமா என்பதுகூட சந்தேகம்தான். அவர்களது உடைகளை அந்த சிறுவர்களே துவைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை தாலாட்டுவதற்கும், சீராட்டுவதற்கும் அந்தக் குழந்தைகளுக்குள்ளேதான் நடைபெற வேண்டும். சரி! பள்ளிக்குச் செல்லும் அந்தக் குழந்தைகளுக்கு (இவர்கள் எல்லாம் திங்கட் கிமைக்கு ஒரு யூனி பார்மும், மற்ற நாட்களுக்குவேறு கலர் யூனிபார்மும், டையும் கட்டிக் கொண்டு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு டாட்டா காட்டிச்செல்லும் பள்ளிகள் அல்ல - எல்லாம் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடம்தான்) தக தகவென்று மின்னும் கலர் கலரான பாலித்தீன் பையில் அடைக்கப்பட்டிருக்கும் லிட்டில் ஹார்ட்சும், லேஸ், கார்ன் பிளக்ஸ், ஜெம்ஸ், டோரா புஜீ, சூப்பர் ஸ்டார், லுக்ஸ், குர்குரே, டைமண்ட், ஏன் வேர்கடலை பர்பி இவையெல்லாம் தீண்ட முடியாத பொருட்கள் இவர்களுக்கு. எல்லாம் பகல் கனவுதான். அவர்களுக்கான பாக்கெட் மணியை யார் தருவார்கள்.

சில நேரங்களில் பெற்றோர்கள் உள்ள குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ வரும் போது கிடைக்கும் சில்லறை காசுகளை வைத்துக் கொண்டுதான் தானும், தனது நண்பர்களும் இதுபோன்ற நொறுக்குத் தீனிகளை சுவைக்க வேண்டும்.
ஒரு விளையாட்டுத் திடல் உள்ளது. அதுவும் தனது வயதான தண்மையை வெளிக்காட்டிக் கொண்டுள்ளது. அதாவது, அந்த வெண்யைமான மண் ஆப்பிரிக்கன் கலருக்கு மாறிவிட்டிருந்தது. அந்த மாணவர்களின் நிறத்திலிருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் தான் வித்தியாசப்படக் கூடாது என அது நினைத்திருக்கலாம். அவர்களது விளையாட்டுக்கள் எல்லாம் ஓடி ஆடுவதும், மண்ணில் புரள்வதும்தான். செஸ், கேரம், கிரிக்கெட், கோலி, பம்பரம், ஏற்றம், இறக்கம், இராட்டினம், உடற் பயிற்சி எல்லாம் கனவில் மட்டுமே! அவர்களால் போகோ, சுட்டி, ஜெட்டெக்ஸ் டி.வி. எல்லாம் பார்க்க முடியாது. மொத்தத்தில் குழந்தைகளுக்கே உரிய அனைத்தையும் இழந்த நிலைதான் இவர்களுக்கு இப்படி வளரும் மாணவர்களால் எப்படி ஒரு சிறந்த சமூகத்தை படைக்க முடியும்! ஆட்சியாளர்களுக்கு இது தெரியாதா?
இந்த ஹாஸ்டலில் 1-ம் வகுப்பு முதல் + 2 படிக்கும் மாணவர்கள் வரை தங்கலாம். தங்கிக் கொண்டுள்ளனர். தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை என்பதால் அவர்கள் எல்லாம் ஊருக்குச் சென்று விட்டதாக கூறினார்கள்.
இங்குள்ள மாணவர்கள் ஒருவருக்கு அரசாங்கம் ஒரு நாளைக்கு 5 ரூபாய் ஒதுக்குகிறதாம். இந்த ஐந்து ரூபாயில் அந்த மாணவர்கள் மூன்று வேளையும் தரமான சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்றால் உலகில் இதைவிட வேறு கின்னஸ் சாதனை இருக்க முடியுமா? ஆனால் தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகள் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 12 ஒதுக்கப்படுகிறது. இதுவே குறைவு என்பது வேறு கதை இருந்தாலும், ஒதுக்கப்பட்டு, சீண்டப்படாமல் இருக்கும் இந்த குழந்தைகளின் எண்ணிக்கை கைதிகளின் எண்ணிக்கையை விட மிக மிகக் குறைவாகவே இருக்கும். அப்படியிருக்கும் போது பெரியாரின் வழிவந்த, அண்ணாவின் வழி வந்த திமுக ஆட்சியாளர்களால் ஏன் இதை உயர்த்த முடியாதா? ஏதே தோ இலவசம் என்று வாரி வழங்கும் இந்த ஆட்சியாளர்கள் இந்தக் குழந்தைகளுக்கு வருடத்திற்கு நான்கு சட்டைகளும், கால் சட்டைகளும், இரண்டு ஜோடி செருப்பும், போஷாக்கான உணவும் கொடுத்து ஒரு நல்ல கல்வியும் கொடுத்து உயர்த்த முடியாதா? தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நாலெல்லாம் பாடுபடுகிறோம் என்று கூறுவதெல்லாம் இதுபோன்ற ஹாஸ்டல்களை பார்க்கும் எவருக்கும் அது பெரும் பொய் என்றே தோன்றும்.
இன்றைக்கு டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று ஒரு நாள் ஒருவேளை அந்தக் குழந்தைகளுக்கு சில கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய இனிப்புகள் வழங்கப்படலாம். தீண்டாமை ஒழிப்புக் குறித்து வீராவேசமான பேச்சுக்கள் பேசலாம். ஆனால் அந்த மாணவர்களின் எதிர்கால வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றால் அது அரசால் மட்டுமே முடியும். ஆட்சியாளர்களால் மட்டுமே முடியும்!
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ஒரிடத்தில் கூறுகிறார், "தீண்டாமையை தீண்டி விட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா என்று? அதாவது தீண்டாமை ஒழிந்து விட்டால், அந்த தீண்டாமையால் ஏற்பட்ட வறுமையும், நோயும், கல்வியின்மையும், வேலையிண்மையும், வீடின்மையும், சொத்தின்மையும் ஒழிந்து விடுமா?" என்று கேட்கிறார். அதுதான் நினைவுக்கு வருகிறது இந்த விடுதியைப் பார்க்கும் போது. தாழ்த்தப்பட்ட, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஏன் கிராமப்புறத்தில் படித்தாலே ஆதிக்க சாதியினருக்கு பிடிக்காத என்ற நிலையிலிருந்து சென்னை மாநகரத்திற்கு வந்து தனது கல்வியைத் தொடர நினைக்கும் இந்த மாணவர்களுக்கு ஆரோக்கியமான, ஒரு சராசரி மாணவன் வீட்டில் என்னென்ன வசதிகளை அனுபவிப்பானோ அதுபோன்ற குறைந்தபட்ச வசதிகளை இந்த அரசால் ஏற்படுத்த முடியதா? என்பதே எனது கேள்வி!

அரசின் முயற்சியை வலியுறுத்தும் அதே தருணத்தில், சமூகத்தில் ஓரளவு உயர்வு பெற்றவர்கள் இதுபோன்ற குழந்தைகளின் கல்விச் செலவினையும், அவர்களுக்கான உடை போன்றவற்றையும் வழங்கி உயர்த்திட முன்வருவதும் அத்தியாவசியமாகிறது. திருப்பதி வெங்கடாசல பெருமாளுக்கு கோடிக்கணக்கில் காணிக்கையாகவும், சபரிமலை ஐயப்பனுக்கு வாரி வாரி வழங்கும் நமது பக்தர்கள் கோவிலின் சொத்துக்களை பெருக்க வைக்க உதவிடுமே ஒழியே வேறு எதற்கும் பயன்படப்போவதில்லை. இப்படி வீண் விரயம் செய்யும் பொருளுதவிகளை இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவலாமே!
மேற்கண்ட கருத்துக்கள் உடனடி நிவாரணம் மட்டுமே! இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்பது சமூக மாற்றத்தால் மட்டுமே நிகழும். ஒரு மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்துவதன் மூலமும், நிலமற்ற ஏழை - எளிய தலித் உட்பட இதர பகுதி மக்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கான இதர உதவிகளையும் புரிந்து சட்ட ரீதியான பாதுகாப்புகளையும் வழங்குவதன் மூலமே நிரந்தர விடுதலைக்கு வழிவகுக்கும். இருட்டு விடியும் வரை தற்காலிகமாக மின்சார பல்பாக தொண்டாற்றலாமே! மேலும் ஆளும் ஆட்சியாளர்களை இதுபோன்ற விசயங்களில் கவனம் செலுத்திட வலுவான போராட்டங்கள் அத்தியாவசியம். இதுவே டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளில் நாம் முன்னெடுக்க வேண்டிய கடமையாக கருதுகிறேன்.

April 10, 2009

நவீன அடிமைகள்!

அதிகாலை 06.00 மணிக்கெல்லாம் பட்டாளத்தில் உள்ள வீரர்களைப் போல தலையில் மஞ்சள் கலர் ஹெல்மெட்டுகளை மாட்டிக் கொண்டு, கையில் பெரிய, பெரிய ஸ்டீல் பாத்திரத் தூக்குகளை தூக்கிக் கொண்டு ஆளுக்கும், காலுக்கும் சம்பந்தம் இல்லாத அழுக்கடைந்த சட்டைகளையும், பேண்ட்டுகளையும் அணிந்து கொண்டு வாயில் பீடியுடன் டாய்லெட் போவதற்கு உட்காருவதைப் போல் வரிசையாக உட்கார்ந்து காத்திருக்கின்றனர் தங்களை ஏற்றிச் செல்லும் பேருந்தின் வருகைக்காக. இனிமேல் இந்த வண்டி தேறாது என்ற நிலையில் டிராவல் ஏஜண்டுகளால் கைவிடப்பட்ட ஓட்டை - ஒடைசலான அந்த பேருந்துகள்தான் தற்போது இவர்களின் சொகுசு வாகனங்கள்.
யார் இவர்கள், எதற்காக இவர்கள் இப்படி காத்திருக்கின்றனர் என்ற கேள்வி மேலிடாமல் இல்லை. இவர்கள் எல்லாம் வெளி மாநிலத்திலிருந்து அழைத்துவரப்பட்ட கூலித் தொழிலாளர்கள். பீகார், சட்டீஸ்கர், ஒரிசா போன்ற மாநிலங்களிலிருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் கூலித் தொழிலாளர்களாக, காண்ட்டிராக்ட் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை துறைமுகம், எம்.ஆர்.எல்., திருவொற்றியூர் - எண்ணூரில் உள்ள இரும்பு ஆலைகள், சென்னை பெருங்குடியில் உள்ள நவீன ஐ.டி. கட்டிடங்களைக் கட்டும் தொழிலாளர்களாகவும், சாலைகளை தோண்டி புதுப்பிக்கும் தோழர்களாகவும், பாதாள சாக்கடை முதல் அனைத்து கீழ்நிலைத் தொழில்களில் ஈடுபடும் புதிய ரக பிசாசுகளைக் (முதலாளிகள் இவர்களை இப்படித்தான் அழைக்கின்றனர்)கண்டுப்பிடித்துள்ளனர் நமது காண்ட்டிராக்டர்களும், முதலாளிகளும்.
நாள் முழுவதும் வற்றலும், தொற்றலுமாக - எலும்பும், தோலுமாக இருக்கும் அந்த தொழிலாளர்கள் குறைந்தது 12 நேரத்திற்கு மிகாமல் வேலை செய்கின்றனர். அதுவும் கடினமான வேலைகளில் அமர்த்தப்படுகின்றனர். நமக்கெல்லாம் மாதத்திற்கு 30 நாட்கள் என்றால், இவர்களுக்கு மட்டும் 50 நாட்கள். என்ன வித்தியாசமாகத் தெரிகிறதா ஆம் அப்படித்தான் கணக்கு. இவர்களுக்கு ஒரு மாதக் கணக்கு என்றால் 50 நாட்கள் என்று அர்த்தம். இந்த 50 நாட்களுக்கு கொடுக்கப்படும் கூலி எவ்வளவுத் தெரியுமா? 4000 முதல் 4500 வரை மட்டுமே. 17-18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும், இங்கிலாந்திற்கும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பிடித்துவரப்பட்ட அடிமைகள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வருவார்கள். கப்பலில் கையிலும், காலிலும் விலங்குகள் பூட்டப்பட்டு பல்வேறு அடுக்குகளை அமைத்து அதில் கட்டிப்போட்டுக் கொண்டு வருவார்கள். சில நேரங்களில் பல அடிமைகள் நோய்வாய்ப்பட்டோ, அல்லது துன்புறுத்தப்பட்டோ இறப்பதும் நடக்கும். அப்போதுகூட பக்கத்தில் அவரது கையில் இணைக்கப்பட்டுள்ள கைதிகள் அந்த பிணத்துடனேயே பயணம் செய்ய வேண்டி வரும். சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் கப்பல் முழுவதும் வீசும். அந்தக் காட்சிகளைத்தான் தற்போது சென்னை மாநகரமும், தமிழகத்தின் முக்கிய நரங்களும் சந்தித்து வருகின்றன என்றால் மிகையாகாது.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து கோவளத்திற்கும், கேளம்பாக்கத்திற்கும் புறப்படும் பேருந்துகளில் 50 சதவிகிதம் பேர் வெளி மாநில தொழிலாளர்களே! மறைமலை நகர் முதல் ஹுண்டாய் கார் கம்பெனி வரை பல பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் காண்டிராக்ட் அடிமைகளாக இந்தத் தொழிலாளிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.
மேலும், கேளம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடி கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் இத்தொழிலாளர்களுக்கு பன்றி குடிசைகள் போன்று வெறும் தகர கொட்டாய்கள் அமைத்து ஒரு அறைக்கு 5 முதல் 10 பேர் வரை தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு குளிப்பதற்கும், கழிப்பிடத்திற்கும் கூட போதுமான தண்ணீர் கூட கிடைக்காத நிலையே நீடிக்கிறது. அது மட்டுமா? ஒரு ரூபாய் அரிசியைக் கொண்ட இவர்களது காலம் ஓட்டப்படுகிறது. மேலும் இத்தொழிலாளர்கள் பக்கத்து ஊர்களில் உள்ள காலியிடங்களில் காலைக் கடனை கழிப்பதற்கு சென்றால் அங்குள்ளவர்கள் துரத்துவதும், கல்லால் அடிப்பதும்கூட நடக்கிறது. ஏன் இவர்களை ஊருக்குள்கூட செல்வதற்கு அனுமதிப்பதில்லை. கார்ப்பரேட் முதலாளிகளும், காண்டிராக்ட் கொள்ளையர்களும் இவர்களுக்கு தேவையான அடிப்படையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. உண்மையில் கல்லைக் கொண்டு அடிக்க வேண்டியவர்கள் இந்த நவீன கொள்ளையர்கள்தான்.
பல இடங்களில் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யும் தொழிலாளிகள் விபத்துக்களால் மரணம் அடைவதும் நிகழ்கிறதாம். அப்படிப்பட்ட சூழலில் வேலை செய்யும் நிறுவனமோ? அல்லது காண்டிராக்டரோ பொறுப்பேற்பதில்லை என்றும் கூறப்படுகிறது. பல மரணங்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைப்பதும் நடப்பதாக கூறப்படுகிறது.
சென்னை துறைமுகத்தில் பணியாற்றும் இதுபோன்ற வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இராயபுரத்தில் ஒரு திருமண மண்டபம் எடுத்து அங்கேயே 100க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்துள்ளனர். இத்தகைய நரக வாழ்க்கைகூட இந்தத் தொழிலாளர்களுக்கு சுகம் அளிப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் ஒரிசாவிலும், பீகாரிலும், சத்தீஸ்கரிலும், இன்னும் பல மாநிலங்களில் உள்ள இதுபோன்ற சாதாரண உழைப்பாளி மக்களுக்கு உரிய வேலைவாய்ப்பையோ அல்லது பாதுகாப்பான வாழ்க்கையேயோ ஏற்படுத்திக் கொடுக்காத மாநில அரசுகளும், 60 ஆண்டு காலம் நாட்டை ஆண்ட காங்கிரசும், இதுபோன்ற தொழிலாளர்களை வைத்தே பில்லினியர்களாகவும், டிரில்லினியர்களாகவும் கணக்கை காட்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுமே இவர்கள் விஷயத்தில் முதல் குற்றவாளிகள்.
சென்னை உட்பட தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தொழிலாளர்கள் இதுபோன்ற நவீன அடிமைகளாக பணிபுரிகின்றனர். உலகமயச் சுரண்டலுக்கு கிடைத்துள்ள நவீன பிசாசுகளாய் முதலாளிகள் இவர்களை பார்க்கின்றனர்.
60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் எதை சாதித்தது காங்கிரசும், பா.ஜ.கவும். - இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்தியா ஒளிர்கிறது என்று கூறிய பா.ஜ.க. இன்றைக்கு அதனை அப்படியே மறந்து விட்டு, அத்வானி ஆட்சிக்கு வந்தால் ஐ.டி. துறையில் பல லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கப் போவதாக வாய்ச்சவடால் அடிக்கிறார். இதுபோன்ற அடிமட்டத் தொழிலாளர்கள் என்ன செய்வார்கள். ஐ.டி. பார்க்கில் புல் வெட்டுவார்களா? புல் புடுங்குவார்களா? என்பது அத்வானிக்கே வெளிச்சம்.
ஏன் திமுக அரசு மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறது. சென்னையில் உருவாகிக் கொண்டிருக்கும் மாநில அரசின் தலைமைச் செயலகம் உருவாக்கும் பணியில் கூட இத்தகைய தொழிலாளர்களே ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களது வாழ்க்கைக்கும், பாதுகாப்புக்கும் தமிழக அரசு ஏதாவது உத்திரவாதம் செய்துள்ளதா? அல்லது முறையான கூலியை இந்தத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு உத்திரவாதம் செய்துள்ளதா? என்ற கேள்வியை இந்த நேரத்தில் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அது மட்டுமா? எதிர்கால முதல்வர் என்றும், இளையவர் மு.க. ஸ்டாலின் என்ன சொன்னார், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சட்டக் கூலியான ரூ. 80 வழங்க வேண்டும் என்று போராடிய போது, போராடியவர்களைப் பார்த்து, இவர்கள் தூண்டி விடுகிறார்கள் என்றும், புரோக்கர்களாக செயல்படுகிறார்கள் என்றும் கூறினார். இதுதான் எதிர்கால முதல்வரின் கரிசனப் பார்வை! அதாவது மாநில அரசால் தீர்மானிக்கப்பட்ட சட்டக்கூலியைக் கூட ஒழுங்காக வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல வேண்டியவர். கொள்ளையர்களுக்கு துணை போகும் போது, இவர்கள் எப்படி வெளி மாநிலத் தொழிலாளர்களை கண்டு கொள்ளப் போகிறார்கள். கண்டு கொள்வார்கள். ஒருவேளை இந்த தொழிலாளர்களை வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரும் தரகர் வேலையைக் கூட திமுகவினர் எடுத்துள்ளார்களோ என்னவோ! என்ற சந்தேகமே மேலிடுகிறது.
மொத்தத்தில் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களை பாதுகாத்திடும் கடமையாற்ற, இவர்களுக்காக குரல் கொடுக்க, தமிழக தொழிலாளி வர்க்கம் எழவேண்டும். அப்போதுதான் இவர்களைப் பயன்படுத்தி சுரண்டும் இந்த கூட்டத்திற்கு வேட்டை வைக்க முடியும். ஓட்டு கேட்கும் காங்கிரசே, பா.ஜ.க.வே, திமுகவே உங்கள் ஆட்சிகளின் அலங்கோலமே மேற்கண்ட அவலம் என்று பறைசாற்ற வேண்டிய நேரமாகவே இதனை கருதுகிறேன்.

April 08, 2009

அழகிரி நர்த்தனம் ஆடும் கருணாநிதி!


மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் மகன் அழகிரியை நிற்க வைத்து, முடிசூட்டு விழா நடத்திட கனா கண்டு கொண்டிருக்கும் கருணாநிதி, எளிமையின் இலக்கணமாக திகழும் பி. மோகன் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பிணி பிடித்தவர்போல், பித்துபிடித்து அஞ்சாநெஞ்சருக்கு ஆபத்பாந்தவனாக தொடைதட்டி உடன்பிறப்புகளை உசுப்பிவிட்டுள்ளார். இதற்கு அண்ணாவையும் துணைக்கழைத்து தேர்தல் களம் காண அல்ல மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராக போர்க்களம் புகுவதற்கு கூர் தீட்டியுள்ளார் கருணாநிதி.

இன்று முரசொலியில் "பூச்சாண்டி பொம்மை" என்ற தலைபில் அவரது எழுதுகோல் சிந்திய மைக்கு எத்தனை பேர் இரத்தம் சிந்த வேண்டியிருக்குமோ? அல்லது எத்தனை உயிர்கள் இதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்குமோ? என்றே எண்ணத் தோன்றும் யாருக்கும்! எப்போதெல்லாம் இவர்கள் அரசியலுக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் அண்ணாவை துணைக்கு அழைப்பது வாடிக்கை! தோற்றால் பெரியார் வழி! வெற்றி பெற்றால் அண்ணா வழி என்று முழங்கிய கருணாநிதி எத்தனைமுறை தோல்வி கண்டாலும் உடன்பிறப்புகளின் கட்டளைக்கு இணங்க பணியாற்றுவதாக பிதற்றும் நவீன தசரதனாய் உலாவருபவர்தானே! ஆனால் இப்போது அண்ணாவை துணைக்கு அழைத்திருப்பது அஞ்சாநெஞ்சருக்கு ஆலவட்டம் சூட்டுவதற்காக. இதற்காக தங்களது உடன்பிறப்புகளை தியாகத்திற்கு அறைகூவி அழைக்கிறார்! எதற்காக அழகான தோட்டத்தில் மாங்கனிகளை பறிப்பதற்காக, பூக்களை கொய்வதற்காக அல்ல! தேர்தலில் போட்டியிடும் மகன் வெற்றியை ஈட்ட திருமங்கலத்தில் செய்திட்ட திருகுதாளங்களுக்கு தடையேதும் வந்தால் அவற்றை எப்படியேனும் முறியடித்திடுங்கள் என்ற அழைப்புதான் கருணாநிதியின் உணர்வில் கலந்து உடன்பிறப்புகளுக்கு கட்டளையாய் பிறப்பித்திருக்கிறது "பூச்சாண்டி பொம்மை".

கருணாநிதியின் அறிக்கையைப் பாருங்கள்! மிகுந்திருக்கும் கவலை நாட்டைக் காப்பதற்காக அல்ல. அழகிரியை காப்பதற்காக என்று தெரியும்!

"அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா அச்சமாக இருக்கிறது! போட்டிக்கு நாள் குறிப்பதற்கு முன்பே புஜங்களைத் தட்டிக் கொண்டல்லவா; பொய்ப் புகார்களை அடுக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்; வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!

அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும். "இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே'' என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது."


வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள் என்று அவதூறுகளை அள்ளி வீசியிருக்கும் இந்த பட்டா கத்தி பைரவர்களின் சுயமுகம் உள்ளாட்சித் தேர்தலில் நாறிப்போனதை நாடறியும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலல்ல - உள்ளாட்சித் தேர்தலில் பட்டாக் கத்திகள்தானே வாக்காளர்களாய் மாறியது.


ஜனநாயகத்தின் காவலராய் வேடம் பூண்டிருக்கும் கருணாநிதியின் கபட வேடம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவன் உதயகுமாரின் வடிவில் தமிழக மக்களின் கண்முன் எப்போதும் நிழலாடிக் கொண்டேயிருக்கும். "டாக்டர்" கலைஞர் என்பதற்கு பின்னாள் மறைந்திருக்கும் உதயகுமாரின் "தியாகத்தை" நாடறியும். பெற்றவர்களையே விற்றவர்களாக்கிய கருணாநிதி வங்கத்தில் துப்பாக்கி ஏந்தி வாக்கு சேகரிப்பதற்காக சிந்துபாத் கதை கூறுவதை பாலகரும் நகைப்பர்.


மத்தியிலே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் கூட்டாளியாய் இருந்த ஆட்சியாளர் கருணாநிதி மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது வாக்குபதிவு அதிகாரிகள் உட்பட வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நடத்தப்பட்டதும், நான்கு நாள் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டு பகுதி பகுதியாய் நடத்தப்பட்டபோதும் துப்பாக்கியேந்திய வாக்கு சேகரிக்கும் தொண்டர்களையோ அல்லது வாக்குப் பெட்டிகளை கடத்திச் செல்லும் அஞ்சாநெஞ்சர்களையோ காண முடியவில்லை தேர்தல் கமிஷனால். அவர்கள் காணாததை கருணாநிதி கண்டு விட்டார் என்றால் அவரது கண் நல்லகண்தான்!


சென்னை மாநகர தேர்தல் உட்பட உள்ளாட்சி தேர்தல் களம் அஞ்சாநெஞ்சர்களின் அடியாட்களால் அமர்க்களமாய் நடத்தியதை தமிழகம் அறியும். அதற்கு விலை கொடுக்க தற்போது தமிழக மக்கள் தங்களது புத்தியை கூர் தீட்டிக் கொண்டுதான் உள்ளார்கள். சென்னையிலேயே ஓட்டை ஏற்பட்டு 14-ல் 7 தொகுதி காணாமல் போன கருணாநிதிக்கு மதுரையில் அழகிரியின் டெபாசிட் காணாமல் போகுமோ என்ற அச்சத்தால் வந்த எச்சம்தான் அந்த அறிக்கை.

அடுத்து கூறுகிறார் கருணாநிதி, "மதுரையில் சங்கரராக நின்று சவுராட்டிரர்களின் வாக்குகளைப் பெற்றிட அள்ளிக் கொட்டிய வெள்ளிப்பணம் பற்றித் தெரியாதா யாருக்கும்-அந்தத் தொகுதியில் மனம் கூசாமல் இஸ்லாமியர் வாக்குகளைப் பெற்றிட குல்லாய் அணிந்து சென்ற காட்சியை மதுரை மக்கள் தான் மறக்க முடியுமா?"

தேர்தலுக்கு தேர்தல் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தையும், கள்ளப் பணத்தையும், ஸ்பெக்ட்டிரம் ஊழல் பணத்தையும், ஏன் வீராணம் பணத்தையும் கூட விட்டு வைக்காமல் தண்ணீராய் செலவழிக்கும் கட்சியெது என்று தமிழக தாய்மார்கள் அறிவார்கள்! குல்லாய்களை மட்டுமல்ல, சிலுவைகளையும் சுமந்து காவடி தூக்கி பா.ஜ.கவுக்கு வெஞ்சாமரம் வீசி, குஜராத் பாசிச படுகொலைகளை கண்டிக்காமல் மவுனம் காத்து இந்துக்களின் ஓட்டுக்களை பத்திரமாய் காத்திட அத்வானியையும் - வாஜ்பாயையும் - மோடியையும் காவடியாய் சுமந்த கதையை நாடு அறியும். பதவிக்காய் குல்லா போடுபவர்கள் யாரென்று! நாய் கவிதை பாடி நட்பு பாராட்டிய உலகத் தமிழனின் ஒப்பற்ற பிரதிநிதியாரென்று உலகத் தமிழர்களுக்கு நன்றய் தெரியும்! கூடா நட்பின் பிரதிநிதி கருணாநிதியே என்று!

பாவமாம் அஞ்சாநெஞ்சர். மதுரையில் அவரது கைங்கரியம் மதுரை மக்கள் நன்றாக அறிந்தது தானே! அட்டாக் பாண்டியனும் - அஞ்சாநெஞ்னும் ஒரே உரையில் உள்ள இரு கத்திகளென்று. தினகரன் பத்திரிகையில் கொலையுண்ட 3 பத்திரிகையாளர்களுக்கும், தினகரன் ஊழியர்களுக்கும் அட்டாக்பாண்டியனை ஏவிய கை எதுவென்று தெரியாதா? முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணனின் கொலைக்கு பின்னணியில் இருந்தவர் யாரென்று போலீசாருக்குத்தான் தெரியாதா! 59வது வட்ட மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியின் கொலைக்கு பின்னிருந்த - ஊக்கம் கொடுத்த அஞ்சாநெஞ்சன் யார் என்று தெரியாதா?


மதுரை மக்களே வாக்களியுங்கள் உங்களிடம் வாக்கு எனும் கூர்மையான ஜனநாயக வாள் இருக்கிறது. அதனை தைரியமாக பயன்படுத்துங்கள் ஜனநாயகம் தழைத்திட, மதுரையை காப்பாற்றிட! பணத்தை வைத்து அரசியல் நடத்துபவர் மோகன் அல்ல! பணத்தை மட்டுமே வைத்து அரசியல் நடத்துபவர் அஞ்சாநெஞ்சரே! என்று உறக்கச் சொல்லும் மதுரை மக்களே உங்களது வாக்கு எதிர்கால சமூகத்தை நல்ல வழியில் செலுத்தப்போகும் துடுப்புச் சீட்டு.






April 04, 2009

பாரியை புதைத்த ஜெயமோகன்!


இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில், "திரிச்சூர் நாடக விழா" குறித்து எழுதியிருந்தார். அதில் பிரளயனின் “பாரி படுகளம்” நாடகம் நிகழ்த்தப்பட்டது குறித்து கடுமையாக தாக்கியிருந்தார். அப்போதே அது ஒரு நேர்மையான விமர்சனமாக இருக்க முடியாது என்று கருதினேன். இருப்பினும் "பாரி படுகளம்" நாடகத்தை பார்க்காததால் அது குறித்து எதுவும் சொல்ல முடியாமல் இருந்தேன். அதே காலத்தில் வெளியான "விசை" இதழில் எழுத்தாளர் பிரபஞ்சன், இந்நாடகத்தை, "தமிழ் நாடகப் பரப்பில் முக்கிய நாடகம்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஒரே மாதிரியான பார்வையை வெவ்வேறு எழுத்தாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், தற்கால உலகில் உருவாகியுள்ள சிறப்புமிக்க இந்நாடகம் குறித்து ஜெயமோகன் வைத்துள்ள விமர்சனங்களை வெறும் "கழிவு" என்று சுருக்கமாக சொல்லலாம். எழுத்தாளுமை என்பது இலக்கிய உலகையும், மனித குலத்தையும் வாழ்விப்பதற்கான ஆயுதமாகவே கருதுகிறேன். இந்த விதிக்கு அந்நியமாகிவிட்டார் ஜெயமோகன்.
கடந்த வாரம், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்த்தப்பட்ட "பாரி படுகளம்" நாடகத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த பார்வையாளர்களின் கைத்தட்டலும், பாராட்டும் ஜெயமோகனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அவர் காதுகளுக்கு கேட்டிருந்தால் இன்னும் சற்று வயிற்றெறிச்சல் பட்டிருக்கலாம். இந்த நாடக நிகழ்விற்கு பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி, சுதந்திரப் போராட்ட வீரர் என். சங்கரய்யா, நடிகர் நாசர், ஐஐடி பேராசியர் வசந்தா கந்தசாமி. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறித்துதா காந்தி உட்பட பல முக்கிய ஆளுமைகள் கலந்துக் கொண்டனர்.

இப்போது களத்திற்குள் நுழைவோம். பாரி படுகளம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற சம்பங்களை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக இந்த மூவேந்தர்களுக்கு மத்தியில் அறம் பொருந்திய ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தான் பாரி. பாரியின் நாடு பறம்புமலை. இந்த மண்ணில் இயற்கைச் செல்வத்திற்கு எந்த குறையும் இல்லை. இதனாலேயே இச்சிறு நாட்டின் மீதும், இதனை ஆண்டு வந்த பாரி மன்னன் மீதும் ஒரு கண் வைத்திருந்தனர் மூவேந்தர்கள். பாரி பறம்பில் உயிர்கள் அனைத்தும் தம்போலவே நேசிக்கப்படுகின்றன. எந்த உயிர்களுக்கும் யாரும் கெடுதல் ‍ெசய்வதில்லை. ஏன் பறம்பில் உள்ள மரங்களைக் கூட யாரும் வெட்டுவதில்லை. அந்த அளவிற்கு மக்கள் இயற்கையை நேசித்தனர். அவற்றோடு ஒன்றி வாழ்ந்தனர். மக்கள் ஒருவருக்கொருவர் அறத்தோடும், திறத்தோடும் வாழ்ந்தனர். பெண்களை பெரிதும் மதித்தனர் பறம்பு மக்கள். பறம்பின் சிற்றரசனான பாரிக்கு அங்கவை, சங்கவை என்று இரு பெண்கள் இருந்தனர். அவர்களும் வில் வித்தை முதல் வாள் வித்தை வரை அனைத்தும் கற்றிருந்தனர்.

பறம்பு மலையை நோக்கி வரும் கலைஞர்களுக்கு பரிசுகளை அள்ளி அள்ளி வழங்கினான் பாரி. முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்பார்களே அதுபோல அந்த அளவிற்கு வாரி வழங்கினான். ஏன் பாரியிடம் வந்து உனது நாட்டை கொடுத்துவிடேன் என்றுக் கேட்டால் கூட கொடுத்துவிடுவான் என்று கூறுமளவிற்கு அவனது கொடைத்திறன் இருந்தது.

இப்படிப்பட்ட பறம்பு நாட்டையும், பாரி மன்னரையும் மூவேந்தர்கள் கிஸ்தி கட்டச் சொல்லுகிறார்கள். வியாபாரம் செய்வதற்கு தங்களை அனுமதிக்கச் சொல்லுகிறார்கள், மரங்களை வெட்டிச் செல்வதற்கு கூட அனுமதி கேட்கின்றனர் அந்நிய நாட்டினர். இதனால் கொதித்தெழுகிறான் பாரி மன்னன். மரத்தையா‍? வெட்டச் சொல்லி கேட்கிறீர்கள். முடியாது மரங்கள் எங்களது உயிர்களைப் போல என்று நேசிக்கிறோம் என்று கூறி அவர்களை உடனடியாக வெளியேற்றுகிறான். இப்படியான பாரி மன்னனின் திறமைகள் எட்டுத்திக்கும் பரவுகிறது. இவரது பெருமைகளை புலவர் கபிலர் தனது பாடல்களில் அழகாக வடிக்கிறார். இறுதியில். மூவேந்தர்களும் பறம்பு நாட்டின் மீது போர்தொடுத்து அபகரிக்க திட்டம் போடுகின்றனர். இந்தச் செய்தி பறம்பு மன்னருக்கு தெரியவரும்போது துடித்துப் போகிறான் பாரி. எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற நம்மீதா போர் என்று பொங்குகிறான், உலகத்தில் போரே ‍இருக்கக்கூடாது என்று வலியுறுத்தும் நம் மீதா போர் என்று சினத்துடன் கேட்கிறான். சிறுங்குடி என்றும் பெருங்குடி என்றும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது வெட்கக்கேடானது. இந்த விதியே இவ்வுலகில் இருக்கக்கூடாது என்று சொல்லும் பாரி. நாம் போரை விரும்பவில்லை இருப்பினும் நம் மீது போர் திணிக்கப்பட்டால் எம் மக்களே அதனை சந்திப்பார்கள் என்று கூறுகிறான்.

இதற்கிடையில் பறம்பு மலையை மூன்று புறமும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் படை தாக்கத் தொடங்குகிறது. சிற்றரசாக இருந்தாலும் அந்த நாட்டு மக்கள் தமது மண்ணைக் காப்பதற்காக வீரத்துடன் போரிடுகின்றனர். எதிரி நாட்டுப் படைகள் சிதறுகிறது. ஆகா இந்த சிறுகுடிய வெல்வதற்கு நாம் இவ்வளவு படை வீரர்களை இழக்க வேண்டியிருக்கிறதே என்று தங்களுக்குள் புலம்புகின்றனர் மூவேந்தர்கள். அதற்குள் இந்த மூன்று பேருக்கும் பறம்பு மலை வெற்றி கொண்டால் யார் யாருக்கு என்ன வேண்டும் என்று பங்கு போடத் துடிக்கின்றனர். இயற்கை வளம் கொண்ட நாட்டில் எந்த பாகம் தமக்குரியது என்ற சண்டைகள் சர்ச்சைகளாக மாற. சோழ மன்னன் குறுக்கிட்டு முதலீல் பாரியை வெற்றிக் கொள்வோம் பின்னர் பங்கு குறித்து விவாதிக்கலாம் என்று கூறி போரை தீவிரப்படுத்தி பாரி நாட்டை சூறையாடி வெற்றிக் கொள்கின்றனர். இதில் மூவேந்தர்களால் பாரி படுகொலை செய்யப்படுகிறான். படுகொலை செய்யப்பட்டு குற்றுயிரும், குலையுருமாக இருக்கும் பாரியை காண வரும் புலவர் கபிலரிடம் பாரி பேசும் வசனங்கள் நெஞ்சை உருக்குவதாக அமைகிறது. உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும், உலகில் இனிமேல் சிறு நாடு, பெரு நாடு என்ற பேதம் கூடாது, போரில்லா உலகம் வேண்டும் என்று கூறுவதோடு, நாங்கள் என்ன தவறு செய்தோம். எதற்காக இந்தப் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது, எங்கள் மக்கள் ஏன் கொல்லப்பட்டனர் என்ற கேள்விகள் இன்றைக்கு ஏகாதிபத்திய அத்துமீறல்களை கண்முண்னே நிறுத்துவதாக உள்ளது.

காலம்தான் மாறிக்கொண்டே இருக்கிறதே தவிர காட்சிகள் மாறவில்லை. அன்றைக்கு மூவேந்தர்கள் என்றால். இன்றைக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்தியங்கள் ஈராக்கை சூறையாடியதையும், ஆப்கானை நிர்மூலமாக்கியதையும் நினைவுக்கு கொண்டு வருகிறது.

இந்தப் பாரியிடம் வந்து இந்த நாடு தேவை என்று கேட்டிருந்தால் கூட வாரி வழங்கியிருப்பானே என்று ஒரு கட்டத்தில் மூவேந்தர்களிடம் கபிலர் கூறுவதும், உங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்போது எதற்காக இந்தப் போர்? என்று அந்த மூவேந்தர்களை கபிலர் கேட்பார். ஒரே ஒரு காரணம் சொல் என்று சொல்லும் போது. நீங்கள் எல்லாம் தமிழர்கள் - ஒரே தாய் மொழியை பேசுபவர்கள் அப்படியிருக்கும் போது எதற்காக இந்தப் போர் என்று வினவுவார். இருந்தாலும் பறம்பை அபகரிப்பதில் மூவேந்தர்கள் உறுதியாக இருந்தனர்.

இறுதியில் தனது மகள்களான அங்கவையும், சங்கவையும் கபிலரிடத்தில் ஒப்படைத்து விட்டு வீரமரணம் அடைகிறான் பாரி.

இதுதான் "பாரி படுகளத்தில்" கதை கரு. இதில் ஒரு நாடு இன்னொரு நாட்டை உளவு பார்ப்பதும் அதில் அந்துவன் ஜாத்தா போன்ற போர்க்காலத்தில் பிடிக்கப்பட்ட தாயின் வயிற்றில் பிறந்தவன் உளவாளியாக இருப்பதும் சரியானதா? என்ற கேள்வியை எழுப்பி. அவனை கொல்ல உத்தரவிடுவதும். அந்துவன் ஜாத்தாவை அவனது நன்பனே கொல்லுவதும். மன்னர்களின் ஓயாத பொழுது போக்கு நிகழ்ச்சிகளும்... எப்படி அர்த்தமற்றவைகளாக இருந்தன என்பதையெல்லாம் இந்த கதையில் நாடகமாக்கப்பட்டுள்ளது சிறப்பான முறையில்.

தமிழக கல்விச் சூழலில் "பாரி வள்ளல்" என்றும் "முல்லைக்கு தேர் கொடுத்தான்" பாரி என்ற அளவிலே மட்டுமே போதிக்கப்படுகிறது. பாரியின் ஆட்சி குறித்தோ, அவன் மூவேந்தர்களால் படுகொலை செய்யப்பட்டது குறித்தோ எடுத்துரைப்பது இல்லை. இதனாலலேய நமது மாணவர்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் பற்றிய அறிவு மங்கிப்போயுள்ளது. கல்வித்துறை செய்ய வேண்டியதை பிரளயனும், பாண்டிச்சேரி நிகழ்கலை மாணவர்களும் செய்துள்ளது வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றே இதனை கூறலாம்.

மொத்தத்தில் கடந்த கால அரசியலை - நிகழ்வை பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தும் போது நிகழ்கால நினைவுகள் அப்படியே உயிர்ப்பித்து நிற்பதையும், ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பை நாம் பெற வேண்டும் என்ற உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்துவதும் இந்த நாடகத்தின் மிகச் சிறப்பான வெற்றி என்று கூறலாம். உண்மையிலேயே இந்த கதையை கருவாக்கி, நாடகமாக்கி இயக்கிய பிரளயன் பாராட்டப்பட வேண்டியவர்.

அடுத்து இந்த நாடகத்தில் நடித்தவர்கள் எல்லாம் பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை மாணவர்கள். எம்.ஏ., பி.எச்.டி., எம்.பில்., படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே இதில் பிரதான நடிகர்கள். இவர்கள் எல்லாம் புரபஷனல் நடிகர்கள் அல்ல. தற்போது இவர்கள் பயிலும் கல்வித் தொடர்பான பயிற்சியின் வெளிப்பாடாகத்தான் இந்த நாடகத்தில் நடித்துள்ளனர். இந்த நடிகர்களில் ஒவ்வொருவரும் ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள், நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதலான சிறப்பு. குறிப்பாக சிங்கள மாணவரும், இலங்கை தமிழ் மாணவரும் சேர்ந்து நடத்திய நாடகமே பாரி படுகளம். பங்களாதேஷ், பாகிஸ்தான், கேரளம், அசாம், வங்காளம் என்று இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இந்த பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள்தான் இந்த பாரி படுகளம் தமிழ்நாடகத்தை அரங்கேற்றி சாதனைப் படைத்திருக்கிறர்கள். இவர்கள் யாருக்கும் தாய்மொழி தமிழ் அல்ல. தமிழே தெரியாது. இருந்தாலும் இவர்களது ஊக்கமான முயற்சியின் விளைவாக அழகான தமிழ் வசனங்களை சிறப்புடன் எடுத்துரைத்தனர். இப்படி பல சிறப்புககளை உள்ளக்கிய நாடகமே பாரி படுகளம். மொழி தெரியாதவர்களுக்கு, தங்களது கலாச்சாரத்திற்கு அந்நியப்பட்டு அல்லது தெரியாத ஒரு விசயத்தை முதலில் உணர்வுபூர்வமாக அந்த நடிகர்கள் உள்வாங்கிக் கொண்டு நடிப்பது என்பது அபூர்வமான ஒன்று. இத்தகைய சிறப்பு மிக்க நாடகத்தை பற்றிதான் ஜெயமோகன் ஓலம் விட்டிருக்கிறார். இனி அவரது கூற்றுக்களை பரிசீலிப்போம்!

"சிலசமயங்களில் தமிழனாக இருப்பதற்காகவே வெட்கி கூசிச்சுருங்கும் தருணங்கள் நமக்கு உருவாகும். அதில் ஒன்று இந்நாடகத்தை அரங்கில் கண்டது. அபத்தத்தின், கற்றுக்குட்டித்தனத்தின், உச்சமான கேலிக்கூத்து என்று இந்நாடக நிகழ்த்துதலைச் சொல்லவேண்டும். எந்தவித பயிற்சியும் இல்லாத நடிகர்கள் வசனங்களை நினைவு கூர்ந்து நிறுத்தி நிறுத்தி ஒப்பித்தார்கள். செயற்கையாக கைகால்களை ஆட்டினார்கள். சம்பந்தமில்லாமல் விளக்குகள் எங்கோ எரிந்தன. நாடகத்தில் தோன்றிய ஒருவருக்காவது நாடகம், நடிப்பு என்பதைப்பற்றிய அடிப்படை புரிதல் இருப்பதாகத்தோன்றவில்லை. பள்ளிக்குழந்தைகள் போடும் நாடகங்கள் கூட எவ்வளவோ மேல்."

மேற்கண்ட நாடகத்தை பார்த்ததற்காக ஜெயமோகன் தமிழனாக இருப்பதற்கு வெட்கம் அடைகிறாராம்! அத்துடன் இந்த சிறப்பு மிகு நாடகத்தை கற்றுக்குட்டித்தனத்தின் உச்சம் என்று வர்ணிக்கிறார்.

"மீனை கொடுக்காதே மீன் பிடிக்க கற்றுக் கொடு என்பார்கள்" தமிழில். அதாவது ஒருவர் தானே உழைத்து சாப்பிட கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இதன் உள்ளடக்கம். அதுபோல ஆரம்பநிலை மாணவர்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த செவ்வியல் நாடகத்தில் சில குறைகள் இருந்திருக்கலாம். அதற்காக இந்த நாடகம் எதற்குமே லாயக்கு இல்லை என்று சொல்லுவது விமர்சனமா? விதண்டாவாதமா? வயிற்றெறிச்சலா? மண்ணைப் பிடித்தால்தான் அது பிள்ளையாராகும். ஜெயமோகன் உங்களது வாதம் பிள்ளையார்களையெல்லாம் சிதைத்து மண்ணாக்கத்தான் உதவிடும்.
அடுத்து அவர் கூறுவதை பாருங்கள்.

"அவையில் இருப்பது என் உடம்பில் அமிலத்தை ஊற்றியது போலிருந்தது. அரங்கில் எழுந்த கேலிச்சிரிப்பு , முன்வரிசையில் என்னருகே இருந்த நாடகக்காரர்களின் நக்கல்கள்….எதற்காக இதை கொடுமையைச்செய்கிறார்கள்? நான் பார்க்கும் பிரளயனின் முதல் நாடகம் இது. இந்த அபத்தத்தைத்தான் இவர் இத்தனைகாலமாக செய்துவருகிறாரா? இந்தக்கோராமையை ஒரு சர்வதேச நாடகவிழாவுக்குக் கொண்டுவரக்கூடாது என்ற ஓர் அடிப்படைப்புரிதல்கூடவா இவருக்கு இல்லை? வாழ்நாளில் ஒரு நல்ல நாடகம்கூடவா இவர் பார்த்தது இல்லை?"

முதலில் தமிழனாக இருப்பதற்கு கூசுவதாக கூறியவர். அந்த அவையில் இருந்ததற்காக உடலில் அமிலத்தை ஊற்றியது போல் உணர்ந்துள்ளாராம்! உண்மையான உணர்வாளர்தான் இந்த ஜெயமோகன். அதைவிடக் கொடுமை அடுத்த வரியைப் பாருங்கள் பிரளயனின் முதல் நாடகத்தை மட்டுமே பார்த்த இந்த கோணங்கி. இந்த அபத்தத்தைத்தான் இவ்வளவு நாளா செய்திருக்கிறாரா என்று குத்தலாக வெம்பியிருக்கிறார். ஜெயமோகன் தமிழகத்தில் இன்றைக்கும் நாடகக் கலை அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது என்றால் பிரளயன் போன்ற வீதி நாடகக் கலைஞர்களால்தான் அது சாத்தியப்பட்டுள்ளது. இன்றைக்கும் மக்கள் பாதிக்கும் பிரச்சனைகளை, அன்றாடம் சந்திக்கும் நெருக்கடிகளை வீதி நாடகமாக்கி அவர்களை உணர்வுமிக்க அரசியல் சக்தியாக்கி வருகிறது இத்தகைய வீதி நாடகங்கள். உங்களைப் போன்ற மேல்தட்டு வர்க்கத்திற்கு உப்பரிகையில் உட்கார்ந்துக் கொண்டு கூத்தடிக்கும் நாடகம்தான் நேர்த்தியான நாடகமாகத் தெரியும். தமிழ் மக்கள் எதுவும் தெரியாத மக்கள்‍, ஏன் கல்விகூட எட்டாத எம் மக்களை இந்த வீதிநாடகம்தான் இன்றைக்கும் வசீரிக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. அவர்களையும் பங்‍கேற்பாளராக மாற்றுகிறது. தரையில் கால்படாத ‍ஜெயமோகன், காலை வைத்த உடனேயே ச்சூ ச்சூ மாரி... என்று புலம்பது அர்த்தமுள்ளதாகவே அறிகிறோம்.

ஜெயமோகனின் அடுத்த புலம்பலைப் பாருங்கள், "என்னால் ஆற்றிக் கொள்ளவே முடியவில்லை.ஆருண்மொழியைக் கூப்பிட்டேன் .ஒவ்வொரு நண்பராகக்கூப்பிட்டு அங்கலாய்த்தேன். திருவண்ணாமலை பவா செல்லத் துரையைக் கூப்பிட்டு புலம்பினேன். ”இப்படி கேவலப்படுத்த வேண்டுமா பவா? முற்போக்கு இலக்கியத்திலேயே தமிழில் எத்தனை நல்ல ஆக்கங்கள் வருகின்றன? இவரா தமிழின் பிரதிநிதி?” என்றேன். வசந்தகுமாரிடம் சொன்னேன். ”அப்டித்தான் ஜெயன் , நம்ம நாடகம் அந்த லெச்சணத்திலேதான் இருக்கு. முருபூபதி இன்னும் கேவலமா போடுவார். இப்ப அவர் டெல்லி போயிருக்கார். விடுங்க தமிழனோட தலையெழுத்து"

தமிழ் இலக்கியத்தில் எத்தனையே நல்ல ஆக்கங்கள் வருகின்றனவாம்! இந்த ஆக்கம் சரியில்லையாம் அல்லது தகுதியானது இல்லையாம்! பாருங்கள் அந்த மோதாவியின் மேதாவிலசத்தை. பாரி படுகளத்தின் கதை குறித்தோ அல்லது அந்த கதையின் தகுதியின்மை குறித்தோ எந்தவிதமான ஆரோக்கியமான விமர்சனத்தையும் முன்வைக்கத் தயாரில்லாத ஜெயமோகன் தமிழில் எத்தனையோ சரியான ஆக்கங்கள் வருகிறது என்று போகிற போக்கில் இதனை எருமை மாடுகளைப் போல நெட்டித் தள்ளி விட்டுப் போகிறார்! ஒருவேளை அவரது பார்வையில் ஹரிஹர சங்கரா என்று நாடகம் போட்டிருந்தால் கைகொட்டி, பல்தெரிய ஆஹா... என்று சிரித்திருப்பார். இவரது சனாதன தத்துவப் பார்வைக்கு இந்த கதை பொருந்தவே பொருந்தாதுதான்! அதைவிடக் கொடுமையானது போகிற போக்கில் முருகபூபதி குறித்தும் இடித்துரைத்திருப்பது. ஜெயமோகன் சிந்தனைப்பூர்வமான எழுத்தாளராக அல்லது சீழ்வடியும் சிந்தனையாளரா என்பதை அவரது மேற்கண்ட எழுத்துக்களே சாட்சியமாய் நிற்கிறது.

இறுதியாக அவர் இவ்வாறு முடித்திருக்கிறார். "பிரளயன், தங்களிடம் கைகூப்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழில் எழுதுபவன் என்ற முறையில். உண்மையிலேயே உங்கள் நலன் நாடுபவன் என்ற முறையில். தயவுசெய்து தமிழ்நாட்டைவிட்டு வெளியே போய் நாடகம்போடாதீர்கள். இடதுசாரி அமைப்புகளுக்கும் ஒருவிண்ணப்பம் . தயவுசெய்து இனிமே சிபாரிசுகள் செய்யும்போது வேறு யாரையாவது சொல்லுங்கள்."

அன்றைக்கு ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டியது போல் நவீன துரோணராக மாறி பிரளயனை கைகூப்பி மன்றாடி கேட்டுக் கொள்கிறாராம் இதுபோல நாடகங்களை இயற்றாமல் இருக்கச் சொல்லி. அதாவது, அழகு என்பது வெளியில் இல்லை உள்ளத்தில்தான் இருக்கிறது என்பார்கள். ஒழுகுகிற மூக்கும், மூளி குழந்தைகளும், தலைவாறாத எண்ணைய் வடியும் கருப்பு முகத்துடன் இருக்கும் குழந்தைகள்கூட அதன் தாய்க்கும் அதன் மக்களுக்கும் அழகானதுதான் ஜெமோகன். காக்கை கருப்பாய் இருந்தாலும்கூட அதற்கு அது பொன் குஞ்சுதான். ஜெயமோகனின் விமர்சனம் சுகந்தமானதல்ல, சுரத்தில்லாதது. அன்றைக்கு மூவேந்தர்களால் பாரி அழிக்கப்பட்டான் என்றால் இன்று ஜெயமோகனால் பாரி மீண்டும் புதைக்கப்பட்டுள்ளான்.
ஜெயமோகன் குறித்த முந்தைய கட்டுரை

April 01, 2009

அத்வானியின் புதிய இந்துத்துவா!

பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி ஒவ்வொரு நாளும் ஆர்எஸ்எஸ்-இன் கோலாட்டத்திற்கு குரங்காட்டம் போட்டு வருகிறார். வருண்காந்தியின் முகத்தை காட்டி இந்து வாக்காளர்களை கவர திட்டம் போட்ட பாஜக அவரை கம்பி எண்ண வைத்துவிட்டது.
தற்போது அத்வானி வருண்காந்தி விட்ட இடத்திலிருந்து இந்துத்துவா ரிலேவை தொடங்கி வைத்துள்ளார். ஒரே மாற்றம் இது "புதிய இந்துத்துவா"! பழைய இந்துத்தவா மோடியின் முகத்தை அணிந்துக் கொண்டதால், புதிய இந்துத்துவா காந்தியின் முகத்தை தேடுகிறது. இதுதான் அத்வானியின் புதிய கணக்கு.
நேற்று (மார்ச் 31) புதுதில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அத்வானி, "பல கட்சிகளை எங்கள் பக்கம் ஈர்க்க கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் சொல்லும் ஹிந்துத்துவா என்பது மதம் சார்ந்தது அல்ல, தேசியம் சார்ந்தது." என்று கொள்கை விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் அவர் என்ன வருகிறார் என்று கூர்ந்து நோக்கும் அரசியல் விமர்சகர்களுக்கு ஒரு விசயம் தெளிவாக புரியும். இந்தியாவில் உள்ள பல மதச்சார்பற்ற கட்சிகளுக்கு பாஜகவின் இந்துத்துவா புளித்து விட்டது. அதனால் இந்த தேர்தலில் ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று "டூ" விட்டு விட்டனர். அதைத்தான் மேற்கண்டவாறு அத்வானி இவ்வளவு பவ்வியமாக விளக்கியுள்ளார். அத்துடன் அவர் மேலும் அழுத்தமாக கூறியிருக்கும் விசயம் என்ன என்று பார்த்தால், சங்பரிவாரத்தின் உயிர்நாடியான இந்துத்துவா கொள்கையை நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்பதுதான் அதன் அர்த்தம்.
சரி, இவர்களின் இந்துத்துவா என்றால் என்ன என்று சங்பரிவார கும்பல்கள் ஒவ்வொருவரும் ஒரு விளக்கத்தை கொடுப்பார்கள். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் இந்துத்துவா குறித்து கூறும்போது, "இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை." என்று கூறியிருப்பதி லிருந்தே அது எவ்வளவு உயர்ந்த தத்துவம் என்பதை உணர முடியும்.
உண்மையில் இவர்களது இந்துத்துவா என்பது இவர்களின் தத்துவார்த்த குருவான கோல்வால்கரின் இந்துத்துவாதான்: இந்த கோல்வால்கர் யாருடைய சீடர் தெரியுமா? உலகையே ஆளப் பிறந்த அரிய இனம் என்று கொக்கரித்து யூதர்களை நரவேட்டையாடிய ஹீட்லரின் சீடர். ஹீட்லரிடம் இருந்து கடனாக பெற்ற கொள்கைதான் இந்துத்துவா, அது நாஜீயிசம் என்றால் இது இந்துத்துவாயிசம். அது யூதர்களை வேட்டையாடியது என்றால் இவர்கள் இசுலாமியர்களை வேட்டையாடினார்கள். தற்போது கிறித்துவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடுவார்கள். மொத்தத்தில் நமது பாரம்பரியமான மதச்சார்பற்ற பாரம்பரியத்தையும், சகிப்புத்தன்மையையும், மனிதாபிமானத்தையும் வேட்டையாடுவார்கள். இவர்களது இந்துத்துவாவில் வேற்றுமையில் ஒற்றுமையில்லை. இந்துத்துவா என்ற குடுவைக்குள்தான் எல்லாம் அடக்கம். இந்தச் சிந்தனைக்கு உடன்படாதவர்கள் இந்தியத்திற்கு எதிரானவர்கள் - பாரதீயத்திற்கு எதிரானவர்கள் என்று அழித்தொழிக்கப்படுவர். இதைத்தான் அத்வானி இந்த தேர்தல் காலத்தில்கூட மறக்காமல் தான் ஆர்.எஸ்.எஸ். சீடன்தான் என்று தனது சங்பரிவார கும்பலுக்கு நம்பிக்கையூட்டும் சிக்னல் தருகிறார். இவர் இவ்வாறு உண்மையான சீடனாக இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ். இவரை சீண்டி விடும் அல்லவா? அதுதான் இதுவும் என்று இருக்க முடியாது.
அதே பேட்டியில் அத்வானி கூறுகிறார்: "எங்கள் பக்கம் சிறுபான்மைச் சமூக மக்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் எங்களுடைய அரசியல் எதிரிகள் எங்களுக்குக் குத்தியிருக்கும் முத்திரைதான் ஹிந்துத்துவா." என்று.
அஹா... கோயபல்ஸ் புளுகு என்று கூறுவார்களே அது இதுதான். ஹீந்துத்துவா என்ற வார்த்தையை கண்டுபிடித்ததே நீங்கள்தானே. அதற்கு தத்துவார்த்த முலாம் கொடுத்து கழுவி சுத்தப்படுத்தி பத்திரப்படுத்தி வைத்திருப்பதும் நீங்கள்தானே அப்படியிருக்கும் போது ஏதோ எதிர் கட்சிகள் எல்லாம் இவர்களை இந்துத்துவா என்று முத்திரைக்குத்தி விட்டதாக அலறுவது ஏனோ? ஒரே விசயம் இதுதான். இந்துத்துவா என்றால் ஓட்டு கிடைக்காது! அதனால் பழியை எதிர் கட்சிகள் மீது போட்டு தப்பிக்க பார்க்கிறார் எதிர்கால பிரதமர்.
அடுத்து அத்வானி தனது கொள்கைக்கு ஆதரவாக யாரை துணைக்கு அழைக்கிறார் பாருங்கள், "தேசப்பிதா மகாத்மா காந்தி ""ராமராஜ்யம்'' அமைய வேண்டும் என்று விரும்பினார். அது மதம் சார்ந்த அரசு நிர்வாகம் அல்ல. தன்னை ""சனாதன ஹிந்து'' என்றே காந்தி அழைத்துக் கொண்டார்." என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது அத்வானியின் இந்துத்துவம் தற்போது காந்திய வடிவில் புதிய முகத்தை பெற முயற்சிக்கிறது. காந்தியின் ராமராஜ்யமும் - பாஜகவின் இந்துத்துவாவும் ஒன்றா? ஆர்எஸ்எஸ் இதை ஏற்றுக் கொள்கிறதா? பிறகு ஏன் மகாத்மாவை கோட்சே கொன்றான்? ராமராஜ்யம் அமைய வேண்டும் என்று கனவு கண்ட சனாதன இந்து பக்தரும், புல்லுக்கும் தீங்கு செய்யக்கூடாது என்று கருதும் சாத்வீ போராளியும் ஆன மகாத்மா தனது போராட்டங்களைக் கூட அகிம்சை வழியிலேயே மேற்கொண்டார். இத்தகைய எளிய உடம்மை சுதந்திரப் போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்த அந்த மாமனிதனின் உடலை சாய்த்தது இந்துத்துவாதானே - வீரசவர்க்கரின் மூளையில் உருவாகி, கோட்சேவின் துப்பாக்கிக்கு இரையாக்கியது உங்களது சங்பரிவார தத்துவமும் - பாசிச வெறித்தனம்தானே!
காந்தியின் ராமராஜ்யத்தில் வன்முறையில்லை; ஆனால் உங்களது இந்துத்துவா தத்துவமே வன்முறைகளை உயிர்ப்பிக்கும் ஆக்டோபஸ்தானே! அதனால்தானே குஜராத்தில் ஒரு மோடியும், கர்நாடகத்தில் ஒரு முத்தலிக்கும், ஒரிசாவில் லட்சுமணானந்த சாமியாரும் என்று இந்தியாவையே ரத்தகளறியாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இத்தகைய இரத்தக்கரையை வரலாற்றின் பக்கங்களிலிருந்து யாராலும் அகற்ற முடியாது. அதற்கு பாவமன்னிப்பும் யாராலும் வழங்க முடியாது! எந்த காந்தியின் பிறந்த குஜராத் மண்ணில் அவரையும், அவரது கொள்கைகளையும் குழிதோண்டி புதைத்தீர்களோ அப்போதே இந்தியாவில் காந்தியின் கனவான ராமராஜ்யத்தையும் அல்லவா சேர்த்துப் புதைத்தீர்கள், எரித்தீர்கள். இப்போது அதே காந்தியின் முகத்தை மோடிக்கும் - அத்வானிக்கும் பயன்படுத்த துடிப்பது ஆட்சிக் கட்டிலுக்காகத்தானே ஒழிய இந்த நாட்டிறக்காக அல்ல!
முஸ்லீம்கள் காந்தியை எதிர்த்தாக கூறி தனது நயவஞ்சக பிரச்சாரத்தை அத்வானி திசை திருப்பவும் இந்த நேரத்தில் தவறவில்லை. மகாத்மாவே இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிவது எனது இதயத்தைப் பிளப்பது போல் என்று கூறினார். அதற்காகவே ஆர்.எஸ்.எஸ். அவரைக் கொன்றது. பிரிவினையை விரும்பிய ஒரு பிரிவினரின் நம்பிக்கையின்மைக்கு அடிப்படையாக இருந்தது ஆர்.எஸ்.எஸ்.தானே ஒழிய மகாத்மா அல்ல. எனவே வருண்காந்தி இசுலாமியர்களின் தலையை எடுப்பேன் என்று பேசி தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கிறான். இந்தப் பேச்சிற்கும் தற்போது அத்வானி பேசியிருப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. இரண்டும் ஒன்றுதான், அதாவத தேர்தல் காலத்தில் கூட தனது மதவெறி அஜண்டா மூலம் மதவெறியைத் தூண்டி குளிர்காய நினைக்கும் ஓநாய்த்தனத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள். மாறாக சொந்த நாட்டு மக்களை எதிரிகளாக்க முனையும் இந்துத்துவாவுக்கு சாவு மணி அடிக்கத்தான் போகிறார்கள் இந்தத் தேர்தலில்! வாக்காளர்களே உஷார் இந்துத்துவா எச்சரிக்கை. ஜனநாயகம், மதசார்பின்மை காப்போம்!