December 31, 2005

பள்ளிக் கூடம் - சிறுகதை

பள்ளிக் கூடம்
சிறுகதை
முருகனது குடும்பம் நீலகிரியில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து 30 வருடமாகி விட்டது. முருகன் மாமா சிவனாண்டி சென்னைக்கு குடியேறியதைத் தொடர்ந்து அவனது தாயாரும் தன்னுடைய குழந்தைகளோடு சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

இன்னும்கூட முருகனுக்கு நீலகிரியின் வாசம் மறையவில்லை. பசுமையான மலைத் தொடர்களும், அடர்ந்த மரங்களும், தெளிந்த நீரோடைகளும் அவனது நெஞ்சத்தில் இடம் பெற்று விட்டது. திருமணம் முடிந்த அடுத்த ஆண்டிலேயே முருகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நம் தலைமுறையில் யாருமே படிக்கவில்லை. தன் பிள்ளையை சென்னையில் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணக் கனவு அவனை வாட்டிக் கொண்டிருந்தது.

குழந்தையின் வளர்ச்சியின் கூடவே அவனது கனவும் கூடிக் கொண்டே வந்தது. குழந்தைக்கு பெயர் வைப்பது, காது குத்துவது, மொட்டை அடிப்பது என குழந்தையின் முதல் பிறந்த நாள் வரை அத்தனைக்கும் விழா எடுப்பதற்கு தவறவில்லை.

எப்படியோ பையனுக்கு இரண்டரை வயதை தொட்டவுடனேயே அக்கம், பக்கத்தில் விசாரித்து சுமாரான பள்ளிக்கூடத்தில் தன் மகனை சேர்ப்பது என்று முடிவு செய்தான். பள்ளிக்கூடத்திற்கு சென்று பார்ம் வாங்கிக் கொண்டு வந்தான் முருகன். பள்ளி நிர்வாகி பிறந்த சான்றிதழையும், சாதிச் சான்றிதழையும் தவறாமல் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.

குழந்தையின் பிறந்த சான்றிதழை வாங்கி வைத்திருந்ததில் மகிழ்ச்சி கொண்ட முருகன், சாதிச் சான்றிதழ் வாங்க வேண்டுமே! இதை எப்படி வாங்குவது, எங்க வாங்குவது என விழிபிதுங்கினான்.

பக்கத்து வீட்டில் குடியிருந்த சாமியப்பனிடம் இது பற்றி கேட்க, ‘அட ஜாதி சட்டிபிகேட் தானே’, ‘அது ஒண்ணும் பெரிய விஷயமில்லிங்க, நம்ம டீ கடை கோவிந்தசாமி கிட்ட சொல்லுங்க, ஒரு நூற்றி ஐம்பது ரூபா கொடுத்தா எல்லாத்தையும் அவரே பாத்துப்பாரு...’ என்று கூறினார்.

‘முருகனும் எப்படியோ சர்டிபிகேட் வாங்கியாகணும், வேற வழியில்லை... நமக்கும் அங்கெல்லாம் அலைய முடியாது’ என்று மனதில் எண்ணிக் கொண்டே, டீ கடை கோவிந்தசாமியை பார்த்து விஷயத்தை சொன்னான்.

டீ கடை கோவிந்தசாமி இந்த விஷயத்தில், அந்த ஊர்லலே ரொம்ப பேம°. ‘சரி, சரி என்ன ஜாதின்னு கேட்டார்; ‘நாங்க மலை ஜாதிங்க, குருமன்°’-ன்ன சொல்லுவாங்க’; சரி, இதுக்கு ஏதாவது அத்தாட்சி வைச்சிக்கிறீயா? என்று கேட்டார் டீ கடை கோவிந்தசாமி.

‘எங்க வீட்ல யாரும் படிக்கிலீங்க... எங்கிட்டயும் வேற எந்த சர்டிபிகேட்டும் இல்லீங்க என்றார்... அப்பாவித்தனமாக. ‘என்னய்யா... நீ, சரி, இது இல்லாட்டி போகுது, உங்களுக்கு ஏதாவது இடம், கிடம் இருந்தா அந்த பத்திரத்தில எழுதியிருப்பாங்களே அதாவது இருக்கா?’ என்றார் டீ கடை கோவிந்தசாமி.

‘அண்ணே எங்களுக்கு நிலமிருந்தா நாங்க ஏன்னே சென்னைக்கு வர்றோம். அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்கண்ணே’ என்றான் முருகன்.

‘நல்ல கேஸூயா நீ...’

‘யோவ்... மலை ஜாதின்னா சர்டிபிகேட் தர மாட்டாங்கய்யா’ ஏண்ணே’, ‘நாங்களும் உங்களாட்டும் மனுஷங்கத்தானே!’

‘அது ஒண்ணும் இல்லையா... உங்க ஜாதின்னா கவுருமெண்டுல வேல்யூ அதிகம்... அதான் தர மாட்டங்கா. நீ மலைஜாதின்னு சர்டிபிகேட் வாங்கிட்டினா ஒம் பையனுக்கு படிப்பு, வேலை எல்லாத்துலையும் நிறைய சலுகை கிடைக்கும்...’

‘ஆனா...?’

இன்ண்னாணே! சரி நீ நாளைக்கு வா... ட்ரை பண்ணுவோம்...

‘யோவ் முருகா! இந்த சர்டிபிகேட் வாங்கணும்னா நிறைய காசு செலவாகும்ய்யா...’ ‘இண்னாணே கூட ஒரு நூறு ரூபா ஆவுமா!’

‘மண்ணாங்கட்டி! பத்தாயிரம் ரூபா ஆவும்யா...’

அதிர்ந்து போன முருகனுக்கு, கண்ணில் தண்ணீர் வரவில்லையே தவிர கோபமும், ஏமாற்றமும் முட்டிக் கொண்டு வந்தது.

மறு நாள் காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்ட முருகன், டீ கடை கோவிந்தசாமியை பார்க்கப் போனான்.

முதல் நாளே அப்ளிகேஷனையெல்லாம் தயாராக எழுதி வைத்திருந்த டீ கடை கோவிந்தசாமி, முருகனையும் கூட்டிக் கொண்டு வில்லேஜ் ஆபிசரை பார்த்து விஷயத்தை சொன்னார்.

‘ஏம்பா கோவிந்தசாமி! உனக்கு வேற கேஸே கிடைக்கிலியா?’ ‘என் வேலைக்கே உலை வைச்சிடுவ போலீருக்கே’ என்று கடுகடுப்பாக சொன்னார் வில்லேஜ் ஆபிசர்.

முருகனுக்கு ஒண்ணுமே புரியலை! ஜாதி சர்டிபிகேட் வாங்குறதுன்னா அவ்வளவு கஷ்டமா? பக்கத்து வீட்டு சாமியப்பன் நூத்து ஐம்பது ரூவாவுல முடிஞ்சிடும்னு சொன்னான்!

குழம்பிப்போன முருகன், படிக்காமப் போனது எவ்வளவு தப்பா போச்சு! என்று மண்டையில் அடித்துக் கொண்டான். தன்னை படிக்க வைக்காத அப்பா மேலயும் எரிச்சலாய் வந்தது. அவுங்க என்ன பண்ணுவாங்க... அந்த மலையில எங்க பள்ளிக்கூடம் இருந்தது! அரசாங்கமும் அத கண்டுக்கல....

டீ கடை கோவிந்தசாமி, வில்லேஜ் ஆபிசருக்கு ஒரு டீயை வாங்கிக் கொடுத்து, ‘எண்னன்ணே பண்றது? நீங்களே ஒரு வழி சொல்லுங்க... என்னை நாடி வந்தவங்களே நான் கை விட்டது இல்லை..., கையில காசு வாங்குனாலும் நாக்குச் சுத்தமாக இருக்கணும்னு நினைக்கிறவன் நான்.. உங்களுக்கே தெரியும்!’

‘யோவ் கோவிந்தசாமி பழங்குடி சர்டிபிகேட் வாங்குனம்னா குறஞ்சது அஞ்சு வருசம் ஆகும்யா... அதுவும் ஆர்.டி.ஓ., சப்-கலக்டர், கலக்டர்-ன்னு நிறைய என்கொய்ரி எல்லாம் இருக்கும்...’
‘அதுவும் இந்த கேஸூக்கு எந்த ஆதாரமும் இல்லை... சர்டிபிகேட் வாங்கவே முடியாதுய்யா...ன்னுட்டார். சரி! நாளைக்கு வா! ரெவீன்யூ ஆபிஸர பாத்து பேசலாம்... ஆனா... காசு செலவாகும்யா...ன்னார்.’

முருகனுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல! இன்னிக்கே ஒரு நாள் லீவு போட்டாச்சு! அந்த மே°திரி வேற லொள் லொள்ன்னு கத்துவான்... வேலை கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. இந்த நிலையில நாளைக்கு வேற எப்படி லீவு போடறது என்று யோசித்துக் கொண்ட... இருந்தவனுக்கு தலை சுத்தியது...

பையனை படிக்க வைக்கணுமே என்ன பண்றது!

சரி! சாயந்திரம் மே°திரிக்கிட்ட போய் விஷயத்தை சொல்லிட்டு நாளைக்கும் லீவு போட்டுட்டு ரெவின்யூ ஆபிசராம் அவரைப் பார்ப்போம்! என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டான் முருகன்.
யோவ் முருகா, ரொம்ப யோசிக்காத! இந்த பழங்குடி ஜாதில பிறந்தாலே இப்படித்தான் நாய் பொழப்பாயிடும், நீயே பரவால்ல... வேலையில இருக்குற, பல ஆபிஸருங்க கதைய கேட்டீன்னா ரொம்ப சோகமா இருக்கும்மாய்யா...

ஏண்ணே! அவங்கbல்லாம் நல்லா படிச்சிருப்பாங்களேண்ணே... ‘படிப்பாவது, புண்ணாக்காவது, எவனாவது ஆவாதவன் மொட்டை கடுதாசி போட்டான்னா.. அவ்வளவுதான்; என்கொய்ரி, என்கொய்ரின்னு உயிர எடுத்துடுவானுங்க....’

இதற்குள் மே°திரியின் ஞாபகம் வந்த முருகனுக்கு, ‘அந்த ஆள் வேற சாயந்தரத்துல புல்லா தண்ணியடிச்சிட்டு இருப்பான். நல்லா இருக்கும்போதே எரிஞ்சி விழுவான்... தண்ணியடிச்சா சொல்லவே தேவையில்லை...’ என்று நினைத்தவனுக்கு கண் கலங்கியது...

எப்படியோ மே°திரி இல்லாத நேரத்துல போய், வீட்டம்மாக்கிட்ட சொல்லிட்டு வந்துட்டான்.
மறுநாள் மாதாகோவில் மணியடிக்கும் சத்தத்தை கேட்டதும் விழித்துக் கொண்ட முருகன், அவசர, அவசரமா ரெடியாகி... ரெவீன்யூ ஆபிஸர பாக்குறதுக்கு டீ கடை கோவிந்தசாமியோட போனான்.
‘ரெவின்யூ ஆபி°ல ரெடியா இருக்கேன்னு சொன்ன வில்லேஜ் ஆபிஸரை காணோமே!’ சுத்தி, முத்தி பாத்த கோவிந்தசாமி, பக்கத்துல இருந்த வாட்ச்மேன் கிட்ட கேட்க!

“ஏம்பா! அவுங்க எல்லாம் இன்னிக்கு காலைலே 7 மணிக்கே கும்மிடிப்பூண்டி போய்ட்டாங்க... அங்க ஏதோ வீடுங்க பத்திக்கிச்சாம், அத விசாரிக்க போயிட்டாங்க....” நீ நாளைக்கு வான்னு... வாட்ச் மேன் கூறியவுடன் இதயமே நொறுங்கிப் போனது முருகனுக்கு.

வீட்டுக்கு போனதும் முருகன் மனைவி கருப்பாயி ‘என்னங்க வாங்கியாச்சான்னு’ கேட்டதும், “பளார்னு ஒன்ணு விடணும் போல தோணுச்சு...” நாமே எரிச்சலா வர்றோம்... உள்ள நுழையறமோ இல்லையோ, அதுக்குள்ள கேள்வி கேக்குறா... வீட்டுக்காரரின் சிடு சிடுப்பை பார்த்ததுமே ஒண்ணும் நடக்கலை என்பதை உணர்ந்து கொண்டாள் கருப்பாயி.

தூங்கிக் கொண்டிருந்த பையன் அப்பாவின் சத்தத்தை கேட்டதும், அரைத் தூக்கத்தில் ஓடி வந்து அப்பாவின் மடிமேல் படுத்துக் கொண்டான். மனைவி போட்ட சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டே நடந்த எல்லாவற்றையும் பெண்டாட்டிக்கிட்ட சொன்னான்.

‘ஜாதி சட்டிபிகேட் வாங்குறதுக்கு இவ்வளவு பிரச்சினையா! ஜாதி இல்ல, ஜாதி இல்லங்கறங்க... ஏன், இப்படி சர்டிபிகேட் கேட்டு நம்ம தாழியறுக்கிறானுங்க’ என்று முணுமுனுத்தால் கருப்பாயி.
பள்ளிக்கூடம் சேர்ப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் என்ன செய்வது என்ற யோசனையிலேயே உறங்கிப் போனான்.

மறு நாள் பள்ளிக்கூடத்திற்கு சென்று ‘ஜாதி சர்டிபிகேட் கிடைக்க நாளாகுங்க! ஒரு மாசம் கழிச்சு வாங்கித் தறேன்’ என்று முருகன் கூற, பள்ளி நிர்வாகி, ‘ஒரு மாசமெல்லாம் டைம் கிடையாது, இன்னும் ஒரு வாரத்தில் கொண்டாந்து சேக்கணும் சரியா!’ என்று மிரட்டல் தொனியில் சொல்லிட்டார் ஹெட் மா°டர்.

முருகன் டீ கடை கோவிந்தசாமியை பார்த்து, பள்ளி நிர்வாகி கூறியதை சொன்னான். ‘ஏம்பா, நீ எந்த தைரியத்துல ஒரு மாசத்துல கிடைக்கும்ன’ அவனவன் ஐஞ்சு வருஷம் லொங்கு, லொங்குன்னு அலையறான் அவனுக்கே கிடைக்க மாட்டங்குது’ நீ என்னடான்னா...

‘வேணும்னா ஒண்ணு பண்ணு, உனக்கு அவசரமாக சட்டிபிகேட் வேணும்னா, நான் வேற எதாவது ஜாதியைப் போட்டு வாங்கித் தரேன் அப்புறம் பாத்துக்கோ...ன்னார்...

பள்ளிக்கூடமும் - பையனும் மட்டுமே கண்ணுல இருந்த முருகனுக்கு ஜாதியை தூக்கி எரிஞ்சான்! ?
- கே. செல்வப்பெருமாள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வருக 2006
2005ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து, 2006ஆம் ஆண்டை வரவேற்கும் இவ்வேளையில் கடந்த ஆண்டில் நாம் பெற்ற அனுபவங்கள், எதிர் வரும் ஆண்டில் அதை சந்திக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறோம்.
இயற்கை பேரழிவு, பயங்கரவாதம், தீவிரவாதம், மதவாதம், ஜாதியவாதம், கலாச்சார பாசிசம் போன்ற பிற்போக்கு மக்கள் விரோத கருத்துக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஆண்டாக 2006 அமைய வேண்டும் என விரும்புகிறேன்.
உலகமயமாக்கல் உலகை சீரழித்து வரும் வேளையில், இந்த புதைகுழியில் இருந்து மக்களை மீட்கும் மகத்தான எழுச்சிகளை கொண்ட ஆண்டாக 2006 அமைய வேண்டும். மொழி வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, கல்விப்பணி, அறிவியல் முன்னேற்றம், சகோதரத்துவம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிபோம்.
மக்கள் அனைவரும் இன்புற்று, ஆரோக்கியமான - வளமான வாழ்வை பெறவேண்டும்.மனித நேயமும், சிறந்த பண்புகளையும் நமது கலாச்சாரமாக தமிழ்மணத்தில் மணக்கச் செய்திட வேண்டும். கொடுமை கண்டு பொங்கியெழவும் வேண்டும். சீரிய உலகைப் படைக்க கரம் கோர்ப்போம் - கருத்துப் போரில்.
தமிழ் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
வருக 2006

December 29, 2005

“ஏழை படும் பாடு”
படித்ததில் பிடித்தது

பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹீயூகோவால் எழுதப்பட்ட “ஏழை படும் பாடு” சமீபத்தில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு ‘இனிய உதயத்தில்’ வெளியாகி இருந்தது.

18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும், இன்றைக்கும் உலக மக்களின் துன்பங்களை, துயரங்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. பிரான்சில் சமீபத்தில் எழுந்த மக்கள் எழுச்சி - ஏழை படும் பாட்டினை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது.

இந்த நூலில் இரண்டு கதாப் பாத்திரங்கள் என்னை மிகுந்த ஈர்ப்புக்கு உள்ளாக்கியது. 1. பாந்தோன், 2. ஜீன் வால்ஜின்.

முதலில் பாந்தோன் கதாபாத்திரம் குறித்து பார்க்கலாம்.

பாந்தோன் தாய், தந்தையற்ற ஒரு அபலைப் பெண். அவளது பெயரைக் கூட அவள்தான் வைத்துக் கொண்டாள். பாந்தோனின் அழகு நமது ஐ°வர்யாராயை கூட மிஞ்சும் எழிலழகு கொண்டவள்.அவளதும் அவளது மூன்று தோழிகளும் தையற் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நால்வரும் கட்டழகுமிக்க வாலிபர்களின் காதலுக்கு இரையாகின்றனர். அதில் பாந்தோன் ஒரு குழந்தையையும் பெற்று விடுகிறாள்.

இப்பின்னணியில் அந்த நான்கு வாலிபர்களும், பாந்தோன் உட்பட மற்ற தோழிகளுக்கு டாட்டா காண்பித்துவிட்டு ஓடி விடுகின்றனர்.

பாந்தோனை இந்த நிகழ்ச்சி உருக்குலைத்து விட்டது? அடுத்து பாந்தோனுடைய எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி அவளை வாட்டியெடுத்தது. மற்ற தோழிகளைப் பொறுத்தவரை, இவர்கள் இல்லாவிட்டால், தங்கள் அழகுக்கு மற்றவர்கள் கிடைப்பார்கள் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டனர். ஆனால் பாந்தோன் இந்த வழி பிடிக்கவில்லை. அத்துடன் தன்னுடைய குழந்தையை எப்படியாவது நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானிக்கிறாள்.எனவே, பாந்தோன் வேலைக்கு குறுக்கே நிற்பது இந்த குழந்தை. இந்த குழந்தையை (பெண் குழந்தை) யாருடைய பாதுகாப்பிலாவது விட்டு விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டே... தன்னுடைய நடையை வேகப்படுத்தினால் வாழ்கையை... வேலையைத் தேடி...

நீண்ட தூர நடை பயணத்திற்கு பின் ஒரு உணவகம் தென்பட்டது. அந்த இடத்தில் இருந்த குழந்தைகளுடன் இவளுடைய குழந்தையும் ஒட்டிக் கொண்டது. எனவே அந்த உணவகத்தை நடத்துபவரிடமே தன்னுடைய நிலையை கூறி குழந்தையை ஒப்படைக்க தீர்மானித்தாள்.உணவகம் நடத்துபவர் மகா பேர் வழி! பாந்தோனின் சூழலைப் புரிந்து கொண்டு அவளிடம் மாதத்திற்கு இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டான். அத்துடன் அவள் கையில் இருந்த பணத்தையும், குழந்தைக்காக அவள் வைத்திருந்த உயர்ந்த பட்டாடையையும் பெற்றுக் கொண்டான்.

வேலை தேடி புறப்பட்ட பாந்தோனுக்கு தன்னுடைய குழந்தையின் எதிர்காலம் மட்டுமே கண்ணில் நின்றது! அவளும் ஒரு சிறு தொழிற்சாலையில் வேலையில் சேர்ந்தாள்.

தன்குழந்தைக்காக மாதந்தோறும் பணத்தை அனுப்பிக் கொண்டே இருந்தான். குழந்தையை வளர்ப்பவன் பெரும் பேராசைக்காரன், அத்துடன் குழந்தையை மிக மோசமான வேலைகளில் எல்லாம் ஈடுபடுத்தினான், மிக கொடுமையாக வேலையை வாங்கினான். கிழிந்த கந்தல்களையே உடையாக கொடுத்தான். ஏன் பாந்தோன் கொடுத்த விலை உயர்ந்த பட்டாடையைக்கூட விற்று காசாக்கிக் கொண்டான். அவனது மனைவி அதைவிட கொடுமைக்காரி. அந்த குழந்தையை பிசாசாகவே நடத்தி வந்தாள். இந்த துயரமெல்லாம் பாந்தோனுக்கு தெரியாது.

இருப்பினும் குழந்தைக்கு பணத்தை அனுப்புவதே தன் குறிக்கோளாக அதைச் செய்து வந்ததோடு, தன் குழந்தையின் வளர்ச்சி குறித்து அடிக்கடி யாரிடமாவது சொல்லி கடிதம் எழுதி வந்தாள்.அவளது அழகு பார்ப்பவர்கள் கண்ணை உருத்தாமல் இல்லை. மேலும் அவள் யாருக்கோ அடிக்கடி கடிதம் எழுதுவதாக அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த சக பெண்கள் பேசிக் கொண்டதோடு, அவள் மோசமானவள், நடத்தை கெட்டவள் என்றெல்லாம் இழிவாக பேசத் துவங்கினர். இங்கு யாரை வலை வீசுவதற்கு வந்திருக்கிறாளோ என்று ஏசினர். வேலை பளு அவளது உடல் அழகை நாளுக்கு நாள் மேலும், மேலும் குலைத்துக் கொண்டே வந்தது!

இதே சூழ்நிலையில் பாந்தோனிடம், உணவகத்தை நடத்துபவன் அடிக்கடி அதிகமான தொகையை கேட்டு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தான். தற்போது குழந்தைக்கு மிக மோசமாக காய்ச்சல் கண்டிருப்பதாகவும், அதற்கு அதிகமான தொகை தேவைப்படுவதாக கூறி கடிதம் எழுதியிருந்தான்.பாந்தோன் பற்றிய அவதூறு பேச்சுக்களால், அந்த நிறுவனத்தில் இருந்து அவளை வேலையில் இருந்து நீக்கி விட்டனர். என்ன செய்வது என்று தெரியாத சூழலில் - உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குழந்தையை காப்பாற்ற என்ன செய்து? எங்கெங்கோ கடன் கேட்டுப் பார்த்தால் யாரும் உதவுவதாக தெரியவில்லை.
வேறு என்ன வழி!

முடிவுக்கு வந்தால், அங்கேயுள்ள ஒரு சவுரி முடி வியாபாரியிடம் சென்று தன் தலை முடியை வைத்துக் கொண்டால் தங்கள் எவ்வளவு கொடுப்பீர்கள் என்று கேட்டால், அவரோ இது போன்ற முடியை நான் பார்த்ததேயில்லை. மிக அழகாக இருக்கிறது என்று கூறி அவரது முடியை வழித்து எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட தொகைய கொடுத்தார்.

அந்த தொகையில் ஒரு தொப்பியை வாங்கி மாட்டிக் கொண்ட பாந்தோன். தன் குழந்தையின் மருத்துவ செலவிற்காக பணத்தை அனுப்பி வைத்தாள். அடுத்த கடிதம் வந்தது, தற்போது குளிர் காலம் துவங்கி விட்டது குழந்தைக்கு விலை உயர்ந்த கம்பளி ஆடை வாங்க வேண்டும் இல்லையென்றால் குழந்தை குளிரில் நடுங்கி இறந்து விடும் என்று கூறி!

சொந்த போயிருந்த பாந்தோனின் இதயம் இறுகிப்போனது. யோசித்தால் பணத்திற்கு என்ன செய்வது, குழந்தை அவள் கண் முன் நிழலாடியது! பிரான்சில் உள்ள பல் டாக்டரிடம் சென்று தன்னுடைய பற்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுமாறு கூறினாள், டாக்டர் அவளது பற்களை சோதித்து விட்டு, உன்னுடைய இரண்டு முன் பற்கள் மிக அழகாக இருக்கிறது அதை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி, பற்களை கழட்டிக் கொண்டு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தார்.

தொகையை தன் குழந்தைக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிய பாந்தோன் வலியால் மிகத் துன்பப்பட்டார். வேலையும் கிடைக்கவில்லை. வீட்டை விட்டும் வெளியில் செல்ல முடியவில்லை உடம்பும் முன்பு இருந்ததுபோல் இல்லை.... என்ன செய்வாள்?
மீண்டும் கடிதம் வந்தது! தற்போது குழந்தை மிக சிரியசாக இருப்பதாக எனவே அவசரமாக பணம் தேவை என்று!

இனிமேல் பாந்தோனிடம் எடுத்துக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? உதவும் கரங்களும் இல்லை... தன்னுடைய தோழி ஒருத்தி விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது அவளுக்குத் தெரியும். பாந்தோனுக்கு தற்போது கடைசியாக இருப்பது அந்த ஒரு வழிதான். குழந்தைக்காக பாந்தோன் தன்னை சீவி சிங்காரித்துக் கொண்டு புறப்பட்டாள்!

பாந்தோனை விபச்சாரத்தில் ஈடுபடத் தூண்டியது யார்? என்று நூலாசிரியர் விக்டர் யூகோ எழுப்பும் கேள்வி நெஞ்சை விட்டு அகலவில்லை! இந்த சமூகம் ஏழைகளுக்கும் வழங்கும் பரிசு இதுதானா?நீங்கள் கூறுங்கள் இப்போது!

December 28, 2005

ஆர்எஸ்எஸ்-சின் அஜால் குஜால் புனிதம்

மும்பையில் பாஜக வெள்ளி விழா மாநாடு நடத்தி வரும் நிலையில், அக் கட்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்சின் முக்கிய நிர்வாகியான சஞ்சய் ஜோஷி பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் அடங்கிய சிடி வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர் சஞ்சய் ஜோஷி. குஜராத்தைச் சேர்ந்த இவரை ஆர்எஸ்எஸ், பாஜகவின் பொதுச் செயலாளராக நியமித்தது. வாஜ்பாய் ஆட்சியின்போது பாஜக அரசு, ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகளை நிறைவேற்றுவதை சஞ்சய் ஜோஷி உறுதி செய்து வந்தார். வாஜ்பாய் அரசின் கடைசி ஓராண்டில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவுகள் ஜோஷியால் எடுக்கப்பட்டவையே.

சில மாதங்களுக்கு முன் சஞ்சய் ஜோஷியுடன் தனக்கு நெருக்கமான உறவு உள்ளது என்று கூறி ஒரு மராட்டியப் பெண், பத்திரிகை அலுவலகங்களுக்கு தகவல் அனுப்பினார். ஆனால், அதை யாரும் பொருட்படுத்தவில்லை. இந் நிலையில் இப்போது பாஜகவின் வெள்ளி விழா மாநாடு மும்பையில் நடந்து வரும் நிலையில் அந்தப் பெண்ணுடன் சஞ்சய் ஜோஷி கொஞ்சிக் குலாவும் ஒலி அடங்கிய ஆடியோ கேசட் வெளியானது.

ஆனால், அது போலியான கேசட் என்று பாஜக தலைவர்கள் கூறினர். இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களிலேயே பெண்ணுடன் ஜோஷி உல்லாசமாக குஜால் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ சிடி வெளியானது. இதையடுத்து பாஜக மாநாட்டில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கட்சியில் ஆர்எஸ்எஸ்சின் தலையீட்டை விரும்பாத சில பாஜகவினர் தான் இந்த சிடியை வெளியில் விட்டதாகக் கூறபபடுகிறது.

ஆர்எஸ்எஸ்சின் நெருக்குதலால் இந்த மாநாட்டின் இறுதியில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அத்வான் விலகப் போகிறார். மேலும் அவரை மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுமாறு ஆர்எஸ்எஸ் நெருக்கி வருகிறது. அதை அத்வானி ஏற்க மறுத்து வருகிறார்.

இப்படியாக பெரும் கோஷ்டி கலாட்டாவுடன் நடந்து வரும் பாஜகவின் வெள்ளி விழா மாநாட்டில் ஆர்எஸ்எஸ்சுக்கு பெரும் நெருக்கடி தரும் வகையில் ஜோஷியில் குஜால் சிடி வெளியாகியுள்ளது. இதை பாஜகவைச் சேர்ந்த சிலரே வெளியிட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

இந்த சிடி வெளியான விவகாரத்தில் உமா பாரதியின் கைவரிசை இருக்கலாம் என பாஜக தலைவர்கள் நறநறக்கின்றனர். தனக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்காமல் போனதிலும், தான் கட்சியை விட்டு நீக்கப்பட்டதிலும் ஜேட்லிமகாஜன்நாயுடுவோடு சேர்ந்து சதி செய்த முக்கியஸ்தர் சஞ்சய் ஜோஷி தான் என உமா நினைக்கிறார்.

மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் ஜோஷி அநாவசியமாகத் தலையிடுவதாகவும் உமா ஒரு முறை குற்றம் சாட்டியிருந்தார். இந் நிலையில் பாஜகவின் வெள்ளி விழா மாநாட்டை ஒட்டி இந்த அஜால் குஜால் சிடியை உமா பாரதி தரப்பினர் தான் லீக் செய்திருக்க வேண்டும் என அக் கட்சியினர் கருதுகின்றனர்.

சஞ்சயி ஜோஷி மீது பெண் புகார் எழுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, இவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு நிரோத்துடன் (காண்டம்) ஒரு பெண் எழுத்தாளர் தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியிருந்தார். ஏழையான தனக்கு உதவுவதாகக் கூறி ஜோஷி கற்பழித்துவிட்டதாக அந்த எழுத்தாளர் புகார் கூறியிருந்தார்.

ஆனால், அனுப்பியவரின் பெயர், விவரம் இல்லாததால் அதை மகளிர் ஆணையம் புகாராக பதிவு செய்யவில்லை. இப்போது நிமிர்ந்து உட்கார்ந்துள்ள தேசிய மகளிர் ஆணையம் ஜோஷி மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. ஆணையத்தின் தலைவராக இருப்பது காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஜா வியாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பெண் தனது முழு விவரத்துடன் எனக்கு நேரடியாக ஒரு கடிதம் அனுப்பினால் போதும், நான் நடவடிக்கையில் இறங்குவேன் கிரிஜா கூறியுள்ளார். இதனால் இந்த பெண் விவகாரம் பாஜக, ஆர்எஸ்எஸ்சை அவ்வளவு லேசில் விடாது என்பது மட்டும் உறுதி.

முதலில் ஜோஷிக்கும் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வெங்கையா நாயுடு உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முழக்கம் கொடுத்த நிலையில், வெளியான வீடியோ காட்சி பாஜகஆர்எஸ்எஸ் தலைவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. ஜோஷி ரொம்ப நல்லவரு என்று நாயுடு பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோதே, ஜோஷியை பதவியை விட்டு விலகுமாறு ஆர்எஸ்எஸ் கூறிவிட்டது.

இதையடுத்து அவர் தனது பாஜக பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தனது தவறை அவர் ஒப்புக் கொண்டது போல் ஆகியுள்ளது. மேலும் ஜோஷியை பாஜகவில் இருந்தும் ஆர்எஸ்எஸ் திரும்ப அழைத்து கொண்டுவிட்டது. சிடி வினியோகிக்கப்பட்டதை அடுத்து மாநாட்டு பந்தலுக்கு வராத ஜோஷி அங்கிருந்து எஸ்கேப் ஆகி நாக்பூர் சென்றுவிட்டார்.
நன்றி தட்ஸ் தமிழ் :

December 23, 2005

WTO விவாதம்

December 22, 2005

முத்துவின் முத்தான கேள்விகள்:
WTO விவாதம்

முத்து : எதற்காக முன்னேறிய நாடுகள் தமது விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கக் கூடாது? அவர்கள் பிறகு எப்படி சாப்பிடுவார்கள்?

சந்திப்பு : ஹாங்காங்கில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் அடிப்படை கோரிக்கையே இதுதான். அமெரிக்காவும்-ஐரோப்பாவும் விவசாயத் துறைக்கு கொடுத்து வரும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையே!

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்வோம். அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் விவசாயிகள் என்றுச் சொன்னால் நமது நாட்டில் உள்ள குப்பனும், சுப்பனும் அரை ஏக்கர் ஒரு ஏக்கர் என்று வைத்துக் கொண்டு அதன் மூலம் தங்களது வாழ்க்கையை நடத்துபவர்கள் அல்ல; ஆனால், அங்கே விவசாயம் என்பது ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்துக் கொண்டு பெரும் தொழிலாக நடத்துகின்றனர். அதை நடத்துபவர்கள் பெரும் முதலாளிகள். இதைத்தான் “கார்ப்பரேட் பார்ம்ஸ்” என்று கூறுகிறார்கள்.

இத்தகைய பெரும் முதலாளிகளுக்குத்தான் ஆண்டுக்கு 400 பில்லியன் டாலரை மானியமாக கொடுக்கின்றனர். இத்தகைய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் (Westvaco, Chevron, John Hancock...) உலகின் 500 முன்னணி நிறுவனங்களில் முதல் 15 இடத்தில் இருக்கின்றன.மேலும், அமெரிக்காவிலும் நம் நாட்டில் உள்ள சுப்பனும், குப்பனும் போன்ற விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு மானியம் என்பது எட்டாக்கனியே!சரி! அமெரிக்க பெரும் முதலாளிகளுக்கு மட்டும் எப்படி மானியம் கிடைக்கிறது என்ற ரகசியத்தை அறிந்து கொள்வது மிக சுவராஸ்யமானது. அமெரிக்க சட்டப்படி இரண்டு விஷயத்திற்காக மானியம் வழங்கப்படுகிறது.
  1. அமெரிக்க அரசு சொல்லக்கூடிய பணப் பயிர்களை விளைவிக்க வேண்டும். அவை பருத்தி, சோளம், கோதுமை, அரிசி போன்றவை.
  2. இத்தகைய பொருட்களை யார் அதிகமாக உற்பத்தி செய்கிறார்களே, அதற்கேற்றார்போல் மானியத்தின் அளவும் உயரும்.

இந்த இரண்டு அளவு கோலை வைத்துக் கொண்டு பெரும் இலாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே கோடிக்கணக்கான ரூபாய் மானியத்தை வழங்குகின்றனர்.உதாரணமாக: அர்கன்சாசில் உள்ள “டைலர்ஸ் பார்ம்ஸ்” என்ற ஒரே ஒரு நிறுவனம் 1996 - 2000 ஆண்டுகளில் மட்டும் 23.8 மில்லியன் டாலர் (119 கோடி ரூபாய்) மானியமாக பெற்றுள்ளது. (பாவம் அவர் பரம ஏழை!!!)

இதேபோல் 2000 ஆண்டில் அமெரிக்காவில் 57,500 விவசாய பண்ணைகள் ஒரு லட்சம் டாலர் தொகையை மானியமாக பெற்றனர். ஆனால் 154 பெரும் கார்ப்பரேட் பண்ணைகள் பெற்ற மானியம் எவ்வளவு தெரியுமா? வெறும் 10 இலட்சம் டாலர்தான்.

அதே சமயம் மிகக் குறைந்த நிலங்களை அளவுள்ள நிலங்களை வைத்துக் கொண்டுள்ள விவசாயிகள் இதே பணப் பயிர்களை விளைவித்தாலும் அவர்களுக்கு மிகச் சிறிய அளவிலேயே மானியம் கிடைக்கும். அமெரிக்காவில் இத்தகைய பணப்பயிர்களைத் தவிர 400க்கம் மேற்பட்ட விவசாய விளை பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் மானியம் கிடைப்பதில்லை. சாதாரண விவசாயிகள் அங்கேயுள்ள லோக்கல் சந்தைத் தேவைக்கேற்ப தங்களது பிழைப்பை நடத்துகின்றனர்.

இத்தகைய பெரும் கார்ப்பரேட் விவசாய பண்ணைகளுக்கு மானியம் மட்டுமின்றி, விவசாயம் செய்வதற்கான கடன் வழங்குவதோடு, அந்த பயிர்களுக்கான இன்சூரன்ஸூம் செய்யப்படுகிறது. சுனாமி, காத்ரீனா போன்று ஏதாவது இயற்கை பேரழிவு ஏற்படும் காலத்தில் இதற்கான இழப்பீட்டையும் அரசு வழங்குகிறது.

நம்முடைய தமிழக - இந்திய விவசாயிகளை நினைத்துப் பாருங்கள். சமீபத்தில் பீகாரில் மனிதர்களை வைத்து உழுது விவசாயம் செய்யும் நிலையே மேலோங்கியுள்ளது. இத்தகைய மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 25 மட்டுமே கூலியாக தரப்படுகிறது. மாடுகளை வைத்து உழுதால் கட்டுபடியாகது என்ற நிலை. இந்த விவசாயிகளைத்தான் அமெரிக்க கார்ப்பரேட்டோடு போட்டி போடச் சொல்கிறார்கள்.

உண்மையில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏழை விவசாயிகளுக்கு மானியம் கிடைத்தால் நிச்சயம் வரவேற்கலாம். அத்தகைய விவசாயிகளுக்கு மானியம் கொடுத்தேயாக வேண்டும்! இது உலகமயமாக்கல் யுகம், அதுவும் கார்ப்பரேட் உலகமயமாக்கல் இதன் நலன் அவர்களைக் காக்கவே.

முத்து : நமது அரசாங்கம் எங்கிருந்து இந்த மானியங்களை தரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? (பி.எஃப் பணத்திற்கு வட்டிகூட தரமுடியாத நிலையில் இருக்கிறது இந்திய அரசு)

சந்திப்பு : முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்திக் கொள்வோம். அரசுகள் என்றாலே மக்களை வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களை காப்பதற்குமே! இந்த அடிப்படையில்தான் ஏழை மக்களுக்கும் - விவசாயிகளுக்கும் மானியத்தை அரசு வழங்குகிறது. ஆனால் நம்முடைய இந்திய நாட்டில் தற்போது உலகமயமாக்கல் கொள்கை பின்பற்றப்படுவதால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம், சமையல் எரிவாயு, மின்சாரம், போக்குவரத்து என அனைத்திற்கும் மானியம் வெட்டப்பட்டு வருகிறது. அநேகமாக தற்போது 80 சதவீதத்திற்கும் மேல் வெட்டப்பட்டு விட்டது.

நமது இந்தியா ஏழைகளின் நாடே தவிர ஏழை நாடல்ல. டிசம்பர் 21 வெளியான இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்ட புள்ளி விவரங்களை இதற்குச் சான்று:

மானியங்களுக்காக இந்தியா 1,15,825 கோடி செலவிடுகிறது. அதில் ஒரு ரூபாயில் 15 சதவீதம் கூட உரியவர்களை சென்றடைவதில்லை. மற்றவை கள்ளச் சந்தைக்கு சென்று விடுகிறது என்பதே அந்தி அதிர்ச்சிகரமான தகவல். (இந்த மானியங்கள் எங்கே செல்கிறது? யார் பயனடைகிறார்கள்)நமது நாட்டில் 1996ல் 40,000 கோடியாக இருந்த கருப்பு பணப் புழக்கம் தற்போது 9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவையெல்லாம் இந்திய அரசின் கண்ணில் மண்ணைத் தூவி, வரியை ஏய்த்து தற்போது பங்குச் சந்தையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இது தவிர நம்முடைய தாராள மனது கொண்ட இந்திய அரசு வங்கிகளில் கடனாக பெறப்பட்டு இதுவரை செலுத்தாத 1,10,000 கோடி ரூபாயை வராக் கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்துள்ளது. இவைகளெல்லாம் நம்முடைய விவசாயிகள் பெற்ற கடன் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாட்டை முழுங்கி ஏப்பம் விடும் நிறுவனங்கள்தான். இந்த லி°டில் நம்மூர் நடிகர்கள் கூட வருவார்கள்.இவையெல்லாம் போக, நம்முடைய இந்திய அரசு ஆண்டு தோறும் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டில் ரிலைன்°, டாடா, பிரேம்ஜி, நாராயணமூர்த்தி... என பெரும் முதலாளிகளுக்கு கருணை காட்டி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரிச் சலுகைகளை செய்து வருகிறது.

இப்போது சொல்லுங்கள்! நம்முடைய ஏழை விவசாயிகளுக்கு மானியம் வழங்க நமது அரசிடம் பணம் இல்லையா? என்று! மனம் இல்லையே தவிர பணம் இல்லை என்பது மாய்மலம்.

முத்து : நீங்கள் கூறும் மாற்று வழி என்ன? சீனாவே அன்னிய முதலீட்டை வரவேற்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

சந்திப்பு : அந்நிய முதலீட்டைப் பொறுத்தவரை எந்த ஒரு நாடும் ஒரேயடியாக முழுக்குப் போட முடியாது! இதற்கு சீனாவும் விதி விலக்கு அல்ல; இங்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கவனிக்க வேண்டும்.

நாட்டுக்குள் வரக்கூடிய அந்நிய முதலீடு, உள்நாட்டு பொருளாதாரத்தையும், உள்நாட்டு சந்தையையும் சூறையாடுவதாக இருக்கக்கூடாது. மேலும் புதிய தொழில்நுட்பத்தையும் குறிப்பிட்ட நாட்டில் வேலைவாய்பை உருவாக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் முதலீடு போடக்கூடிய அந்நிய நிறுவனங்களுக்கும் இலாபம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் சீனா அந்நிய முதலீட்டை வரவேற்கிறது.

உதாரணமாக நம்முடைய இந்திய நாட்டில் குளிர்பானத்துறையில் கோக்கையும், பெப்சியையும் அனுமதித்ததால் இன்றைக்கு நம்முடைய குளிர்பானத் தொழில் மூட்டைக் கட்டிக் கொண்டுள்ளது.பல வெளிநாட்டு டி.வி. நிறுவனங்களை நாம் அனுமதித்துள்ளதால் டையனரோ போன்ற டி.வி. நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. எனவே போட்டி என்பது சமதையாக இருக்க வேண்டும். அதைச் சமாளிக்ககூடிய விதத்தில் உள்நாட்டு நிறுவனங்கள் இருக்க வேண்டும். சீனா அதற்கு தயாராக இருக்கிறது. இந்தியாவின் நிலை அதுவல்ல?

இன்னொரு விஷயம், எந்த ஒரு நாட்டின் சூழலையும் வேறு ஒரு நாட்டுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது என்பதே என் கருத்து. அங்குள்ள பிரத்தியோக சூழலை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.இங்கு என்ரான், போ°கோ போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் அதிக இலாப உத்திரவாதத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு முதலீடு செய்வதும், இதனால் உள்நாட்டு கனிவளம், மக்கள் நலன் போன்றவை பாதிப்புக்கு உள்ளாவதும்தான் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளன.

மொத்தத்தில் அமெரிக்கா - ஐரோப்பா - இந்தியாவில் உள்ள சாதாரண விவசாயிகளும், தொழிலாளர்களும் இணைவதே இன்றைய உடனடியத் தேவையாகும். இதில் பி.பி.ஓ. - மென்பொருள் தொழிலாளர்களும் உள்ளடங்குவர்.

மாற்று வழி! நான் சொல்வதை விட நம்முடைய நாட்டில் நோபள் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னைக் கேட்டால் வாரி வழங்குவார். இதற்காகவே அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். இந்திய நாடும் சீரான பாதையில் செல்லும். அதற்கு தேவை பரந்த விவாதமும் - பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான்.

இந்த விவாதத்தில் ஈடுபட்ட நண்பர் முத்துவக்கு
ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும்
பங்கேற்கலாம்!

December 21, 2005

கானல் நீராய்ப்போன ஹாங்காங் மாநாடு



ஹாங்காங்கில் நடைபெற்ற 6வது உலக வர்த்தக மாநாடு ‘பெரும் தோல்வியில் முடிந்தது’ என்ற சூழலை தவிர்ப்பதற்காக அமெரிக்காவும் - ஐரோப்பாவும் ஏற்கெனவே வைக்கப்பட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்து, சில விஷயங்களில் நுனிப்புல் அளவிற்கு சமரசத்தை செய்து கொண்டு, தங்களது கைத்தேர்ந்த கண்கட்டி வித்தைகள் மூலம் இம்மாநாட்டில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

உலக வர்த்தக மாநாட்டில் நான்கு முக்கிய விஷயங்கள் குறித்து அலசப்பட்டது. அவை 1. விவசாய சந்தையை திறந்து விடுதல் - மானியங்களை வெட்டுதல், 2. தொழில் உற்பத்தி பொருட்களுக்கான வரியை விலக்கிக் கொள்ளுதல், 3. சேவைத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு கதவைத் திறந்து விடுதல், 4. தொழிற்சார்ந்த அறிவுச் சொத்து உரிமை குறித்து.

ஒவ்வொரு விஷயமாக சில மேலோட்டமான பார்வையை செலுத்தினாலே மேலை நாடுகளின் சூட்சமத்தை புரிந்து கொள்ள முடியும்.

முதலில், இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகள் ஒன்றுபட்டு உரத்து குரலெழுப்பிய முக்கிய விஷயம் ‘அமெரிக்காவும் - ஐரோப்பாவும் தங்களது விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானியத்தை வெட்ட வேண்டும்’ என்பதே!

இந்த விஷயத்தில் நடந்தது என்ன! அமெரிக்காவும் - ஐரோப்பாவும் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் ஒற்றுமையை கண்டு மிரண்டுப்போனாலும், இவர்களுக்கு சில எலும்புத் துண்டுகளை வீசுவதன் மூலம் தங்களது செல்லப் பிராணிகளாக மாற்றிக் கொள்ள முடியும் என்ற வித்தையை காட்டியுள்ளனர்.

‘2013ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவும் - ஐரோப்பாவும் தங்களது விவசாயிகளுக்கு ஏற்றுமதிக்கு வழங்கி வரும் மானியத்தை வெட்டிக் கொள்வதாக அறிவித்துள்ளது.’

உண்மை என்ன? அமெரிக்காவும் - ஐரோப்பாவும் தங்களது விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானியத்தில், ஏற்றுமதிக்கு வழங்கும் மானியம் என்பது வெறும் 3.5 சதவீதமே! இதைத்தான் தாங்கள் 2013ஆம் ஆண்டுக்குள் வெட்டிக் கொள்வதாக மார்தட்டிக் கொள்கின்றன.

கடுகளவு மானியத்தை வெட்டுவதன் மூலம் வளர்ந்த நாடுகளின் விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அதுவும் மேலை நாடுகள் தங்களது விவசாயிகளை பாதுகாக்க பல நவீன டெக்னிக்கையெல்லாம் கையாளும். அதற்கு ஒரு சிறிய உதாரணத்தை கண்டாலே போதும்

உதாரணம் 1 : உலகிலேயை அதிகமான ஏழை மக்களை கொண்ட ஆப்ரிக்காவில் அமெரிக்காவும் - ஐரோப்பாவும் போட்டி போட்டுக் கொண்டு “கோழி கறி”யை இறக்குமதி செய்கின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கோழி கறியின் விலை ஆப்பிரிக்காவில் தெருக்களில் உள்ள சாதாரண மார்க்கெட் விலையை விட இரண்டு மடங்கு குறைவு. இதன் மூலம் ஆப்பிரிக்காவில் கோழி வளர்ப்பு - விற்பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்ட லட்சக்கணக்கான மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 1999இல் 1000 டன் கோழி கறி ஏற்றுமதி செய்த மேலை நாடுகள் 2003இல் 12,000 டன் அளவிற்கு தங்களது வியாபாரத்தை பெருக்கிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அமெரிக்காவும் - ஐரோப்பாவும் கோழிகளுக்கு மானியத்தை வழங்குவதில்லை. ஆனால் கோழிகளை வளர்க்கப் பயன்படும் “தானியத்திற்கு” - கோழி உணவிற்கு மானியத்தை வழங்குகின்றன. கோழி வளர்ப்பவர்கள் அதிகமாக செலவழிக்க வேண்டியதே அதன் தீவனத்திற்குத்தான். நேரடியாக கோழிக்கு மானியம் அளித்தால்தான் பிரச்சினை, கோழி உணவுக்கு மானியம் என்பது எந்த ஒப்பந்தத்திலும் இல்லையென்பது மேலை நாடுகளின் வாதம்! இதுதான் அமெரிக்கா!

உதாரணம் 2 : உலகமயமாக்கல் பொருளாதார கொள்கையை தீவிரமாக அமலாக்கி வரும் நம்முடைய இந்திய நாட்டில் மட்டும் இதுவரை 40,000 விவசாயிகள் கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். விவசாய மானியங்கள் கடுமையாக வெட்டப்பட்டதும், உரம் உட்பட விவசாய இடுபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் நொடிந்துப்போயுள்ள இந்திய விவசாயிகளுக்கு எந்தவிதமான கருணையையும் நம்முடைய மன்மோகன் அரசு காட்ட வில்லை என்பதை கருத்திக் கொண்டால் - பன்னாட்டு முதலாளிகளுடன் எத்தகைய ஆரோக்கியமான போட்டியில் ஈடுபட முடியும் என்பதே நம்முடைய கேள்வி?

அடுத்து, 2006ஆம் ஆண்டிற்குள் பருத்திக்கான மானியத்தை வெட்டிக் கொள்வதாக அறிவித்துள்ளது அமெரிக்காவும் - ஐரோப்பாவும்.

ஏற்கெனவே பருத்தி உற்பத்தியில் கடும் பாதிப்பை சந்தித்து திவாலாகிப் போயுள்ளது ஆப்பிரிக்க - மற்றும் ஆசிய நாட்டு விவசாயிகள், இந்தச் சூழலில் அவர்கள் முன்னேறுவதற்கோ, போட்டி போடுவதற்கோ வாய்ப்பில்லாத சூழலில் தங்களது கருணையை வெளிப்படுத்தியுள்ளன மேலை நாடுகள்.

பருத்தி விவசாயிகளுக்கு மட்டும் வளர்ந்த நாடுகள் 1999-2003 ஆண்டு காலத்தில் 12.47 பில்லியன் டாலர் மானியமாக வாரி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆப்பிரிக்க விவசாயிகள் ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டம் நேரடியாக நஷ்டம் அடைந்துள்ளனர். அமெரிக்க - ஐரோப்பாவின் இத்தகைய செயலால் இரண்டு கோடி விவசாயிகள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டுள்ளனர்.

நாமா : தொழிற்சாலை உற்பத்தி பொருட்களுக்கான வரியை நீக்குதல் தொடர்பானது.

இந்த விஷயத்திலும் மேலை நாடுகள் நமக்கு நாமத்தையே போட்டுள்ளனர். குறிப்பாக வளர்ந்த நாடுகளின் உற்பத்தி திறனும், வளரும் நாடுகளின் உற்பத்தி திறனும் வேறுபடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதுவும் அமெரிக்கா தற்போத 97 சதவீத பொருட்களுக்கு இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. அத்தகைய பொருட்கள் வெறும் உப்பு, சப்பு போன்ற உதவாக்கரை பொருட்களாகவே இருக்கும். மீதம் இருக்கும் மூன்று சதவீதம் என்பது மிக முக்கியமாக வளரும் நாடுகள் ஏற்றுமதி செய்ய வேண்டிய பொருட்களாகத்தான் இருக்கும். ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் சீனாவின் ஜவுளி - கம்பளி இறக்குமதியில் கைகழுவும் போக்கை கடைப்பிடிப்பதை உதாரணமாகக் கொண்டால், திறந்தவெளி பொருளாதார கொள்கை நம் இந்திய மக்களின் உயிர்களை வேகமாக அள்ளிச் செல்லும் திறந்த வெளிக் கொள்கையாகவே மாறும்.

சேவைத்துறையை எடுத்துக் கொண்டால் இப்போது உள்ள நிலையில் இன்சூரன்ஸ், வங்கி, டெலிகாம், ஐ.டி., பி.பி.ஓ. என்று பல வகைகளில் அந்நிய நாடுகளின் பெரும் முதலீடுகளை ஈட்டும் கேந்திரமாக இந்திய நாடு மாறியுள்ளதை நாம் அறிவோம்! மிச்சமிருப்பதையும் கொள்ளையடிப்பதற்கே வழிவகுத்துள்ளது ஹாங்காங் பாதை.

அறிவுச் சொத்துரிமை விஷயத்தில் ஏற்கெனவே உள்ள நிலைமைய நீடிக்கிறது. அதாவது அமெரிக்காவோ - ஐரோப்பாவோ உயிர் காக்கும் மருந்து மற்றும் ஏதாவது அத்தியாவசியமான பொருட்களுக்கான காப்புரிமையை பதிவு செய்து விட்டால், அது போன்ற பொருட்களை எந்த நாடும் உற்பத்தி செய்ய முடியாது என்பதோடு 20 ஆண்டுகளுக்கு நாம் அவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டும். இதன் மூலம் நம்முடைய சுயேச்சையான அறிவியல் ஆராய்ச்சி தடை படும். சமீபத்தில் நான் படித்த செய்தி ஒன்றையும் சொல்லி விடுகிறேன். சம்முடைய பாரம்பரியமான நார்த் இந்திய புட் என்று கௌரவமாக அழைக்கும் “சப்பாத்திக்கு” கூட அவர்கள் பேட்டன்ட் வாங்கியுள்ளனர். எதிர் காலத்தில் உங்கள் வீட்டில் சுடும் சப்பாத்திக்குகூட நீங்கள் அமெரிக்காவுக்கு கப்பம் கட்ட வேண்டி வரும்.

இது ரொம்ப ஓவர் என்று நீங்கள் பீல் பன்னினால், தண்ணீர் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை வழங்கிய தண்ணீர் இன்றைக்கு வியாபாரமாகிப் போயுள்ளது. உங்கள் வீட்டின் குழாய்களில் வரும் தண்ணீருக்கு நீங்கள் வரி கட்டாமல் அது உங்களை வந்தடையாது!

உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் பாஸ்கல் லாமி கூறியது போல்,
“ஹாங்காங் மாநாடு ஏழைகளுக்கு உதவும் ஏன்று வாய் கிழிய பேசியதோடு சரி! எந்தவிதத்திலும் ஏழைகளுக்கும் உதவ வில்லை! திறந்த சமச்சீரான போட்டிகளைக் கொண்ட சந்தைக்கும் வழிவகுக்கவில்லை”.

இப்போது சொல்லுங்கள் ஹாங்காங் மாநாடு கானல் நீரா? அல்லது மினரல் வாட்டரா? என்று. இந்த மாநாட்டின் மூலம் நம்முடைய இந்திய நாடு அடைந்த பயன் என்ன என்று நாடாளுமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் இந்திய அரசும், வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்தும்தான் விளக்க வேண்டும்! ஒருவேளை உங்களுக்குத் தெரிந்தால் கூட சொல்லலாம்.

December 19, 2005

மவுனங்களே பதிவுகளாய்... நிவாரணத்தை தேடி!




December 17, 2005

“பிரதிபா மரணம்” உலகமயமாக்கல் சீரழிவே!



பெங்களூரில் கால்சென்டரில் பணிபுரியும் திருமதி பிரதிபா (24) கயவன் கார் டிரைவர் ஒருவனால் கற்பழித்து படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரை மட்டுமல்ல; இந்திய நாட்டையே அதிர்ச்சியடைச் செய்கிறது.
பிரதிபாவுக்காக சந்திப்பு அஞ்சலி செலுத்துகிறது.

பிரதிபா மரணம் ஏதோ தற்செயல் நிகழ்வாக பார்க்க முடியாது! இன்றைக்கு அவுட்சோர்சிங் தொழில்களான கால்சென்டர், மெடிக்கல் டிரான்°கிரிப்ஷன், சாப்ட்வேர் டெவ்லப்மெண்ட் போன்ற துறைகளில் உள்ள சீரழிவே இதற்கு மொத்த சாட்சியாக முன்னிற்கிறது.


சகோதரி பிரதிபா தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.00 மணிக்கு வீட்டிற்கு திரும்புவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நாய்களும், பன்றிகளும், ஓநாய்களும் உறங்கிக் கொண்டிருக்கும் போது பேய்கள் மட்டும் உலவும் நேரமான நள்ளிரவில் பிரதிபா வேலைக்கு செல்ல நிர்ப்பந்தித்த (நவீன உலகமயமாக்கல்) சூழலே, அவரை இந்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.


“நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் (நகைகள் எல்லாம் அணிந்து கொண்டு) என்றைக்கு சுதந்திரமாக நடமாடுகிறாரே” அன்றைக்குத்தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் என்று மகாத்மா கூறினார். அப்படியென்றால் இன்றைக்கு இருக்கும் சுதந்திரம் யாருக்கானது? சுதந்திரக் காற்றை முழுமையாக அனுபவிப்பவர்கள் யார்? இதில் பலிகடாக்களாக ஆக்கப்பட்டவர்கள் யார்? இந்த கேள்விகளுக்கு நாம் விடை கண்டே ஆக வேண்டும்.


என் பார்வையில் சகோதரி பிரதிபாவை நள்ளிரவு வேலைக்கு செல்லத் தூண்டிய பெரும் முதலாளிகளும், மறைமுகமான ஏகாதிபத்திய சக்திகளும்தான்; (இப்படிக் கூறினால் பாலிடிக்°பா... என்று முகம் சுளிப்பவர்கள்தான் நம்மில் அதிகம்) உண்மையில் இவர்களுக்குத்தான் முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது சுத்தமாக சுரண்டுவதற்கு.பொதுவாக கால் சென்டர்களில் 10 முதல் 12 மணி நேர வேலை என்பது விதியாகிப் போயுள்ளது. அமெரிக்காவிலோ - ஐரோப்பாவிலோ 8 மணிநேரத்திற்கு மேல் யாரும் வேலை செய்வதில்லை. இங்கு 8 நேர வேலை சட்டம் என்ன ஆனது? இதற்கு எதிராக யார் குரலெழுப்புவது?


கால்சென்டர்களில் பணிபுரிபவர்கள் ஏறக்குறைய மக்கள் திரளில் இருந்து தனித்த வாழ்வையே மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு இந்த உலகத்தின் சுக, துக்கங்கள், நாட்டு நடப்புகள் என பல விஷயங்கள் மறக்கப்படுகிறது. 12 மணிநேர வேலை, டிரவலிங் டைம் 4 மணி நேரம், வீட்டில் உறங்குவதற்கும், இதர அடிப்படை வேலைகளைச் செய்துக் கொள்வதும் 8 மணி நேரம்.


இத்தகைய சூழலால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள இளம் தம்பதிகள் பெரும் மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், இதனால் விவகாரத்துக்களும், இருதய நோய், சர்க்கரை வியாதி மற்றும் இளம் வயதிலேயே மணரம் என பல சிக்கல்களை சந்திப்பதாகவும் சர்வேக்கள் பல உணர்த்துகின்றன.


இந்தச் சிக்கல்களில் இருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும்? சாப்ட்வேர்துறை என்பது ஏதோ சொர்க்கலோகம் அல்ல; அங்கும் உங்களுடைய உழைப்பு சுரண்டப்படுகிறது. ஒரே வேலையைச் செய்யும் நமக்கும், மேலை நாடுகளில் உள்ளவர்களுக்கும் ஏற்றத்தாழ்வான கூலி வழங்கப்படுகிறது.


தொழிற்சங்கம் போன்ற அடிப்படையான உரிமைகள் எதுவும் இல்லாத காரணத்தால், ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே குவார்ட்டர்°களை அமைத்துக் கொடுத்தல் போன்ற எந்தவிதமான உரிமைகளையும் நிலைநாட்டாத சூழல்தான் இங்கு நிலவுகிறது.

ஹைடெக் பேசும் மனிதர்கள் - மாடுகளைப் போல் அழுக்கான குளத்தில் விழுந்து எழுவது வேடிக்கையாக இருக்கிறது. சாதாரண மனிதன் தங்களது உரிமையை நிலைநாட்ட ரிக்ஷா ஓட்டுனர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், சுமைப்பணி சங்கம் என வைத்துக் கொள்ளும் போது ஹைடெக் அறிவு பெற்றவர்கள் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டுமா?


பிரதிபா மரணத்திற்கு அனுதாபம் மட்டும் போதுமானதல்ல!


புது வாழ்வு பாய்ச்சும் போர்முனையாக மாறுவதே பிரதிபாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்!!

ஆசை வெட்கம் அறியாது!
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் 6வது உலக வர்த்தக மாநாட்டில் ஏழை நாடுகளிடையே ஏற்பட்டுள்ள உருக்குப்போன்ற ஒற்றுமையால் மூச்சுத் திணறிப்போயுள்ளது அமெரிக்காவும் - ஐரோப்பாவும்.
நரி செத்தாலும் கண் கோழி கூண்டின் மீதே இருக்கும் என்பதுபோல், உலக வர்த்தக மாநாடு தோல்வியைத் தழுவும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து கொண்ட ஏகாதிபத்திய நாடுகள் கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் மிக கவனமாக செயல்பட்டு வருகிறது.
“உட்டோ” அறிக்கையை மறு பரிசீலனை செய்து, இன்றைக்கு புதிதாக தாக்கல் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார் உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் பா°கல் லாமி.நேற்றைக்கு நடைபெற்ற விவாதத்தில் இந்திய அமைச்சர் கமல்நாத் அமெரிக்காவில் உள்ள 20 ஆயிரம் பருத்தி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 480 பில்லியன் மானியம் அளிப்பதாக குற்றம்சாட்டியதோடு, இந்திய நாட்டில் உள்ள பருத்தி விவசாயிகள் எப்படி நிலைகுலைந்து நிற்கின்றனர் என்பதையும் எடுத்துரைத்துள்ளார். இதேபோல் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பிரதிநிதிகளும் தங்களது கோபாவேசத்தை கொட்டியுள்ளனர்.
ஐரோப்பிய வர்த்தக பிரதிநிதி பீட்டர் மண்டல்சன் கூறும் போது, மானிய வெட்டு என்பது உடனடியாக சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். ஊருக்குதான் உபதேசம் எனக்கில்லை என்பதுதான் “ஏகாதிபத்திய பழமொழி”.
இன்றைக்கு உலகமயமாக்கல் கொள்கையை தீவிரமாக நம்நாடு பின்பற்றி வருவதால் சமையல் எரிவாயு, மின்சாரம், ரேஷன் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, உரம், என அனைத்து அத்தியாவசியமான பொருட்களுக்கும் மானியம் கடுமையாக வெட்டப்பட்டுள்ளதால் நம்முடைய மக்களின் வாழ்க்கைத்தரம் அதள பாதாளத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், மேலை நாடுகள் இந்த விஷயத்தில் ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்புமாக செயல்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்?
மொத்தத்தில் வர்த்தக உடன்படிக்கை என்பது வெளிப்படையானதாக - சமத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

December 16, 2005

அமெரிக்க மாடும் - ஏழை மனிதனும்
WTO - படிப்பினைகள்



“உட்டோ” மாநாட்டின் மூன்றாவது நாள் “வளரும் நாடுகளின்” ஒற்றுமையை மிகப் பரந்த அளவில் கொண்டுவந்துள்ளது. ஜி-20, ஜி-90 என்று ஆரம்பித்து ஜி-125 என்ற அளவில் ஏகாதிபத்திய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக ஒருமித்து குரலெப்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்தியா, பிரேசில், வெனிசுலா, சீனா, தென்னாப்பிரிக்கா உட்பட உள்ள வளரும் நாடுகள் ஒன்றுபட்டு முன்னேறி வருகின்றன.இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் விவசாயத்தையும், விவசாயம் சாராத வர்த்தகத்தையும் ஒன்றாக இணைக்கக்கூடாது என்று கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.தற்போது அமெரிக்காவும் - ஐரோப்பாவும் மானியங்களை குறைப்பதில் எப்படிப்பட்ட பாரபட்சமான போக்கில் நிலவுகிறது என்பதை பல தரப்பினர் வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக “ஏழை நாடுகளில் மனிதனாக பிறப்பதைவிட, அமெரிக்காவில் மாடாக பிறக்கலாம்” என்று ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதிலிருந்தே அமெரிக்காவும் - ஐரோப்பாவும் தங்களது நாட்டு விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், ஏன் மாடுகளுக்கும் கூட மானியத்தை அள்ளி வழங்கி வருவதையும், அதே சமயத்தில் இந்தியா போன்ற நாடுகளில் “சமையல் கே°” உட்பட எதற்கும் மானியம் வழங்கக்கூடாது என நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
இதன் விளைவு “உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு 18,000 குழந்தைகள் பசியாலும், பட்டினியாலும், தடுக்கக்கூடிய நோய்களாலும் உயிரிழந்து வருவதாக உலக உணவு பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்து வருவதே” வளரும் நாடுகள் எத்தகைய ஆபத்தை நோக்கியுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.விவசாய சந்தையை வளரும் நாடுகள் திறந்து விட்டால் “ஹைபிரிட் விதைகள்” என்ற பெயரில் மலட்டு விதைகளை நம் விவசாயிகள் உபயோகிக்க வேண்டி வரும், அத்துடன் விதைக்காக நாம் அவர்களிடம் கையேந்தவேண்டிய நிலை வரும், மேலும் அவர்கள் பரிந்துரைக்கக்கூடிய உரத்தை இடுவதன் மூலமே சிறப்பான அறுவடையை எட்ட முடியும் என்று அவர்களது மறைமுகமான பொறிக்குள் நமது விவசாயம் சிக்கும்; விவசாயம் என்பது ஏற்றுமதிக்கே தவிர நம்முடைய உணவுத் தேவைக்காக இருக்காது! உட்டோவின் மாயாஜால வலைக்குள் எப்படியாவது சிக்க வைக்க துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்காவும் - ஐரோப்பாவும்.
அமெரிக்க - ஐரோப்பிய சந்தைகளில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக ஆசை வார்த்தைகளை காட்டுகின்றனர். உண்மை என்ன? அவர்கள் பட்டியலிடக்கூடிய பொருட்களை இந்தியா போன்ற ஏழை நாடுகள் ஏற்றுமதி செய்ய முடியாது. அதே சமயம் அவர்களது மார்க்கெட்டில் நாம் இலாபம் அடைகிறோம் என்ற நிலை வந்தால், உடனடியாக ஏதாவது ஒரு சொத்தை காரணத்தை கூறி நம்முடைய வர்த்தகத்தை தடுப்பார்கள்.
ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் சீனாவின் சமீபத்திய ஜவுளி ஏற்றுமதியை குறிப்பிடலாம். சீனாவின் ஜவுளி துணிகள் மிகப் பெருமளவில் குவிந்துக் கிடக்கிறது. அத்துடன் மிக குறைந்த விலையில் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்கப்படுவதால் ஐரோப்பிய ஜவுளி வியாபாரிகள் தற்போது அதைத் தடுத்து விட்டதை உதாரணமாக குறிப்பிடலாம்.
“உட்டோ” மாநாட்டை எதிர்த்து ஹாங்காங்கில் வலுவான எதிர்ப்புக்குரலை எழுப்பி வருகின்றனர். “உட்டோ எங்களை சாகடிக்குமே தவிர வாழவைக்காது!” என்ற கோஷத்தோடு உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என விதவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

December 15, 2005

தோல்வியை நோக்கி WTO மாநாடு



ஹாங்காங்கில் நடைபெற்றுவரும் உலக வர்த்தக மாநாடு தோல்வியை நோக்கி வெற்றிநடை போட்டு வருகிறது.


இந்த மாநாட்டில் மூன்றுவிதமான முரண்பாடுகள் நிலவுகிறது.


  1. வளர்ந்த நாடுகளுக்கு இடையிலான முரண்பாடு. (அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்)
  2. வளர்ந்த நாடுகளுக்கும் - வளரும் நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு.
  3. வளரும் நாடுகளுக்கும் - மிக குறைந்த வளரும் நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு.


மொத்தத்தில் வளரும் நாடுகள் ஒரு புறத்திலும், வளர்ந்த நாடுகள் ஒரு புறத்திலும் அணி அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன.



இந்தியா, சீனா, பிரேசில் என ஜி-20 நாடுகளும், அதேபோல் வளரும் நாடுகளைக் கொண்ட ஜி-90 நாடுகளும் ஒரு குழுவாக செயல்படுகின்றன. இதன் மூலம் அமெரிக்காவின் பெரும் சுரண்டல் கொள்கைக்கு சிறிதளவாவது மூச்சு முட்டத்தான் செய்கிறது.



விவசாய சந்தைகளை திறந்து விடுவதில் வளர்ந்த நாடுகளின் கொள்கைகளை ஏற்க மாட்டோம். அதே போல், சேவைத்துறைகளான இன்சூரன்°, வங்கி, மருத்துவம், மின்துறை போன்றவற்றில் முழுமையான திறந்தவெளிக் கொள்கையை அனுமதிப்பது வளரும் நாடுகள் தங்கள் தலையில் தாங்களே கொள்ளியை வைத்துக் கொள்வது போல் உள்ளது என கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.



தற்போது அமெரிக்கா தொழில் உற்பத்தியில் வளரும் நாடுகள் 90 சதவீதம் வரி விலக்கு அளிக்கவேண்டும் என்று கூறி வருகிறது. இதை வளரும் நாடுகள் ஏற்கவில்லை. எப்படியிருப்பினும் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளால் ஏழை - எளிய - நடுத்தர மக்களை மோட்சத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளே நடைபெற்று வருகின்றன. வளரும் நாடுகளில் உள்ள மக்களிடையேயும் இதற்கெதிரான விழிப்புணர்ச்சி அதிகரித்து வருவதால் விழிபிதுங்கி நிற்கிறது உள்நாட்டு ஆளும் வர்க்கங்களும் - ஏகாதிபத்திய சக்திகளும்.



“உட்டோ” மாநாடு தோல்வியுற வாழ்த்துக்கள்!



நீங்களும் வாழ்த்தலாம்!!

December 14, 2005

WTO மாநாடும் - ஏகாதிபத்திய சுரண்டலும்

“ஹாங்காங்கில்” நடைபெறும் “உட்டோ” மாநாட்டின் முதல் நாளான டிசம்பர் 13 அன்று “உலகமய - உட்டோ எதிர்ப்பாளர்கள்” 5000க்கும் மேற்பட்டோர் மிகப் பிரம்மாண்டமான ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். உலகமயம் என்ற பெயரால் எங்களை சாகடிக்காதே! என்ற கோஷம் விண்ணைப் பிளந்துள்ளது. மேலும், கான்கன்னைப் போலவே தென்கொரிய விவசாயிகள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டடனர். மேலும், சேவைத் துறைகளை தனியார்மயம் ஆக்குவதற்கு கடுமையான எதிர்ப்பினையும் தெரிவித்தனர். இதேபோல் “உட்டோ எதிர்ப்பு மாநாடுகள் உலகம் முழுவதும்” நடத்தியுள்ளது சிறிது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

முதல் நாள் நிகழ்வில் “விவசாயம் சார்ந்த மார்க்கெட்டை” திறந்து விட வளரும் நாடுகளுக்கு சலுகைகள் அளிக்கப்போவதாக அமெரிக்கவும் - ஐரோப்பவும் நீலிக்கண்ணீர் வடித்தன. ஆனால், வளரும் நாடுகள் இதற்கு இணங்குமா? என்பதை போகப்போகத்தான் தெரியும்!பிரேசில் தங்களுடைய விவசாய சந்தையை ஏழை - எளிய - வளரும் நாடுகளுக்கு திறந்து விடுவதாக அறிவித்துள்ளது. அத்துடன் வளரும் நாடுகளில் இருந்து வரக்கூடியபொருட்களுக்கு வரி விதிக்கப்போவதில்லை என்பதையும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இத்தகைய வரவேற்பு வரவேற்கத்தக்கதே!

அத்துடன் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் வளரும் நாடுகளுக்கு விவசாய மானியங்களை வெட்டச் சொல்லிக் கொண்டே, தங்களுடைய நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் அளவில் மானியம் வழங்கி வருவதையும் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. வளரும் நாடுகளில் மாநிலம் வெட்டப்படுவதால் போட்டியிலிருந்து மிகச் சுலமாக விவசாயிகளை ஓடச் செய்யலாம் என்ற அமெரிக்க-ஐரோப்பாவின் நரித்தந்திரத்திற்கு நிச்சயம் இந்த மாநாட்டில் பதிலடி உண்டு என எதிர்ப்பார்ப்போம்!

வளரும் நாடுகள் தங்களது மார்க்கெட்டை திறந்து விட்டால் அவர்களுக்கு உதவப்போவதாக அமெரிக்க கூறியுள்ளதோடு, ஆண்டொண்டிற்கு 2.7 பில்லியன் டாலர் ஒதுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. அதேபோல் ஜப்பான் ஆண்டொண்டிற்கு 10 பில்லியன் டாலரும், 1.2 பில்லியன் டாலரும் உதவுவதாக அறிவித்துள்ளது.

இத்தகைய அறிவிப்பு வளரும் நாடுகளை கடுமையாக சுரண்டி, அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதிகூட இருக்காது என்பதுதான் உண்மை. ஏகாதிபத்திய சுரண்டலின் கொடூரத்தன்மைக்கு பெயர்தான் உதவி.

இது தவிர “உட்டோ” மாநாட்டில் பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா உட்பட பல 100க்கும் மேற்பட்ட வளரும்நாடுகள் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்துள்ளது ஏகாதிபத்தியவாதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

இவர்களுடன் நாமும் கைக்கோர்த்தால் அமெரிக்க - ஐரோப்பிய - ஏகாதிபத்திய சுரண்டலுக்கு சம்மட்டியடி கொடுக்க முடியும்!

December 13, 2005

உலக மக்களை கரை சேர்க்குமா?
WTO ஹாங்காங் மாநாடு


உலக வர்த்தக அமைப்பின் 6வது உச்சி மாநாடு, சீனா நாட்டில் உள்ள ஹாங்காங்கில் டிசம்பர் 13 - 18 வரை 6 நாட்கள் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் எடுக்கப்படும் முடிவே உலக மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும்.


148 நாடுகள் உறுப்பினராக உள்ள “உட்டோ”வின் உச்சி மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். உறுப்பு நாடுகளிடையே வர்த்தகம் சம்பந்தமான ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதே இவ்வமைப்பின் நோக்கம்.


ஆனால், “உட்டோ” துவங்கப்பட்ட காலத்தில் இருந்தே வளர்ந்த நாடுகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது. இன்னும் அழுத்தமாக குறிப்பிட வேண்டும் என்றால் “வளர்ந்த பெரும் கார்ப்பரேட்” நிறுவனங்களின் நலனை முன்னிறுத்துவதாகவே இருந்துள்ளது.


இம்மாநாட்டின் முடிவும் “வளரும் நாடுகளுக்கும் - வளர்ந்த நாடுகளுக்கும்” இடையிலான பெரும் முரண்பாட்டை மேலும் அதிகரிப்பதற்கே இட்டுச் செல்லும்.கடந்த 2003 ஆம் ஆண்டு மெக்சிகோவில், கான்கன் நகரில் நடைபெற்ற “உட்டோ” மாநாடு எந்தவிதமான முடிவும் எடுக்காமல் பெரும் தோல்வியில் முடிந்தது. “உட்டோ”வின் பாரபட்சமான நிலைபாட்டிற்கு வளரும் நாடுகளிடையே எழுந்த ஆவேசக்குரலும், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் குரலும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் வலுவான எதிர்ப்புக்குரலுமே இம்மாநாட்டை தோல்வியுறச் செய்தது.


குறிப்பாக கான்கன் மாநாட்டின்போது “உட்டோ” அமைப்பு உலக விவசாயிகளை தற்கொலைக்கும் தூண்டும் அமைப்பாகவே செயல்படுகிறது என்று எதிர்ப்புக்குரல் எழுப்பிய தென் கொரிய விவசாயி “லீ குயூங் ஹே” தற்கொலை செய்துக் கொண்டு, “உட்டோ” அமைப்பின் கோர முகத்தை உலக மக்கள் முன்வெளிப்படுத்தினார்.


தற்போது நடைபெற்று வரும் “ஹாங்காங்” மாநாட்டில் குறிப்பாக இரண்டு விசயங்கள் விவாதிக்கவுள்ளனர்.


1. விவசாயம் சார்ந்த வர்த்தகம் குறித்து

2. விவசாயம் சாராத வர்த்தகம் குறித்து


குறிப்பாக விவசாயம் சார்ந்த வர்த்தகம் என்றால், இன்றைக்கு பல்வேறு வளரும் நாடுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அற்பு “மானியத்தை” கூட வெட்ட வேண்டும் என்பது உட்பட, வளரும் நாடுகள் தங்களது விவசாய சந்தைகளை மேல்நாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்றும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி உட்பட பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தியுள்ளனர்.தற்போது, உலகம் முழுவதும் நாள்தோறும் 24,000 விவசாயிகள் இத்தகைய மோசமான பொருளாதார கொள்கைகளால் மரணமடைந்து வருகின்றனர். கடன் மற்றும் பட்டினி கொடுமைக்கும், வறுமையால் பீடிக்கப்பட்டு நோய்வாய்பட்டவர்கள் நாள்தோறும் செத்துக் கொண்டு வருவதற்கு “உட்டோ”வின் வர்த்தக கொள்கைகளே!


குறிப்பாக நமது இந்திய நாட்டில் மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார் என பல மாநில விவசாயிகள் ஆண்டுக்கு 5000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைவதை பல பத்திரிகை செய்திகளில் கண்டுள்ளோம்.


இந்தியாவின் பொருளாதார பலமே விவசாய உற்பத்தியில்தான் இருக்கிறது, “உட்டோ”வின் வர்த்தக கொள்கையால் “விவசயாம் என்பது ஏற்றுமதிக்கே - உணவுக்கு அல்ல” என்ற கொள்கையை நிலைநாட்ட துடித்துக் கொண்டிருக்கின்றனர் வளர்ந்த நாடுகளும் - பெரும் ஏகபோக நிறுவனங்களும்.


விவசாயத்திற்கான கதவுகள் அந்நியர்களுக்கு இந்திய நாட்டில் திறந்து விட்டால் கோடிக்கணக்கான ஏக்கர் இந்திய மண்வளம் ஏகபோகங்களில் கைகளுக்கு மாறுவதோடு, தொழிற்சாலையைப் போன்ற பெரும் உற்பத்தியும் - அதிலிருந்து ஏழை விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படக்கூடிய அபாயமும் ஏற்படும். அத்துடன் நமது நாட்டிற்கு தேவையான அரிசி, கோதுமை, காய்கறிகள் போன்ற உற்பத்தி என்பதற்கு பதிலாக பருத்தி போன்ற பணப் பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏற்றுமதி செய்வார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் நமது இந்திய நாடு சோற்றுக்கு அமெரிக்காவையோ - ஐரோப்பாவையோ நம்பியிருக்க வேண்டியிருக்கும்!


மேலும், தற்போது இந்திய நாட்டில் பின்பற்றி வரும் “உட்டோ” வடிவமைத்த கொள்கை காரணமாக நமது பொதுத்துறைகளான இரயில்வே, மின்சாரம், விமானத்துறை, சுரங்கம், துறைமுகம் போன்ற அடிப்படையான கட்டமைப்புகள் தனியார்மயமாகி வருகின்றன. மிச்சமிருப்பதை பங்கு போடுவதற்குதான் இந்த உட்டோ மாநாடு உதவும். இதன் மூலம் இந்திய நாட்டில் வேலையிண்மை பெருகுவதோடு, வறுமையின் கோரப்பிடியில் நம்நாடு செல்ல வேண்டிய அபாயம் காத்திருக்கிறது!எனவே, “உட்டோ” போன்ற அமைப்புகள் பாரபட்சமானதோடு, பன்னாட்டு முதலாளிகளின் நலன் காப்பதற்கும், வளர்ந்த நாடுகளின் நலனுக்காகவுமே இவை பாடுபடுகின்றன!


உலக மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் மனிதநேய அமைப்புகள், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் அமைப்புகள் குறிப்பாக தற்போது வெனிசுலாவும் - கியூபாவும் இரு நாடுகளும் பர°பர ஒப்பந்தங்களின் மூலம் பெரும் பயனை அடைந்து வருவதோடு அமெரிக்காவிற்கே சவாலாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய அடிப்படையில் இந்தியா - சீனா - ரஷ்யா என்று ஆசிய நாடுகள் வலுவாக கரம் கோர்ப்பதும் இந்த அணியில் ஆசிய நாட்டில் உள்ள சிறிய நாடுகளையும் கூட்டாளிகளாக்கிக் கொண்டு உண்மையான - வளர்ச்சிக்கான - ஏழ்மையை ஒழிப்பதற்கான வர்த்தகத்தில் ஈடுபடுவதுமே நம் மக்களுக்கு பயன்படும்.


“ஹாங்கா” உட்டோ மாநாட்டை தோல்வியுறச் செய்வோம்! இதற்கெதிரான கருத்துப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வோம்! மனித முகத்துடன் கூடிய மாற்று அமைப்புகளை உருவாக்கிட அரசுகளை நிர்ப்பந்திப்போம்!

December 09, 2005

அடையாளம் - சிறுகதை

சித்தப்பா அவருடைய புதிய வீட்டிற்கு வரும்படி கூறியிருந்தார். வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் போகலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஏதாவது புதிய வேலைகள் வந்து தடுத்துக் கொண்டே இருந்தன. எப்படியோ இந்த ஞாயிற்றுக் கிழமை போய் விடுவது என்று முடிவு எடுத்து சித்தப்பா வீட்டிற்கு புறப்பட்டேன்.


அவரது வீடு காட்டாங்கொளத்தூரில் இருக்கிறது; சரியான முகவரி கூட தரவில்லை என்று வருத்தம் இருந்தாலும், அதெல்லாம் அவருக்கு தெரியாது என்றே சொல்ல வேண்டும். எப்படியோ தெருவின் பெயரை மட்டும் சொல்லியிருந்தார். கூடவே அடையாளத்திற்கு இரண்டு பேரின் பெயர்களையும் கொடுத்திருந்தார்.


சென்னை கடற்கரையில் இருந்து காட்டாங்கொளத்தூர் செல்வதற்கு புறநகர் ரயிலில் ஏறினேன். வழக்கமாக ரயிலில் செல்லும் போது புத்தகம் படிப்பது வழக்கம். அன்று, புதிதாக வந்திருக்கும் ஜார்ஜ் தாம்ஸனின் “சமயம் பற்றி” என்ற புத்தகத்தை வாசிப்பதற்காக எடுத்துக் கொண்டேன்.
புறநகர் ரயில் புறப்பட்டதும் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஐந்தாறு பக்கங்கள் தாண்டியிருக்கும் புத்தகத்தில் கூறியிருந்த விஷயங்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே சிந்தனையை திசை திருப்பிக் கொண்டே இருந்தது. ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால், சரவணா °டோர்ஸூக்கு படையெடுக்கும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.


இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டே இருந்த மூளை, தானே ஓய்வு எடுக்கத் துவங்கி விட்டது; கொஞ்ச நேரத்தில் கண்கள் சொக்க ஆரம்பித்து விட்டது. கையில் இருந்த புத்தகமும் இரண்டு முறை கீழே விழுந்து விட்டது. கை நழுவி விழுந்தது போல் பாசாங்கு செய்து கொண்டாலும், தூக்கம் வருகிறது என்பதை மறைக்க முடியவில்லை.


சரி, இப்போதைக்கு தூங்குவோம்; திரும்பி வரும் போது புத்தகத்தை படித்துக் கொள்ளலாம் என்று மூடி வைத்து விட்டேன். தாம்பரத்தை ரயில் நெருங்கும் போதுதான் தூக்கம் கலைந்தது.
தாம்பரம் பிளாட்பாரத்தில் வண்டி நுழைந்துக் கொண்டிருக்கும் போதே, செங்கல்பட்டு வரை செல்லும் அடுத்த வண்டித் தொடர் 9 வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் என்ற அறிவிப்பு ஒலித்துக் கொண்டே இருந்தது. பயணிகள் முண்டியடித்துக் கொண்டு வண்டியை பிடிப்பதற்கு ஓடத் துவங்கினர். நானும் நடையை வேகப்படுத்தினேன். டிரைவர் வண்டி புறப்படுவதற்கான ஹாரனை ஒலித்துக் கொண்டே இருந்தார். வேகமாக சென்று வண்டியை பிடித்துக் கொண்டேன்; வாசற்படியில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் உள்ளே சென்றதும் இரண்டு இருக்கைகள் இருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டேன்.


வண்டி மெதுவாக புறப்பட ஆரம்பித்தது. 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ‘இது தாம்பரம் போகுமா?’ என்று கேட்டார். “இது தாம்மா... தாம்பரம்” என்றவுடன் சுதாரித்துக் கொண்டு, ‘எக்மோர் போகுமா?’ என்று கேட்டார். பரிதாபமும், அறியாமையும் என்னை உறுத்தியது. ஐயோ! இது செங்கல்பட்டு போகுதும்மா? நீங்க அந்த பிளாட்பாரம் போங்க என்று கூறும் முன்னே வண்டி கொஞ்சம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. ஓடும் வண்டியில் இருந்து இறங்கி விடலாம் என்று அந்த பெண்மணி கூட்டத்தை விலக்க ஆரம்பித்தார்.


ஏம்மா, இப்ப இறங்காதீங்க! அடுத்த °டேஷனில் இறங்கி மாறி வந்துடுங்க என்று கூறினேன். சிறிது நேரத்தில் செங்கல்பட்டுக்கு செல்லும் மக்கள் அதிகமாக வரவே டிரைவரும் வண்டியை நல்ல மனதோடு நிறுத்தி விட்டார். எப்படியோ அந்த அம்மா கூட்டத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டார். ஒரு சின்ன பெருமூச்சு... இப்படியுமா?


அடுத்து என் சிந்தனை முழுக்க காட்டாங்கொளத்தூரையே நினைத்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருப்பவரை கேட்டேன் இன்னும் எத்தனை °டேஷன் என்று, பார்க்கும் போதே அவர் கிராமத்துவாசி என்று தெரிந்தது. அவரும் ஆர்வத்தோடும், பொறுப்போடும் கை விரலை விட்டு ஒவ்வொரு °டேஷனாக எண்ணி இன்னும் ஐந்து °டேஷன் இருக்குதுன்னார்.


அந்த சின்ன இடைவெளியில் திரும்பவும் புத்தகத்தின் மீது என் கவனம் சென்றது. ஓரிரு பக்கங்கள் தான் சென்றிருக்கும், இரயில் ஒவ்வொரு °டேஷனில் நிற்கும் போதும், காட்டாங்கொளத்தூர் ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. கூட்ட நெரிசலில் கொட்டாங்குச்சியைத் தட்டி பிச்சை எடுத்துக் கொண்டு வந்தார் ஒரு முதியவர். இசை ரசிக்கும்படி இருந்தது. இருப்பினும் பல ஜெண்டில்மேன்கள் சோப்பையே பார்க்காத சட்டையைப் பார்த்து முகம் சுளிப்பதை பார்க்க முடிந்தது. வெள்ளரி பிஞ்சு விற்றுக் கொண்டு வந்தவரிடம் இரண்டு ரூபாயை நீட்டினேன் அவரும் பெரிய வெள்ளரிக்காயை நான்காக சீவி, உப்புப்போட்டுக் கொடுத்தார். உடலுக்கு நல்லது என்றாலும், அவ்வளவுப் பெரியதாக சாப்பிட மனம் ஒத்துவரவில்லை. அத்துடன் பக்கத்தில் ஐந்து °டேஷன் என்று அடையாளம் காட்டிய பெரியவருக்கு தராமலும் சாப்பிட முடியவில்லை. அவரிடம் கேட்டபோது, எனக்கு இதெல்லாம் ஒத்து வராதுங்க என்று கூறிவிட்டார்.


அதற்குள் காட்டாங்கொளத்தூரில் இரயில் நின்றது. ஐந்தாறு பேர் மட்டுமே அந்த °டேஷனில் இறங்கினர். இறங்கிய வேகத்தில் அவரவர் பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தனர். நான் கிழக்குப் பக்கம் போகலாமா? அல்லது மேற்கு பக்கம் போகலாமா? எப்படி போனால் ஈசியாக இருக்கும் என்ற முடிவுக்கு வராத நிலையில், அங்கு சிக்னலுக்காக கொடிகாட்டும் ஊழியரிடம் “வில்லியர் தெரு” எங்க இருக்குது என்று கேட்டேன். நான் இங்க புதுசுங்க நீங்க இரயில்வே கேட்டுக்கிட்டப் போய் கேளுங்க என்றார்.


எப்படியும் கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு மேற்குபக்கத்தில் சென்ற வழித்தடத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கு ஒரு சிறிய பங்க் கடை இருந்தது ஐந்தாறு பேர் இருந்தனர். 60 வயதை தொட்டிருக்கும் பெரியவரிடம் இங்க “வில்லியர் தெரு” எங்க இருக்குதுங்க! என்று கேட்டேன். அவர் ரொம்ப சத்தமாக ‘ஐய்யய்யோ! நான் இந்த ஊருக்கு புதுசுங்க நீங்க அவரைக் கேளுங்க’ என்றார். அவ்வளவு சத்தமாக அவர் பேசியது ஒரு மாதிரியாக இருந்தது. சரி கடைக்காரரிடம் கேட்டபோது, ‘இங்க அந்த மாதிரி ஊரே இல்லை’ என்றவர், ‘அது ரொம்ப தூரம் இருக்குது நீங்க இந்தப் பக்கம் போங்க’ என்று ஒரு வழியைக் காட்டினார்.


அவரது பேச்சில் நம்பிக்கை இல்லாமல் கிராமத்து தார் ரோட்டில் நடக்க ஆரம்பித்தேன். எதிரே பைக் ஒட்டிக் கொண்டு வந்த இளம் வாலிபரிடம் கேட்டேன். அவரும் இது இங்க இல்லைங்க ரொம்ப தூரம் இருக்குது நீங்க இப்படியே நீட்டா போங்க அங்க ஒரு கோயில் வரும் அங்கப் போய் கேளுங்க என்றார்.


ஒரு சின்ன நம்பிக்கையோடு நடைபோட ஆரம்பித்தேன். கிராமமாக இருந்தாலும், ஆங்காங்கே சிறு கடைகள் முளைத்திருந்தன. பாராளுமன்ற தேர்தலுக்கு எழுதிய சுவரெழுத்துக்கள் அப்படியே நிறம் மாறாமல் இருந்தது. கட்சிகளின் சின்னங்களை பல வண்ணங்களில் எழுதியிருந்தார்கள். அந்தப் பக்கத்தில் சின்ன நூலகம் ஒன்று மூடிய நிலையில் இருந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எப்படியோ அவர்கள் கூறிய அந்தக் கோவிலை அடைந்து விட்டேன். அங்கே மூலையில் மூன்று வாலிபர்கள் இருந்தார்கள். இவங்கதான் சரியான ஆள் என்று அவர்களை கேட்டேன். “இங்க வில்லியர் தெரு” எங்க இருக்குது என்று, “இங்க அப்படியொரு தெரு இல்லிங்க” என்றனர். ஒருத்தர் நின்னகரையில் இருக்குது என்றார், இன்னொருவர் காட்டூரில் இருக்குது என்றார்.


சரி, நீங்க யார் வீட்டுக்கு போகனும் என்றார்கள். சித்தப்பா சொல்லி வைத்த இரண்டு பேரை சொன்னேன். ராஜதுரை, ரங்கதுரை வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குப் போகனுன்னேன். ஓ... அவங்க வீடா, அது நீங்க வந்த வழியே போய் ரயில்வே கேட்டை தாண்டி, அந்தப் பக்கம் போகனுங்க, ரொம்ப தூரம் இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். நீங்க ஏதாவது ஆட்டோவில் போய்டுங்க என்றனர்...
அவங்களுக்கு தேங்க° சொல்லி விட்டு திரும்பும் போது ஆட்டோ ஒன்று எதிர்பட்டது. அந்த வாலிபர்கள் பரிவோடு அதை நிறுத்தி, சவாரி இருக்கு போப்பா என்றனர்., “ஆட்டோ டிரைவர் நான் சாப்பாட்டுக்குப் போறேன்... இப்ப முடியாது என்று கூறி விட்டு, ஆட்டோவை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே போய் விட்டார்.” ஓகே. தேங்க°ங்க என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தேன்.


அந்த வாலிபர்கள் ஆட்டோக்காரரை திட்டியது காதுகளில் விழுந்தது. வெய்யில் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. கொஞ்ச தூரம் நடந்திருப்பேன். அங்கு இருந்த ஒரு கடையில் “டிரிங்° இருக்குதுங்களா?” என்றேன் அந்த கடையில் இருந்த பெண்மணி கோல்டு °பாட் இருக்குது என்றார், அது வேண்டாம் என்றேன். பின்னர் பேன்டா இருக்குது என்றார். அதை வாங்கி குடித்து விட்டு, சரி அவரிடமும் இந்த ஊர் பற்றி கேட்கலாம், மக்கள் தொடர்பகமாக இருக்கிறதே என்று கேட்டேன். “வில்லியர் தெரு எங்க இருக்குது என்று” இங்க எதுவும் இல்லிங்க... என்று கூறியவர்... கடைக்கு வந்திருந்த மற்றொரு பெண்ணிடம், காலனியாளுங்க எல்லாம் அந்தப் பக்கம் தான் இருப்பாங்க என்று குறைந்த சத்தத்தோடு கூறினார்.


நாம் கேட்ட கேள்விக்கும், “காலனிக்கும்” என்ன சம்மந்தம் என்று யோசித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். சமூகத்தின் அடையாளங்களாக சாதியம் வேரூன்றி உள்ளதை அவரின் பேச்சு வெளிப்படுத்தியது.


எப்படியோ கொஞ்சம் தூரம் நடந்து ரயில்வே கேட்டை அடைந்ததும், மீண்டும் யாரையாவது கேட்டு கன்பார்ம் செய்து கொள்ளலாம். இல்லையென்றால், வேறு வழிக்கு சென்று விடுவோமோ என்ற அச்சத்தில், அங்கிருந்த °டுடியோ கடைக்காரரிடம் சென்று கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை, கடைக்கு வந்த நடுத்தர வயது கொண்ட வாலிபர் நீங்க யார் வீட்டுக்குப் போகனும் என்றார், நான் மீண்டும் ராஜதுரை, ரங்கதுரையை அடையாளப்படுத்தினேன். அவர்கள் வன்னியரா என்றார். இல்லீங்க சின்னதுரை ரெட்டியார்ன்னு சொன்னங்க... அவர் அதை செட்டியார் என்று புரிந்துக் கொண்டதால், செட்டியாரா? என்று விழி பிதுங்க கேட்கும் போதே... இங்க செட்டியார்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது... மீண்டும் அவரிடம் இல்லீங்க ரெட்டியார், நாயக்கர், வன்னியர் எல்லாம் ஒன்னாத்தான் இருக்கும் என்றேன்...


தலையை சொறிந்துக் கொண்ட அவர் பக்கத்தில் டீ கடையில் உள்ள ஒருவரை காட்டி, அவரிடம் கேளுங்க என்றார். கருத்த உருவத்தில் - வெள்ளை சட்டையில், முறுக்கிய மீசையோடு இருந்த பெரியவர் விவரம் தெரிந்தவர் என்பதை காட்டியது. அவரும் சின்னதுரை, பெரியதுரை என்று கூறியவுடன் அதைப் புரிந்துக் கொண்டவராக, உரிய வழியைக் காட்டினார்.


அவர் காட்டிய பாதையில் நடக்க ஆரம்பித்தேன். உச்சி வெயில் சுள்ளென்று தாக்கினாலும், காற்றின் அருமை அதை தணித்துக் கொண்டே வந்தது. ஆள் அரவமற்ற சாலையில் நடக்க ஆரம்பித்தேன். அந்த ஊரிலும் பெரிய மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடம்! ஒரு நடுத்தர வர்க்கம் உருவாகியிருப்பதை உணர்த்தியது. அப்பள்ளிக்கூடத்தை தாண்டி சென்று கொண்டிருந்தேன். கிராமப்புறத்தில் கூட அழகாக சாலைகள் போடப்பட்டிருக்கிறதே என்ற சந்தோஷம். உண்மையில் அது கிராமத்துக்காரர்களுக்காக போடப்பட்ட சாலையல்ல என்பதை கொஞ்சம் தூரம் சென்றவுடன் காண முடிந்தது. அது புதிதாக பிளாட் வாங்குபவர்களின் வசதிக்காக போடப்பட்டிருந்ததை ரியல் எ°டேட்டுக்களின் வண்ண, வண்ணமான வளைவுகளுடன் கூடிய வரவேற்பு விளம்பரப் பலகைகள் வெளிப்படுத்தியது. அதையும் தாண்டி சென்ற போது மீண்டும் கரடு, முரடான ஒரிஜினல் கிராமத்துச் சாலை.


காற்றை கிழித்துக் கொண்டிருந்தது குருவிகளின் குரல்... ஏ! குருவி... சிட்டுக் குருவி... பாடலை ஞாபகப்படுத்தியது. இன்னும் கொஞ்ச காலத்தில் மறையவுள்ள வறண்ட வரப்புகளில், ஆடுகளும், மாடுகளும் மேய்ந்துக் கொண்டிருந்தன. உயர்ந்த பனைமரங்கள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன. மனம் கிராமியத்தை வட்டமிட்டுச் சென்றாலும் எண்ணம் வில்லியர் தெரு மீதே இருந்தது. கொஞ்சம் தூரத்தில் குடிசைகளும், வீடுகளும் தென்பட்டன. தெருவில் ஆட்கள் யாரையும் காண முடியவில்லை.


ரொட்டிக்கடைக்காரர் ஒருவர் வேகமாக சைக்கிளில் வந்து, ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். அங்கே ஏதோ கடையிருக்கும் என்ற நம்பிக்கையோடு சென்றேன். கடையில்லை. வியாபார விஷயமாக யாரையோ பார்க்க வந்தவரிடம், மீண்டும் வழிகேட்டேன் அவருக்கும் தெரியவில்லை. அவர் குடிசைக்குள் இருந்து ஒருவரை அழைத்தார். அவரிடம் “வில்லியர் தெரு” எங்கே இருக்கிறது என்று கேட்டேன். இன்னும் ஒரு கிலோ மீட்டர் போகனுங்க... அங்க ஒரு கோவில் இருக்கும் அங்கப் போய் கேளுங்க என்றார்..., கூட இருந்த வியாபாரி, “இவருக்கு அந்த ஊர் எல்லாம் தெரியுமுங்க” என்று நம்பிக்கையூட்டினார். விவரம் தெரிவித்த கிராமத்துக்காருக்கு மகிழ்ச்சி, கூடவே வியாபாரியிடம் கூறினார். எங்க கழனியில அவுங்கத்தான் வேலை செய்யறாங்க என்றார்.


கிராமத்து அடையாளம் நடு கல்லும், பனைமரங்களும், வயல் வரப்புகள் மட்டுமல்ல சாதீயமும்தான்; நிலமற்ற கூலி உழைப்பாளிகள் தாழ்ந்த நிலையில் இருப்பதை அவரது பேச்சு வெளிப்படுத்தியது.
அவர் காட்டிய பாதையில் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். சாலை ஓரமாக இருந்த பெரிய கைப்பிடி கொண்ட கிராமத்து பம்பை பார்த்ததும் மகிழ்ச்சி! தாகத்தை தணித்துக் கொண்டு, முகத்தை கழுவிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். காற்று முகத்தில் பட்டு ஏற்படுத்திய சுகமே தனி! மனதுக்குள் ஒரே போராட்டம்! உண்மையில் வில்லியர் தெரு என்று உண்டா? அங்கு வில்லிகள் என்ற மக்கள் வசிக்கிறார்களா? அது ஒரு வேளை வேறு மாதிரியாக இருந்தால், வழியில் எதிர்படுபவரிடம் நாம் இதை கேட்கப் போய் விபரீதம் ஏற்படுமோ? மேல் தட்டு வர்க்கத்தினர் இந்த சொல்லை எப்படி எதிர்கொள்வார்கள் என்று பலவாறு எண்ணங்கள்...


பிளாட் போடப்பட்டு இருந்த வயல்களில் நடக்க ஆரம்பித்தேன். ஆட்களின் நடமாட்டமே தெரியவில்லை. ஏதோ ஓரிடத்தில் மட்டும் புதிதாக கட்டத் துவங்கி வீடு காட்சியளித்துக் கொண்டிருந்தது. ரியல் எ°டேட் உரிமையாளர்கள் இந்த காலி மைதானத்தை 50க்கும் மேற்பட்ட தெருக்களாக பிரித்து வைத்திருந்தனர். அழகர் தெரு, கண்ணன் தெரு, அலிமுல்லா தெரு, திருவள்ளுவர் தெரு, கம்பர் தெரு, ஆழ்வார் தெரு.... இப்படி பல....
நமக்கு ஒரு தெருவை கண்டுப்பிடிக்கவே இத்தனை சிரமம். இந்த இடத்தில் 50க்கும் மேற்பட்ட தெருக்களின் பெயர்களை எழுதி வைத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் போ°ட் மேன் என்ன பாடு படுவாரோ என்ற எண்ணத்தோடு... நடைபோட்டேன்.


தூரத்தில், இளம் காளைகள் கிணற்றில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கும்பல் கிராமத்துக் கோவிலுக்கு அருகே உள்ள செடி கொடிகளை வெட்டிக் கொண்டு இருந்தது. அடர்த்தியான மரங்களுக்கு நடுவே இருந்த கிராமத்து கோவில் எந்த சலனமும் இல்லாமல் இருந்தது. பல வண்ணங்களில் பெரிய வால்களுடன் உட்கார்ந்த நிலையில் உயரமாக இருந்த ஐந்து கிராமத்துச் சிலைகள் கலை நயத்தோடு காட்சியளித்தன.


அந்த மக்களிடம் கவலையை விட, சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. இறுக்கமான சிந்தனைகளோடு ஓடிக் கொண்டிருக்கும் நகரத்து மனிதர்களை சிந்தித்தால்... இவர்கள் கொடுத்து வைத்தவர்களே...
நகரத்தில் மூளைக்கு 32 மருத்துவமனைகள் இருக்கும் போதே பேஷண்டுகளை காப்பாற்றுவது சிரமமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு இரவில் ஜூரம் வந்து விட்டால் எந்த ஆ°பத்திரி திறந்து இருக்கும் என்ற பதைபதைப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. இங்க ஆ°பத்திரியும் இல்லை; மருத்துவரும் இல்லை... இவர்களுக்கு ஏதாவது அவசர சிகிச்சை தேவைப்பட்டால் என்ன செய்வார்கள்? எங்கே செல்வார்கள் என்ற சிந்தனை மனதை உலுக்கியது. ஒரு வேளை தூய்மையான காற்றுதான் இவர்களை காப்பாற்றுகிறதோ! என்ற எண்ணத்தோடு நகர்ந்துக் கொண்டிருந்தேன்.
கிராமத்துச் சாலையில் ஒருவர் வேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்தார். அவர் வரும் போதே நாம் ஏதாவது அவரிடம் கேட்போம் என்ற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் தொற்றிக் கொண்டிருந்தது. அதை புரிந்து கொண்ட நான், அவரிடமும் வில்லியர் தெரு... ராஜதுரை... என்ற அடையாளத்தோடு கேட்டேன். இன்னும் கொஞ்சம் தூரம் போங்கள் அங்க அவுங்கத்தான் இருப்பாங்க என்றார்.


இப்படி ஒரு சிறிய பயணம் தேவையா? ஏன் சித்தப்பா இப்படி செய்தார்? நம்மை சோதித்து விட்டாரே என்று அவர் மீதும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உண்மையில் அவருக்கு விலாசம் தெரியவில்லையா? அல்லது ஏனோ, தானோ என்று சொல்லி விட்டாரா? சரி, எப்படியும் கண்டு பிடித்து விடுவது என்று வைராக்கியத்துடன் நடக்க ஆரம்பித்தேன்.


இரயில் நகர் என்னை வரவேற்றது. பெரிய பங்களாக்கள்... வெளியில் ஆட்களின் தலையை காணவே முடியவில்லை. நகரத்தில் தெருக்களில் வாலிபர்கள் கூட்டமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பது போலவோ, மூன்று குச்சிகளை வைத்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பது போலவோ, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பது போலவோ எதையுமே காண முடியவில்லை...
அந்த நல்ல தார் சாலையை தாண்டியவுடன்... என்றோ போடப்பட்ட கிராமத்துச் சாலை நம்மை வரவேற்க பல்லிளித்தது. கொஞ்சம் தூரம் தள்ளிப் போனவுடன் இரண்டு பக்கங்களிலும் தாழ்வான குடிசைகள், ஆடு, மாடு என வீடுகளில் கட்டியிருந்தார்கள். பெண் பிள்ளைகளும், குழந்தைகளும், கிழவர்களும் கண்ணில் பட்டனர். ஒரு வீட்டில் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், வயதான பெரிசுகள் என கும்பலாக வீட்டின் முன் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த தெருவில் உள்ள ஒரே டி.வி. இதுவாகத்தான் இருக்கும் என்பதை உணர்த்தியது. ஹைடெக் உலகில் இப்படியுமா? என வியக்க வைத்தது.


வீட்டிற்கு வெளியில் இருந்த ஒரு பெண்ணிடம் நம் அடையாளத்தை கூறி கேட்டபோது, அவர் வேறு ஒரு தெருவை அடையாளம் காட்டினார். இதுவே கடைசி முயற்சி என்று மனதில் எண்ணிக் கொண்டு நடையைக் கட்டினேன். புதிதாக எழும்பியிருந்த வீடு நம்பிக்கையூட்டியது. அதுதான் வில்லியர் தெரு என்பதையும் கண்டு கொண்டேன்; தூரத்தில் வரும் போதே சித்தியும்..., தங்கையும் என்னை கண்டு கொண்டனர்.
தங்கை கேட்ட முதல் வார்த்தையே எப்படிண்ணா... கண்டுப்பிடிச்சே... என்றுதான். அப்புறம் என்ன, என்னுடைய அடையாள அனுபவங்களை... சொல்லிக் கொண்டே இருந்தேன்.
தங்கை கூறினாள், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து பாருங்க, எல்லாப் பிளாட்டும் கட்டி முடித்தால், இந்த அடையாளமே தேவைப்படாது என்று... நம்பிக்கையூட்டியது... நகரமயமாக்கல் ஜாதிய அடையாளத்தை அகற்றும் என்று.


நகரமயமாதலால், வில்லியர்களுக்கு நிலமோ, வீடோ கிடைக்காது... இடம் பெயர்ந்து போய் விடுவார்கள்... தெருவின் பெயர் மட்டுமே அடையாளமாக மிஞ்சும் என்ற சிந்தனையோடு இரயில் நிலையத்தை நோக்கி புறப்பட ஆரம்பித்தேன்....


- கே. செல்வப்பெருமாள்

December 08, 2005

மைக்ரோ சாப்ட்டின் “மைக்ரோ சுரண்டல்”




மைக்ரோ சாப்ட் அதிபர் ‘பில் கேட்ஸ்°’ நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஐ.டி. துறையில் ரூ. 17,500 கோடி முதலீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார். வரவேற்க வேண்டிய விஷயமே! இதன் மூலம் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்போவதாகவும், தற்போது இந்தியாவில் 4000 பேர் மைக்ரோசாப்ட்டில் பணிபுரிவதாகவும் கூறியுள்ளார். “இந்தியாவில் மனிதவளம் மிகுந்துள்ளதையும்” பில்கேட்ஸ் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். இந்திய நாட்டில் இவ்வளவுப் பெரிய முதலீடு செய்வதை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.

இருப்பினும் இம்முதலீடு குறித்து மனதில் எழும் சில கேள்விகளை கேட்காமலும் இருக்க முடியவில்லை.

  • நமது நாட்டில் ஐ.டி. துறையில் அறிவு வளம் மிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் மிகுந்திருப்பதோடு, இவர்களையெல்லாம் அமெரிக்கா - ஐரோப்பாவோடு ஒப்பிடும் போது மிகக் குறைந்த சம்பளத்தில், தங்களுக்கு தேவையான பணிகளையும் மிகச் சிறப்பாக பெற முடியும் என்பதே! (இது ஒரு கௌரவ சுரண்டல்) இதன் மூலம் மைக்ரோ சாப்ட் அடையக்கூடிய லாபம் என்பது அளவிட முடியாததாக இருக்கும்.
  • பொதுவாக நம்மைப்போன்ற பின்தங்கிய நாட்டில், உதாரணமாக ரூ. ஒரு லட்சம் முதலீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். சரி! இது உயர் தொழில் நுட்பத்துறையாக இருப்பதால் ஒரு கோடி ரூபாய்க்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு என்றால் கூட 17,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். நிலைமை என்ன? பெரிய கப்பலில் இருந்து மிகப்பெரிய வலையை வீசி அனைத்து மீன்களையும் அள்ளிச் செல்லும் வேலைதான் இது. (இதுதான் மைக்ரோ சாப்டில் மைக்ரோ சுரண்டல்)
  • இம்முதலீட்டின் மூலம் இந்திய நாட்டில் உள்ள விப்ரோ, டி.எஸ்.சி. போன்ற உள்நாட்டு ஐ.டி. போட்டியாளர்களையும் இத்தொழிலில் இருந்து சிறிதளவாவது போட்டியிலிருந்து விலக்கி வைக்க முடியும்.
  • நம் நாட்டில் ஐ.டி. சார்ந்த சேவையை பயன்படுத்துபவர்கள் அமெரிக்க - ஐரோப்பிய மார்க்கெட்டில் உள்ளவர்களை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும் இத்தகைய சேவையை பயன்படுத்துபவர்களை “மைக்ரோ சாப்ட்டின் சாப்ட்வேர் அடிமைகளாக” மாற்றுவதையும் தனது நோக்கமாக கொண்டுள்ளார் பில்கேட்ஸ். ஏற்கெனவே 90 சதவீத அடிமைகளாக மாறிவிட்டனர் கணிணி வல்லுனர்களும் - பயன்பாட்டாளர்களும்.
  • லீனக்°, யூனிக்ஸ், சன்... என பல்வேறு ஆப்ரேட்டிங் சிஸ்டஸ்ட்ம் உட்பட “இலவச சாப்ட்வேர்களை” வழங்கி வருவதை நாம் அறிவோம். இப்படி பன்முகப்பட்ட தன்மை களைக் கொண்ட சாப்ட்வேர்களை மக்கள் உபயோகிப்பதை தடுப்பதும் மைக்ரோசாப்ட்டின் நோக்கங்களில் ஒன்று. நமது அரசுகளும் கூட இதுபோன்ற பாதுகாப்பான இலவச சாப்ட்வேர்களை பயன்படுத்திக் கொள்வதில்லை. (இதுதான் ஏகபோக ஆதரவு கொள்கை யின் அப்பட்டமான வெளிப்பாடு.)
  • குறிப்பாக இன்றைக்கு தமிழ்த்துறையை எடுத்துக் கொண்டால் “தமிழ் பாண்ட்”, “கீ போர்டு டிரைவர்” என பலவற்றிற்கு பல தமிழ்சார்ந்த சாப்ட்வேர்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் பல சிறிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் வளர முடிகிறது. (இதிலும் வியாபாரக் கொள்ளை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது) இருப்பினும் இதன் மூலம் பல நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதுவே மைக்ரோ சாப்ட்டின் தமிழ் சார்ந்த சாப்ட்வேராக இருந்தால் அனைத்து நிறுவனங்களையும் ஒழிக்கும் வேலையை ‘பில் கேட்ஸ்’ நன்றாகவே செய்திருப்பார்.
    மேலும், டி.பி. போன்ற நோய்களை ஒழிப்பதற்கு ‘வேக்சின்’ தயாரிக்க பில்கேட்ஸ் உதவ முன்வந்திருக்கிறார். இது ஏதோ அவரது கருணையால் நமக்கு கிடைக்கும் பணம் அல்ல; இந்திய நாட்டில் தனக்கு மிகப்பெரிய சுரண்டலை செய்ய அனுமதித்ததற்கு போடும் ........ காசே! இதுபோன்ற உதவிகளால் மந்திரிகள் மனம் மகிழலாம் மக்கள்....
  • இறுதியாக, நமது நாட்டிற்கு இன்றையத் தேவை, பெரும்பாலான மக்கள் பயனடையக் கூடிய முறையிலான வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்நுட்ப உதவிகளும், முதலீடுகளுமே!
    அபாரமான சிந்தனையாளர்களைக் கொண்ட நம் தொழில்நுட்ப வல்லுனர்கள் முயற்சி செய்தால் பல சிலிக்கன் வேலிகளை இந்திய நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் உருவாக்க முடியும்! மத்திய - மாநில அரசுகளின் ஆத்மீகமான கமிஷனற்ற உதவியும் அத்தியாவசியத் தேவை!
  • 2020 பேசும் அப்துல்கலாம் தனக்குள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு மாநில அரசுகளையாவது இப்பணியில் பயன்படுத்தலாம்... இவர்கள் எல்லாம் பேசுவதை குறைத்து விட்டு செயலில் ஈடுபட்டால் சிலிக்கன் வேலி எட்டும் தூரத்தில்....

December 06, 2005


“டிசம்பர் - 6, கருப்பு தினம்”

December 05, 2005

கருப்பு தினம்


இந்தியாவின் கருப்பு தினம் “டிசம்பர் 6”. சங்பரிவாரத்தால் 464 வருட பழமைவாய்ந்த “பாபர்” மசூதி தகர்க்கப்பட்ட நாள். இன்றுடன் 13 ஆண்டுகள் முடிந்து விட்டது. உலகின் மிக தொன்மையான பாரம்பரியம் உள்ள நாடு இந்தியா. நம் நாட்டின் மதச்சார்பற்ற பாரம்பரியம் தகர்ப்பட்ட நாள் “டிசம்பர் 6”. மக்களின் மத உணர்வை அரசியலாக்கி அதன் மூலம் பதவி சுகம் காண துடித்தவர்களின் செயலே பாபர் மசூதி இடிப்பு.


மூன்று லட்சம் பக்தர்களை இராமருக்கு கோவில் கட்டுவோம் என்று கூறி, செங்கல் பூஜை என்ற பெயரில் போலி நாடகமாடி, உத்திரபிரதேசத்தின் அன்றய முதல்வர் கல்யாண்சிங் “பாபர் மசூதியை” பாதுகாப்போம் என்று உறுதி மொழி கொடுத்து (போலியாக) சங்பரிவாரங்களின் திட்டமிட்ட வெறிச்செயலால் பாபர் மசூதி தகர்க்கப்பட்டது. இடிக்கப்பட்ட ஒவ்வொரு “டூம்”களின் போதும் இந்திய அன்னை வெட்கித் தலைக்குனிந்தாள்.


மசூதியை இடித்தவர்கள் அத்தோடு திருப்தியடைவில்லை. வெற்றி ஊர்வலம் என்ற பெயரில் சாதாரண உழைப்பாளி மக்களான இ°லாமியர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஊர்வலம் நடத்தி, இரத்தகளரியை ஏற்படுத்தி, ஒரே மாதத்தில் நாடு முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களை வேட்டையாடினர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் பெருமானமுள்ள சொத்துக்களும், பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன. கற்பை காப்பாற்ற புறப்பட்டுள்ள “தமிழ் பாண்பாட்டார்கள்”, “பெரியாரின் வழி வந்தவர்கள்” அவர்களோடு கைகோர்த்து - கொஞ்சி மகிழ்ந்தனர். கற்பின் புனிதமெல்லாம் அப்போது தாமரையின் இதழ்களால் மழைக்கப்பட்டது.


மசூதி இடிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோசி, அசோக் சிங்கால் ஆகியோர் இதுவரை சிறு தண்டனையைக்கூட அனுபவிக்கவில்லை. மாறாக மதச்சார்பற்ற இந்தியாவின் முக்கிய மந்திரிகளாக வளம் வந்தனர். (அவக்கேடான விஷயம்) அது மட்டுமா? இத்தகைய குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள, அந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள கீழ்த்தரமான வேலைகளிலும் இறங்கினார் அன்றைய துணை பிரதமர் அத்வானி.


சங்பரிவார ஆட்சிக்காலத்தில் இந்திய நாடே இரத்த களரியானது. குஜராத் மோடி “நவீன பாசிஸ்ட்டாக” வடிவெடுத்துள்ளான். 3000 இஸ்லாமிய மக்களை நரவேட்டையாடியது முகமூடி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக்காலத்தில். (கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை எடுத்து கோர நர்த்தனம் ஆடியதெல்லாம் இந்துத்துவ - மோடிச - சங்பரிவார பண்பாடானது - தமிழ் பண்பாட்டார்களின் குரல்கள் அவர்களது குரல் வளைக்குள் சிக்கிக் கொண்டன....)


கிருத்துவ ஆலயங்கள் தகர்ப்பு, கன்னியா°திரிகள் கற்பழிப்பு, பாதிரியார் எரிப்பு... என தங்களது சித்து வேலைகளை, மத துவேஷத்தை தூண்டி உழைப்பாளி மக்களிடையே பகையுணர்வை மூட்டியவர்கள்தான் சங்பரிவார கயவர்கள்.
அன்று இஸ்மாயில்” என்று பச்சைக் குத்திக் கொண்டு மகாத்மாவை கொன்ற கோட்சேவின் வாரிசுகள்தான் இன்றைய சங்பரிவார வகையறாக்கள்.


“இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிவது” என்னுடைய இருதயத்தை இரண்டாக பிளப்பது போல் என்று கூறிய மகாத்மா... சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மதக்கலவரத்தால் மனம் நொந்தவராக - அமைதியற்ற மனநிலையில் இருந்தார்.


இந்திய சுதந்திரப்போரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளிடம் காட்டிக்கொடுத்தவர்தான் “முகமூடி வாஜ்பாய்”, அந்தமான் சிறையில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர் “வீர (கோழை) சவர்க்கார்”. இந்திய விடுதலைக்கோ, தேச முன்னேற்றத்திற்கோ துரும்பளவுக்கு கூட பங்களிக்காதவர்கள் இந்திய மக்களை - வேட்டையாடும் புல்லுருவிகளாய் புறப்பட்டுள்ளார்கள். இவர்களது மாய்மாலங்களை அம்பலப்படுத்துவதே நம் தேசத்திற்கு செய்யும் உயர்ந்த சேவையாக இருக்கும்.

இந்திய நக்சலிசமும்
நேபாள் மாவோயிசமும்

இந்திய நாட்டில் தனித்தனிக்குழுக்களாக செயல்பட்டு வந்த நக்சலைட் குழுக்கள் சில ஒன்றினைந்து தற்போது “மாவோயி°ட்டுகள்” என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். இப்புதிய அமைப்பின் உருவாக்கத்திற்கு பின், இவர்களது வன்முறை அரசியல் தீவிரமாகியுள்ளது. துப்பாக்கிகள் மூலம் இந்திய நிலப்பிரச்சினைக்கும், இதர சமூக பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள்.

ஆந்திரம், பீகார், ஜார்கண்ட் என பல மலைகள் - காடுகள் சார்ந்த மாநிலங்களில்தான் இவர்களது தலைமறைவு செயல்பாடுகள் அமைந்துள்ளது. 100 கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில் நிலவும் வேலையிண்மை, கல்வியிண்மை, நிலப்பிரச்சினை, வீடின்மை போன்ற பல்வேறு சுரண்டல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண குறைந்தபட்சம் ஜனநாயக ரீதியில் - கருத்துரீதியில் அணிதிரளக்கூடிய 5 கோடி பேரையாவது திரட்டாமல் சமூக மாற்றம் என்பது வெறும் கனவாகவே இருக்கும். அதுவரை புரட்சி என்ற பெயரால் இவர்கள் நிகழ்த்தும் படுகொலைகள் அனைத்தும் வன்முறை என்ற அடையாளத்திற்கே இட்டுச் செல்லும். கிராமப்புறங்களில் ஆழமான சமூக முரண்பாடுகள் இருப்பதும், அதற்கான ஒரே சர்வோரக நிவாரண துப்பாக்கி அரசியல்தான் என்பதுதான் கேள்வியாக உள்ளது.
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் நான் படித்ததையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். “நக்சலிசம்” தோன்ற மேற்குவங்கத்திலேயே அதன் வேர்கள் இல்லாமலாகி விட்டது. இதற்கு அடிப்படையான காரணம்; அங்குள்ள நிலப்பிரச்சினை உட்பட பல்வேறு சமூக பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் தீர்வு கண்டது இடதுசாரி இயக்கம்.
நக்சலிச புரட்சி அரசியல் 1994 முதல் 2005 வரை நிகழ்த்திய வன்முறைச் சம்பவத்தில் சாதாரண மக்கள் (சிவிலியன்கள்) 2228 பேரும், போலீ° தரப்பில் 737 பேரும், நக்ஸலைட்டுகள் 2076 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில் 5041 பேர் இந்த சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.
http://www.satp.org/satporgtp/countries/india/database/fatalities.htm நக்சலிசத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் போலீ° தரப்பில் எடுக்கும் நடவடிக்கையாலும் சாதாரண அப்பாவி மக்களின் உயிரிழப்புகளும் பெரும் எண்ணிக்கையில் அமைந்து விடுகிறது. இத்தகைய உயிரிழப்புகள் மூலம் அவர்கள் அரசியல் ரீதியாக என்ன சாதித்தார்கள் என்ற கேள்வி எழுவதும் இயல்பே!

நேபாளத்தில் மன்னர் ஞானேந்திரா இந்த வருடத் துவக்கத்தில் நாடாளுமன்ற அரசியலை முடக்கி, தன்னுடைய மன்னாராட்சியை அமல்படுத்தினார். அத்துடன் நோபாள் அரசியல் சாசனத்தில் வழங்கியிருந்த அடிப்படை உரிமைகள் அனைத்தும் முடக்கப்பட்டு, நேபாளத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள், மாணவர்த் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். இவையெல்லாம் நாம் அறிந்ததே. இருப்பினும் நேபாள அரசியலில் “நேபாள மாவோயி°ட்டுகள்” இந்திய நக்ஸலைட்டுகளைப்போலவே பெரும் வன்முறை அரசியலை அரங்கேற்றி வந்தனர். நேபாளத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஊடுருவி துப்பாக்கி முனையில் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர். நேபாள மாவோயி°ட்டுகளின் துப்பாக்கி - வன்முறை அரசியல் மூலமே நேபாளத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்த்திற்கு உயிரூட்ட முடியும் என்று கனவு கண்டிருந்தனர்.

உண்மை நிலை வேறாகத்தான் இருந்தது. நோபள மக்களின் இதயங்களில் - அவர்களின் உண்மையான நம்பிக்கையைப் பெற்ற அமைப்புகளாக ஐக்கிய மார்க்சி°ட் - லெனி°ட் அமைப்பும், நேபாள காங்கிர° உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் உள்ளன. இவர்களது ஒன்றுபட்ட ஜனநாயக ரீதியான போராட்டம் நேபாளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேபாள மாவோயி°ட்டுகள் இனியும் தனிமை அரசியல் செய்தால் ஏற்படும் ஜனநாயக புரட்சியில் நாம் கரை ஒதுக்கப்படுவோம் என்பதை உணர்ந்து அவர்களும் துப்பாக்கிகளை கீழே வைக்க ஒப்புக் கொண்டு ஏழு கட்சியுடன் சேர்ந்த கரம் கோர்த்துள்ளனர். இது ஒரு நல்ல துவக்கம். உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக ஆர்வலர்கள் இதை வரவேற்றுள்ளனர். எந்த ஒரு நாட்டிலும் ஏற்படும் சமூக மாற்றத்திற்கு ஒரு அமைப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஒரு மையக் கருத்தை எட்டிட பன்முகப்பட்ட தன்மைக் கொண்ட அமைப்புகள் சூழ்நிலைக்கு ஏற்ப கைகோர்ப்பதன் மூலமே மாற்றம் ஏற்படும். இதுதான் நேபாளம் உணர்த்தும் பாடம். உணருவார்களா இந்திய நக்சலிச சித்தாந்தவாதிகள்.

December 02, 2005

"எய்ட்சும்" தமிழக அரசியலும்

‘எய்ட்ஸ் விழிப்புணர்வு’ எய்ட்ஸ் கிருமிகள் தொற்றுவதை தடுப்பதற்கு மட்டு மல்ல; அரசியல் விளையாட்டிற்கும் பயன்படுத்தலாம் என்பதை தமிழகஅரசியல் பிரபலங்கள் நமக்கு காட்டியுள்ளனர்.
"எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய சர்ச்சையை, எப்படி தமிழ் உணர்விற்கு கொம்பு சீவி விடும் அரசியலாக மாற்ற முடிந்தது என்ற மர்மத்தை ஆராயும் முன்னர், உலக சுகாதார நிறுவனம் எய்ட்ஸ் பற்றி கூறியதில் ஒரு சில துளியையாவது நாம் அறிவது அவசியம்.
இன்று ஏழை நாடுகளின் சாபக்கேடுகளாக இருப்பது எய்ட்ஸ்சும் - எலும்புறுக்கி நோயும். இவ்விரண்டும் சகோதர நோய்களாகும். லகளவில் எய்ட்ஸ் நோய் கிருமி தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கையில் 13 சதம் இந்தியாவின் பங்காகும். ஆசிய அளவில் கணக்கிட்டால் 62 சதவீதம் இந்தியாவில் உள்ளனர்.இந்தியாவின் தென் மாநிலங்களில்தான் (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா...) இந்திய எய்ட்ஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 80 சதவீதத்தினர் உள்ளனர்.
இம்மாநிலங்களில், ஓரின சேர்க்கை மூலமோ, போதை ஊசி மூலமோ எய்ட்ஸ் பரவுவது அபூர்வம்! ஆனால், முறை தவறிய ஆண் - பெண் பாலுறவே இந்நோய் இங்கு நடமாட முக்கிய காரணமாகும்.
காம வெறிபிடித்த பெரிய மனிதர்கள், அவர்களது வாரிசுகள், சினிமா ஹீரோக்கள், அதிகார வர்க்க பிரமுகர்கள் 18 வயதைக்கூட தாண்டாத இளம் பெண்களை ஆசை காட்டியோ, அன்பாக நடந்தோ புகழ் கிடைக்குமென்ற சபலத்தை ஊட்டியோ கசக்கி எரிந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் வயிற்று பிழைப்பிற்காக இப்பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்த தள்ளப்படுகின்றனர்.
இன்று பணக்கார நாடுகளில் தாயின் மூலம் குழந்தைக்கு தொற்றுவதும், மாற்றுக்குறுதி ஏற்றுவதின் மூலம் பரவுவதும் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இதற்கான மருந்துகளும், குறுதி சோதனைகளும் அங்குள்ளன. இந்தியா போன்ற ஏழை நாடுகளில்தான் இந்த மருந்துகளும், சோதனைக் கருவிகளும் எட்டாத உயரத்தில் உள்ளன. உலக வர்த்தக ஒப்பந்தங்களால், மாற்று மருந்து ஆய்வும், உற்பத்தியும் முடக்கப்பட்டுள்ளன. (கலாச்சார காப்பு அரசியல் நடத்துபவரின் மகன்தான் சுகாதார அமைச்சர் என்பதை நினைவில் கொள்வது நல்லது!)
இன்று இந்தியாவில் 7 லட்சம் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து நோய் பரவுவதை தடுக்க தேவையான மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டியே நிலையிலேயே நம் அரசு உள்ளது. சுகாதாரம் தனியார்மயமானதால் இந்நோயாளிகளுக்கு அரசு மருந்துகளை வழங்குவதில்லை. தற்போது இவர்கள் எய்ட்ஸ் கிருமிகளை பரப்புபவர்களாக சீரழிகின்றனர். 30 ஆயிரம் பேர் மட்டுமே இந்த மருந்துகளை விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர். மீதி ஏழைகள் நோய் பரப்பும் நடைப்பினங்களாக வாழ்கின்றனர்.
எ°ட்° விழிப்புணர்வு ஏதோ இத்தகைய நோய்ப் பற்றிய தகவல் அறிவது மட்டுமல்ல; உலக வர்த்தகத்தின் மர்மங்களையும், அரசுகளின் கொள்கைகளின் விளைவுகளையும் பற்றிய ஞானத்தையும் பெறுவதாகும். அரசியல் என்பது எய்ட்ஸ் விழிப்புணர்வோடு இந்த ஞானத்தை பரப்பும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பதென்ன!
எய்ட்ஸ் விழிப்புணர்வை ஊட்ட குஷ்பு ஏதோ கூறினார். சினிமா பிரபலங்கள் அரசியலிலே புகுந்தால் தங்களது வாக்கு வங்கி காலியாகி விடும் என்று அலரும் ராமதாசும், திருமாவளவனும் - குஷ்புவும் அரசியலில் குதிக்க முயலுகிறார் என்று பதட்டப்பட்டு "தமிழினத்தை இழிவுபடுத்திய குஷ்புவை" மாநிலத்தை விட்டோ விரட்ட வேண்டும் என்பதோடு, செருப்பு, துடைப்பம், முட்டை போன்றவற்றை காட்டி தங்களது கலாச்சார பெருமையை மீடியாக்களில் காட்டினர். இது குறித்து சுகாசினி ஏதோ கூற அதனையொட்டி கருத்துச் சுதந்திரம் காக்க சில நிருபர்கள் கூடினர். அதுவும் இவர்களின் எதிர்ப்பிற்கு இறையாக, ஆதிகால ஆரியர் - திராவிடர் சண்டை தொடர்வதாக நம்பும் தமிழின காவலரும் (கருணாநிதி) பதட்டப்பட்டார். "தமிழனுக்கு கொம்பா முளைத்திருக்கு என்ற சொற்றொடருக்கு விளக்கமளித்து போர்க்கொடியை உயர்த்தி விட்டார்." இதனால் அம்மா திமுக அளவற்ற மகிழ்ச்சியடைவதோடு, இந்தச் சண்டையால் மருத்துவமனைகளில் நடக்கும் நிர்வாக சீர்கேட்டால் எய்ட்ஸ் மருந்து கிடைக்காமையால், குறிதி சோதனை வசதி இல்லாததால் எழும் மக்களின் கோபம் திசை திரும்பியதற்காக பெரு மூச்சு விட்டுள்ளார் ஜெயா.
விளைவு என்ன? இந்த அரசியல் கலக்கலால் எய்ட்ஸ் விழிப்புணர்வு மங்கி விட்டது. அதற்கு பங்களிக்கும் ஆண் பிரபலங்கள் சமூக கண்காணிப்பிலிருந்து தப்பித்தனர்.
7 லட்சம் எய்ட்ஸ் நோய்க்கிருமியால் தாக்கப்பட்டவர்களுக்கு மருந்து கிடைக்கச் செய்யும் விழிப்புணர்வுக்கான வழி அடைக்கப்பட்டு விட்டது. எய்ட்ஸ் கிருமி கலந்த இரத்தத்தை சோதித்து அறியும் வசதி இல்லாததால் அறுவை சிகிச்சையின் போது பல குழந்தைகளும், இளைஞர்களும் எய்ட்ஸ் கிருமியால் தாக்கப்படும் வாய்ப்புகள் பெருகி விட்டன. இதுகுறித்த விழிப்புணர்வு இயக்கம் தற்போது திசை மாறி விட்டது.
இதனால், எய்ட்சும் - எலும்புறுக்கி நோயும் தமிழக அரசியலுக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கண்டு எள்ளி நகையாடினால் ஆச்சரியமடைய ஏதுவுமில்லை.
- பாண்டியன்
Guest Writer