March 22, 2007

நந்திகிராமம் வன்முறைக்கு மம்தா, நக்சல் கும்பலே காரணம்

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இருக்கிற நிலங்களை நிலமற்ற கிராமப்புற ஏழை மக்களுக்கு விநியோகித்தது. மேற்கு வங்கத்தில் வெறும் 6 சதவீத தரிசு நிலம் மட்டுமே உள்ளது. மாநிலத்தில் இப்படி ஒரு முக்கிய தொழிற்சாலை அமையும்போது அதற்கு நிலம் கையகப்படுத்திக் கொடுப்பது அரசின் கடமை. அந்த அடிப்படையில் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற முதல் சம்பவத்தில் மம்தா மற்றும் நக்சல் கும்பலால் மார்க்சிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த தோழர்கள் 3 பேர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்டார். ஒரு எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டார்.
அதோடு நிற்காமல் அக்கிராமத்தில் வசித்த 2500 குடும்பத்தினரை அக்கிராமத் திலிருந்து விரட்டியடித்தனர். அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
மேற்படி கிராமத்திற்கு அருகில் 10 கி.மீ. தொலைவில் விவசாயிகள் சங்கத்தின் சார் பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 15 லட்சம் பேர்கள் திரண்டனர். அந்தக் கூட்டத் தில் கலந்து கொண்ட முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மக்கள் எதிர்க்கும் பட்சத்தில் இந்த ஆலையை ஹால்டியாவுக்கே கொண்டு செல்கிறோம் என்று அறிவித்தார்.
இதனையடுத்து இந்த ஆலைக்கு நிலம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டனர். ஆனால் நிலம் கையகப்படுத்தப்படுவதாக தொடர்ந்து மம்தாவும், நக்சல் கும்பலும் கோயபல்ஸ் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர். இதற்கிடையில் முகாமில் தங்கியுள்ளவர்களின் வீடுகள், கடைகள் வன்முறைக் கும்பலால் சூறையாடப்பட்டது. இதனால் முகாமில் தங்கியிருந்தவர்கள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று கோரினர். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தாசில்தார்கள். சர்வ கட்சியினர் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மம்தா மற்றும் நக்சல் கும்பல் தவிர அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நந்திகிராமத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நந்திகிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள சாலைகள் மற்றும் பாலங்கள் சிதைக்கப்பட்டு நகரத்திலிருந்து துண்டிக்கப்பட்டது. இதனால் நந்திகிராமத்தில் உள்ள நான்கு கிராமங்கள் தனி தீவு போலானது. முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையில் நந்தி கிராமத்தில் இவர்கள் தாக்கு தல் நடத்துவதற்காக மம்தா மற்றும் நக்சல் கும்பல்கள் வெளி மாவட்டங்களிலிருந்து ஆட்களைத் திரட்டி வைத்திருந்தனர். அவர்கள் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தத்தான் வருகிறார்கள் என்று பொய்ப்பிரச்சாரத்தை செய்து கிராம மக்களைத் தயார்படுத்தினர். பின்னர் கிராம மக்களில் பெண்களையும், குழந்தைகளையும் முன்னிறுத்திக் கொண்டு, பின்னிருந்து கையெறி குண்டுகளையும், பைப் குண்டுகளையும் கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் மக்களை காக்க வேண்டி போலீசாரும் நடத்திய துரதிஷ்டவசமான தாக்குதலால் இத்தனை பேர்கள் பலியாகியுள்ளனர். இதற்கு முக்கியப் பொறுப்பாளர்களாக மம்தா மற்றும் நக்சல் கும்பல்கள்தான் காரணம். நடந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. இது சம்பந்தமாக எந்தவொரு விசாரணை நடத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி தயாராக உள்ளது. சம்பவம் நடைபெற்ற மறுநாள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கேட்டுக்கொண்டதையும் மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. அது சம்பந்தமாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
தற்போது மம்தா, நக்சல் கும்பலிடமிருந்து சில ஆயுதங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியினரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக மம்தா, நக்சல் கும்பல் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

No comments: