April 05, 2006

மரணத்துடன் போராடும் மேத்தா

காலவரையற்ற உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறார் மேத்தா பட்கர், மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதா அணையின், சர்தார் சரோவர் அணையின் உயரத்தை 110 மீட்டர் உயரத்தில் இருந்து 121 மீட்டர் உயரத்திற்கு உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 29 முதல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மேத்தா பட்கர் தற்போது மயங்கிய நிலையில் - தன்னுடைய உடல் பலம் இழந்த நிலையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார்.
ஏன் இந்தப் போராட்டம்

நர்மதா நதியின் குறுக்கே பல அணைகளை கட்டுவதற்கு உலக வங்கியின் உதவியுடன் மிகப் பெரிய திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 50,000 கோடி முதலீடு கொண்ட இத்திட்டத்திற்கு பின்னால், பல ஏகபோக, பன்னாட்டு நிறுவனங்களின் இலாப வேட்கை மறைந்து இருக்கிறது. இது மட்டுமல்ல இந்த அணைக்கட்டு திட்டத்தால், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்களும், பல நூற்றுக்கணக்கான கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன. மேலும் மிக அரிய வகையான காடுகளில் உள்ள தாவர இனங்களும் பெரும் அழிவுக்கு உள்ளாகின்றன.

எனவேதான் நர்மதா அணையின் இத்திட்டத்திற்கு எதிராக நர்மதா பச்சாவோ அந்தலோன் என்ற எதிர்ப்பு இயக்கம் 1985இல் துவக்கப்பட்டு தொடர்ச்சியாக இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்படக்கூடிய இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு எந்தவிதமான உத்திரவாதமும், மாற்று ஏற்பாடும் செய்யாமல் இத்திட்டத்தை நிறைவேற்றுவது யாருடைய நலனுக்காக என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது சர்தார் சரோவர் அணையின் உயரத்தை உயர்த்துவதன் மூலம் மேலும் 35,000 மக்கள் பாதிக்கப்படவுள்ளனர். எனவேதான் இந்த அணையின் உயரத்தை உயர்த்தக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து மேத்தா பட்கர் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாழ்க்கைக்காக தன்னையே அர்ப்பணித்து உண்ணாவிதத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது உண்ணாவிரதப் போராட்டம் சுதந்திரப்போராட்டக் காலத்தில் பகத்சிங்குடன் 63 நாள் உண்ணாவிதப் போராட்டம் இருந்து உயிர் நீத்த ஜதீன்திரதாசையும், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரையும் நினைவுப்படுத்துகிறது.

ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனுக்காக உண்ணாவிரதம் இருப்பவர்களை விட அவர்கள் எடுத்த முடிவை எப்படியாவது அமலாக்குவதிலேதான் குறியாக வரலாற்று முழுக்க இருந்து வருகிறது. இருப்பினும் வரலாறு என்றும் அவர்கள் பக்கம் இருந்ததில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

மேத்தா பட்கரின் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டிள்ளார். இத்தகைய கோரிக்கைகளை விடுவதை மன்மோகன் சிங் கைவிட்டு, அந்த அணையின் உயரத்தை உயர்த்துவதற்கு தடைவிதிப்பதே மேத்தாவுக்கும், மக்களுக்கும் செய்யும் பெரும் நன்மையாகும்.

9 comments:

Muthu said...

இடம் மாற்றப்பட்ட மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்தால் போதும் என்று மேதா பட்கர் கூறியதையும் புரிந்துகொள்ளாத இந்த அரசு கடுமையாக கண்டிக்கத்த்க்கது....

குழலி / Kuzhali said...

மேதா பட்கரின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன், போராட்டத்திற்கு சற்றும் செவிசாய்க்காத அரசாங்கம் கண்டிக்கபட வேண்டியது.

முத்துகுமரன் said...

மேதாவின் போராட்டம் வெல்லட்டும்....

VSK said...

இப்படி எல்லாம் செய்தால்தான் பிரச்சினையின் தீவிரம் தெரியவரும் எனும் இழி நிலைக்கு நம்மையெல்லாம் தள்ளிய அனைத்து அரசியல்வாதிகளையும் வன்மையாகக் கண்டிக்கும் வேளையில்,
நம் மக்களுக்கு நல்லறிவு வரும் நேரம் எப்போது என்ற வினா எழுவதையும் தவிர்க்க முடிய வில்லை.

போராட்டம் வெற்றி பெற வேண்டுகிறேன்.

Voice on Wings said...

பதிவுக்கு நன்றி. மேதா பாட்கரின் போராட்டம் வெற்றி பெறட்டும்.

மகேஸ் said...

மேத்தாவின் போராட்டம் வெற்றி பெற வேண்டும். இந்த கல் நெஞ்சக் கார காங்கிரஸ் அரசு அப்பாவி மக்களின் நலன்களை நசுக்குகிறது.

VSK said...

According to latest reports Ms. Medha has been arrested and admitted intoa Delhi Hospital!

'adakkumuRai avamaanam'!

சந்திப்பு said...

அனைவருக்கும் நன்றிகள்...

இன்று மேத்தா பட்கரை கைது செய்ததோடு, இந்தப் பிரச்சினையில் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய 300க்கும் மேற்பட்ட மக்களையும் கைது செய்துள்ளது போலீசு.
வலிக்கு ஆபரேஷன் செய்வதற்கு பதிலாக, ஆளையே கொன்று விடுவதுபோல் உள்ளது இச்செயல். ஏன் மேத்தா பட்கரின் நியாயமான கோரிக்கையை பரிசீலிக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்து, அவரது போராட்டத்தை திரும்பப் பெறச் செய்திருந்தால் நல்ல முன்னுதாரணமாக இருந்திருக்கும். மக்களும் தற்போது சிறந்த விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். விரைவில் இதுபோன்ற மக்கள் விரோத செயல்கள் முற்றுப்பெறும் என்று நம்புவோம்.

சந்திப்பு said...

Thankyou Pulambuz...