February 24, 2006

வலைபதிவர்களே! புஷ் வருகை எதிர்ப்பில் பங்கேற்பீர்!

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்-ஷே திரும்பி போ!
சென்னையில் கண்டன ஊர்வலம் - ஆர்ப்பாட்டம்



அமெரிக்கா இன்றைக்கு உலக அமைதிக்கும், உலக நாடுகளின் இறையான்மைக்கும் பேராபத்தாக உருவாகியிருக்கிறது. ஆப்கானி°தான், ஈராக் நாடுகளை ஆக்கிரமித்ததோடு, அந்நாட்டு மக்களின் வாழ்வை மொத்தமாக சூறையாடியுள்ளது. மேலும் சோசலிச கியூபா, வடகொரியா, சிரியா, ஈரான் என பல நாடுகளை தொடர்ந்து மிரட்டி வருகிறது. இது தவிர இந்திய நாட்டின் உள் விவகாரங்களிலும் அப்பட்டமாக தலையிட்டு வருகிறது. இப்பின்னணியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய வருகை விரும்பத்தக்கதாக இல்லை.

கடந்த 2004 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. (பா.ஜ.க.) அரசு தோற்கடிக்கப்பட்டதற்கான பல காரணங்களில் அவர்களது அமெரிக்க சார்பு அயலுறவுக் கொள்கையும் ஒன்று.

புதியதாக பதவி ஏற்ற மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், அதே கொள்கைகளை இன்னும் தீவிரமாக அமுல்படுத்தி வருவது கண்டனத்துக்குரியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி அமெரிக்காவுடன் போடப்பட்ட அணுசக்தி - சம்பந்தமான ஒப்பந்தம் இந்தியாவின் சுயாதிபத்தியத்தையே அமெரிக்காவின் காலடியில் கொண்டு போய் வைத்துள்ளது.

இந்திய அரசு எதைச் செய்வதாக இருந்தாலும் அவர்கள் (அமெரிக்க) நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜூலை மாத அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்ற மிரட்டலைக் காட்டியே, இந்திய அரசை அடிபணிய வைத்து வருகின்றனர்.

சர்வதேச அணுசக்திக் கழகம் (ஐ.ஏ.இ.ஏ.) ஈரானுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் இந்தப் பின்னணியில்தான் என்பது உலகறியும். எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.) சிரியாவில் எண்ணெய் வயல்களை, சீனாவுடன் இணைந்து வாங்குவதை அமெரிக்கா ஆட்சேபிக்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையனைத்தும் வர்த்தகம் மற்றும் அரசியல் சம்பந்தமானவற்றில், அமெரிக்காவின் அனுமதியின்றி எதுவும் நடக்காது என்று நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது.

இதற்கு மேல், இந்தியாவின் அமெரிக்க தூதுவர், தூதுவர்களின் நடைமுறையையும், நாகரீகத்தையும் காற்றில் பறக்க விட்டு இந்திய அரசை வெளிப்படையாக மிரட்டியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களை மிரட்டிக் கடிதம் எழுதுகிறார். இவையனைத்தையும் தட்டிக்கேட்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்தப் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய வருகை மேலும் இந்தியாவின் ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் கேலிக் கூத்தாக்குகிற விஷயமாகும். எனவே, ஜார்ஜ் புஷ்-ஷின் இந்திய விஜயத்தை ஜனநாயகத்தில் பற்று கொண்டோரும், தேசபக்தி மிக்கோரும், நாட்டின் நலன்களைக் கணக்கில் கொண்டு எதிர்ப்பது அவசியம்.

“புஷ் வருகை எதிர்ப்புக்குழு” - தமிழகம் முழுவதும் “ஜார்ஜ் புஷ்-ஷே” திரும்பிப்போ என்ற கோஷங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், எதிர்ப்புக் கருத்தரங்குகளையும் நடத்த உள்ளது.சென்னையில் மார்ச் மாதம் 2ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மன்றோ சிலை அருகிலிருந்து “ஜார்ஜ் புஷ் வருகை எதிர்ப்பு” கண்டன ஊர்வலம் நடைபெறும்.

ஜனநாயக எண்ணங்கொண்டோரும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும், தேசம் காக்கும் போராளிகளும் கொடிகளுடனும், கோஷங்களுடனும் ஊர்வலத்தில் பங்கேற்பார்கள். அரசு விருந்தினர் மாளிகை முன்பு (பெரியார் சிலை அருகில்) தலைவர்கள் கண்டன உரையாற்றுகிறார்கள்.

11 comments:

தமிழரங்கம் said...

அமெரிக்காவை மட்டுமல்ல, அதற்கு துணை போகம் அரசியல் கோட்பாடுகளையும் கட்சிகளையும் எதிர்த்து மக்களின் அதிகாரத்துக்கான போராட்டமாக ஒங்கட்டும்! உங்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகின்றேன். வெறும் அமெரிக்கா எதிர்ப்பு மட்டும் போதது ஏகாதிபத்திய எதிர்ப்பாக, உழைக்கு மக்களின் உழைப்பை கொள்ளையிடுவதுக்கு எதிராக போராட்டம் மாறட்டும்!
பி.இரயாகரன்

தமிழரங்கம் said...

~~கொலைகாரக் ~கோக்|கைக்; குடிக்காதே!||அமெரிக்க மாணவர்களின் ~கோக்| புறக்கணிப்பு இயக்கம்


""கொலைகார கோக்கைக் குடிக்காதே!'' இது கேரளத்தின் பிளாச்சிமடாவிலும் தமிழகத்தின் நெல்லையிலும் எதிரொலிக்கும் போராட்டக் குரல் அல்ல. ""கோக்''கின் தாயகமான அமெரிக்காவிலிருந்து இந்தப் போராட்டக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க மாணவர்களால் தொடங்கப்பட்ட ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தின் விளைவாக, இப்போது 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக் கழகங்களில் ""கோக்'' விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.



கடந்த 2004 நவம்பரில் மிச்சிகன் பல்கலைக்கழக மாணவர்கள் ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். இந்தியாவில் கேரளத்தின் பிளாச்சிமடாவில் நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சி சுடுகாடாக்கியுள்ளதையும், கொலம்பியாவில் தொழிற்சங்க முன்னணியாளர்களைப் படுகொலை செய்து வருவதையும், இன்னும் பல நாடுகளில் தனது கொலைக்கரங்களை நீட்டியுள்ளதையும், எல்லாவற்றுக்கும் மேலாக பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கொண்டு குளிர்பானம் தயாரித்து விற்பதையும் எதிர்த்து அம்மாணவர்கள் பிரச்சாரம் செய்தனர். கலிபோர்னியா, நியூஜெர்சி, இல்லினாய்ஸ், மசசூட்ஸ் முதலான இதர பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து ""கோக்''குடன் உறவை முறித்துக் கொள்வதற்கான கூட்டணி (இஇஇஇ) என்ற அமைப்பின் மூலம் விரிவாக பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டனர். கல்லூரி வளாகத்திலேயே கொலைகார ""கோக்''கிற்கு எதிராகப் பல வடிவங்களில் போராட்டங்களையும் நடத்தினர்.



மாணவர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக, கடந்த ஜனவரியிலிருந்து மிச்சிகன் பல்கலைக்கழகம் உள்ளிட்டு 10க்கும் மேற்பட்ட உயர்கல்விக் கழகங்களில் ""கோக்'' விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பொங்கும் நுரையுடன் ""என்ஜாய் கோக்'', ""ட்ரிங்க் கோக்'' முதலான பளபளப்பான விளம்பரங்களுடன் கூடிய தானியங்கி ""கோக்'' விற்பனை நிலையங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இந்தியாவில் ""கோக்'', நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தியுள்ளதா? நச்சுக் கழிவுகளைக் கொட்டி நிலத்தையும் சுற்றுச் சூழலையும் நாசப்படுத்தியுள்ளதா என்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்த பிறகே விற்பனை செய்ய அனுமதிக்க முடியும் என்று மிச்சிகன் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.



தனது வியாபாரம் பாதிக்கப்படுவதைக் கண்டு பீதியடைந்த கோக், ""இந்தியாவில் விவசாயத்திற்குப் பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் அந்நாட்டு தண்ணீரே நஞ்சாகியுள்ளதே தவிர, கோக்கில் எவ்வித பூச்சிக் கொல்லி மருந்தும் இல்லை; நிலத்தடி நீரை கோக் உறிஞ்சுவது முன்பை விட இப்போது 24மூ குறைந்துவிட்டது; இயற்கையின் சீற்றத்தால் பிளாச்சிமடாவில் ஏற்பட்ட வறட்சியிலிருந்து மீள, மழைநீர் சேகரிப்பு திட்டங்களைச் செயல்படுத்துகிறோம்'' என்றெல்லாம் கூசாமல் புளுகுகிறது.



ஏற்கெனவே ""கோக்''கில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகமாக உள்ளதென்று ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்த டெல்லியைச் சேர்ந்த விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான கழகத்தின் (இகுஉ) இயக்குனரான சுனிதா நாராயணன், ""இது அப்பட்டமான பொய்!'' என்று சாடுகிறார். ""பிளாச்சிமடா வறண்டுபோய் நாசமானதற்குக் காரணம் யார் என்பதை நாடே நன்கறியும். அங்கே மழைநீர் சேகரித்து அதிலிருந்து கோக் தயாரிக்கப்படுவதாக கூறுவது மிகப் பெரிய மோசடி'' என்று கோக்கின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்துகிறார்.



அமெரிக்காவில் ""கோக்'' எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வரும் மாணவர்கள், ""பொய்கள், சதிகள், கொலைகள், வஞ்சகம், மோசடி நிறைந்ததுதான் கோக். அது பல ஏழை நாடுகளையும் மக்களையும் நாசமாக்கி விட்டது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமானது, கோக். அதைக் குடிப்பதும் ஆபத்தானது; அநீதியானது'' என்று தமது வெஞ்சினத்தை வெளிப்படுத்துகின்றனர்

.

அமெரிக்க மாணவர்கள் மட்டுமின்றி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த இந்திய உதவியாதார மையம் எனும் அமைப்பினரும் ""கோக்'' எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ""இந்தியாவிலிருந்து கொலைகார கோக் வெளியேறாத வரை, இன்னும் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கோக் புறக்கணிப்பு பரவவே செய்யும்'' என்று உறுதியாகக் கூறுகிறார், இம்மையத்தைச் சேர்ந்த சிறீவத்சவா.



அமெரிக்க மாணவர்கள் கொலைகார ""கோக்''கைப் புறக்கணித்து, தமது போராட்டத்தில் முதல் கட்ட வெற்றியைச் சாதித்து, உலகெங்கும் ""கோக்''கிற்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளனர். அமெரிக்க மாணவர்களின் ""கோக்'' புறக்கணிப்பு இயக்கமும், ""கோக்''கிற்கு எதிரான பொதுக் கருத்தும், உலகெங்கும் ""கோக்''கிற்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு இன்னுமொரு வலுவான ஆயுதமாகத் திகழவே செய்யும். தமிழகத்தில் ""கோக்''கிற்கு எதிரான பிரச்சாரம் தடை செய்யப்பட்டு, ""கோக்''கை எதிர்ப்போர் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாலும், ஓட்டுக் கட்சிகள் பொருள் பொதித்த மவுனத்துடன் ""கோக்''கிற்குத் தமது விவசுவாசத்தைக் காட்டினாலும், ""கோக்'' கிற்கு எதிராகத் திரண்டு வரும் பொதுக்கருத்தும், அந்தக் கருத்திற்குச் செயல்வடிவம் தரவிருக்கும் மக்கள் போராட்டங்களும் காட்டுத் தீயாகப் பரவவே செய்யும். கொலைகார ""கோக்''கை இப்புவிப்பரப்பிலிருந்தே விரட்டியடிக்கும் விடுதலைப் போராட்டமாக விரிவடையவே செய்யும்.

குமார்

சந்திப்பு said...

நன்றி மார்க்சி°ட், தமிழ் சர்க்கிள்

ஆம்! இன்றைக்கு சரியாகச் சொன்னீர்கள் இது வெறும் அமெரிக்க எதிர்ப்பு மட்டும் அல்ல; இன்றைய தினத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் தலைமை பீடமே அமெரிக்காதான். அந்த அடிப்படையில் அமெரிக்காவை எதிர்ப்பது ஏகாதிபத்திய எதிர்ப்பின் பிரதான அம்சம். இருப்பினும் பிரிட்டன், பிரான்°, ஜெர்மனி, குட்டி ஏகாதிபத்தியம் இசுரேல் உட்பட அனைத்தையும் எதிர்ப்போம்!...

Muthu said...

எதிர்ப்பு எல்லாம் சரிதான். புஷ்ஷின் இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிர்ப்பு விஷயங்கள் எல்லாம் இந்திய நிலைக்கு ஓரளவு சாதகமாக வருவதும் அதனால் இந்த விஷயத்தை இந்தியர்கள் ஒற்றை பரிமாணத்தில் பார்க்க முடியாது என்பதை பற்றியும் உங்கள் கருத்து என்ன?
இந்திய அணுசக்தி துறையில் அமெரிக்கா தலையீடு பற்றி சிறிது விளக்கமாக ஒரு பதிவு இட முடியுமா?
கோக் விஷயத்தை பற்றி ஒரு சகோதரர் எழுதிய பின்னூட்டம் அருமை.

சந்திப்பு said...

முத்து வணக்கம்.

ஜார்ஜ் புஷ்ஷூம் - அமெரிக்காவும் பயங்கரவாதம் என்றாலே அது இசுலாமிய பயங்கரவாதம்தான் என்பதுபோல் சித்தரித்து வருகின்றனர். செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய பின்லேடனும் - அல்கொய்தாவும் பயங்கரவாத இயக்கம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதே சமயம் இந்த பின்லேடனை சோவியத் யூனியனுக்கு எதிராக கொம்பு சீவி விட்டதே இந்த அமெரிக்காதான். வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது.

பின்லேடனை பிடிக்கப் போகிறோம் என்ற பெயரில் ஆப்கானிசுதானையும், ஈராக்கையும் ஏப்பம் விட்ட அமெரிக்கா இன்றைக்கு ஈரான் மீது குறி வைத்துள்ளது. ஆனால் இதுவரை பின்லேடனை பிடிக்க முடியவில்லை. இதுதான் அமெரிக்காவின் நவீன இராணுவ தொழில்நுட்பத்தின் சாதனை! (கையாலாகதனம்). ஏகாதிபத்தியம் அரபு நாடுகளில் உள்ள எண்ணை வளத்தை கொள்ளையடிப்பதற்காக இசுலாமிய நாடுகளை பயங்கரவாத நாடுகளாக சித்தரித்து வருவதும் பின் அதை கபளிகரம் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.

இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி இருந்தபோது, எங்காவது யாராவது தும்பினால்கூட அதற்கு பாகிசுதான் தான் காரணம் என்பதுபோல் ஒரு சித்தரிப்பை உருவாக்கினார்கள். பொடா சட்டம் போட்டு இசுலாமியர்களையெல்லாம் பயங்கரவாதிகள் போல் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இன்றைக்கு பெ°ட் பேக்கரி வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த 9 பேர் எந்த வகையில் வருவார்கள் பயங்கரவாதிகளா? தீவிரவாதிகளா? வன்முறையாளர்களா? என்னைக் கேட்டால் இது சங் பயங்கரவாதம்! இதை இந்து பயங்கரவாதம் என்றால் ஏற்பார்களா?

அது மட்டுமல்ல; பிரிட்டனை சேர்ந்த யாரோ சில பயங்கரவாதிகள் அமெரிக்கா மீது பின்லேடன் போல் தாக்குதல் தொடுத்தால் அவர்கள் பிரிட்டனை ஆக்கிமிப்பார்களா? ஆக்கிரமிக்கத்தான் முடியுமா? இதுதான் ஏகாதிபத்தியம்! ஏகாதிபத்தியம் எதையும் செய்வதற்கு முன்னால் அதற்கான சூழலை மனோ ரீதியாக உருவாக்கி விடும். அதன் விளைவுதான் இசுலாமிய பயங்கரவாதம். கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்ற அமெரிக்கா என்ன அகிம்சாவாதியா?

சந்திப்பு said...

அப்படிப் போடு தலைவரே! அமெரிக்கானாலே அலர்ஜியா தெரியனும்...
நாம எதிர்க்குறது அமெரிக்க கொள்கையைத்தான்
அமெரிக்க மக்களை அல்ல என்பதையும் சொல்லிடுறேன்...
நன்றிமா...

தமிழரங்கம் said...

வெள்ளிவிழா ஆண்டில் ப.ஜ.க:

ஒழுக்கக்கேடே ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் ஒழுக்கம்!



1980 இல் பாரதிய ஜனசங்கத்தின் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சிக்கு, இது வெள்ளிவிழா ஆண்டு. மும்பையில் நடந்த வெள்ளிவிழா மாநாட்டில் உரையாற்றிய அத்வானி, ""கடந்த 25 ஆண்டுகால அனுபவம் மகிழ்ச்சியாகவும், கட்சி உறுப்பினர் அனைவரும் பெருமை கொள்ளும் வகையிலும் இருந்தது. ஆனால் கடந்த 25 வாரங்களில் இலஞ்சம், ஊழல், உட்கட்சி பிரச்சினைகள், மற்றும் தேர்தல் பின்னடைவுகளால் இப்போது துயர்மிகு நாட்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்,'' என்று சோககீதம் பாடினார். இந்த கீதத்தில் தலைவர் பதவியை வேறு வழியின்றி ராஜினாமா செய்தது குறித்து அவர் வெளிப்படையாக பேசவில்லை என்றாலும், சோகத்தின் உள்ளுறையில் மறைந்திருக்கும் அந்த வருத்தத்தை யாரும் உணர்ந்து கொள்ள முடியும்.



இந்தத் துயர்மிகு நாட்களின் ஏனைய அத்தியாயங்கள் வாசகர்கள் ஏற்கெனவே அறிந்ததுதான். உமா பாரதி வெளியேற்றம், பா.ஜ.க. பொதுச்செயலர் சஞ்சய் ஜோஷியின் பாலுறவு சி.டி., உ.பி. சட்டசபை உறுப்பினர் கிருஷ்ணநந்த் ராய் உள்ளூர் மாஃபியா மோதலில் கொலை செய்யப்பட்டது, திருவனந்தபுரம் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் டெபாசிட் கூடக் கிடைக்காமல் பெருந்தோல்வியடைந்தது, நாடாளுமன்ற கேள்விபதில் நிகழ்ச்சிக்காக இலஞ்சம் வாங்கிய ஆறு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்ற உள்ளூர் நல மேம்பாட்டு நிதியில் கமிசன் பெற்று வீடியோவில் அம்பலமான மூன்று பா.ஜ.க. உறுப்பினர்கள், இறுதியாக பா.ஜ.க.வின் மராட்டிய பங்காளியான சிவசேனையில் ரானே, சஞ்சய் நிருபம் ஆகியோர் விலகலுக்குப் பிறகு தாக்கரேவின் மருமகனான ராஜ் தாக்கரே சிவசேனையை விட்டு வெளியேறியது... இவையெல்லாம் பா.ஜ.க. வின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் மின்னிய சோக முத்துக்கள்.



கண்ணைப் பறிக்கும் இந்த முத்துக்களின் ஒளிவீச்சால் பாதிப்படைந்த பா.ஜ.க.வின் அன்பான நடுத்தர வர்க்கம் சற்றே அதிர்ச்சியடைந்திருக்கிறது என்றால் அது மிகையான ஒன்றல்ல. இவர்கள், ஹிந்துவுக்கும், இந்தியா டுடேவுக்கும், துக்ளக்கிற்கும் எழுதி வரும் வாசகர் கடிதங்களில் தத்தமது புலம்பல் பல்லவியைப் பாடி வருகின்றனர். ""வித்தியாசமான கட்சி என்று பெயரெடுத்த பா.ஜ.க. இன்று பத்தோடு பதினொன்றாக மாறிவிட்டது, காங்கிரசு கலாச்சாரம் பா.ஜ.க.விலும் ஊடுருவி விட்டது, ஆர்.எஸ்.எஸ்.இன் தேசபக்தி கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கப் பயிற்சியால் உருவான தலைவர்கள் இன்று சீரழிந்து போனார்கள், அதிகாரத்தில் இல்லாத வரை நல்ல கட்சியாக இருந்த பா.ஜ.க., அதிகாரத்தில் அமர்ந்து அதை இழந்ததும் மோசடியாகி விட்டது'' என்றெல்லாம் அந்த வாசகர் கடிதங்கள் வருத்தப்படுகின்றன. பா.ஜ.க.வின் சிண்டை எப்போதும் கையில் வைத்திருக்க விரும்பும் ஆர்.எஸ்.எஸ்.சும் கூட இதே தொனியில் பா.ஜ.க.வை எச்சரிக்கை செய்கிறது.



இப்படி பார்ப்பனப் பத்திரிக்கைகளும், பா.ஜ.க. ஆதரவாளர்களும், சங்கப் பரிவார வானரங்களும் பா.ஜ.க.வை எப்பாடுபட்டாவது திருத்தியமைக்க வேண்டும் என்றாலும், வரலாற்றின் தீர்ப்பு வேறு மாதிரியாக இருக்கிறது. அது பா.ஜ.க.வின் இன்றைய சீரழிவுகள், 1925இல் ஆரம்பிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.ன் சித்தாந்த செயல்பாட்டு விளைவுகளின் தர்க்கப்பூர்வ நீட்சியிலேயே கருக் கொண்டிருக்கின்றன என்பதே.



உலக வரலாற்றில் தோன்றிய, தோன்றிக் கொண்டிருக்கும் பாசிசக் கட்சிகள் எவையும் மக்களது நல்வாழ்விற்கான திட்டத்தை, சித்தாந்தத்தை கொண்டிருக்க வில்லை. மாறாக, இனவெறி, மதவெறி, சாதிவெறி முதலான சிறுபான்மையினர் மீதான வெறுப்பையே பெரும்பான்மையினரின் நலனாக முன்வைக்கின்றன. ஹிட்லரையும், முசோலினியையும் வெளிப்படையாக ஆதரித்த கோல்வால்கரின் ஆர்.எஸ்.எஸ்., அதன் நிறுவனரான ஹெட்கேவார் காலத்திலேயே பார்ப்பன மேல்சாதியினரின் அதிகார வேட்கை நலனையும், முசுலீம்களை எதிர்த்து ஒடுக்குவதையுமே திட்டமாகக் கொண்டிருந்தது. அதனால்தான் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் கலந்து கொள்ள மறுத்த ஆர்.எஸ்.எஸ்., முசுலீம்களின் எதிர்ப்புக்காக பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தது.



பா.ஜ.க.வின் முந்தைய அவதாரமான பாரதிய ஜனசங்கம் 1950இல் ஆர்.எஸ்.எஸ்.இன் விருப்பப்படி சியாம் பிரசாத் முகர்ஜி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தின் ஏனைய இந்து அமைப்புக்கள் வெறும் பார்ப்பன உயர்சாதியினரால் மட்டும் அறியப்பட்டிருந்தபடியால், எல்லா ""இந்து''க்களையும் சேர்க்க வேண்டும் என்பதே ஜனசங்கத்தின் நோக்கமாக இருந்தது. 1949இல் தொடங்கப்பட்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பு, மாணவர்கள் ஆசிரியர்கள் காலில் விழுந்து சேவித்து குருபூசை செய்ய வேண்டும் என்பதற்காகவும்; 1960களில் ஆரம்பிக்கப்பட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் எனும் தொழிலாளர் அமைப்பு, தொழிலாளர்கள் தமது வர்க்க நலனைத் துறந்து முதலாளிகளுடன் இணைந்து தேச உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும்; 1967இல் தோற்றுவிக்கப்பட்ட விசுவ இந்து பரிசத் வெளிநாடுகளில் குடியேறிய பணக்கார இந்துக்களிடம் காசு வசூலிக்கவும், நடுத்தர இந்துக்களிடம் வெறியை உண்டாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.



இங்கே நாம் வலியுறுத்தும் விசயம் என்னவென்றால், சங்கப் பரிவார அமைப்புக்கள் எல்லாமும் தமது தோற்றத்திலேயே மக்களது நலனுக்காக பிறக்கவில்லை என்பதே. மற்றபடி இந்த வானரங்கள் அனைத்தும் பசுவதைத் தடைச் சட்டம், மதமாற்ற அபாயம், முசுலீம்கள் கிறித்துவர்களை எதிர்த்துக் கலவரம், வடகிழக்கு மற்றும் காசுமீரின் தேசிய இனப்போராட்டங்களை ஒடுக்குவது, காசுமீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் 370வது சட்டப்பிரிவை நீக்குவது, சமஸ்கிருதத்தை வளர்ப்பது முதலான இவைதான் கடந்த 80 ஆண்டுகளாக நடத்திய "மக்கள் போராட்டங்கள்.'



இப்படி தோற்றத்திலும் நடத்தையிலும் மக்களுக்குப் பொறுப்பாக இருக்கத் தேவையில்லை எனும்போது, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? மேலும், சங்கப் பரிவார அமைப்புக்கள் அனைத்தும் முதலாளிகள் பணக்காரர்களின் காசைப் பெற்றுக் கொண்டுதான் உயிர் வாழுகின்றன. பிரமோத் மகாஜன் எனும் தலைவரின் சிறப்புத் தகுதியே அவர் மும்பய் முதலாளிகளிடம் நன்கொடை வாங்குவதில் கில்லாடித் தரகர் என்பதுதான். இன்றும் வெளிநாட்டுப் பணத்தைக் கணக்கில்லாமல் வாங்கி வரும் அமைப்புக்களில் முதலிடம் பெறுவது விசுவ இந்து பரிசத் இயக்கம்தான். அம்பானியின் ரிலையன்ஸ் தொலைபேசி நிறுவனத்திற்கு மகாஜன் மந்திரியாக இருந்த போது செய்த "சேவைக்காக' அவருக்கு ரிலையன்ஸ் பங்குகள் கணிசமான அளவில் பரிசாக ஒதுக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் முதலாளிகளின் சங்கங்களுக்காகத்தானே கேள்வி கேட்டுப் பணம் பெற்றார்கள்; எனில், மகாஜன் செய்தது மட்டும் சரி என்றால் இவர்களது செய்கையும் சரி என்றுதானே கூற முடியும்? தெகல்கா அம்பலமாக்கிய ஆயுதபேர ஊழலில் சிக்கிய பங்காரு லட்சுமணனும் கூட கட்சிக்காகத்தானே நன்கொடை பெற்றார்? ஒருவேளை, இவர்கள் வீடியோவில் சிக்கியது மட்டும்தான் பிரச்சினையை ஏற்படுத்தியது என்றும் கூறலாம்.



அடுத்து, பா.ஜ.க.வில் தலைவர்களிடையே நடக்கும் கோஷ்டிச் சண்டைகளுக்கு காரணம் என்ன? முதலில் சங்கப் பரிவாரங்களில் தலைவர்களாக வருவதற்கு என்ன தகுதி வேண்டும்? இவர்கள் எவரும் மக்கள் நலனுக்கான போராட்டங்கள் நடத்தி பிரபலமாக உருவானர்களல்லர். காரணம், இந்த அடிப்படை அவர்களது திட்டத்திலேயே கிடையாது. இவர்களது முதல் தகுதி பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மற்ற தகுதிகள் என்ன? கட்சியின் அனைத்து கோஷ்டிகளையும் ஒரு தேர்ச்சியான தரகனைப் போல அரவணைத்துச் செல்வதால் வாஜ்பாயி தலைவரானவர். மேலும், இந்துத்துவாவின் மென்மையான முகம் என்ற முகமூடியையும் கச்சிதமாக வெளிப்படுத்தியவர். அத்வானி, இந்துத்துவாவின் அடிப்படைத் திட்டங்களை ஜனரஞ்சகமாக மாற்றிப் பிரபலமாக்கியதால் தலைவரானார். மகாஜன், அருண்ஜெட்லி போன்றவர்கள் இந்தியாவின் தரகு பன்னாட்டு முதலாளிகளின் தொடர்புகளைச் சிறப்பாகப் பராமரித்ததற்கும், படித்த நடுத்தர வர்க்கத்தினரை கவருமளவுக்கு இங்கிதமாகப் பேசும் திறமையினாலும் தலைவர்களானார்கள்.



ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா, பெரும் அரச குடும்பத்தின் இளவரசி என்பதால் தலைவரானார். உமாபாரதியும், சாத்வி ரிதம்பராவும், தமது அனல் கக்கும் இந்துவெறிப் பேச்சுத் திறமையால் தலைவர்களானார்கள். பா.ஜ.க.வின் தற்போதைய தலைவர் ராஜ்நாத் சிங், உ.பி.யின் மேல்சாதியினரின் ஆதரவினாலும், அவர்களது கிரிமினல் கும்பல்களை அரசியலுக்குப் பயன்படுத்தும் திறமையாலும் தலைவரானார். இந்த வகையில் தலைவர்கள் உருவாகும் போது கோஷ்டித் தகராறுகள் எப்படி நடக்காமல் இருக்க முடியும்?



மேலும், சங்கப் பரிவாரங்கள் எவற்றிலும் ஜனநாயகம் என்பது கிஞ்சித்தும் கிடையாது. தலைவர்கள் எவரும் தொண்டர்களால் தெரிவு செய்யப்படுவதில்லை. எல்÷லாரும் பழைய தலைவர்கள் அல்லது ஆர்.எஸ்.எஸ்.ஆல் நியமிக்கப்பட்டு வந்தவர்கள்தான். அத்வானி தலைவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டு, ராஜ்நாத் சிங் ஏற்றப்பட்டது ஆர்.எஸ்.எஸ். இன் நிர்ப்பந்தம் காரணமாகத்தான்.



அதேபோல, மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக சௌகான் பதவி ஏற்றது அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை வைத்தல்ல் மாறாக, பா.ஜ.க. செயற்குழுவின் உத்தரவின்படிதான் அவர் முதல்வராக்கப்பட்டார். இதை எதிர்த்த உமாபாரதி கட்சியை விட்டே நீக்கப்பட்டார். அப்படி நீக்கப்பட்டதும், உமாபாரதிக்கு ஞானோதயம் வந்து, கட்சித் தலைமை உயர்சாதியினரால் நிரம்பி வழிகிறதென்று புலம்புகிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனும், உமாபாரதி மோசமான கலாச்சாரப் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்ததாக வசைபாடுகிறார். இதே உமாபாரதிக்கு பதவியில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் உயர்சாதி ஆதிக்கம் நினைவுக்கு வரவில்லை. மண்டல் கமிசனை அமலாக்குவதை எதிர்த்து பா.ஜ.க.வும், ஏ.பி.வி.பி.யும் போராட்டம் நடத்தியபோது ஆதரித்ததும் இதே உமாபாரதிதான். பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்று வடஇந்தியா முழுவதும் உமாபாரதி முழங்கியபோது, ஆர்.எஸ்.எஸ். இன் கண்களுக்கு நல்ல சந்தியாசினியாகத்தான் தெரிந்தார்.



ஆக, சங்கப் பரிவாரங்களின் தலைவர்கள் மக்கள் போராட்டத்திலிருந்தோ, அணிகளின் ஜனநாயகத் தெரிவு மூலமோ உருவாகவில்லை எனும்போது, அவர்கள் குழாயடிச் சண்டையில் ஈடுபடுவதோ, லஞ்ச லாவண்யங்களில் ஊறித் திளைப்பதோ ஆச்சரியமானதல்ல.



பா.ஜ.க.வைக் கண்காணிப்பதற்காக பா.ஜ.க. பொதுச்செயலாளராக ஆர்.எஸ்.எஸ்.ஆல் அனுப்பப்பட்டவர் சஞ்சய் ஜோஷி. இவர் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் ""சி.டி.'' சுற்றுக்கு விடபட்டதன் பின்னணியில் சில பா.ஜ.க. தலைவர்கள் இருப்பதாக எம்.ஜி.வைத்யா எனும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குற்றம் சாட்டுகிறார். இங்கும் ஆர்.எஸ்.எஸ்.இன் ஒழுக்கம் கேவலமானது குறித்து வருத்தமில்லை. அது வெளியே வந்ததுதான் பிரச்சினை. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தலைவர்களின் இத்தகைய கள்ள உறவுக் கதைகள் இதற்கு முன்னரே அரசல் புரசலாக வெளிவந்திருப்பினும், தற்போதைய ""சி.டி.'' அளவுக்கு நாறவில்லை. இதை யாருக்கும் தெரியாமல் அமுக்குவதே ஆர்.எஸ்.எஸ்.இன் "கட்டுப்பாடு' ஆகும். ஜெயேந்திரன் சங்கரமட லீலைகள் தெருவுக்கு வந்து நாறினாலும், ஆர்.எஸ்.எஸ். அதை மறுப்பதையே கட்டுப்பாட்டுடன் செய்து வந்தது.



பா.ஜ.க.வை ஆதிக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.க்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என விரும்பிய பா.ஜ.க. தலைவர்களே இந்த ""சி.டி.''யை வெளியே கொண்டு வந்தனர். இதேபோல மோகன் பகவத், சுரேஷ் சோனி போன்ற ஆர்.எஸ்.எஸ். இன் தலைவர்களது மன்மத லீலை ""சி.டி.''க்கள் விநியோகத்திற்குத் தயாராக இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. போகிற போக்கைப் பார்த்தால், ஆர்.எஸ்.எஸ். தனது பிரச்சாரக்குகளின் ஆண் குறிகளுக்கு ஏதாவது பூட்டு போட்டால்தான் பிரச்சினை தீரும் போலிருக்கிறது.



21ஆம் நூற்றாண்டில் தனது இயக்கத்தில் பெண்களை உறுப்பினராக சேர்க்க மறுக்கும் ஒரே கட்சி ஆர்.எஸ்.எஸ். ஆகத்தான் இருக்க முடியும். இப்படி பெண்களை ஒழுக்கத்திற்கு எதிராகப் பார்க்கும் பார்வையில் இருந்தே மேற்கண்ட சீரழிவுக் கதைகள் தோன்றியிருக்கின்றன. இது பார்ப்பனியத்தின் கற்பு து தேவதாசி என்ற ஒரு நாணயத்தின் இரு பக்கங்களுக்கு நிகரானது. எனவே, ஆர்.எஸ்.எஸ்.உம் கள்ள உறவுக் கதைகளும் என்றும் பிரிக்க முடியாதபடி இணைந்தே இருக்கும். அது வெளியே வந்து நாறக் கூடாது என்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ்.இன் புகழ்பெற்ற "கட்டுப்பாடு' பயிற்சி ஸ்வயம் சேவகர்களுக்குத் தரப்படுகிறது.



இப்படி கள்ள உறவில் மட்டுமல்ல, மாஃபியா வேலைகளையும் பா.ஜ.க. தலைவர்கள் செய்து வந்தனர் என்பதற்கு உ.பி.யில் கொலை செய்யப்பட்ட மொகமதாபாத் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணாநந்த் ராய் ஒரு உதாரணமாவார். இவர் உள்ளூர் மாஃபியா தலைவர் பிரஜேஷ் சிங் கும்பலைச் சேர்ந்தவர். இந்தக் கும்பலின் எதிரணித் தலைவர், மாவூ சட்டமன்ற உறுப்பினரான முக்தார் அன்சாரி ஆவார். இரு கும்பல்களுக்கும் உள்ளூர் நிழல் உலக வேலைகள் செய்வதிலும், அரசாங்க கான்ட்ராக்ட்டுகளை எடுத்துச் செய்வதிலும் பலத்த போட்டி நிலவி வந்தது. இருதரப்பிலும் கடந்த சில ஆண்டுகளாக பலர் கொலை செய்யப்பட்டனர். இந்த மாஃபியா ரவுடியிசத்தில், கிருஷ்ணாநந்த் ராய் சமீபத்தில் கொல்லப்பட்டார். உலகத்துக்கே தெரிந்த இந்த மாஃபியா கும்பல் தலைவனது கொலையை முசுலீம் மக்களுக்கு எதிரான கலவரமாக மாற்றித் தனது புனிதத்தை பா.ஜ.க. காப்பாற்ற முயல்கிறது. கடைசியில், மதவெறி என்பது மாஃபியாக்களை மறைப்பதற்கான விசயமாக சுருங்கி விட்டது.



கேரளத்திலும் இதே கதைதான். ""இன்றைய கேரள பி.ஜே.பி.யின் தலைவர்கள் பலரது சொத்து மதிப்பு பத்து கோடிக்கு அதிகமிருக்கும். பி.ஜே.பி. மத்தியில் ஆட்சி செய்தபோது பெட்ரோல் பங்கு ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகள் அனைவரும் அறிந்ததே. மேலும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் பினாமி கட்டுமான நிறுவனத்துடன் நெருங்கிய உறவு கொண்டவர்கள் கூட கேரள பா.ஜ.க.வில் உள்ளனர்.'' இது ஏதோ பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சியினரின் வாக்குமூலம் அல்ல. கேரள பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ஓ.ராஜகோபாலின் வாக்குமூலம்தான் இது. 2004இல் நடந்த தேர்தலில் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் 2,28,000 ஓட்டு வாங்கி தோற்ற பா.ஜ.க., சமீபத்தில் அத்தொகுதியின் உறுப்பினர் மறைவால் நடந்த இடைத்தேர்தலில் வெறும் 36,000 ஓட்டுக்கள் மட்டும் பெற்று டெபாசிட்டையும் இழந்தது. ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் இயங்கும் பா.ஜ.க. தலைவர்களது சதியே இந்த படுதோல்விக்கு காரணம் என்பது ராஜகோபாலின் குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரமாகத்தான் மேற்கண்ட வாக்குமூலம்.



வாக்குகள் 2 லட்சத்திற்கு அதிகம் வாங்கியபோது அவருக்கு இந்த மனக்குறை இல்லை. வாக்குகள் குறைந்ததும்தான் தனது கட்சியை அம்பலப்படுத்தும் தேவை வந்திருக்கிறது. இவ்வளவு நாள் இதுபற்றி வாய்திறக்காத ராஜகோபாலின் யோக்கியதையும், வாய் திறந்ததால் பா.ஜ.க.வின் யோக்கியதையும் இப்போது சேர்ந்து அம்பலமாயிருக்கிறது.



எனவே, பா.ஜ.க.வின் கடந்த 25 வார சந்தி சிரிக்கும் சம்பவங்கள் எல்லாமும், அதன் 80 ஆண்டு பாரம்பரியத்தின் விளைபொருள்தானே தவிர விதிவிலக்குகள் அல்ல.

மு தமிழ்மணி

Amar said...

//இந்திய அணுசக்தி துறையில் அமெரிக்கா தலையீடு பற்றி சிறிது விளக்கமாக ஒரு பதிவு இட முடியுமா?
//

அதிமான எதிர்பார்ப்பு தமிழினி.
அப்படி எழுதினால் சீனா முதலாளிகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அனுஆயுதங்களை பற்றி எழுதவேண்டுமே!

சரி, இப்பொதைக்கு சில தகவல்கள் சொல்லிவிடுகிறேன்.

* இந்திய அனு உலைகள் 80% Capacityயில் தான் இயக்கபட்டு வருகின்றன - fuel பத்தாது என்பதால்.

* பிரான்ஸும் அமெரிக்கா நம்முடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர் நமக்கு உதவ முன்வந்து இருக்கின்றது.

* இதை போலவே ஒரு ஒப்பந்தம் சீனாவுடன் அமெரிக்கா போட்டு அதை செயல்படுத்தியும் உள்ளது.

* இப்படி ஒரு ஒப்பந்த்தை பற்றிய முதலில் பேச்சை எடுத்ததே இந்தியா தான்.

* காதொகாரின் பேட்டிகளும், அறிக்கைகளும் Good cop- bad cop routineஐ செர்ந்தவை.

தமிழரங்கம் said...

அமெரிக்க சேவையில் இந்தியாவின் துரோகம்
மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக அமெரிக்காவுக்குப் போயிருந்தபோது அறிவித்தார்: 'இந்தியாவை விற்பதற்காக வந்திருக்கிறேன்!" அப்போது யாரும் அந்தச் சொற்களை நேரடிப் பொருளில் எடுத்துக் கொள்ளவில்லை. பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சியைத்தான் அப்படிச் சொல்கிறார் என்றே பலரும் நம்பினார்கள். ஈரானுடனான இந்தியாவின் இயற்கை எரிவாயு இறக்குமதி ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்த்தபோது, அதே மன்மோகன் சிங் தனது போலி கம்யூனிஸ்டு கூட்டாளிகளுக்கு வாக்குறுதி கொடுத்துச் சொன்னார், 'இந்தியா விற்பனைக்கு அல்ல" என்று. அமெரிக்காவிற்கு விமானம் ஏறும் முன்பு இப்படிச் சவடாலடித்த மன்மோகன் சிங் அங்கே போய் இறங்கியவுடன், பொருட்களை மட்டுமல்ல் நாட்டையே பேரம்பேசி விலைக்கு விற்கக் கூடிய, உலகிலேயே மிகவும் சூழ்ச்சிகார மோசடித் தரகு பெரும் வியாபாரிதானேயென்று காட்டிவிட்டார்.

உலக மேலாதிக்க மேல்நிலை வல்லரசும், போர்வெறி பிடித்த ஏகாதிபத்திய நாடுமாகிய அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம்; அதனுடன் சிவிலியன் அணுசக்தி ஒப்பந்தம்; அந்தச் சமயத்திலே பேரம் பேசி முடித்து இரகசியமாக வைக்கப்பட்ட எழுதப்படாத இன்னொரு ஒப்பந்தம் ஆகியவற்றை கடந்த ஜூலை மாத அமெரிக்கப் பயணத்தின்போதே மன்மோகன் சிங் கும்பல் முடித்து விட்டது. துண்டைப் போட்டு மூடிக் கொண்டு, கைவிரல்களாலேயே பேரம் பேசி முடிக்கும் கால்நடைத் தரகு வியாபாரிகளைப் போல, அவமானகரமாகவும், அசிங்கமாகவும், கேவலமாகவும் செய்திருக்கிறார்கள். அடுத்து நடக்கவிருந்த, அனைத்து நாட்டு அணுசக்தி முகாமையின் இயக்குநர்கள் வாரியத்தின் வியன்னா சந்திப்பில், ஈரானுக்கு எதிரான ஐரோப்பிய நாடுகளின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதுதான் இரகசியமாக வைக்கப்பட்ட, எழுதப்படாத அந்த மூன்றாவது ஒப்பந்தம். இது ஏதோ இவ்வளவு காலமும் கூட்டுச் சேரா நாடுகளின் பக்கம் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைக் கைவிட்டு அமெரிக்கச் சார்பு நிலையெடுத்து, தன்னைப்போலவே வளரும் நாடாகிய ஈரானுக்கு எதிராக வாக்களித்துவிட்ட ஒரே தவறு என்று பார்க்கக்கூடாது.

இந்த ஒப்பந்தங்களின் சாரங்களையும், முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டாலே மன்மோகன் சிங் சோனியா கும்பல் எவ்வளவு பெரிய துரோகம் செய்துள்ளது என்பதை முழுமையாக அறிய முடியும். இன்றைய உலகின் பெட்ரோலிய எண்ணெய் இயற்கை எரிவாயு மிக்க நாடுகளில் ஒன்று ஈரான். ஆனாலும் அந்நாட்டின் இயற்கை எரிபொருள் பயன்பாடு தற்போதைய விகிதத்தில் தொடர்ந்தால் கூட, இன்னும் 20 ஆண்டுகளில் தானே பெட்ரோலிய எண்ணெய் இறக்குமதி நாடாகிவிடும். இயற்கை எரிசக்தியின் உலக அளவும் கூட வரம்புக்குட்பட்டதே; புதிதாக எண்ணெய் எரிவாயு ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட இன்னும் சில பத்தாண்டுகளில் வேறு பிற எரிசக்திகளின் மூலாதாரங்களைத் தேடிக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு உலகின் பல நாடுகள் தள்ளப்பட்டு விடும். மூலாதாரம் அணுசக்திதான் அத்தகைய மலிவான மாற்று எரிசக்தி. அந்த வசதியை உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினால் ஏற்கெனவே அந்த வசதி பெற்றுள்ள அமெரிக்கா, ரசியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வரிசையில் சேருவதற்கு ஈரான், வடகொரியா போன்ற சில நாடுகளும் முயற்சிக்கின்றன.

தற்போதைய முதன்மை எரிசக்தியாகிய பெட்ரோலிய எண்ணெய் வளமிக்கதாக வேறு சில நாடுகள் உலகில் இருப்பினும், அமெரிக்காதான் அந்த வர்த்தகத்தில் ஏகபோக ஆதிக்கம் பெற்றுள்ளது; அதேபோல வருங்கால முதன்மை எரிசக்தியாகிய அணுசக்திப் பயன்பாட்டில் வேறு சில நாடுகளும் முன்னேறியிருந்தாலும், அமெரிக்காதான் அணுசக்தி, அணு ஆயுதத் தயாரிப்புகளில் முன்னணியாகவும் ஏகபோக நிலையிலும் உள்ளது. உலகின் வேறு எந்த நாடும் தன்னைப் பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் விஞ்சிவிடக் கூடாது, சுயசார்பு நிலையை அடைந்து விடக் கூடாது என்ற மேலாதிக்க வெறியில் அமெரிக்கா துடிக்கிறது. அதற்காகவே எண்ணெய்வளமிக்க மத்தியமேற்கு ஆசிய நாடுகளைத் தனது மேலாதிக்கத்தில் வைத்துக் கொள்வதற்காக ஆப்கானின் தாலிபான் அல்கொய்தா பயங்கரவாதத்தையும் ஈராக்கின் சதாம் உசேனின் பாசிச ஆட்சியையும் காரணம் காட்டி, முறையே பயங்கரவாதம் மற்றும் மக்கள் பெருந்திரள் அழிவு ஆயுதக் குவிப்பு பீதியூட்டி அந்நாடுகள் மீது பேரழிவுப் போர்நடத்தி ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

மாற்று எரிசக்தியாக அணுசக்தியைப் பெற்று, சுயசார்புத் தொழில் முயற்சியில் ஈடுபடும் நாடுகள் மீது அணுஆயுதத் தயாரிப்புகளைச் செய்வதாகப் பழிபோட்டு, தனிமைப்படுத்தும் முயற்சியையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இந்தியாவும் பாக்.கும் இருதரப்புப் பகை காரணமாக அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டபோது, அது உலக நாடுகளுக்கே எதிரானது என்று மிரட்டிப் பணியவைத்தது.

ஈரானில் அமெரிக்கக் கைக்கூலி ஷாவின் பாசிச மன்னராட்சியைப் புரட்சி நடத்தித் தூக்கியெறிந்த மத குருமார்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய சுயசார்பை இன்னமும் பேணுகின்றனர். அதேபோல சோவியத் ஒன்றியமும் சீனாவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டபோதும், வடகொரியா அதற்கு அடிபணிய மறுக்கிறது. இவ்விரு நாடுகளும் சுயசார்பு நோக்கத்திற்கு அணுசக்தியை பயன்படுத்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பு முயற்சிகளில் இறங்கியுள்ளன. ஈரான் 1974இல் கையொப்பமிட்டுள்ள அணுஆயுதத் தடுப்பு ஒப்பந்தப்படியே அதற்கான உரிமை ஈரானுக்குண்டு.

ஆனால், அதையே அணுஆயுதத் தயாரிப்பு முயற்சி என்று புளுகி ஆக்கிரமிப்புப் போர் தொடுக்க அமெரிக்கா எத்தணிக்கிறது. இதன் ஒரு பகுதியாக தான் உலக அணுஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும் அந்நாட்டின் அணுசக்தி கட்டுமானங்களைப் பார்வையிடுவதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும் புகார் கூறி ஐரோப்பிய நாடுகளை முன்னிறுத்தி சர்வதேச அணுசக்தி முகாமை இயக்குநர் வாரியத்தில் தீர்மானம் நிறைவேற்ற செய்திருக்கிறது, அமெரிக்கா. ஈராக்கில் பேரழிவுப் பேராயுதங்கள் குவித்து வைத்திருப்பதாகப் புளுகி, ஐ.நா. மேற்பார்வையாளர்களை அனுப்பி நாடகமாடி ஆக்கிரமிப்புப் போர் தொடுத்ததைப் போன்றே, ஈரானுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு ஒரு முகாந்திரம் தேடிக் கொள்ளும் முயற்சிதான் இது. இம்முயற்சிக்கு மன்மோகன் சிங் கும்பல் துணை போகும் வகையிலே அத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருக்கிறது.

மன்மோகன் சிங் கும்பலின் இச்செய்கை, இதுவரை இந்தியா பின்பற்றி வந்த கூட்டுச் சேராக் கொள்கையில் இருந்து விலகிப் போவதாகவும், ஈரானில் இருந்து மலிவு விலையில் எண்ணெய் இறக்குமதி செய்யும் திட்டத்தைப் பாதிக்கும் என்றும் புலம்புகிறார்கள், எச்சரிக்கிறார்கள், போலி கம்யூனிஸ்டுகள். புலம்புவதும், எச்சரிப்பதும் பின்னர் பா.ஜ.க. ஆதரவை காட்டி சரணடைவதுமே வழக்கமாக்கிக் கொண்டார்கள். ஆனால், இந்தியாவின் நிலை இத்தகையதாகத்தான் எப்பாதுமே இருந்து வந்திருக்கிறது. முன்பு சோவியத் ஒன்றியம், அமெரிக்கா இரண்டையும் மாறி மாறிச் சார்ந்திருந்த இந்தியா வெறுமனே கூட்டுச் சேராக் கொள்கை என்று நாடகமாடி வந்திருக்கிறது. குறிப்பாக, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்துக்கு துணை போவதே எந்த ஆட்சி நடந்தாலும் இந்தியாவின் நிலையாக இருக்கிறது.

இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்கது, மன்மோகன் சிங் கும்பலின் நம்பவைத்துக் கழுத்தறுக்கும் துரோகத்தனம்தான். அதன் ஜூலை மாத அமெரிக்கப் பயணத்தின் போதே அந்நாட்டுடனான இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கான பேரங்களின் போதே, ஈரானுக்கு எதிராக வாக்களிக்கும்படியான அமெரிக்கக் கட்டளையை இந்தியா ஏற்றுக் கொண்டு விட்டது. ஆனால், ஓட்டெடுப்புக்கு முதல் நாளிரவு வரை ஈரானை ஆதரிக்கப் போவதாகக் கூறி கழுத்தறுப்பு வேலை செய்துவிட்டது. நாட்டையே மறுகாலனியாக்கும் துரோகிகள், இத்தகு கழுத்தறுப்பு வேலைகளில் ஈடுபடுவது வியப்புக்குரியதல்ல் வெறுக்கத்தக்கது!

நன்றி பதிஜனநாயகம்

சந்திப்பு said...

தமிழ் சர்க்கிள், வணக்கம்.

தங்களது பின்னூட்டங்களைப் பார்த்தேன். புதிய ஜனநாயகம் இதழில் வருவதை பின்னூட்டமாக இடுவதை தவிர்த்து விடுங்கள். இது கருத்துப் பிரச்சாரத்திற்கு தடையாக இருப்பதாக உணர்கிறேன். பின்னூட்டங்களை புதிய ஜனநாயக பிரச்சார மேடையாக தயவு செய்து மாற்ற வேண்டாம். அவையெல்லாம் நல்ல கட்டுரைகள் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. தங்களது இதழில் வரக்கூடிய கட்டுரைகளை தங்கள் வலைப்பூவில் தனிப்பதிவாக போடுவதன் மூலம் அதிகமான வாசகர்கள் கருத்துக்களைச் சொல்ல முடியும்.

நன்றி!

சமுத்ரா! தமிழினிக்கு தாங்கள் கேட்டுள்ள கேள்விகளை எனக்கு சிரிப்பூட்டுவதாகத்தான் இருக்கிறது.

1. மீண்டும், மீண்டும் நீங்கள் ஒரு விஷயத்தில் உள்ள நியாயங்களுக்காக - வாதாடாமல் பிரச்சினையை அழகாக திசை திருப்புகிறீர்கள்.

2. சீன முதலாளிகள் அணு ஆயுதங்களை பாகிசுதானுக்கு வழங்குவதாக கூறியிருக்கிறீர்கள். தவறு சீன அரசு என்று கூறுங்கள். அமெரிக்காதான் ஆயுதங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொள்ளையடித்து வருகிறது.

3. இந்திய அணு உலைகள் 80 சதவீதம் பாதுகாப்பாக இயங்குகிறது என்ற உண்மைக்கு நன்றி. புஷ்ஷின் தற்போதைய மிரட்டலே அணு கழிவுகளை மறுசெறிவூட்டல் செய்திட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா போன்ற நாடுகளிடம் கொடுக்க வேண்டும் என்பதுதான். அது மட்டுமின்றி ஒரு நாடு தன்னுடைய இராணுவ - சிவில் விஷயங்களுக்காக எதை செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அந்த நாடுதான் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால், அமெரிக்கா தற்போது அணு விஷயத்தில் இந்தியாவின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து அணு சக்தியில் எது இராணுவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எது சிவில் உபயோகத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என மிரட்டுவதோடு, சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்புக்கும் உள்ளாக வேண்டும் என்று கூறி வருகிறதே! இது இந்திய நாட்டையும், இந்திய மக்களையும் களங்கப்படுத்துவதாகாதா?

முல்போர்டின் மிரட்டல் குறித்தெல்லாம் மூச்சு விடமாட்டேன் என்கிறீர்களே...

Amar said...

//சீன முதலாளிகள் அணு ஆயுதங்களை பாகிசுதானுக்கு வழங்குவதாக கூறியிருக்கிறீர்கள். தவறு சீன அரசு என்று கூறுங்கள்.//
சீன அரசு விற்றது என்ற உன்மைய எற்றுகொண்டதற்க்கு நன்றி.
இப்படி நமது எதிரிகளுக்கு நம்மை லட்சக்கனக்கில் இந்தியர்களை கொன்று குவிக்க கூடிய ஆயுதங்களை விற்க்கும் சீன அரசை எதிர்த்து எப்போது கம்யூனிஸ்ட்டுகள் ஆர்பாட்டம் நடத்துவார்கள்?
// அமெரிக்காதான் ஆயுதங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொள்ளையடித்து வருகிறது.//
அமெரிக்காவில் ஆயுதங்களை உற்பத்தி செய்வதே தனியார் தான்.
//. இந்திய அணு உலைகள் 80 சதவீதம் பாதுகாப்பாக இயங்குகிறது என்ற உண்மைக்கு நன்றி. //
முருகா!
இந்திய அணு உலைகள் 80% Capacityயில் இயங்குகிறது என்று தான் நான் எழுதினேன்!
அதாவது 100 மெ.வா உற்பத்தி செய்ய கூடிய உலையில் 80 மெ.வா மட்டுமே உற்பத்தி செய்யபடுகிறது.
Enriched Uranium நம்மிடம் இல்லாத காரனத்தால்.
//புஷ்ஷின் தற்போதைய மிரட்டலே அணு கழிவுகளை மறுசெறிவூட்டல் செய்திட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா போன்ற நாடுகளிடம் கொடுக்க வேண்டும் என்பதுதான். அது மட்டுமின்றி ஒரு நாடு தன்னுடைய இராணுவ - சிவில் விஷயங்களுக்காக எதை செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அந்த நாடுதான் தீர்மானிக்க வேண்டும்.//
நமக்கு மற்ற நாடுகளிடம் இருந்து அணு உலைகள் வேண்டும் என்றால் நாம் இறக்குமதி செய்யும் அணு உலைகளும் - enriched uranium மற்றும் அது சம்பந்தமான அனைத்து தொழில்நுட்பமும் நாம் அணு குண்டு உற்பத்தி செய்ய பயன்படுத்த கூடாது.
இது சீனாவும் கையெழுத்து போட்டுள்ள NPT ஒப்பந்த கண்டிஷன் - அணு ஆயுத நாடுகள் என்று NPT கையெழுத்து போட்ட நாடுகள ஏற்றுகொள்ளும் அமெரிக்கா,சீனா,பிரான்ஸ்,பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பொருந்தும்.(மற்ற ~190 நாடுகள் அணுஅயுதமே தயாரிக்க கூடாது.)
நாம் NPTயில் கையெழுத்து போடவில்லை.
நாம் NPTயினால் அங்கிகரிக்கபட்ட அணுஆயுத நாடும் அல்ல!
அதனால் நமக்கு எந்த சர்வதேச நாடும் அனு சக்தி ஆனையும் சோதனை போடும் உலைகளுக்கு தவிற மற்ற உலைகளுக்கு எந்த வித உதவியும் செய்யாது.
இந்த ஜு.18 ஒப்பந்தம் என்ன சொல்கிறது என்றால் இந்தியா தனது மின் உற்பத்தி செய்யும் உலைகளை IAEA சொதனைகளுக்கு திறந்துவிட்டால் அமெரிக்கா தனது நாட்டு சட்டதை திருத்தி இந்தியாவுக்கு அணு உலைகள் சம்பந்தமான உதவிகளை செய்யும்.
அதோடு NSG - Nuclear Suppliers Group எனப்படும் அணு உலைகள் மற்றும் அதற்க்கான தொழிநுட்ப உதவிகளை செய்யகூடிய கூட்டமைப்பு நாடுகள் NSG சட்டத்தை திருத்தி இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா உதவும்.
நாம் NPTயில் கையெழுத்து போடாமலே ஒரு அணுஆயுத நாட்டுக்கு கிடைக்கும் உதவிகளை பெருகிறோம்.
பிரான்ஸும் அமெரிக்காவை பின்பற்றி இதே போல ஒர் ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்து கொண்டுள்ளது.
போக்ரான் சொதனைகளின் பின்னர் இந்தியா அணுஆயுதமே தயாரிக்க கூடாது என்ற இருந்த நிலை மாறி இப்போது அமெரிக்கா அணு ஆயுதம்,ஏவுகனை என்று எப்படியோ இருங்கள், அனால் என்னிடம் இருந்து உதவி வேண்டுமானால் நான் கொடுக்கும் உதவிகள் உங்கள் அணுஆயுத தயாரிப்புக்கு உதவு கூடாது என்பதை உறுதிபடுத்திகொள்ள இரானுவ தேவைகளுக்காக உள்ள உலைகளை தவிற மற்ற உலைகளை IAEA சோதனைகளுக்கு திறந்துவிடுங்கள் என்று இறங்கி வந்துள்ளதே தவிற இது ஒன்றும் மிரட்டலும் இல்லை கிரட்டலும் இல்லை.
இதில் எது இரானுவ தேவைக்கான உலை எது சிவில்லியன் உலை என்பதை இந்தியா முடிவு செய்யும்.அனால் இது credible seperation ஆக இருக்க வேண்டும். சும்மா பேருக்கு எதாவது ஒரு உலை இரண்டு உலை என்று சோதனைகளுக்கு திறந்துவிட்டால் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்தற்க்கு தான் இந்த ஒப்பந்த்தில் கையெழுத்து போட்டுள்ளோம் என்ற என்னம் வரும்.
//அனால், அமெரிக்கா தற்போது அணு விஷயத்தில் இந்தியாவின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து அணு சக்தியில் எது இராணுவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எது சிவில் உபயோகத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என மிரட்டுவதோடு, சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்புக்கும் உள்ளாக வேண்டும் என்று கூறி வருகிறதே! இது இந்திய நாட்டையும், இந்திய மக்களையும் களங்கப்படுத்துவதாகாதா? ///
மேலே உள்ள பதிலை மெதுவாக படிக்கவும்.

//முல்போர்டின் மிரட்டல் குறித்தெல்லாம் மூச்சு விடமாட்டேன் என்கிறீர்களே...//
David Mulforஐ MEA Summon செய்து நன்றாக டோஸ்விட்டு அனுப்பிவிட்டார்கள்.

மேலும் இது ஒன்றும் புதிது அல்ல!
சாதாரன சீன Consulate அதிகாரி ஒருவர் நமது பாதுகாப்பு அமைச்சரை ஒரு கூட்டதில் Challenge செய்தார்.
நரசிம்மா ராவ் பிரதமராக இருந்து போது ஒரு வெளிநாட்டு சுற்றிபயனத்திலும் அதே போல சீன Consulate அதிகாரி ஓவராக ஆடினார்
.
சர்வதேச அரசியலில் இவை சகஜம்.