June 22, 2007

மதம் மாறும் டோணி!

இங்கிலாந்து பிரதமர் டோணி பிளேர், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகிறார். இதற்காக போப்பாண்டவரை சந்தித்து கத்தோலிக்கராக மாறத் திட்டமிட்டுள்ளார்.
டோணி பிளேர் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர். இந்த நிலையில் ரோமன் கத்தோலிக்கப் பிரிவுக்கு மாற அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக வாட்டிகன் சென்று போப்பாண்டவரை சந்தித்து அவர் முன்னிலையில் கத்தோலிக்கராக மாறவுள்ளார். அடுத்த புதன்கிழமை பிளேர் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார். நிதித்துறை அமைச்சர் கார்டன் பிரவுன் புதிய பிரமதராக பதவியேற்கவுள்ளார். பிளேரின் மதப் பிரிவு மாற்றம் குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ரோம் நகருக்கு நாளை பிளேர் செல்கிறார். பின்னர் போப்பாண்டவரைச் சந்தித்து மாற்றம் குறித்து அவரிடம் விவாதிக்கிறார். பின்னர் மாற்றம் நடைபெறும் என்றார். பிளேரின் மனைவி செர்ரி மற்றும் அவரது நான்கு குழந்தைகளும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஹலோ நானும் உங்களைப் போலத்தான் நம்ம சிக்ஸர் டோனியாக்கும் என்று ஆவலோடு வந்தால் டோணி பிளேயராகிப் போச்சு! பரவாயில்லை. இருந்தாலும் இந்த சப்ஜக்டையே விவாதமாக்கிடலாமே!
நல்லகாலம் டோணி இங்கிலாந்தில் பிறந்தார். இந்தியாவில் இருந்திருந்தால் சங்பரிவாரின் கோபத்திற்கு ஆளாகியிருப்பார்.
மதம் மாறுவது ஒரு தனிநபரின் உரிமை. சமூகத்தின் உரிமை. எந்தக் காலத்தில் எது மனிதனுக்கு நன்மை புரியும் என்று அவன் அல்லது சமூகம் நம்புகிறதோ அதற்கு மாறிக் கொண்டேதான் வந்திருக்கிறது சமூகம். இந்தியாவில் கூட என்றைக்கும் ஒரே மதம் இருந்தது இல்லை.
ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை தொடரும் கிராம தெய்வ வழிபாடு. இது ஒவ்வொரு குலத்திற்கும் - குடும்பத்திற்கும் மாறுபடும். பாரம்பரியமாக தொடர்ந்து கொண்டிருப்பது. இதையும் தாண்டி சமணம். ஜைனம். பெளத்தம். சார்வாகம். மீமாம்சம் என பல எதிரும் புதிருமான நம்பிக்கைகளைக் கொண்ட கொள்கைகள் இந்தியாவில் நிலவி வருகிறது. இந்து மதம் என ஒன்று இதுவரை இந்தியாவில் இல்லவே இல்லை. இதை உருவாக்கியது பிரிட்டிஷ் கிறித்துவர்கள்தான். இந்தியாவில் இன்றைக்கும் சைவமும் - வைணவமும் ஒன்றல்ல. இருவரின் கொள்கைகளும் வெவ்வேறானது. இதையும் தாண்டி பிராமணீ இந்து மதம் கோலோச்சுகிறது. இந்திய சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய நிலப்பிரபுத்துவ வர்க்கம் தனது தேவைக்கு ஏற்ப உருவாக்கியதே மனுதர்மம். இந்த ஆண்டான் - அடிமை சமூகத்தை இந்திய வடிவில் நீடிக்கச் செய்தது. இன்றைக்கும் இதன் தாக்கம் இந்தியாவில் வலுவாக ஆலம் விழுதுகளைப் போல் ஊன்றியுள்ளது. இத்தகைய கடை நிலை மனிதனை இந்து மதம் மனிதனாகவே மதிப்பதில்லை. இவர்களை மனிதனாக முதலில் மதித்த மதங்கள் பெளத்தமும் - கிறித்துவமும் - இசுலாமும்தான். காலப் போக்கில் இவர்களும் மனுதர்மத்துக்குள் சிக்கி விட்டனர் என்பது வேறு கதை. இருப்பினும் சமூக இழிவிலிருந்து மீள வேண்டும் என்று கருதிய மனிதர்கள் தங்களது மதங்களை - கடவுள்களை மாற்றிக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. அது அவர்களது உரிமை. எது அவர்களுக்கு சுதந்திரம் தருகிறதோ அதை அவர்கள் நாடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பா.ஜ.க. - சங்பரிவாரம் இதனை சமூக பிரச்சினையாக கருதாமல் மதப் பிரச்சினையாக - இந்து மதத்திற்கு எதிராக மற்ற மதங்களை நிறுத்தி மனிதர்களுக்குள் மோதலை உண்டு பண்ணி வருகிறது. மென்மையான இந்துத்துவ வாதியான ஜயலலிதாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்தான் மதமாற்ற தடைச் சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தார். இதனைப் பின்பற்றி ராஜஸ்தானில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தில் கையெழுத்து இடமாட்டேன் என்று திருப்பி அனுப்பிய உத்தமர்தான் தற்போதைய ஜனாதிபதி போட்டியில் இருக்கும் திருமதி பிரதீபா பாட்டில் என்பது பெருமைப்பட வேண்டிய விசயம்.
இந்தியாவில் மதம் மாறலாம். ஆனால் ஜாதி மாற முடியாது! ஜாதியிலிருந்தும் விடுபட முடியாது. இது மனுதர்மம் - இந்திய அடிமைத்தனம் நமக்கு பூட்டிய அடிமைத்தளை. இத்தகைய நிலையிலிருந்து சமூகத்தை மீட்சிக்கு கொண்டு வர தற்போது இருக்கும் சமூக அமைப்பை தலைகீழாக மாற்ற வேண்டும். டோனியின் சிக்சர்களைப் போல் நிலவுடைமை - ஜாதிய கட்டமைப்புக்கு எதிராக நாம் அணித் திரளவேண்டும். இதற்கு தடையாக இருக்கும் சங்பரிவாரம் போன்ற மதவாத - அடிப்படைவாத சக்திகளை - பாசிஸ்டுகளை முற்றிலும் துடைத் தெறிய வேண்டும். இதற்கு ஒன்றுபட்ட போராட்டங்கள் அவசியம்.
இறுதியாக. டோனி பிளேயர் மதம் மாறலாம். ஆனால். அவரது வர்க்கம் மாறாது. அதாவது ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் புரியும் வர்க்கத் தன்மை மாறாது. அமெரிக்காவுக்கு வால் பிடிப்பதிலும் - ஈராக் மக்களை கொன்றொழிப்பதிலும் - உலக செல்வங்களை சுறையாடும் ஏகாதிபத்திய குணம் மாறாது. ஒரு வேளை பாவ மன்னிப்பிற்காக டோனி மதம் மாறுகிறாரோ? அவருக்கே வெளிச்சம்!

6 comments:

- யெஸ்.பாலபாரதி said...

உங்கள் பதிவை பயர்பாக்ஸில் படிக்க முடியவில்லை. :(

பதிவு போடும் போது "ஜஸ்டிபை" செய்யாமல்.. பதிவு போடுங்கள்.

படிக்கவே முடியாமல் பின்னூட்டம் இட முடியாது. மேலும் பின்னூட்டம் போடும் போது, தனி ஜன்னல் திறப்பதையும் மாற்றுங்கள்.

சந்திப்பு said...

நன்றி பாலபாதி. தங்களது ஆலோசனைபடி நான் இதனை மாற்றிடுகிறேன்.

லக்கிலுக் said...

//பின்னூட்டம் போடும் போது, தனி ஜன்னல் திறப்பதையும் மாற்றுங்கள்.//

ஆமாம். தாவு தீருகிறது :-(

சந்திப்பு said...

பாலபாரதி - லக்கி உங்கள் ஆலோசனைப்படி இப்பவே சரி செஞ்சுட்டேன்..... வாழ்த்துக்கள். நன்றி.

- யெஸ்.பாலபாரதி said...

தனி ஜன்னலுக்கு விடைகொடுத்தமைக்கு நன்றி!

ஆனா... அந்த ஜஸ்டிபை பேட்டரை விட்டுட்டீங்களே..?! :(

பதிவு போடும் போது, இனி எப்போதும் செண்டர் அலைன்மெண்ட் வைக்க வேண்டாம். பதிவு எழுத்துக்களை நீங்கள் செண்டர் அலைன்மெண்ட் செய்வதால் தான் இந்த ஜஸ்டிபை பிரச்சனை ஏற்படுகிறது.

வல்லுநர்களை அணுகி, அதனை சரி செய்து விடுங்கள்.

- யெஸ்.பாலபாரதி said...

பகத்சிங், அம்பேத்கார் போன்றேரையே இந்துத்துவ வியாதிகள் தங்கள் போஸ்டரில் போடத்தொடங்கி விட்டார்கள்.

:((((

அதுசரி, தோழா...,

மென்மையான இந்துத்துவ வாதியான ஜயலலிதாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதுக்கு பொருள் புரியலையே?!