June 20, 2007

கடவுளின் இல்லம்

கடவுளின் இல்லம்


பிரேம்சந்த்




தமிழில்: ச. வீரமணி




மூன்று நாட்களாக சுகியா சோறோ, தண்ணீரோ எதையும் தொடவில்லை. கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவளுடைய மகன் அவளுக்கு முன்னால் பிரக்ஞையற்றுக் கிடந்தான். கடந்த மூன்று நாட்களாகவே அவன் தன் கண்களையே திறக்க வில்லை. சுகியா சிறிது நேரம் அவனைத் தூக்கி வைத்திருந்தாள். பின்னர் மீண்டும் படுக்கையில் கிடத்தினாள். திடீரென்று அவனுக்கு என்னவாயிற்று? யாராலும் சொல்ல முடியவில்லை. சுகியா ஏற்கனவே தன் இரு குழந்தைகளைப் பறி கொடுத்தவள். அவள் கணவன் அதற்கு முன்னாலேயே போய் விட்டான். வாழ்க்கையில் அவளுக்கிருக்கிற ஒரே நம்பிக்கை, இந்தக் குழந்தைதான். அவனை ஒரு நிமிடம் கூட அவள் பிரிந்திருக்க மாட்டாள். அவள் பிழைப்புக்காக புல் அறுக்கச் செல்லும் போதும், அவற்றை விற்கச் செல்லும்போதும் அவன் கூடவே இருப்பான். அவள், அவனுக்கு ஒரு பொம்மை அரிவாள் வாங்கிக் கொடுத்திருந்தாள். அவன், ''என்கிட்டே ஒரு நிஜ அரிவா கொடு'ம்மா. நானும் உன்னோடு நிறைய புல் அறுப்பேன். அப்புறம் நீ ஒன்னும் வேலை செய்ய வேணாம். நானே மார்க்கெட்டுக்குப் போயி, வித்திட்டு வருவேன்'' என்று சொல்வான்.

''எனக்கு என்ன வாங்கிட்டு வருவே, மகனே'' என்று அவள் கேட்பாள். ''உங்களுக்கு சிவப்பு புடவை வாங்கிட்டு வருவேன்'' என்று ஜைவான் கூறுவான். கள்ளங்கபடமற்ற அவனின் மழலைப் பேச்சும் மற்றும் அவனது நடவடிக்கைகளும் ஒன்றன்பின் ஒன்றாக, எதிரே உட்கார்ந்திருக்கும் அவள் கண்முன்னே வந்து கொண்டிருந்தன. இரவு நீண்டு கொண்டே போனது. சுகியா வருத்தத்தில் மூழ்கிப் போனாள். எந்தக் கடவுள் கண் திறந்து என் கஷ்டங்களைப் பார்ப்பார்? என் குழந்தைக்காக எந்த அம்மனிடம் வேண்டுவது?

இதே சிந்தனைகளுடன் அவள் சற்றே கண்ணயர்ந்தாள். திடீரென்று அவள் கணவன் அவள் பக்கத்தில் வந்து நிற்பதைப் பார்த்தாள். அவன் தன் கையை குழந்தையின் நெற்றியில் வைத்துப் பார்த்துவிட்டு, சொன்னான்:

''அழாதே சுகியா, நம் குழந்தைக்கு சீக்கிரம் சரியாகிவிடும். நாளைக்கு, தாகூர்ஜி காலடியில் கொண்டுபோய் குழந்தையைக் கிடத்தி, வேண்டிக்கொள். அவர்தான் நம்மைக் காப்பவர்.''

உடனே சுகியா எழுந்துவிட்டாள். கனவில் வந்து கணவன் சொன்னது அவளை மலர்ச்சிபெறச் செய்து விட்டது. ''அவர் இன்னும் என்னைப் பத்தியே நினைச்சிக்கிட்டிருக்காரு'' என்று சுகியா முணுமுணுத்துக் கொண்டாள்.

இவ்வாறான சிந்தனைகள் அவளை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தின. அவள் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்துச் சொன்னாள்:

''ஓ, கடவுளே! இவனை மீண்டும் நல்லபடியா செஞ்சுடு. நான் உன்னை முழுசா கெஞ்சிக் கேட்டுக்கிறேன். பாழாய்ப் போன இந்த விதவை மீது இரக்கம் காட்டு.''

கொஞ்ச நேரம் கழித்து, ஜைவான் தன் கண்களைத் திறந்து குடிக்கத் தண்ணீர் கேட்டான். தாய் அவனுக்குக் கொஞ்சம் கொடுத்தாள். தண்ணீரைக் குடித்தபின் ஜைவான் கேட்டான்

''இன்னும் ராத்திரியாகத்தான் இருக்கா'ம்மா?''

''சீக்கிரம் விடிஞ்சிடும், மகனே'' என்று கூறிய சுகியா, பின்னர், ''உனக்கு இப்போ எப்படி இருக்கு?'' எனக் கேட்டாள்.

''பரவாயில்லை'ம்மா. நான் சீக்கிரம் நல்லாயிடுவேன்'' என்று ஜைவான் கூறினான்.

''கடவுள்தான் உன்ன நல்லாக்கி இருக்கார், மகனே'' என்று கூறிய சுகியா, ''உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமா?'' என்று கேட்டாள்.

''எனக்கு கொஞ்சம் சர்க்கரை கொடு'ம்மா''

''சர்க்கரை வேணாம் மகனே, ஜுரத்தில் கிடந்திருக்கிற உனக்கு ஒத்துக்காது. கொஞ்சம் கஞ்சி வச்சுத் தர்ரேன்'' என்று சுகியா சொன்னாள்.

''கொஞ்சமாவது சர்க்கரை கொடு'' ஜைவான் வற்புறுத்தினான்.

''நான் உன்னக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன், வேணாம் கண்ணா!''

ஆயினும் ஜைவான் கேட்டதை அவளால் தட்ட முடியவில்லை. கூடையைத் திறந்து கொஞ்சம் சர்க்கரையை எடுத்துக் கொடுத்தாள். அப்போது வீட்டிற்கு வெளியே இருந்து யாரோ கூப்பிட்ட குரல் கேட்டு அவள் வெளியே வந்தாள். ஜைவான் கூடையிலிருந்து மேலும் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டான்.

ஜைவானுக்கு அன்று பகல் முழுதும் நன்றாக இருந்தது.கொஞ்சம் சோறு கூட சாப்பிட்டான். வீட்டின் கதவருகில் உட்காரந்து அவன் நண்பர்கள் விளையாடுவதைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தான். குழந்தைக்கு நன்றாகிவிட்டது என்றே சுகியா கருதினாள். கொஞ்சம் காசு புரட்டிக் கொண்டு தாகூர்ஜி கோவிலுக்குப் போய், வேண்டுதலை நிறைவேத்தணும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

அப்போது மிகவும் குளிர் காலம். சீக்கிரமே இரவு வந்துவிட்டது. மாலையானதும் ஜைவானுக்கு மீண்டும் ஜுரம் வந்து விட்டது. சுகியாவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. உடனே சென்று கடவுளுக்கு வேண்டுதலை நிறைவேத்தாததால்தான் மகனுக்கு மீண்டும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டதோ என பயந்தாள். எனவே, உடனடியாக பூசைக்கு வேண்டிய சாமான்களை சேகரித்தாள். தன்னுடைய ஆண்டையினுடைய தோட்டத்திலிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தாள். அவள் வீட்டுக்குப் பக்கத்திலேயே வளர்ந்திருந்த துளசியையும் கொஞ்சம் பறித்துக் கொண்டாள். தாகூர்ஜிக்கு பூசை செய்வதற்கு இன்னும் தேவைப்பட்டது, கொஞ்சம் இனிப்பு வாங்கணும், அதற்கு ஒரு அணா தேவைப்படும். அவள் அந்தக் கிராமம் முழுக்க சுற்றி வந்து யார் யாரிடமோ கடனாகக் கேட்டுப் பார்த்தாள். யாரும் அவளுக்குக் கடன் தரவில்லை. அவள் தன் வெள்ளி வளையல்களை அடகு வைத்து அதன் மூலம் கொஞ்சம் இனிப்பு வாங்கிக்கொண்டாள். எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு, குழந்தையையும் தூக்கிக் கொண்டு கோவிலுக்குப் போனாள்.

கோவில் மணி முழங்கிக் கொண்டிருந்தது. இதுதான் பூசை செய்யும் நேரமாகும். ஒரு சில பக்தர்கள் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். சுகியாவும் சென்று கோவிலின் முன் நின்றாள். கோவிலுக்கு வெளியே வந்த பூசாரி அவளிடம் மிகவும் முரட்டுத்தனமாக, ''உனக்கு என்ன வேணும்?'' எனக் கேட்டான்.

சுகியா, கோவில்படிகிளன் அருகே வந்து நின்றுகொண்டு, ''சாமி, என் குழந்தைக்கு உடல் சரியாயிடுச்சுன்னா, அவனை தாகூர்ஜியின் காலடியில் கிடத்துவதாக, வேண்டிக்கிட்டேன். வேண்டுதலை நிறைவேத்துறதுக்காக வந்திருக்கேன், சாமி!'' என்றாள்.

கோவிலில் இருந்த பக்தர்கள் எல்லாம் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். சுகியோ சக்கிலியப் பெண். இவள், இதுபோன்ற வேண்டுதலுடன் வருவாள் என்பதை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடிய வில்லை. ஆயினும் தன்னை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு, அந்தப் பூசாரி, ''நீ, இந்த இடம் பூராவையும் தீட்டாக்கணும்னு பாக்கிறியா? போ, போ.'' என்று விரட்டினார்

அங்கே நின்று கொண்டிருந்த பக்தர்களில் ஒருவர், ''தாகூர்ஜியைப் புனிதப்படுத்த வந்திருக்கிறாள்'' எனக் கிண்டலடித்தார்.

''பூசைக்கு வேண்டிய எல்லாமும் கொண்டு வந்திருக்கேன், சாமி. எல்லாத்தையும் தாகூர்ஜி காலடியில் வச்சுட்டு, தொட்டுக் கும்பிட்டுட்டுப் போயிடறேன், சாமி'' கெஞ்சினாள், சுகியா.

''உனக்கு என்ன, பைத்தியமா?'' பூசாரி அதட்டினார். ''எப்படி நீ தாகூர்ஜியின் கால்களைத் தொட முடியும்?''

சுகியா இப்போதுதான் முதன்முறையாக தாகூர்ஜியின் கோவிலுக்கு வந்திருந்தாள். அவளுக்கு ஆச்சரியம்.

''ஏன், சாமி! தாகூர்ஜி உலகத்தக் காப்பதற்காக வந்தவர், இல்லையா? பாவம் செய்தவங்க, அவர்கிட்ட வந்து, முறையிட்டு, தங்கள் பாவத்தைப் போக்கி, தங்களைக் காப்பாத்த சொல்வதில்லையா? நான் தொடுவதால் அவர் எப்படி தீட்டாவார்?'' என மிகவும் அப்பாவித்தனமாக அவள் கேட்டாள்.

''நீ ஒரு சக்கிலியச்சிதானே?'' பூசாரி கேட்டார்.

''ஆம், ஆனால், இதே கடவுள்தான் எங்களையும் படைச்சார், இல்லீங்களா, சாமி''

சுகியாவின் வாதம் எல்லாம் கொஞ்சமும் எடுபடவில்லை.

''எங்களுக்கும் இவர்தான் கடவுள். ஒண்ணும் வித்தியாசம் இல்லை, தயவுசெய்து என் வேண்டுதலை நிறைவேத்த விடுங்க'' சுகியா ரொம்பவும் கெஞ்சினாள்.

சற்று முன் கிண்டல் செய்த பக்தர் மிகவும் வெகுண்டு, ''இந்த இடத்தை பூராவும் தீட்டாக்குவதற்கு முன்னாடி, இங்கேயிருந்து ஓடிப்போயிடு, பிசாசே! இந்த உலகத்துக்கு என்ன வந்துடுச்சு, சக்கிலியர்கள் கூட இந்தக் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்யணும்னு கேட்கிற நிலை வந்துடுச்சே'' என்று கத்தினார்.

''உலகம் சீக்கிரம் அழியப் போவுது. ஏழை தாகூர்ஜி, சக்கிலியர்களிடமிருந்து கூட பூசை புனஸ்காரங்களைப் பெறக்கூடிய நிலைக்கு வந்துட்டாரே'' என்று மற்றொருவர் புலம்பினார்.

அது குளிர்கால மாலைப் பொழுது. குளிர்காலத்திற்கான உடைகள் அவளிடம் இல்லை. சுகியா நடுங்கிக் கொண்டே நின்றாள். மதத்தின் காவலர்கள் உலகின் எதிர்காலம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தை, தாயின் உடம்பிலிருந்து கதகதப்பைப் பெறுவதற்காக அவளை நடுக்கத்துடன் மிகவும் கட்டியணைத்துக் கொண்டது.

சுகியா மிகவும் உறுதியுடன் அங்கேயே கீழே உட்கார்ந்து விட்டாள். எப்படியாவது கோவிலுக்குள் சென்று தாகூர்ஜியின் காலடியில் குழந்தையை வைக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் இருந்தாள்.

''தாகூர்ஜி, யாருடைய தனிச்சொத்தும் கிடையாதே!'' அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். ''எங்களைப் போன்ற கீழ் சாதிக்காரர்களுக்கும் அவர்தானே கடவுள்! என்னைத் தடுப்பதற்கு இவர்கள் யார்?''

இவ்வாறு அவள் நினைத்தாலும் அவர்கள் தன்னைப் பலாத்காரமாகத் தூக்கி வெளியே எறிந்து விடுவார்களோ என்ற பயமும் அவளுக்கு இருந்தது. எனவே, அவர்களுக்கு நேராக, கடுமையான காரியங்கள் எதையும் செய்வதை அவள் தவிர்த்தாள். திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை. கோவிலுக்குச் சற்று தூரத்தே இருந்த மரத்தடிக்குச் சென்று மறைந்து நின்று கொண்டாள்.

கோவிலில் பிரார்த்தனைகள் முடிந்ததும், பக்தர்கள் பகவத்கீதையிலிருந்து சில ஸ்லோகங்களைப் பாடினார்கள். அவர்கள் ஸ்லோகங்களைப் பாடி முடிக்கும்போது மணி பத்தாகி விட்டது. அதுவரை சுகியா அங்கேயே மரத்தடியிலேயே காத்துக்கொண்டிருந்தாள்.

பின்னர் பக்தர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். பூசாரி மட்டுமே இருந்தார். சுகியா மீண்டும் வந்து, கோவிலின் வராந்தாவிற்கருகில் நின்றாள். பூசாரி, கடவுளை வேண்டிப் பரவசத்துடன் பாடிக்கொண்டே இருந்தார். காலடி சத்தம் கேட்பதைக் கேட்டு, தலையைத் திருப்பிப் பார்த்தபோது, சுகியா நிற்பதைக் கண்டார். மிகவும் எரிச்சலடைந்து, ''இன்னும் நீ இங்கேயேவா இருக்கிறாய்?'' என்றார்.

''சாமி, நான் மிகவும் அதிர்ஷ்டங் கெட்டவள். என் வாழ்க்கையில் எனக்குள்ள ஒரே பிடிமானம், இந்தக் குழந்தைதான். மூணு நாளா இவன் பேச்சு மூச்சு இல்லாம கிடக்கிறான்.'' கூறிக் கொண்டிருக்கும்போதே கதறத் தொடங்கி விட்டாள். அவள் கதறல் பூசாரியினுடைய தூங்கிக் கொண்டிருந்த மனிதாபிமானத்தை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. ஆயினும், அவளைக் கோவிலுக்குள் விட அவர் பயந்தார். ஒரு சக்கிலியச்சி, தாகூர்ஜியின் காலடிகளைத் தொடுவதால் ஏற்படும் தீட்டால் கிராமத்திற்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால்? என்ன நிகழும் என்று யாரறிவார்? எப்படியாவது அவளை அனுப்பி வைப்பதற்காக, அவர் கூறினார்:

''வீட்டுக்குப் போய், பிரார்த்தனை செய். கடவுள் கிருபை இருந்தால், உன் மகன் விரைவில் குணமடைந்து விடுவான். நான் கொஞ்சம் துளசி தீர்த்தம் தர்றேன். அதை அவனுக்குக் கொடு.''

சுகியா கெஞ்சினாள். ''சாமி, நான் கடவுளின் காலைத் தொட்டுக் கும்பிட அனுமதிங்க சாமி! பூசைக்கான சாமான்கள் கடன் வாங்கி, வாங்கிட்டு வந்திருக்கேன். தாகூர்ஜியை வேண்டிக்கொள்ள சொல்லி, செத்துப்போன என் கணவர், கனவில் வந்து கேட்டுக்கிட்டாரு. என் கிட்டே இப்போது ஒரு ரூபா இருக்கு. இவை வச்சுக்கிட்டு, கடவுள் காலடியில விழ என்னை அனுமதிங்க, சாமி!''

ஒரு ரூபா இருக்கிறது என்று சுகியா சொன்னதும், பூசாரிக்கும் கொஞ்சம் சபலம் வந்தாலும், யாருக்கேனும் தெரிந்துவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்ற பயமும் வரவே, அதனைப் பெற்றுக்கொள்ளாமல் அவரைத் தடுத்துவிட்டது. தன் சபலத்தை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு, அவர் கூறினார்:

''முட்டாள் மாதிரி பேசாதே, உனக்கு நம்பிக்கையில்லாவிட்டால், கடவுளின் கால்களில் விழுவதால் மட்டும் ஒன்றும் நடந்து விடாது. மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கிய தாயத்து ஒன்று என்னிடம் இருக்கு. அதனை நான் உனக்கு ஒரு ரூபாய்க்குக் கொடுக்கிறேன். குழந்தையின் கழுத்தைச் சுற்றி அந்தத் தாயத்தைக் கட்டு. நாளைக்கு அவனுக்கு எல்லாம் சரியாகிவிடும்.''

''ஆனால், கடவுளின் கால்களைத் தொடுவதற்கு என்னை அனுமதிக்க மாட்டீங்களா?'' அவள் மன்றாடினாள்.

''இதற்கு முன் எவரும் செய்யாத காரியத்தை நீ செய்வதற்கு நான் எப்படி அனுமதிக்க முடியும்? அதன் விளைவாக கிராமத்திற்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னாவது? நீ இந்தத் தாயத்தை எடுத்துக் கொண்டு, போ. கடவுள் மனது வைத்தால் உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் இன்றிரவே சரியாகிவிடும்'' என்று பூசாரி சமாதானம் செய்தார்.

சுகியா தன்னுடைய வளையல்களை இரண்டு ரூபாய்க்கு அடகு வைத்திருந்தாள். ஒரு ரூபாய் ஏற்கனவே செலவாகிவிட்டது. மீதம் இருந்த ஒரு ரூபாயைத் தற்போது பூசாரியிடம் கொடுத்தாள்.

வீட்டிற்குச் சென்றதும் தாயத்தை, குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கட்டினாள். ஆனாலும், இரவு ஆக ஆக, அவனுடைய ஜுரம் அதிகமாகியது. அதிகாலை 3 மணியிருக்கும்போது அவனுடைய கைகளும் கால்களும் மிகவும் ஜில்லிட்டுப் போய்விட்டன. சுகியா மிகவும் பயந்தாள். தாகூர்ஜியின் காலடியின் அவனை வைத்து, சாமியிடம் வேண்டாததற்காகத் தன்னைத் தானே மிகவும் கடிந்துகொண்டாள். நேரம் ஆக ஆக, அவள் நிம்மதியின்மையும் அதிகமாகியது. இனி நேரத்தை வீணாக்கிப் பயன் இல்லை. கோவிலுக்கு மறுபடியும் செல்வதென அவள் தீர்மானித்தாள். ''தாகூர்ஜி அப்படி ஒன்றும் பூசாரியின் சொந்த சொத்து கிடையாதே, அவர் எப்படி என்னைப் பூசை செய் விடாது தடுக்க முடியும்?'' இவ்வாறு சொல்லிக்கொண்டே, குழந்தையை ஒரு கம்பளியில் போட்டுக் கட்டிக்கொண்டு, மீண்டும் கோவிலுக்குப் புறப்பட்டாள்.

கடும் இருட்டு. குளிர் காற்று கோரமாக வீசிக் கொண்டிருந்தது. வயல் வெளிகள் வழியாகத்தான் கோவிலுக்குப் போக வேண்டும். சில சமயங்களில் நாய்கள் குரைத்தன. சில சமயங்களில் நரிகள் ஊளையிட்டன. மரங்கள் சலசலப்பது பேயிரைச்சல் போல் வந்தது. கிராமத்தின் இப்பகுதியில் பேய்கள் நடமாடுவதாக மக்கள் பேசிக்கொள்வதுண்டு. இதுபோன்ற இரவு நேரத்தில் ஆண்கள் கூட இந்தப் பக்கத்தில் வருவதற்குத் துணிய மாட்டார்கள். சாதாரண காலமாக இருந்திருந்தால், லட்சம் ரூபாய் கொடுத்திருந்தால் கூட, சுகியா இவ்வாறு இந்தப் பக்கம் வர ஒப்புக்கொண்டிருக்க மாட்டாள். ஆனால், இப்போது? ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய எந்த சத்தத்தையும் அவள் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், தாகூர்ஜியின் பெயரை மட்டும் வாயில் உச்சரித்துக் கொண்டே, கோவிலை நோக்கி விடாப்பிடியாக சென்று கொண்டிருந்தாள்.

கோவிலுக்கு அவள் வந்து சேர்ந்தபோது, கோவில் கதவுகள் மூடப்பட்டிருந்தன. எங்கே தாகூர்ஜி தப்பித்து ஓடிவிடுவாரோ என்ற முறையில் கோவில் கதவுகள் மூடப்பட்டு, சங்கிலிகளால் இணைக்கப்பட்டு, ஒரு பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த அறையில் பூசாரி தூங்கிக் கொண்டிருந்தார். சுகியா, குழந்தையைக் கீழே கிடத்தினாள். ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து, வெறித்தனமாகப் பூட்டை உடைப்பதற்காக அடிக்கத் தொடங்கினாள். விரைவில் சங்கிலி உடைந்து கழன்று கொண்டது. ஆனால் அந்த சத்தத்தில் பூசாரி எழுந்துவிட்டார். அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கோவிலுக்குள் நுழைய யத்தனித்த சமயத்தில், பூசாரி, ''திருடன்'', ''திருடன்'' என்று சொல்லிக் கொண்டே ஓடிவந்தார். பூசாரியின் சத்தத்தைக் கேட்டு நிறைய பேர் ஓடி வந்தனர். சுகியா கொஞ்சமும் அஞ்சவில்லை. மிகவும் அமைதியாக அவர்களைப் பார்த்து, ''இங்கே திருடன் யாரும் இல்லை. தாகூர்ஜியைப் பூசிப்பதற்காக நான் இங்கே வந்திருக்கேன்'' என்றாள்.

பூசாரி, ''என்ன தப்பு செய்ய இருந்தாய்?'' என்று கூறிக்கொண்டே அவள் தலைமுடியைப் பிய்த்து இழுத்துக் கொண்டே வெளியே வந்தார். ''இந்தத் தீண்டத்தகாத சக்கிலியப் பெண், தாகூர்ஜியைத் தீட்டாக்கிவிட்டாளே'' என்று கத்தினார்.

பூசாரியின் வார்த்தைகள் அநேகமாக அங்கே நின்றிருந்த அனைவரையுமே சுகியா மீது ஆத்திரம் கொள்ள வைத்தது. கல் கடவுளுக்கு அவள் செய்த அவமதிப்புக்குப் பழி தீர்க்கும் வகையில் அனைவரும் அவள் மீது ஆக்ரோஷமாகப் பாய்ந்தனர். திடீரென்று ஒரு சிலர் அவளைக் கீழே தள்ளினர். குழந்தை அவள் கையிலிருந்து கீழே விழுந்தது. குழந்தையை எடுக்க அவள் குனிந்தாள். ஆனால் அதற்குள் அதன் உயிர் பிரிந்து விட்டது.

''ஐயோ, என் குழந்தையைக் கொன்னுட்டாங்களே,'' சுகியா பெரும் வலியுடன் ஓவென்று கதறினாள். கூட்டத்திலிருந்த அனைவரும் ஒரு கணம் அமைதியாகிவிட்டனர்.

அவள் கூட்டத்தினரைப் பார்த்து, ''இப்போது ஏன் வாயை மூடிக்கிட்டிருக்கீங்க. குழந்தை செத்துப்போச்சு. என்னையும் கொன்னுடுங்க. அப்போதான் உங்க தாகூர்ஜி சமாதானமாவார். நீங்களும் பாதுகாப்பா இருக்கலாம்.''

யாரும் அசையவில்லை. அங்கே மயான அமைதி நிலவியது. சுகியா இறந்த குழந்தையை மீண்டும் பார்த்தாள். அனைவரின் நெஞ்சையும் பிழியக்கூடிய அளவிற்குக் கதறிக்கொண்டே கீழே அவளும் சாய்ந்து மூர்ச்சையாகிப் போனாள். பின்னர் அவள் எழுந்திரிக்கவே இல்லை.

தன் குழந்தையின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த ஒரு தாயின் க்தை இவ்வாறு முடிவுற்றுவிட்டது.

No comments: