September 11, 2007

மாநகர பேருந்து மாசற்ற பேருந்தா?

சென்னை மாநகர பேருந்து ‘மாசற்ற பேருந்து’ என்ற முழக்கத்தோடு வலம் வருகிறது. உண்மையில் ‘மாசற்ற’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது என்பது ‘சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு’ தான் வெளிச்சம்.

இன்று (செப்டம்பர் 11, 2007) 18A பிராட்வே - தாம்பரம், அடுக்கு மாடி பேருந்தில் நிகழ்ந்த சம்பவத்தை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும். காலை 11.05 க்கு பிராட்வேயில் இருந்து மேற்குறிப்பிட்ட பேருந்தில் ஏறினேன். அது அடுக்குமாடி பேருந்தாக இருந்ததால், மேலே சென்று பயணிப்பதில் ஒரு சுகம்தான். மேலே சென்று முன்னிருக்கையில் அமர்ந்தவுடன் கீழே இருபுறமும் ‘சென்னை மாநகரத்தில் அகற்றப்படாத குப்பைகள்’ போல் குவிந்து கிடந்தது.

என்னுடன் பேருந்தில் ஏறிய சகபயணிக்கு இதைப் பார்த்தவுடன் கடும் கோபமாகி விட்டார். அவர் என்னிடம், ‘என்னங்க இது அநியாயமாக இருக்கிறது’ மாசற்ற பேருந்துன்னு சொல்றாங்க இப்படியிருக்கே! என்று வருத்தப்பட்டதோடு நிற்காமல், நடத்துனரிடம் (கண்டக்டர்) சென்று என்னங்க இப்படி ஒரே குப்பையா இருக்கே என்று அவரிடம் கேட்க, அவரோ, பரிதாபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, இன்றைக்கு கிளீன் பன்னாமல் விட்டுட்டு இருப்பாங்கன்னு ஒரு சமாதானம் சொன்னார்.

அந்த உயரமான, வாட்ட சாட்டமான, தாடி வைத்த பயணி மீண்டும் என்னிடம் வந்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தார். நானும், ஆமாங்க இவங்களுக்கு ஒரு சமூக பொறுப்பே இருப்பதில்லை. மக்களைப் பற்றி எந்த கவலையும் இருப்பதில்லை என்று கூறி அவரோடு இணைந்து கொண்டேன். அந்த சக பயணி தன்னுடைய செல்போனை எடுத்து நேராக மாநகர போக்குவரத்து கண்ட்ரோல் ரூமூக்கு போன் செய்து, (வழித்தட எண் 18A, TAD 401, TN-01-N-3134) வண்டி எண் உட்பட அனைத்தையும் சொல்லி வண்டியில் மேல் மாடியில் ஒரே குப்பையாக இருக்கிறது. நானும் இதை ஒருவாரமாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன், இப்படி இருந்தால் நாங்கள் எப்படி பயணம் செய்வது, நீங்கள் வேண்டும் என்றால் சைதாப்பேட்டையில் - விஜிலன்சை அனுப்பி செக்-அப் செய்யுங்கள் என்று கூறினார்.

அதே சமயம் கண்டக்டரையும் மாட்டி விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் அவருக்குள் இருந்தது. ஐயா கண்டக்டர் சார் உங்களுக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லையே! என்று அவரிடமும் கேட்டுக் கொண்டார். மீண்டும் என்னோடு பேச்சுக் கொடுத்தார். இங்க மட்டும் இல்லைங்க, கீழேயேயும் அப்படித்தான் இருக்குது. வண்டிய எடுக்கும் போதே இதெல்லாம் பார்க்க மாட்டாங்களா? என்று அவரது நியாயமான கோபத்தையும், கேள்வியையும் எழுப்பினார் அந்த பயணி. நானும் படிக்க வேண்டிய புத்தகத்தை மூடி வைத்து விட்டு, அவரது நியாயத்திற்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன்.

அந்த பயணி நீங்கள் எங்கே இறங்க வேண்டும் என்று என்னை கேட்டார். நான் எ°.ஐ.இ.டி. என்று கூற, அவரும் அங்கேதான் இறங்க வேண்டும் என்று கூறினார். சம்பந்தப்பட்ட பேருந்து நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கிக் கொண்டோம்! நாளைக்கு நான் இதே பேருந்தில்தான் வருவேன் பார்ப்போம் எப்படி இருக்குது என்று கூறிக் கொண்டே அவர் இறங்கியதோடு, “இது என்னங்க பேசஜ்சர்களை ஏற்றும் வண்டியா? அல்லது குப்பை அள்ளும் வண்டியா?” என அவர் வினவியது மிகப் பொருத்தமாக இருந்தது.

உண்மையில் சம்பந்தப்பட்ட பேருந்தில் கீழ்ப்புறத்திலும் குப்பைகள் மண்டிக் கிடந்ததோடு, நாறிக் கொண்டும் இருந்தது. கொசுக்கள் மற்றும் நோய் பரப்பும் கிருமிகளுக்கு அந்த பேருந்து பயணம் ஒரு சுகமாகவே இருக்கும்! இது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் விழிக்குமா? அல்லது தன்னுடைய ‘மாநகர பேருந்து மாசற்ற பேருந்து’ என்ற வாசகத்தையாவது மாற்றிக் கொள்ளுமா?

சென்னை மாநகர பேருந்துகளில் திருவள்ளுவரின் திறக்குறளை சிறிய எழுத்தில் போட்டு விட்டு, ஐயன் வள்ளுவரின் (அதாங்க முதல்வர் கலைஞரின்) குறளை பெரிய படமாக போடுவதில் காட்டும் அக்கறையை குப்பையை அகற்றுவதிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்!

பேருந்தை சுற்றிலும், ஷாம்பு கம்பெனிக்கும், சோப்பு கம்பெனிக்கும் டிஜிட்டல் விளம்பரம் கொடுத்து பேருந்தையே மொத்த விளம்பரத்திற்கு குத்தகை கொடுத்து அதன் அழகை கூட்டிக் கொள்ளும் பேருந்திற்குள் நாறிக் கொண்டிருப்பது மட்டும் ஏனோ தெரியவில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு! ஷாம்பு வாசனை அதை மறைத்து விடும் என்ற நம்பிக்கையோ!
மறுபுறத்தில் கலர் கலராய் சொகுசு பேருந்து என்ற பெயரில் கட்டணத்தை உயர்த்தி பகல் கொள்ளையடித்து வரும் தமிழக அரசும் - மாநகர பேருந்தும் தங்களது சேவை குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்டாதது அவர்களது பொறுப்பற்றத் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.


சமூக பொறுப்புணர்வோடு தன் உணர்வை வெளிப்படுத்திய அந்த சக பயணிக்கு ஜே!

2 comments:

வவ்வால் said...

நீங்க மின்சார தொடர் வண்டியில் பயணம் செய்தது இல்லையா அதிலும் இப்படித்தான் ஒரே குப்பையாக இருக்கும் , ஆனால் மாதம் ஒரு முறை சுத்தம் செய்வார்கள் போல, சில சமயம் குப்பைகள் எல்லாம் காணாமல் போய் இருக்கும்!

இரவில் பேருந்து பணிமனையில் நிற்கும் போது சுத்தம் செய்யலாமே!சுத்தம் செய்யும் பணியாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் போதுமான எண்ணிக்கையில் இல்லை என நினைக்கிறேன்.

மாசு என்பது குப்பையோடு நிறுத்திவிட்டீர்கள் பெரும்பாலான பேருந்துகள் கொசு மருந்து வண்டி போல புகைக்கக்கிகொண்டு போவதை என்ன செய்வது!

சந்திப்பு said...

மின்சார வண்டி கதை பெருங்கதை! பல நேரங்களில் வயிற்றுக்காக ஊனமுற்ற பிச்சைக்கார சிறுவர்கள் ரயில் பெட்டியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்துவிட்டு பிச்சை கேட்பார்கள். அவர்களது சேவைக்காகவே மக்களும் ஏதோ அவர்களால் முடிந்ததை தானம் செய்வார்கள். இந்த காட்சி இன்னம் கூட என் நெஞ்சை விட்டு அகலவில்லை. இதை எழுதம் போது அதுவும் ஓடிக் கொண்டேதான் இருந்தது.

பேருந்து விசயத்தில் குப்பையோடு நின்று விட்டது ஒரு குறைதான் இருந்தாலும் ஒரு விசயத்தை போக்கஸ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தாலே அவ்வாறு எழுதினேன். நடைமுறையில் பஸ்சுக்குள் குடை பிடித்த அனுபவம் எல்லாம் உண்டு. அதை விட சீட்டுக்களின் நிலைமை பரிதாபகரமாக இருக்கும். இப்படி பல விசயங்கள் உண்டு. நன்றி வவ்வால். இவர்களை திருத்த வேண்டும் என்றால் முதலில் சமூக பொறுப்பளு்ள ஆட்சியாளர்கள் வரவேண்டும். இதுபோன்ற ஊழியர்களுக்கும் சமூக பொறுப்பை உணர்த்த வேண்டும். மக்களுக்கம் அரசியல் - சமூக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இவை மூன்றும் ஒருங்கிணைந்தால்தான் இவைகள் உருப்படும்.