April 30, 2007

மே தின வாழ்த்துக்கள்!


உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளர்களுக்கும், தமிழ் வலைப் பதிவர்களுக்கும் சந்திப்பின் நெஞ்சார்ந்த மே தின வாழ்த்துக்கள்!
‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற முழக்கத்தை காரல் மார்க்சும் - ஏங்கல்சும் கம்யூனி°ட் கட்சி அறிக்கையில் முன்வைத்து, உலகத் தொழிலாளர்கள் தங்களுக்கான சுரண்டலற்ற ஒரு சோசலிச அரசை அமைத்துக் கொள்வதற்கு வழிகாட்டினர்.
18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஏற்பட்ட முதலாளித்துவ எழுச்சியும், அதன் பகாசூர சுரண்டலும் உலகத் தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை உழைப்பை சுரண்டி கொழுத்தது.
இதற்கு எதிராக உலகம் முழுவதும் 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு என்ற முழக்கம் எதிரொலிக்கத் துவங்கியது அன்றைய தினம். அதன் அடிச்சுவட்டில் அமெரிக்காவில் 1886 இல் பிரம்மாண்டமான தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றது. குறிப்பாக சிக்காகோவில் நடைபெற்ற பெரும் எழுச்சியும், அதனை எப்படியாவது தங்களது கொடுங்கரங்களால் ஒடுக்க வேண்டும் என்ற மிருக வேட்கைக் கொண்ட ஆளும் வர்க்க போலீசு எழுச்சி மிக்க ஊர்வலத்தில் வெடி குண்டுகளை வீசியதோடு, தொழிலாளர்கள் மீது மிருகத்தனமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாயினர். ஆளும் வர்க்கம் இந்தப் போராட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அப்பட்டமாக மறைத்து விட்டதோடு, தொழிலாளர் தலைவர்களையும் தூக்குமேடைக்கு அனுப்பியது ஆளும் வர்க்க நீதிமன்றம். அன்றைய தினம் தொழிலாளர்களின் உதிரத்தால் சிக்காகோ நகரமே செந்நிறமாகி விட்டது. இது சிக்காககோவோடு மட்டும் நின்று விடாமல், அமெரிக்கா முழுவதுமே பல லட்சக்கணக்கமான தொழிலாளர்கள் மேலும் வீரத்தோடு அடக்குமுறைக்கு எதிராகவும் 8 மணி நேர வேலை கோரிக்கை வெற்றியடை வேண்டும் என்ற நோக்கத்தோடு வீறு கெண்டு எழுந்தனர். இறுதியில் வெற்றியும் அடைந்தனர்.
உலகமய சூழலில் தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி பெற்றெடுத்த 8 மணி நேர வேலை என்பது இன்றைக்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையிலும், கால்சென்டர்களிலும், அவுட்சோர்சிங் துறை பணிகளிலும், இன்ஜினியரிங், கட்டிட தொழில் என அனைத்துத் தொழில்களிலும் 12 மணி நேர வேலை என்ற நிலைக்கு தள்ளியுள்ளது உலகமயமாக்கல். இதற்கு எதிராக மீண்டும் உலகத் தொழிலாளர்கள் அணித் திரளவேண்டும். குறிப்பாக நன்கு படித்த, ஒழுங்கமைக்கப்பட்ட வலைப்பின்னலோடு செயலாற்றக்கூடிய ஐ.டி. தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை என்ற நிலையை உறுதியாக பற்றிக் கொள்வதன் மூலம் மீண்டும் ஒரு எழுச்சியை புதிய வரலாற்றை, அதுவும் முதலாளித்துவத்தின் இறுதி அத்தியாயம் நடைபெறும் சூழலில் உருவாக்கிட உறுதியேற்க வேண்டும்.

வாழ்க! மே தினம்!! கருத்தாலும் - கரத்தாலும் உழைக்கும் அனைவருக்கும் மே தின புரட்சி வாழ்த்துக்கள்!

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

மே தின வாழ்த்துகள்!
உழைக்கும் வர்க்கம் ஒன்று சேரட்டும்!
உலகில் சமத்துவம் உருவாகட்டும்!

Unknown said...

மே தின வாழ்த்துக்கள் சந்திப்பு.

உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட இந்த நாள் உதவட்டும்.