July 20, 2006

நக்சலிசம் வர்க்கப் போராட்டமா? பயங்கரவாதமா?

கடந்த ஒரு வார காலமாக நாடு முழுவதும் உள்ள பத்திரிகை மற்றும் மீடியாக்களில் இரண்டு செய்திகள் முதலிடத்தை பிடித்துள்ளது. 1. மும்பை பயங்கரவாதிகளின் தொடர் குண்டு வெடிப்பு, 2. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கி சூடு.

இந்த இரண்டு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்கள் சாதாரண அப்பாவி மக்கள். மும்பை குண்டு வெடிப்புக்கு காரணம் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்றால், சத்தீஸ்கர் சம்பவத்திற்கு உள்நாட்டு நக்சலிசவாதிகள் காரணம்.

நக்சலிசம், தற்போது மாவோயிஸ்ட்டுகள் என்று அழைக்கப்படுகிறது. நக்சல் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமற்றும் 10க்கும் மேற்பட்ட குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பெரிய குழுவாக இருப்பது மாவோயிஸ்ட்டுகள். இவர்கள்தான் சத்தீஸ்கர் சம்பவத்திற்கு காரணமானவர்கள்.

நக்சலிசம் இந்திய மக்களை சுரண்டலில் இருந்து விடுவித்து, புதிய ஜனநாயக புரட்சியை நடத்தப்போவதாக கூறிக்கொள்கிறது. இதற்காக கிராமப்புறங்களை மையமாக வைத்து ஆயுதப்போராட்டங்கள் மூலம் புரட்சிகர விடுதலை மையங்களை உருவாக்குவது என்பது அவர்களது திட்டம். இது 1969இல் இருந்து நடைபெற்று வருகிறது. தற்போது நக்சலிசவாதிகள் இந்தியாவில் வடமாநிலங்களிலும், தென் மாநிலத்தில் ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ளனர். தங்களது செயல்பாட்டை நேபாளம் வரை நீட்டி செயல்பட்டு வருகின்றனர்.

ஆயுதபாணியாக நக்சலிசவாதிகளிடம் நவீன ஆயுதங்களை செயல்படுத்தும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அதனை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுடன் கூட தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் தங்களது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு யாரையும் பயன்படுத்திக் கொள்வது அவர்களது நோக்கமாகத் தெரிகிறது.

இந்தியாவில் புதிய ஜனநாயகம், சோசலிசத்தை கொண்டு வருவோம் என்று கூறிக்கொண்டிருக்கிற நக்சலிசவாதிகள் இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகள் (அவர்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை) நிலப்பிரபுக்கள் ஆகியோருக்கு எதிரான போராட்டத்தை நடத்துவதாக கூறிக் கொண்டு, நடைமுறையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டிய சரியான தருணம் இது. கடந்த 35 ஆண்டு காலமாக அவர்கள் சாதித்தது என்ன? இந்தியாவில் உள்ள உழைப்பாளி மக்கள் இன்றைக்கும் யாருக்கு பின்னால் அணிதிரண்டு வருகிறார்கள். அதேபோல் மதச்சார்பற்ற இந்தியாவில் சங்பரிவார மற்றும் இதர மத அடிப்படைவாதிகள் மதக்கலரத்தை தூண்டுவதும், மக்களை ஜனநாயக ரீதியாக - வெளிப்படையாக படுகொலை செய்வதற்கு எதிராக நக்சலிசவாதிகளின் போராட்டம் ஏதாவது நடைபெறுவதுண்டா? அவர்களுக்கும் வெகுஜனங்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

அதேபோல் வர்க்கப்போராட்டம் என்ற பெயரில் எந்த உழைப்பாளி வர்க்கத்தை திரட்ட வேண்டுமோ, அடிப்படையில் அவர்களைத் திரட்டாமல் அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்தான் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சத்தீ°கரில் பழங்குடியின மக்களையும், அவர்களது உடைமைகளையும், உரிமைகளையும் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினை ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அவர்கள் திரட்டினால், அதே பழங்குடி மக்களை ஆளும் வர்க்கம் நக்சலிசவாதிகளுக்கு எதிராக திரட்டுகிறது. சல்வா ஜூடு இது முழுக்க, முழுக்க நக்சலிசவாதிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு படையே! இந்த படையில் இருப்பவர்கள் யார்? இவர்கள் உழைப்பாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினர் இல்லையா? நக்சலிசவாதிகளின் தவறான நடைமுறை தந்திரத்தால், சத்தீஸ்கரில் உள்ள அனைத்து தரப்பு மக்கைளயும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக களம் இறக்குவதற்கு மாறாக, பழங்குடி மக்களுக்கு உள்ளேயே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களது வர்க்கப் போராட்டத்திற்கு அவர்களே முட்டுக்கட்டை போடும் நிலைதான் சத்தீ°கரில் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னால் மேத்தா பட்கர் அவர்கள் சர்தார் சரோவர் அணைக்கட்டுத் திட்டத்தால் பழங்குடி மக்கள் எவ்வாறு அவர்களது வாழ்விடத்தை விட்டு அகற்றப்படுகிறார்கள் என்பதை விளக்கி, அதற்கு எதிராக இயக்கம் கண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டார். இவரது போராட்டம் இந்தியா முழுவதும் உள்ள உழைப்பாளி மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் பல லட்சக்கணக்கான மக்கள் இதன் முடிவு என்னவாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். இதுவொரு வெகுஜன அரசியல் போராட்டமாக வடிவெடுத்தது. ஆனால் நக்சலிசவாதிகள் சல்வா ஜூடு இயக்கத்திற்கு எதிராக ஆயுதம்தாங்கி போராடுகிறோம் என்ற பெயரால் 31 அப்பாவி மக்களை கொலை செய்தது பயங்கரவாதமில்லையா? இதுதான் வர்க்கப்போராட்டமா? பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமற்று இருந்த இடத்தையும் விட்டு தலைமறைவாகியுள்ளார்களே இது என்ன வெகுஜன போராட்டமா? இதைத்தான் மார்க்சிசம் போதிக்கிறதா? யாரிடம் இருந்து கற்றார்கள் இந்த நடைமுறையை, மாவோ இப்படித்தான் செயல்படச் சொல்லியிருக்கிறாரா?

இந்த இடத்தில் இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். கேரளாவில் சி.கே. ஜானுவின் போராட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், கேரளாவில் உள்ள பழங்குடி மக்களின் நிலவுரிமையை பாதுகாக்க விரிந்த - வெகுஜன போராட்டத்தை நடத்தவில்லையா? இவர் நடத்திய போராட்டத்தின் மூலமாக குறைந்தபட்ச வாழ்விடங்களையாவது அந்த பழங்குடி மக்களால் மீட்கப்பட்டுள்ளதே? நக்சலிவாதிகள் கிராமங்களிலும், மலைகளிலும் உள்ள கிராமங்களில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்ற பெயரில் ஒரு சர்வாதிரத்தையல்லவா நடத்தி வருகிறார்கள்? இவர்களுக்கு எதிராக யாராவது குரல் கொடுத்தல் அவர்களை வர்க்க எதிரிகளாக பார்த்து கொலை செய்யும் போக்குத்தானே நடைபெற்று வருகிறது.

புரட்சி என்பது மக்களின் திருவிழா என்று கூறுவார்கள். இந்தியா முழுவதும் உள்ள உழைப்பாளி மக்கள் புரட்சியை தங்கள் சொந்த குழந்தையை பெற்றெடுப்பதுபோல் பெற்றெடுப்பார்கள். அந்த நேரத்தில் ஆளும் வர்க்கம் என்ன நடைமுறையை கையாள்கிறதோ, அதையே உழைக்கும் வர்க்கம் கையாளும். ஆயுதம் எடுத்தால், அதற்கெதிராக ஆயுதம் எடுப்பார்கள். ஆனால் தற்போது நக்சலிச வாதிகள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் இறுதியாக செய்ய வேண்டியதை தாங்கள் செய்வதாக கூறிக் கொண்டு உழைக்கும் மக்கள் தத்துவத்திற்கு குழிதோண்டி வருகின்றனர்.

இறுதியாக அரசியல் ரீதியாக இன்றைக்கு இந்தியாவில் உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் கொள்கையால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைப்பாளி மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் வெகுஜன போராட்டங்களில் நக்சலிவாதிகளின் பங்களிப்பு என்ன? மொத்தத்தில் வர்க்கப்போராட்டம் என்ற பெயரில் பெரும்பாலான உழைப்பாளி மக்களிடம் இருந்து பிரிந்து, தனிமைப்பட்டு, குறுங்குழுவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர் நக்சலிவாதிகள். இதன் மூலம் இவர்கள் சாதிப்பது இடதுசாரி சிந்தனைக்கு எதிரான கருத்தாக்கத்தை உருவாக்குவதுதான். மேலும் புரட்சி என்ற பெயரால் தலித் மற்றும் பழங்குடி மக்களையும், இதர பகுதி உழைப்பாளி மக்களையும் வேட்டையாடும் செயலில்தான் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது செயல் எந்தவிதத்திலும் பயங்கரவாதிகளிடம் இருந்து வேறுபட்டு நிற்கவில்லை. எனவே தங்களது நடைமுறை கொள்கையில் உள்ள கோளாறை சரி செய்யாமல், ஒரு பரந்துபட்ட வெகுஜன இயக்கத்தை கட்டுவதற்கு ஜனநாயக பூர்வமாக முன்வராமல் ஆயுதப்போராட்டம் என மாவோயிஸ்ட்டுகள் பேசிக் கொண்டிருந்தால் சல்வா ஜூடு போன்ற இயக்கங்களையும் அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும்.

8 comments:

தமிழரங்கம் said...

ஒரு நதியின் கண்ணீர்
நர்மதைச் சமவெளியைப் பாதுகாக்க பழங்குடியின மக்கள் நடத்திவரும் போராட்டம், சட்டபூர்வ – அமைதிவழிப் போராட்டங்களின் சாத்தியப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி விட்டது.
மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களின் வழியே ஓடும் நர்மதை மற்றும் அதன் கிளை ஆறுகளில் 30 பெரிய, 135 நடுத்தர மற்றும் 3000 சிறு அணைக்கட்டுகள் கட்டி, ம.பி., குஜராத், மகாராஷ்டிரா, இராசஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குப் பாசன குடிநீர் வசதிகள் உருவாக்கித் தரும் திட்டம் 1980களில் தீட்டப்பட்டது. இத்திட்டத்தில் சர்தார் சரோவர் மற்றும் நர்மதா சாகர் என்ற இரு அணைகள்தான் முக்கியமானவை.

குஜராத்தில் சர்தார் சரோவர் அணையைக் கட்டுவதற்காக மட்டும் இதுவரை ஏறத்தாழ 181 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அக்கிராமங்கள் அனைத்தும் அந்த அணையில் தேக்கப்படும் நீரில் மூழ்கிவிட்டன. இந்த அணை தற்பொழுதுள்ள 110 மீட்டர் உயரத்தில் இருந்து 121.92 மீட்டர் உயரத்திற்கு எழுந்து நிற்கும்பொழுது, மேலும் 117 கிராமங்கள் நீரில் மூழ்கிவி டும் என்றும்; ஏறத்தாழ 35,000க்கும் அதிகமான குடும்பங்கள் அக்கிராமங்களில் இருந்து அப்புறப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

சர்தார் சரோவர் அணையால் தங்களின் கிராமங்களை, நிலங்களை இழந்துவிட்ட நர்மதை சமவெளியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், தங்க ளின் மறுவாழ்க்கைக்காக நர்மதை பாதுகாப்பு இயக்கம் எனும் அமைப்பின் கீழ் அணி திரண்டு, கடந்த இருபது ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

இந்த அணை 90 மீட்டர் உயரத்தை அடைந்த பொழுது, இனியும் அணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது எனக் கோரி நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் 1995ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விசாரணை என்ற போர்வையில் வழக்கை ஐந்து ஆண்டுகள் இழுத்தடித்த உச்சநீதி மன்றம், 2000ஆம் ஆண்டில் அணையின் உயரத்தை அதிகரிக்க அனுமதி வழங்கித் தீர்ப்பளித்தது.

இப்பிரச்சினை தொடர்பாக 2002ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் வழங்கிய மற்றொரு தீர்ப்பில், ""அணையின் உயரத்தை ஐந்து ஐந்து மீட்டராக உயர்த்தலாம்; அணையின் உயரத்தை அதிகரிப்பதற்கு முன், அதிகரிக்கப்படப் போகும் உயரத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மறுவாழ்வு அளித்திருக்க வேண்டியது கட்டாயமாகும்'' எனக் குறிப்பிட்டது.

மேலும் இத்தீர்ப்பின்படி, அணையின் உயரத்தை அதிகரிப்பது மறுவாழ்வு அளிப்பது ஆகியவற்றில் ஏதாவது பிரச்சினை உருவாகி, அப்பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் போகும் இக்கட்டான, இழுபறி நிலை உருவாகுமானால், அதில் தலையிட்டுத் தீர்க்கும் முழு அதிகாரமும் இந்தியப் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

குஜராத் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அணையின் உயரத்தை 90 மீட்டரில் இருந்து 110 மீட்டராகக் கிடுகிடுவென உயர்த்தி விட்டது. ஆனால், அணை உயர்த்தப்பட்டதால் வாழ்விழந்த பழங்குடி இன மக்களோ, எவ்வித மறுவாழ்வு உதவியும் கிடைக்காமல் நடுத்தெருவில் நிற்கின்றனர். நர்மதை பாதுகாப்பு இயக்கம், இப்பழங்குடி மக்களின் அவலத்தை பலமுறை மைய அரசிடம் முறையிட்டும் கூட, அவையனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது.

இந்த நிலையில், நர்மதை கட்டுப்பாடு ஆணையம் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் அணையின் 110 மீட்டர் உயரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மறுவாழ்வும், நிவாரணமும் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறிவிட்டு, அணையின் உயரத்தை 121 மீட்டர் அளவிற்கு உயர்த்திக் கொள்ள குஜராத் அரசிற்கு அனுமதி அளித்தது. இந்தத் திமிர் பிடித்த ஆணையை எதிர்த்து, நர்மதை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மேதா பட்கரும், அவ்வியக்கத்தைச் சேர்ந்த இரு பழங்குடியினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை மார்ச் இறுதியில் தில்லியில் தொடங்கினர்.

பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதைவிட, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடும் முயற்சியில் படுதீவிரமாக இறங்கியது மன்மோகன் சிங் அரசு. மேதா பட்கர், தங்களின் கோரிக்கை நிறைவேறாமல் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கவே, ஏப்ரல் 5 அன்று நள்ளிரவில் 1,000க்கும் அதிகமான போலீசாரை ஏவி, அவரைக் குண்டுகட்டாகத் தூக்கி வந்து, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் ""சிறை'' வைத்தது. மேதா பட்கர் மீது தற்கொலை முயற்சி வழக்கு போடப்பட்டதோடு, நர்மதை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் மீது ஆறு பிரிவுகளில் கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன.

மைய அரசின் இந்த மிரட்டலுக்குப் பணியாமல், மேதா பட்கர் மருத்துவமனையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். நர்மதை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட பல்வேறு அறிவுஜீவிகள், ஜனநாயக இயக்கங்களின் ஆதரவோடு நர்மதை கட்டுப்பாடு ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, ""தர்ணா'' போராட்டத்தை நடத்தி வந்தனர்.

மன்மோகன் சிங் அரசு தனது ""மனித முகமூடி''யைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைபுதீன் சாஸ் தலைமையில் ஒரு அமைச்சர் குழுவை, மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தது. ம.பி. மாநிலத்தில் ஆறு இடங்களை மட்டும் பார்வையிட்ட இக்குழு, அந்த இடங்களில் மறுவாழ்வுப் பணிகள் மயிரளவிற்குக் கூட நடக்கவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில், நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் கோரியபடி நர்மதை கட்டுப்பாடு ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்வதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்க முடியும். ஆனால், இராசஸ்தான், குஜராத், ம.பி. மாநில பா.ஜ.க. முதல்வர்கள், அணையின் உயரத்தை அதிகரிக்கும் கட்டுமானப் பணிகளை நிறுத்த மறுத்துவிட்டனர். இந்தச் சிக்கலை தீர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கோ, பிரச்சினையை மீண்டும் உச்சநீதி மன்ற விசாரணைக்குத் தள்ளி விட்டுவிட்டுத் தப்பித்துக் கொண்டார்.

உச்சநீதி மன்றமோ, தான் அளித்த தீர்ப்புக்குத் தானே நியாயமாக நடந்து கொள்ள மறுத்துவிட்டது. ஒருபுறம், பிரச்சினையை மீண்டும் மன்மோகன் சிங்கிடம் தள்ளிவிட்டு, தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தது. இன்னொருபுறமோ, அணையின் கட்டுமானப் பணிகளை நிறுத்த மறுத்துவிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகளைக் கொடுத்துவிட வேண்டும் என அறிவுரை வழங்கியது.

ஏழை மக்களைப் பந்தாடும் ஆளும் கும்பலின் இந்த விளையாட்டால் ஏமாற்றமடைந்த நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் 21 நாட்கள் கழித்துத் தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். தங்களின் போராட்டத்தால், தங்களின் பிரச்சினையை இந்தியா முழுவதும் தெரிவித்து விட்டோம் என்ற திருப்தியைத் தவிர, வேறு எதனையும் பெற முடியாமல் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

முமுமு

இந்தப் போராட்டத்தை குஜராத் மக்களுக்கு எதிரானதாகச் சித்தரித்திருந்தார் மோடி. ஆனால், உண்மையென்ன? சர்தார் சரோவர் அணையில் தற்பொழுது தேக்கப்படும் தண்ணீரின் ஒரு பகுதியை எடுத்து, 3178 கிராமங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப் போவதாகப் பீற்றிக் கொண்டு, அதற்கு குஜராத் மாநில பா.ஜ.க. அரசு 464.77 கோடி ரூபாய் செலவழித்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பாதியளவு கிராமங்களுக்குக் கூட இன்னும் குடிநீர் கிடைக்கவில்லை. அப்படியென்றால், அந்தத் தண்ணீரெல்லாம் எங்கே மாயமாய் போகிறது?

ஒருபுறம் குடிநீர் வழங்குவதை மட்டுமின்றி, ஆறுகளையே தனியார்மயப்படுத்தும் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்திக் கொண்டு, இன்னொருபுறம் சர்தார் சரோவர் அணையை மக்களின் குடிநீர் தேவைக்காகக் கட்டுகிறோம் என்பது நம்பக்கூடியதாக உள்ளதா?

நாடெங்குமே விவசாயம் நசிவடைந்து, விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் பொழுது, சர்தார் சரோவர் அணையால், எந்த விவசாயி பலன் அடையப் போகிறார்? ஏழை விவசாயியா? இல்லை, விவசாயத்தில் புகுந்துள்ள நவீன பணக்கார விவசாயிகளும், தரகு முதலாளித்துவ நிறுவனங்களுமா?

முமுமு

இந்தப் போராட்டம், மக்களின் பெயரால் போடப்படும் வளர்ச்சித் திட்டங்களின் பின் மறைந்துள்ள கோர முகத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. மக்கள், தங்கள் உரிமைகளுக்காகச் சட்டபூர்வமான, அமைதியான வழிகளில்கூட இனி போராட முடியுமா? அதை ஆளுங்கும்பல் சகித்துக் கொள்ளுமா? என்ற கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

காந்திய வழியில் உண்ணாவிரதம் இருந்த மேதா பட்கரை திகார் சிறையில் அடைத்தால் தனது ஜனநாயக விரோதத் தன்மை அம்பலமாகி விடும் என்பதால்தான், அவரை மருத்துவமனையில் ""சிறை'' வைத்தது, மைய அரசு. அருந்ததி ராய் போன்ற பிரபலமான புள்ளிகளைத் தவிர, தனது இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்களைச் சந்திப்பதற்குக் கூட மேதா பட்கர் அனுமதிக்கப்படவில்லை. மேதா பட்கரோடு கைது செய்யப்பட்ட 300 பேர் அவரைப் போல ""மருத்துவமனைக்கு'' அழைத்துச் செல்லப்படவில்லை.

இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுதே, குஜராத் முதல்வர் மோடி, ""சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை'' எனத் திமிரோடு சொன்னார்.

இது பா.ஜ.க.வின் பாசிச முகம் மட்டுமல்ல; காங்கிரசு அரசின் "மனித முகமும்' இதுதான். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ""பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கக் கூடிய அளவிற்கு அரசிடம் சக்தி இல்லை'' என்றார். இப்படிப்பட்ட பாசிசப் பேர்வழிகளிடம் மறுவாழ்வு கொடுங்கள் என எத்தனை முறை கெஞ்ச முடியும்?

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக மேதாபட்கர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிராக மோடியின் 51 மணி நேர உண்ணாவிரத எதிர்போ ராட்ட வக்கிரக் கூத்தைக் கண்டிக்க முன்வராத உச்சநீதி மன்றம், நர்மதை இயக்கத்தினரின் சட்டபூர்வ போராட்டத்தை ""ஆத்திரமூட்டக் கூடிய நடவடிக்கை'' என்றது. இது போன்ற போராட்டங்கள் ""நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக முடியும்'' எனப் பீதியூட்டியது.

""மக்கள் கூடும் இடங்களில் பொதுக் கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்தக் கூடாது; முக்கிய சாலைகளின் வழியே ஊர்வலம் போகக் கூடாது; அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபடக் கூடாது. ""பந்த்'' போன்ற போராட்டங்கள் சட்டவிரோதமானவை'' என ஏற்கெனவே பல சட்டபூர்வ ஜனநாயக உரிமைகளை நீதிமன்றங்கள் தட்டிப் பறித்ததை நினைத்துப் பார்த்தால், உச்சநீதி மன்றத்தின் பீதியூட்டல் நமக்கு வியப்பைத் தராது.

தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நாடு மறுகாலனியாக்கப்படுவதற்கு ஏற்றவிதத்தில் சட்டபூர்வ உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்ட பின், ""சட்ட விரோதமான'' வழிகளில் போராடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது?

பணி பாதுகாப்புக்காகப் போராடிய ஹோண்டா தொழிலாளர்கள், அரியானா போலீசாரால் இரத்தம் சொட்ட சொட்ட அடிக்கப்பட்டனர்.

போஸ்கோ என்ற பன்னாட்டு நிறுவனத்திற்காக தங்களின் நிலங்களை இழக்க முடியாது எனப் போராடிய ஒரிசாவின் பழங்குடி இன மக்கள் ஒரிசா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மக்களின் போராட்டங்களை எதிர்க்கும் எதிரிகள் ஆயுதபாணியாக நிற்கும் பொழுது, மக்களும் தங்களின் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்தித் தானே தீரவேண்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்பது வெற்று பழமொழி அல்லவே!

மு சுடர்

சந்திப்பு said...

//மக்களின் போராட்டங்களை எதிர்க்கும் எதிரிகள் ஆயுதபாணியாக நிற்கும் பொழுது, மக்களும் தங்களின் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்தித் தானே தீரவேண்டும்.//


ஆளும் வர்க்கம் ஆயுதபாணியாக இருக்கும்பொழுது தாங்களும் தற்காப்புகாக ஆயுதம் ஏந்துவதில் என்ன தவறு என்று கேட்டிருக்கிறீர்கள். இங்கு பிரச்னையே மக்கள் ஆயுதம் ஏந்துவதில்லை. அதற்கு பதிலாக ஒரு குழுதான் ஆயுதம் ஏந்துகிறது. அதுதான் நக்சலிசம். இது தவறானது. சமீபத்தில் பிரான்சில் கொண்டுவந்த புதிய வேலைவாய்ப்பு சட்டத்திற்கு எதிராக பல லட்சக்கணக்கான மக்கள் ஜனநாயக ரீதியாக தொடர் போராட்டங்களை நடத்தியதன் மூலம் அந்த சட்டம் குப்பைக்கூடைக்கு சென்றது. அதுபோல் மக்களை ஜனநாயக ரீதியாக திரட்டி தீர்வுகாணுவதுதான் பொருத்தமானது. மாறாக ஆயுதபாணிகளாக்குவது இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்திடவும், ஜனநாயக போராட்டங்களுக்கு தடை ஏற்படுத்தும் செயலாகவும் முடியும்.

இரா.சுகுமாரன் said...

///தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நாடு மறுகாலனியாக்கப்படுவதற்கு ஏற்றவிதத்தில் சட்டபூர்வ உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்ட பின், ""சட்ட விரோதமான'' வழிகளில் போராடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது?

பணி பாதுகாப்புக்காகப் போராடிய ஹோண்டா தொழிலாளர்கள், அரியானா போலீசாரால் இரத்தம் சொட்ட சொட்ட அடிக்கப்பட்டனர்.

போஸ்கோ என்ற பன்னாட்டு நிறுவனத்திற்காக தங்களின் நிலங்களை இழக்க முடியாது எனப் போராடிய ஒரிசாவின் பழங்குடி இன மக்கள் ஒரிசா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.//

சுடர் அவர்களுக்கு,

அய்யா, நான் உங்களூக்கு ஆதரவு ஆனால், அப்பாவிகள் சாவதை ஏற்க முடியவில்லை.

அதிகார வர்க்கத்திற்கு எதிராக மட்டுமே இவர்களின் போராட்டம் இருக்க வேண்டும்.

சந்திப்பு said...

நன்றி சுகுமாறன். ஆளும் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான போராட்டங்கள் என்ற பெயரால் நடத்தப்படும் வன்முறைகளில் அதே சாதாரண மக்கள் பலியாவதால்தான் இதனை எதிர்த்திட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நக்சலிசவாதிகள் இந்திய நிலைமைகளை கணக்கில் கொள்ளாமல், சீன மற்றும் இதர நாடுகளில் நடத்தப்பட்டதுபோன்ற கொரில்லா தாக்குதல்களை மேற்கொள்வது பயணளிக்காது. மாறாக பெரும் பகுதி மக்களிடம் இருந்து தனிமைப்படுவதுதான் நடக்கும். நேபாளத்தில் கூட மாவோயி°ட்டுகள் தற்போது 7 கட்சி கூட்டணியுடன் இசைந்து போக ஒத்துக கொண்டுள்ளனர். மாறிவரும் நிலைமைக்கேற்ப வெகுஜன போராட்டங்களை அதிகப்படுத்துவதுதான் ஆளும் வர்க்கத்தை நிலைகுலையச் செய்யும். தங்கள் கருத்துக்கு நன்றிகள்..

அசுரன் said...

சல்வாஜூடம் போன்ற துரோக இயக்கங்களை சந்தித்து விடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் உள்ளிருந்து கழுத்தறுத்து அரசின் குரலாக ஒழிக்கும் தங்களைப் போன்றவர்களை என்ன செய்வது?


அதுவும் ஒரு இந்துத்துவவாதியிடம் சென்று அங்கீகாரம் கோரிய தங்களை போலி கம்யூனிஸ்டு என்று விமர்சனம் செய்வது எந்த வகையில் தவறு?


Maoist-னுடைய அரசியல் செயல்/போர் தந்திரம் சரியா, தவறா என்பது விவாதத்திற்க்கு உரியது. மாறாக கற்பிதமான அவதூறுகளைப் பரப்பி அரசியல் செய்தது CPM. அது CPMனுடைய தராதரம்.


Maoist பற்றி சொல்லுவத்ற்க்கு தங்கள் கட்சிக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா. Maoist னுடையது இடது சகாசவாதம் எனில் தங்களுடையது வல்து சந்தர்ப்பவாதம்.


மற்றபடி தங்களது பதிவிலேயே கிசு கிசு ரேஞ்சில் சில குற்றச்சாட்டுகள் வைத்துள்ளீர்கள். அதே போல் என்னால் ஆயிரம் உதாரணங்கள் தங்களது CPM மீது வைக்க முடியும். ஆனால் 'உலகின் மற்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்பு உள்ளது' என்ற வரிகளுக்கு நான ஆதாரம் கேட்டால் தங்களால் தரமுடியாது என்பதால்தான் கிசு கிசு பாணியில் அதை சொல்லியுள்ளீர்கள்.

************


உங்களது ஆதரவு பெற்ற சல்வஜூடம் இயக்கத்தைப் பற்றி நான் என்ன சொல்லுவது அந்த பகுதியின் போலி கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரே கூறிவிட்டார். ஒரு வேளை மாநிலத்துக்கு மாநிலம் மக்களை ஏமாற்ற கூட்டணி கட்டும், ஒரே விசயத்தை இரண்டு விதமாக விமர்சிக்கும் அணுகுமுறை இந்த விசயத்திலும் வேலை செய்கிறதா?(அதாவது சட்டீஸ்கரில் சல்வஜூடம் சரியில்லை என்று கூறுவது, இங்கு அதுதான் சரி என்று கூறுவது. இந்தியா முழுவது ஸ்டைரக், மே.வ. தில் முதலமைச்சரே ஸ்டைர்க்குக்கு தடை, மே.வா தனியார்மயம், உலகமயம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்ற மாநிலங்களில் எதிர்த்து பேச(மட்டும்) செய்வது).


CPM: வோட்டு சார் வோட்டு......

நாம்: அப்போ மக்கள்?

CPM: அவிங்க கிடக்கிறாங்க விடுங்க சார். ஜனநாயகம் என்றால் என்னானே அவிங்களுக்கு தெரியாது. அவங்ககிட்ட வைச்சு என்னாத்த விவாதம் செய்ய... நம்ம குறுக்கு வழியில சட்டமன்றத்த பிடிச்சு புரட்சி பன்னுவோம். அதுக்கு கொள்கையெல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு மத்த வோட்டு பொறுக்கி மாதிரியே நாமலும் மக்கள ஏமாத்தனும். இன்னைக்கு கருணாநிதின்னா நாளைக்கு ஜெயலலிதா.. ஆனா என்னைக்கும் நமக்கு 10 MLA சீட்டு உறுதி..


************


அப்புறம் இது வர்க்கப் போராட்டமா என்று கேட்டிருந்தீர்கள் வர்க்கப் போராட்டம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. துரோகிகள் காக்கி உடையிலும் வரலாம், இதுபோல தத்துவ மயக்கத்தில் சொந்த வர்க்கத்தில் இருந்தும் வரலாம். ஆனால் வரலாற்றில் நிகழ்ந்த இன்னொரு வர்க்கப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.


மே.வவின் முதல் கம்யுனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரசுக்கு கூஜா தூக்கி- நக்சல்பாரி கிராமத்தில் எழுந்த விவசாயிகள் புரட்சியை ஒடுக்கிய CPM-ன் நடவடிக்கை வர்க்கப் போராட்டமா?


இதற்க்கு தங்களிடம் பதில் இருக்காது. நானே சொல்கிறேன், அது வர்க்கப் போராட்டம்தான். அரசியல் தரகு வர்க்க CPM க்கும் வறிய விவசாயிகளுக்கும் நடந்த போராட்டம்தான் அது.


அங்கு ஒரு அரசின் கடமையை கிஞ்சித்தும் கவலையின்றி செய்த பாட்டாளி வர்க்க கட்சி?? - CPM.

பலியான விவசாயிகள் - உரிமைக்காக போராடியவர்கள்.


இங்கு சல்வாஜூடமில் போராடுபவர்கள் யாருடைய உரிமைக்காக போராடுகிறார்கள்? அரசு, ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்வேறு முற்போக்கு சக்திகள் சல்வாஜூடம் அமைப்பை கண்டிக்கும் பொழுது நீங்கள் ஆதரிப்பதில் உள்ள உள்நோக்கம் அவதூறு கிளப்பியே மாற்று தத்துவங்களை நிர்மூலமாக்கும் தந்திரம்தான் என்பது தங்களது அடிப்படையற்ற ஒரு கிசு கிசு பாணி குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகிறது.


அதுசரி இன்னோரு விசயத்தைப் பற்றியும் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. கேராளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் கம்யுனிஸ்டு அரசு களைக்கப்பட்டதே. அந்த அனுபவம் என்ன? நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஏனென்றால் எதையும் மக்கள் முன் வைத்து விவாதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களே. மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது மக்களுக்கு கற்றுக் கொடுப்பது என்பதை - மக்களிடமிருந்து பிற்போக்குத் தனத்தை கற்றுக் கொள், மக்களுக்கு பிழைப்புவாதத்தை கற்றுக் கொடு என்று புரிந்து கொண்ட அமைப்புதானே CPM என்ற போலி கம்யுனிஸ்டு கட்சி.


கேரள அரசு கவிழ்ப்பின் படிப்பினையாக CPM எடுத்துக் கொண்டது - நாய் வேசம் போட்டால் குரைக்க வேண்டும், பன்னி வேசம் போட்டால் சாக்கடையில் சவக்....சவக்...தான். அதாவது அரசு என்ற பாத்திரத்தை எடுத்துக் கொண்ட CPM அந்த அரசின் வேலைகளைச் செய்ய வேண்டும். கம்யூனிசம் எல்லாம் கோமனத்தை கழட்டி காயப் போட்டிருக்கிறோம் புரட்சிக்கான சூழல் வரும் பொழுது கட்டிக் கொள்வோம் என்ற அளவில்தான். இதைத்தான், அதாவது கேரள அனுபவத்தின் படிப்பினையைத்தான் மேற்கு வங்கத்தில், எந்த வர்க்கதின் பலத்தில் ஆட்சிக்கு வந்தார்களோ அந்த விவசாயிகளை நசுக்க அமல்படுத்தியது. அதாவது அரசின் அடக்குமுறை.


****************


புரட்சிகர கட்சியின் பாத்திரம் பற்றி லெனின் கூறுகிறார், ஒரு சிறப்பான கட்டமைப்பான புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி இருந்தால், எந்தவொரு சாதாரண சம்பவத்தையும் புரட்சிக்கான சம்பவமாக மாற்ற முடியும்.


புரட்சி என்பது மேலே பறந்து போகும் காக்கை போடும் எச்சமல்ல. காக்கை போடும் பொழுது பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பதற்க்கு.

அதற்க்கு அடிப்படையாக தேவைப்படுவது முரன்பாடுகளை கையாளும் துணிச்சலும், தத்துவ பலமும். இந்த இரண்டும் உறுதியாக CPM-க்கு கிடையாது. அதுவும் முரன்பாடுகளை கையாளும் துணிச்சல் உறுதியாக அதற்க்கு கிடையாது. மாறாக முரன்பாடுகளை பார்த்தால் வசதியாக ஒருக்களித்து படுக்கும் ஒரு இடுக்கு கிடைத்து விட்டது என்று சந்தோசப்படும். இதை அந்த கட்சி பல்வேறு பிற்போக்கு சக்திகளுடன் தத்துவ தளத்தில் வைத்திருக்கும் உறவுகளை பார்த்தால் புரியும்(இங்கேயும் நீங்கள் வக்ராவுடன் கொஞ்சிப் பேசி அணுகிய விதம் அந்த பண்பாட்டின் எச்சம்தான்).


எடுத்துக்காட்டுக்கு ஒரு முக்கியமான முரன்பாட்டை இவர்கள் கையாளும் விதத்தை பாருங்கள்.


தனிஉடைமை அரசு என்பது மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஒரு அமைப்புதான், ஆனால் தனது வாழ்க்கையை உத்திரவாதப்படுத்திக் கொள்ள அது மக்களுக்கான அரசு என்பது போல தோன்றச்செய்யும் நடவடிக்கைகளையும் அது செய்யும்.


அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை, முரன்பாட்டை(அதன் உண்மையான மக்கள் விரோத இயல்பு Vs மக்களை ஏமாற்றும் அதன் மக்கள் நல நடவடிக்கைகள்) சரியாக கையாள்வதன் மூலம் அதை மக்களிடம் அம்பலப்படுத்துவதும். இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு இடையில் அரசு சிக்கி தவிப்பதில் தனது ஜீவிதத்தை உறுதிப்படுத்திக் கொள்வதும் என்பதாகத்தான் ஒரு புரட்சிகர கட்சியின் நடவடிக்கை இருக்க வேண்டும்.


தங்களது அமைப்பு என்றைக்காவது இந்த முரன்பாடுகளுடன் விளையாண்டுள்ளதா? எங்கே விளையாட முரன்பாடுகளை கண்டாலே சம்ரசம் என்ற நியுட்ரல் கியர் போட்டு அங்கேயே ஐக்கியமாகிவிடும் அமைப்பல்லவா அது.


***********


அப்புறம் ஆயுதத்தை, சூழல் தீர்மாணிக்கும் என்று ஒரு வரி போட்டு நாங்கள் அசைவ புலிதான் என்ற ஒரு போலியான உண்ர்வை ஏற்படுத்த முயன்றிருந்தீர்கள். மாவோ சொல்கிறார் நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நமது எதிரி தீர்மாணிக்கிறான்.


புரட்சியின் தருவாயில் CPM மும் ஆயுதம் எடுக்கும் ஆனால் ஒரு அரசாக - அந்த புரட்சியை ஒடுக்கும் ஒரு ஆளும் வர்க்க கைக்கூலியாக ஆயுதத்தை எடுக்கும்.


********

வர்க்கப் போராட்டாம், வெகுஜன இயக்கம், ஹிந்துத்துவ எதிர்ப்பு என்று தங்களது நடைமுறைக்கு சம்பந்தமில்லாத விசயங்களைப் பற்றி பேசுகிறேர்கள். அப்படி என்ன விதமான போராட்டங்களை நடத்தி விட்டேர்கள் என்று நான் கேட்பதை விடுங்கள் மக்களுக்கு தெரியும். நான் சில தத்துவ அடிப்படை கேள்விகள் கேட்டால் என்ன என்று தோன்றுகிறது.


மக்களுக்கு ஜனநாயகமே அறிமுகமாகாத போது இடது தீவிரவாதம் பேசுவது ஆபத்து என்று முன்பொருமுறை சொன்னீர்களே? யாருக்கு ஆபத்து?


இந்த ஜனநாயகம் இல்லை என்ற காரணத்தினாலேயே காஸ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்து அவர்களை களாவானித்தனமாக இந்தியாவுடன் இணைப்பதை ஆதரிக்கிறேர்களே இது எந்த மார்க்ஸிய புத்தகத்தில் உள்ளது?(அய்யா, ஒழிந்திருக்கும் திரிபுவாதிகளே காஸ்மீர் இந்தியாவுடன் இருப்பதைத்தான் நானும் விரும்புகிறேன்.)


இந்திய புரட்சிக்கான தங்களது புரட்சிகர செயல் தந்திரம் என்ன?


இந்திய சமூகத்தைப் பற்றிய தங்களது வரையறை என்ன?


இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா? அதன் அளவு, வீச்சு என்ன?


ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் கடமை என்ன?


சரி, தங்களுக்கு CPI க்கும் என்னதான் வித்தியாசம்? சும்மா புத்தகத்தில் உள்ளதை ஒப்பிக்காமல் நடைமுறையில் உள்ள வேறுபாட்டுடன் சொல்லவும்.


*********


ஸ்டாலினை இன்னும் ஆதரிக்கிறீர்களா அல்லது ஆள் செர்க்கவும், தட்டி போர்டில் போட்டோ போடவும் மட்டுமே உபயோகப்படுத்துகிறீர்களா?


இந்த கேள்வி ஏனென்றால்..... இங்கே ஒருத்தன் ஸ்டாலினை கொலைகாரன் என்று மட்டமாக எழுதினான் அப்பொழுது தங்களது சுயமரியாதை ஒழிந்த இடம் எங்கே?


அல்லது மனிதருள் மிருகம் என்று ஸ்டலினை எழுதியவருக்கு விருது கொடுத்த பொழுது இனாமாக தங்களது கட்சி சுயமரியாதையையும் சேர்த்து கொடுத்து விட்டதா?


மனிதருள் மிருகம் எழுதியவரை கௌரவித்த CPM வர்க்க ஸ்தாபனம், மனிதருள் மிருகம் எழுதிய மிருகத்தையும் அதை வெளீயிட்ட பத்திரிக்கையையும் மன்னிப்பு கேட்க வைத்த நக்சல்பாரி ம.க.இ.க பயங்கரவாத அமைப்பு. பலே.... தங்களது கட்சியின் தனி சிறப்பு வாய்ந்த ஆய்வு முறை-வர்க்க பகுப்பாய்வு முறை, வக்ராவிடம் அங்கீகாரம் கோரியபோது மட்டுமல்ல மாறாக இது போல ஆயிரத்தெட்டு சம்பவங்களில் பளிச்சென்று அப்பட்டமாக வெளிவருகிறது.


***************


கோக்கோலா பிரச்சனையில் தங்களது வெகு ஜன நடவடிக்கை என்ன? ஒரு சிறிய நக்சல்பாரி அமைப்பான ம.க.இ.க மக்களை அங்கு திரட்டியதில், மாநிலம் முழுவதும் ஒரு பொதுக் கருத்தை உருவாக்கியதை வெகுஜன இயக்கமாக தங்களால் பார்க்க இயலாது. தங்களது பார்வையில் ஜனநாயாகத்தின் சுவை அறியாத மக்களுக்கு ஜனநாயகம் தேவையில்லையே. அதனால் சட்டமன்ற நாடாளுமன்ற நடவடிக்கையே ஜனநாயகம், தேர்தலுக்கு கூட்டணி சேர்ந்து மாற்றுக் கட்சி அன்பர்களுடன் மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதே வெகுஜன இயக்கம் போலும்.


தங்களது த.மு.எ.ச வெளியிட்ட மூழ்கும் நதி திரையிட தடை செய்யப்பட்டதே அதை என்ன சொல்கிறீர்கள்?


ஒரு ஜனநாயகத்துக்கு உரிய எல்லா அம்சங்களிலும் இந்த சட்டமன்ற/நாடாளுமன்ற அமைப்பு அம்பலப்பட்டு நிற்க்கும் பொழுதும் அதை முட்டுகொடுத்து அதில் இன்னும் எதோ பாக்கி இருப்பது போல் உணர்வு கிளப்பும் நீங்கள் இந்தியாவின் சாலச் சிறந்த முகமூடி என்பதில் தங்களுக்கு எந்த போட்டியும் இல்லை.


இந்துத்துவ எதிர்ப்பில் நடைமுறையில் என்ன செய்திருக்கிறீர்கள். இந்துத்துவம் BJP, RSS மட்டுமல்ல. அது அனைத்து கட்சி தழுவிய ஒரு தத்துவம்(CPM அதில் உண்டு). இதை பற்றி உங்களது 'மார்க்ஸீயம்' இதழிலிலேயே விரிவான கட்டுரைகள் வந்துள்ளன. சட்டமன்ற நாடாளுமன்ற வழிமுறை சும்மா பம்மாத்து என்பது உங்களுக்கு அப்பனான இந்துத்துவ சக்திகளுக்கு மிகவும் தெளிவாக தெரியும்.


இந்துத்துவம் பற்றி அப்படியொரு ஆழ்ந்த புரிதல் இருப்பதினால்தானோ தீபாவளி, ரம்ஜான் சிறப்பு இதழ்கள் ஆயுத பூசையன்று ஆட்டோ க்காரர்களுடன் சேர்ந்து சாமி படம் வைத்து கொண்டாடுவது, நாடாளுமன்ற கற்பின் காவலர் சோம்னாத சேட்டர்ஜியின் பேரனுக்கு பூணுல் கல்யாணம் செய்ய அவர் வருவது, தங்கள் கட்சி அணிகள் சாதி வெறியுடன் இன்னும் நிலபிரபுத்துவத்தை தாங்கி நிற்க்கும் பூத உடல்காலாக வலம் வருவது(சமீபத்திய புதிய ஜன நாயகம் இதழில் இந்த சாதி வெறி பற்றிய கட்டுரை வந்துள்ளது) என்று பல புதிய உத்திகளை கையாள்கிறேர்களோ. இந்துத்துவ எதிர்ப்பிற்க்கு நல்ல நடைமுறை, நல்ல வெகுஜன இயக்க தந்திரம்.


மாறாக இந்துத்துவ எதிர்ப்பில் முன்னனியில் இருக்கும் ஒரு அமைப்பு ம.க.இ.க. இங்கு வந்த பிரவீன் தோகாடியா சொன்னது தமிழ் நாட்டில் நமது முதல் எதிரி ம.க.இ.க என்றுதான்.


அய்யா, உங்களால் இந்த சமூகத்துக்கு விளைந்த ஒரே நன்மை பாட்டாளியின் போராடும் உணர்வை மழுங்கடித்து, பேரம் பேசுவதுதான் பாட்டாளி வர்க்க புரட்சி என்ற புரிதலுக்கு இட்டு சென்றதுதான். அதனால்தான் ஒரு தொழிற்சங்கத்தில் சேருவதற்க்கு அடிப்ப்டையாக ஒரு தொழிலாளி அந்த சங்கத்தின் பேரம் பேசும் திறமையை பார்க்கிறான். மிக நல்ல உதாரணம் அசோக் லேலான்ட் தொழிற்சாலை. பாட்டாளிகளுக்கு பிழைப்புவாதத்தையும், மற்ற வெகுஜனங்களுக்கு தொழிற்சங்கம் என்றால் கோமாளித்தனம் என்ற புரிதலையும் ஏற்படுத்தியதை தவிர்த்து என்ன செய்து விட்டீர்கள்.


தங்களது பதிவிலும் புரட்சி, பாட்டாளி என்று பல வார்த்தைகள் உள்ளன. ஆனால் நடவடிக்கையில் இவற்றை கோரும் போது வோட்டு போடு அத்தோடு நிறுத்திக் கொள். அரசை நிர்பந்திக்கும் போராட்டம் நடத்தாதே என்று இன்னோரு புதிய வகை புரட்சி பேசுவது தங்களது அமைப்பின் வாடிக்கை.


உங்களது குறைப் பிரசவ தத்துவத்தின் வறுமை கேரளாவின் வேலைவாய்ப்பில் தெரிகிறது. சீர்திருத்தவாதத்தின் அவலம் அப்படித்தான் இருக்கும். தங்களது நடவடிக்கைதான் கம்யூனிசம் பற்றி தவறான, கம்யூனிஸ்டுகள் என்றால் கோமாளி, ஸ்திர புத்தியில்லாதவன், வற்ட்டு சூத்திரதாரி, இழிச்சவாயன் என்ற பார்வையை இந்த சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.


கேரளா, மே.வத்திலும் கட்சியின் பலம் அது ஆளும் கட்சியாக இருப்பதுதான். அங்கேயும் அந்த கட்சியின் அடிமட்டம் அதிகார படிக்கட்டில் ஆதாயம் தேடும் போட்டிகள் பல்வேறு புகார்களில் சிக்கியுள்ளது.

********

நக்சலிசம் என்றால் ஆயுதப் போராட்டம் மட்டுமே என்ற தங்களது புரிதல் உண்மையிலேயே கம்யுனிசம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியுமா என்று சந்தேகத்தை கிளப்புகிறது.


ம.க.இ.க போன்ற அமைப்புகள் என்ன துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்துக் கொண்டா திருநெல்வேலியில் ஆர்பாட்டம் நடத்தினார்கள்?


ஒஹோ... ஒரு வேளை அரசை அம்பலப்படுத்துவதே வன்முறை என்று தங்களது கட்சி தங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறதோ?


அய்யா... நக்சல்பாரிகளை நல்வழிப்படுத்தும் முன்பு அந்த தத்துவத்தை படித்து அது சரியா, தவறா என்பதை முடிவு செய்யவும். அப்புறம் தங்களது அமைப்பு ஆட்களிடம் தத்துவத்தை நடைமுறையுடன் படிக்கச் சொல்லி ஒரு விண்ணப்பமிடவும்.


மற்றபடி இந்திய நிலைமகளுக்கேற்ற மாவோ வழி புதிய ஜனநாயக பாதை எப்படி நடைமுறைக்கான பாதை என்பதை புரியவைக்கத்தான் இந்த வலைப்பூ உலகில் வலம் வருகிறேன். அது போன்ற எனது பதிவுகளை வாதம் செய்யுங்கள். பிறகு நானும் எனது புரிதலை திருத்திக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
அசுரன்

Anonymous said...

நாடு மறுகாலனியாதிக்கத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும்போதும், அரசின் அடக்குமுறை எல்லை மீறும்போதும் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை நமக்காக எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டு போராடும் வர்க்கப்போராளிகளின் கீழ்க்கண்ட பாதைகளைப் பின்பற்றினால்தான் மக்களின் போராட்டம் வெல்லும்.

சதீஸ்கர் தீவிரவாதிகள், சென்னைப் போராளிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன.

1) போயஸ் தோட்டத்துக்குப் புல்லறுக்கப் போய், அடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு மணியாட்டப் போய் விட்டு, இடையில் ஓய்வு கிடைக்கும் வேளையில், மெமோரியல் ஹால் அருகே பஸ்ஸே வராதபோது 'வெல்லட்டும்!
வெல்லட்டும்!' எனக் கத்தியபடியே கலைந்து போய்த் தமது போர்க்குணத்தை வெளிப்படுத்தலாம்.

2) சதீஸ்கரில் அரசின் அடக்குமுறைகளையோ, உலகமயமாக்கலின் கெடுபிடிகளையோ தீர்க்க, உயர்நீதி மன்றம் உச்சநீதி மன்றம் (இதனை உச்சிக்குடுமி மன்றம் என்று பெரியார் கட்சிக் காரர்கள் சொல்லினால் சொல்லட்டும் காம்ரேட்.) ஆகிய இரும்புக்கோட்டைகளில் ஏறி இறங்கி, மக்களுக்கு தெம்பூட்டலாம்.

3) அரசின் அனுமதியுடன் மக்கள் திரளைக் கூட்டி, மொட்டை அடிக்கும் போராட்டம், மணி அடிக்கும் போராட்டம், வாயில் கறுப்புத் துணி அணிந்து ஆர்ப்பாட்டம், ஒப்பாரிப் போராட்டம், அல்லது ஆளே நடக்காத ரோட்டில் (என் ஹெச் 7 மாதிரி) மனித சங்கிலி ஆகிய போராட்டங்களை திறம்பட நடத்தி விட்டால், மக்கள் விரோதிகள் எல்லாம் பின்னங்கால் பிடறியில் பட ஓடி விட மாட்டார்களா?

4) பகத் சிங் படத்தை போஸ்டரில் போட்டுக் கொண்டு, பார்லிமெண்ட் தொழுவில் பஜனை பாடிக் கொண்டே வர்க்க எதிரிகளைப் பந்தாடி விடலாம், தோழர்!

துரோகிகளை உருவாக்கி அரசு கூலிப்படைகளை உருவாக்கும். நம் தோழர்களை அக்கும்பலே அரசுப் படையுடன் அழிக்கும். அதற்குப் பதிலடி கொடுக்கும்போது மீடியா அரசுடன் சேர்ந்து கொண்டு 'அப்பாவிகள்' படுகொலை என்று ஊளையிடும். உடனே 'பார்த்தீர்களா! தோழர்! இடது தீவிரவாதம் இதுதான்.! காலம் இன்னும் கனியலை தோழர்! (செங்காயா இருக்கும் போல)" எனப் பிதற்றுவது. இந்தப் பித்தலாட்டங்களை ஒழிக்க மக்களை அரசியல்மயமாக்குவதுடன் ஆயுதபாணியாக்க வேண்டும்.

kattabomman
http://www.blogger.com/profile/26954504

கசி said...

மன்னிக்கவும்..

நக்கலிசம் என்று படித்துவிட்டேன்.

குழலி / Kuzhali said...

CPM என்பதை Communist Party of Manudharmam என்று ஒரு திராவிட இயக்கத்தலைவர் கிண்டலடித்தார், யோசித்து பார்த்தால் தான் தெரிகிறது, அதன் பிறகு தான் கவனித்தேன் CPM கட்சியே மேலிருந்து கீழ் வரை அப்படித்தான் இருக்கின்றது.... ஆக மனுதர்மவாதிகள் கம்யூனிஸ்ட்களாக இருப்பதாக சொல்லிக்கொள்வது அவர்களுக்கு மிகமிக வசதியானது..... மேலுள்ள என் கருத்துக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை என்றாலும் இது சிபிஎம் மீதான கருத்து.... பதிவில் சில கருத்துகளுடன் உடன்பாடும், சில கருத்துகளுடன் எதிர்கருத்தும் உள்ளது, விரிவாக விவாதிக்கும் நிலையில் இப்போது நான் இல்லை, வேறொரு நாள் பேசலாம்....