Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

September 29, 2008

மதவெறிக்கு எதிராய் போர்க்குரலெழுப்ப.... நீயும் வா... தோழா...

கடந்த 22 செப், 2008 அன்று போரூரில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தமுஎச 11-வது மாநின மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழாவில், இந்து முன்னணி மதவெறியர்களின் தாக்குதலைக் கண்டித்து
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
நடத்தும் கண்டனக்கூட்டம்.

30-09-2008, செவ்வாய்க்கிழமை
மாலை 5.30 மணி
ஆற்காடு ரோடு,காரம்பக்கம்
(அண்ணா சிலை அருகில்) போரூர்



தப்பாட்டம் - போக்குவரத்து தொழிலாளர்கள்.
இசைப்பாடல்கள் - தமுஎச தோழர்கள்.

தபேலா - சுந்தர்

கண்டனம் முழங்கிட...

ச. தமிழ்ச்செல்வன்
மாநில பொதுச்செயலாளர், தமுஎச.

விடுதலை ராஜேந்திரன்,
பெரியார் திராவிடர் கழகம்
வழக்கறிஞர் ச. செந்தில்நாதன்
கவிஞர் இன்குலாப்
எழுத்தாளர் பிரபஞ்சன்
கவிஞர் சூரியதீபன்,
தமிழ்படைப்பாளிகள் முன்னணி
பேராசிரியர் அ.மார்க்ஸ்
எழுத்தாளர் இராசேந்திரச் சோழன்,
தமிழ்படைப்பாளிகள் முன்னணி
திருமிகு. த. வெள்ளையன்
வணிகர் சங்கத் தலைவர்
இயக்குனர் சீமான்
கூத்துப்பட்டறை ந. முத்துசாமி
பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால்
பத்திரிக்கையாளர் ஜவஹர்
தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம்
கவிஞர். இரா.தெ. முத்து
ஓவியர் சந்துரு
ஓவியர் வீரசந்தானம்,
தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்
பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன்
ஓவியர் மறுத்து
தலித்முரசு புனித பாண்டியன்
பேராசிரியர். சி. லட்சுமணன்
தோழர் அன்புத் தென்னவன்
திராவிட இயக்கப் பேரவை
ஓவியர் புகழேந்தி
புலவர் பா. வீரமணி
நாடகக் கலைஞர் காளீஸ்வரன்
கவிஞர் பச்சியப்பன்
கவிஞர் கார்முகில்
ஓவியர் நடராஜ்
ஓவியர் கார்த்திகேயன்
ஓவியர் மனோகர்
ஓவியர் வின்சி
திருமிகு கிருபானந்த சாமி
துறைமுகத் தமிழ்ச்சங்கம்
கருப்புப் பிரதிகள் நீலகண்டன்
உதயம் வ.செல்வம்
தோழர் கருணாகரன்
போக்குவரத்து சம்மேளனம், சி.ஐ.டி.யு.
தோழர் ச. அசோகன்
நாடகக் கலைஞர் ஜெசுடோச்ஸ்
தோழர் சந்தோஷ்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
தோழர் ஸ்டாலின்
இந்திய மாணவர் சங்கம்
வழக்கறிஞர் அ. காரல் மொழி
தோழர் எம். சேகர்
ஆட்டோ சங்கம், சி.ஐ.டி.யு.
நாடகக் கலைஞர். கி. அன்பரசன்
கவிஞர் நா.வே.அருள்
எழுத்தாளர் மணிநாத்
எழுத்தாளர் பா.ராமச்சந்திரன்

இவர்களுடன்... போரூர் பகுதி
அனைத்துக் கட்சித் தலைவர்கள்

அனைவரும் வாரீர்! கண்டனம் முழங்கிட...

மதவெறிக்கு எதிராய் போர்க்குரலெழுப்ப.... நீயும் வா... தோழா...

September 23, 2008

பெரியார் விழாவில் இராமகோபாலன் குண்டர்கள் தாக்குதல்


பெரியார் விழாவில் ராமகோபாலன் குண்டர்கள் தாக்குதல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11வது மாநில மாநாட்டு துவக்க விழாவும், தந்தை பெரியார் 130வது ஆண்டு பிறந்த நாள் விழாவும் நேற்று (செப்டம்பர் 22, 2008) மாலை சென்னை போரூரில் உள்ள பெருமாள் கோவில் தெரு, ரவுண்டானா அருகில் நடைபெற்றது. இச்சிறப்பு மிகு கூட்டத்தில் வழக்கறிஞர் ச. செந்தில்நாதன், கவிஞர் இரா.தெ. முத்து உட்பட முக்கியமான கலை - இலக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் முற்போக்கு கலை - இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தப்பாட்டம், உலகை உலுக்கிய புத்தகங்கள் என்ற தலைப்பில் நாடகம் மற்றும் முற்போக்கு பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது.


காவல்துறையின் அனுமதி பெற்று நடைபெற்றுள்ள இந்நிகழ்ச்சி துவங்கிய சில மணி நேரங்களிலேயே ஒரு காவலர் கூட்டம் நடத்துபவர்களிடம் நீங்கள் யாருடைய மனதும் புண்படாதவாறு பேசுங்கள் என்று சொல்லியுள்ளார். இந்த தகவல் எழுத்தாளரும், கவிஞருமான இரா.தெ. முத்துவுக்கு சொல்லப்பட்டது. அவர் மேடையில் ஏறி பேசும் போது, இங்கே நாம் யாருடைய மனதும் புண்படாமல் பேச வேண்டும்என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். யாருடைய மனதும் புண்பாடமல் எப்படி பேச முடியும். நாட்டில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை கூர்ந்து நோக்கும் யாராலும் இப்படி பேச முடியாது. குறிப்பாக ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. இந்த தாக்குதல் குறித்து பேசும் போது எப்படி மனது புண்படாமல் பேச முடியும்? இப்படித்தான் பேச வேண்டும் என்றால் சுதந்திர இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எதற்கு? மாற்றுக் கருத்துக்களை - கலைகளை எடுத்துச் சொல்லத்தானே இந்த உரிமைகள் என்று கூறிவிட்டு இங்கே ஒரு கலாச்சார காவலர் இருக்கிறார் அவர் யார் தெரியுமா? என்று கூட்டத்தினரைப் பார்த்து கேட்டிருக்கிறார்கள். கூட்டத்தில் இருந்த பொது மக்கள் இராமகோபாலன்என்று சொன்னதுதான் தாமதம்.


ஏற்கனவே இந்த கூட்டத்தில் கலவரத்தை நிகழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்த இந்து முன்னணி - ஆர்.எஸ்.ஸ். சங்பரிவார கும்பல் - 20க்கும் மேற்பட்டவர்கள் சகலவிதமான ஏற்பாடுகளுடன் முன்கூட்டியே எப்படி தாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வந்து செயல்படுத்தியுள்ளனர். இந்த கலாச்சார காவலரின் குண்டர் படை இப்படி பேசிய உடன் மேடைய நோக்கி பெரிய, பெரிய செங்கற்களை எரிந்ததோடு, கையில் கத்தி, இரும்பு பைப் மற்றும் செயின் என்று ஆயுதங்களால் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொது மக்களை தாக்கியதோடு, அங்கிருந்த சேர்களையும் தூக்கி எறிந்துள்ளனர். மேலும் இந்த கலாச்சார குண்டர்கள் ஒருவருக்கொருவர் அடையாளம் தெரிந்து கொள்ளும் முறையில் கையில் செந்நிற பட்டை அணிந்து கொண்டு வந்துள்ளனர். இந்த தாக்குதல் நடத்தும் போதே இராமகோபாலன் வாழ்க”, “இந்து முன்னணி வாழ்கஎன்று கோஷம் எழுப்பியவாறு இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.


கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் - குழந்தைகளுடன் கலந்து கொண்டுள்ளனர். யார் மீது தாக்குதல் தொடுக்கிறோம் என்று கூட எதையும் பார்க்காமல் பெண்கள் மீதும் - குழந்தைகள் மீதும் கூட கற்களை வீறியெறிந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு குழந்தை தன்னுடைய கண்ணுக்கு எதிரே தன்னுடைய தந்தையை தாக்குவதை கண்ணுற்றபோதுஅதன் அலறல் கல் நெஞ்சையும் கறைய வைக்கும் அளவில் இருந்தது. இந்த குழந்தையின் மனநிலை பாதிப்பு இந்த பாசிச வெறிபிடித்த நரமாமிச சக்திகளான இந்துத்துவ வெறியர்களுக்கு புரியுமா? அல்லது காவியுடையில் வேஷம் தரித்துக் கொண்டுள்ள மனிதகுல விரோதி இராமகோபாலனுக்குத்தான் தெரியுமா? மேலும், அதே பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு த.மு.எ.ச. நடத்திய ஒரு கலை நிகழ்ச்சியிலும் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த விவரம் அங்குள்ள காவல்துறைக்கும் தெரியும். அப்படியிருந்தும் காவல்துறையினர் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்த நிலையிலேயே இருந்தனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ எதுவும் செய்யப்படவில்லை.


இந்த தாக்குதல் நடைபெறும் போது, அங்கிருந்த ஒரு பெண் ஒரு காவரைப் பார்த்து இப்படி அநியாயம் பண்றாங்க நீங்க வேடிக்கை பார்க்கறீங்களேஎன்று கேட்டபோது, நானும் மனிதன் தானே என்ற பதில்தான் வருகிறது. இந்த காவலர்கள்தான் நம்முடைய தமிழ் மக்களை காப்பாற்றப் போகிறார்களா? தேச சேவையின் போது மக்களை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்தாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையில்லாத இந்த காவலர்களால் நாட்டுக்கு என்ன பயன்? இதுபோன்ற காவலர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் காவல்துறைக்கும் - அங்குள்ள ஐ.எஸ். (காவல்துறை உளவுத்துறைக்கும்) சூழல் நிச்சயம் நன்றாக புரிந்திருக்கும். இருப்பினும் சட்டம் - ஒழுங்கை ஒரு பொதுக்கூட்டத்தில் அப்பட்டமாக மறுப்பதற்கும், தாக்குதல் தொடுப்பதற்கும் யார் கொடுத்த தைரியும்?


அண்ணாவின் நூற்றாண்டும், பெரியாரின் 130வது ஆண்டும் நடைபெறும் தருவாயில் இந்துத்துவ பாசிசவாதிகளின் இந்த கொடுங்கோல்தனத்தை பார்த்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு என்ன செய்யப்போகிறது? சங்பரிவாரத்திற்கு எதிராக அண்ணாவின் முழக்கம் என்ன ஆனது? பெரியாரின் பேச்சும், மூச்சும் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுள்ளதே எதனால்? எப்படி இந்த பாசிச விஷ விதை இந்த மண்ணில் முளைத்துள்ளது? இதற்கு இந்த தி.மு.க.வும் - திராவிட இயக்க சக்திகளும் பொறுப்பல்லவா? மேலும், அந்த பாசிச குண்டர்கள் ஒரு ஷட்டர் போட்ட கடைக்குள்ளே ஒளிந்துக் கொண்டிருந்த நிலையில் த.மு.எ.ச.வினர் காவல்துறையிடம் அந்த குண்டர்கள் - ரவுடிகள் இங்கேதான் ஒளிந்துக் கொண்டுள்ளார்கள் என்று கூறியபோது, நீங்கள் அமைதியாக இருங்கள் என்று சமாதானம் சொல்லிவிட்டு அவர்களை தப்ப விட்டுவிட்டனர். மொத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் உள்ள காவல்துறையே இந்துத்துவ கயவாளிகளோடு கூட்டு சேர்ந்து விட்டதா? என்ற எண்ணம்தான் மேலிடுகிறது.


மொத்தத்தில் இந்த சம்பவம் தொடர்பாக முறையான நீதிவிசாரணை செய்து உரிய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும், பொது மக்களை காக்கத்தவறிய சம்பந்தப்பட்ட காவல்நிலைய போலீசார் யார்? யார் அங்கு பணியில் இருந்தார்களே அவர்கள் மீதும் துறைபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் போலீசாருக்கு பொது மக்களை காப்பது எப்படி என்ற சிந்தனையையாவது வளர்க்க வேண்டும்.


மொத்தத்தில் பெரியாரின் ஒரு நிகழ்ச்சியில் இந்துத்துவ கலாச்சார குண்டர்கள் தாக்குதல் நடத்தி விட்டால் இதுபோன்ற நடவடிக்கைகள் நின்று விடும் என்ற பாசிஸ்ட்டுகளின் கனவை தூளாக்குவோம்! மாநிலம் முழுவதும் ஏராளமான பெரியார் நிகழ்ச்சிகளை நடத்தி இந்துத்துவ சக்திகளை - பாசிச வெறியர்களின் உண்மை முகத்தை தோலூரிப்போம்!

September 17, 2008

கேரளாவில் கண்டதும்! கேட்டதும்!


ஒருமுறை கேரளா சென்ற விவேகானந்தர் அதனை பைத்தியக்கார விடுதி என்று அழைத்தார். அதாவது அந்த அளவிற்கு அங்கே சாதிய ஏற்றத்தாழ்வு மண்டியிருந்தது. ஆனால் தற்போது என்ன நிலைமை?

குறிப்பாக நான் சென்றது கண்ணூர் மாவட்டம் - தலச்சேரி பகுதிக்கு. அங்கு ஜாதி முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. திருமணங்கள் ஜாதியை பார்த்து நிச்சயிப்பதில்லை. மேலும் அன்றாட வாழ்விலும் அவர்கள் ஜாதியை கடைப்பிடிப்பதில்லை. அங்கு ரிக்கார்டில் மட்டுமே ஜாதி இருப்பதாக அங்குள்ள பொதுநலவாதிகளும், மக்களும் கூறுகின்றனர். யாராவது தான் இந்த ஜாதி என்று சொல்லாத பட்சத்தில் அதனை யாரும் பொருட்படுத்துவதில்லை. தமிழகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஜாதி குறுக்கே நிற்கிறது.

அடுத்து முக்கியமான விசயம் தமிழகத்தில் தெருவுக்கு இரண்டு கோவில்களும், சந்து முனைக்கு ஒரு பிள்ளையார் கோவிலும் கோலோச்சுகிறது. இங்கே நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் கோவில் கட்டுவது தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஆனால் கேரளாவில் அப்படி யாரும் தெருவுக்கு தெரு கோவில் கட்டுவதில்லை. ஊருக்கு ஒரு கோவில் இருப்பதே பெரிய விசயம்தான். அதுவும் திருவிழா காலங்களில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அதனை மக்கள் நினைக்கின்றனர். அந்த அளவிற்குதான் அங்கே கோவிலுக்கும் - பொது வாழ்விற்கும் - மக்களுக்கும் உள்ள நிலை.

பெரியார் பிறந்த மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் இந்த இரண்டும் தலைகீழ்தான். மேலும் தற்போது திராவிட இயக்கங்களும் - அதன் நிர்வாகிகளும் - அமைச்சர்களும் - எம்.எல்.ஏ.க்களும் பணத்தை கொடுத்து கோவில் கட்டுவதும் - கோவில் விழாக்களில் கலந்து கொண்டு தங்கள் முகத்தை காட்டி பலப்படுத்திக் கொள்வதும் மிகச் சாதாரண நடைமுறையாகி விட்டது. எனவே தமிழகத்தில் மூட நம்பிக்கையை பரப்புவதில் திராவிட இயக்கத்திற்கு முக்கிய பங்குண்டு என்று இந்நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.


அடுத்து, வீடுகள் அனைத்தும் நல்ல காற்றோட்டமாக - விசாலமாக கட்டப்பட்டுள்ளது. தண்ணீருக்கு மக்கள் ஏங்குவதில்லை. குறிப்பாக அங்கே கரண்ட் கட் வெறும் 1/2 மணி நேரம் மட்டுமே. (30 நிமிடம்) ஒரு நாளைக்கு. மேலும் வீடு கட்டுவதற்கு அரசாங்கமே 40 - 50 வரை இலவசமாக வழங்குகிறது. மேற்கொண்டு தொகையைப் போட்டு வீட்டைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். இது ஒரு சிறப்பான திட்டம். தமிழகத்தில் கூட அந்த திட்டத்தை அப்படியே கொண்டு வர தி.மு.க. அரசு முயலலாம். இதனையும் அண்ணா நூற்றாண்டு சாதனையில் சேர்த்தால் சிறிது ஓட்டும் கூடும். ஆனால் நிலத்திற்கு எங்கே போவது என்று கேட்கதீர்கள். அங்கு அநேகமாக வீடு இல்லாத மக்களே இல்லை. இங்குகூட குறைந்தபட்சம் வீடு கட்டுவதற்கு ஒரு கிரவுண்ட் நிலம் கொடுத்து - இதுபோன்ற உதவித் தொகையும் கொடுக்கலாம்.

மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம் - கிராமப்புற வேலை உறுதித் திட்டம் கேரளாவில் சிறப்பாக செயல்படுகிறது. அங்கே ஒரு நாளைக்கு ரூ. 125 கூலியாக தரப்படுகிறது. இந்த வேலைக்கே அங்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதாவது அந்த அளவிற்கு அங்கு வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ரூ. 80 மட்டுமே கூலி. அதுவும் பல இடங்களில் ரூ. 40 முதல் 60 மட்டுமே தரப்படுகிறது. இன்னும் சில இடங்களில் காண்டிராக்ட் விடப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. அல்லது எந்திரத்தை பயன்படுத்தி திருட்டுக் கணக்கு எழுதப்படுகிறது. அதைவிட முக்கியமானது. தமிழகத்தில் உழைக்காமல் சம்பளம் பெறப்படுவதாக எதிர்கால முதல்வர் கூறுகிறார். உழைக்கின்ற மக்களுக்கு நியாயமான கூலியை ஏமாற்றமால் வழங்க வேண்டும் என்று இடதுசாரிகள் கேள்வி எழுப்பினல் அவர்களை புரோக்கல் - தரகர் என்று ஏசுகிறார் எதிர்கால முதல்வராக கனா கண்டு கொண்டிருக்கும் மு.க. ஸ்டாலின்.

அங்கே சங்பரிவாரம் பல இழிவான வேலைகளில் ஈடுபட்டு எவ்வளவுதான் வலுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் அரசியல் ரீதியாக வெற்றிபெற முடிவதில்லை. இதற்கு அடிப்படை காரணம் திராவிட இயக்கங்கள் போல் யாரும் சங்பரிவார சன்னியாசி கூட்டத்துடன் கூட்டணி வைத்துக் கொள்வதில்லை. இங்கே வெத்து மதவாத எதிர்ப்பும் - வெத்து மதச்சார்பற்ற கொள்கையும் கடைப்பிடிக்கப்படுகிறது. அங்கேயுள்ள இடதுசாரிகள் தீவிரமாக போராடி இந்துத்துவா மற்றும் இசுலாமிய அடிப்படைவாதத்தை பின்னுக்குத் தள்ளி வருகின்றனர். மேலும் இசுலாமியர்கள் - கிறித்துவர்கள் - கணிசமாக இருந்தாலும் மதக்கலவரம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றனர். இதையெல்லாம் இந்த அண்ணா நூற்றாண்டு சிந்தனையில் சீர்தூக்கி பார்த்து தன்னை மாற்றிக் கொள்ளுமா திராவிட இயக்கங்கள்.

இவற்றையெல்லாம் விட முக்கியமானது. அங்கே கட்டப் பஞ்சாயத்து இல்லை. அதாவது, கிராமப்புறங்களில் அரச மரத்தடியிலோ அல்லது ஆல மரத்தடியிலோ அந்த ஊரில் உள்ள பெரிசுகள் அல்லது ஆதிக்க சக்திகள் தங்களைத் தாங்களே கிராம நிர்வாகிகளாக தேர்வு செய்துக் கொண்டு தமிழகத்தில் செயல்படுவது போன்ற பஞ்சாயத்து அமைப்பு இல்லை. அது முற்றிலும் ஒழிந்து விட்டது. அங்கே தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களின் செயல்பாட்டிற்ககு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அல்லது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பிரச்சினை அணுகப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் என்ன நிலைமை இந்த கட்டப் பஞ்சாயத்துக்களுக்கு தலைமை தாங்குவதே மந்திரிகளும், அதன் சொம்புகளும், தடிகளும், குண்டர்களும்தான். ஊரில் உள்ள கட்டப் பஞ்சாயத்து முறையை தனக்கு சாதகமாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கின்றனர் இங்குள்ள ஆதிக்கவாதிகள் அது ஜாதியின் பெயராலும் பணத்தின் பெயராலும், அரசியல் செல்வாக்கின் பெயராலும் அல்லது ரவுடித்தனத்தின் பெயராலும். இதுதான் தமிழக ஜனநாயகததின் மையமான செயல்பாடு. கேரளாவில் அதற்கு இடமே இல்லை.

பெரியார் பிறந்த மண் - அண்ணா பிறந்த மண் என்று மார் தட்டிக் கொள்வதில் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. அவர்களது கொள்கைகளுக்கு குழி தோண்டி புதைத்து விட்டு. எனவே மேற்கண்ட இரண்டு பெரியவர்களும் சென்ற வழியை குறைந்தபட்சம் கடைப்பிடிக்கவும் - அதனை பரப்பவும் முயற்சி எடுக்க வேண்டும் இங்குள்ள திராவிட இயக்க சல்லி வேர்கள்.

ஒருவேளை விவேகானந்தர் தற்போது உயிருடன் இருந்து தமிழகத்திற்கும் - கேரளாவிற்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தால் இந்தக் கருத்தை தமிழகத்திற்கு மாற்றியிருப்பார்.

September 05, 2008

பெரியாரின் சிந்தனைகளை சிறை வைக்கும் வீரமணி!



தமிழகத்தின் சீரிய சிந்தனையாளர்களில் முன்னணியில் நிற்பவர் தந்தை பெரியார். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, சமூக விடுதலை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்ற புரட்சிகரமான கொள்கைகளை தமிழகத்தில் துணிந்து பேசியும், எழுதியும், எதிர்ப்பு காட்டியும் களத்திலிறங்கி போராடியவர் தந்தை பெரியார்.

ஜாதிய சகதியில் மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழக மக்களை விடுவிப்பதில் பெரும் பாத்திரம் வகித்தவர். ஜாதி மறுப்புக்கு எதிராக தனது கருத்துக்களை துணிந்து கூறியவர். பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் தனது கருத்துக்களை கூறுவதற்கு என்றைக்குமே தயங்கியதில்லை.

இவரது சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனர். இவரது சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்ததே திராவிடர் சித்தாந்தம்.

1925 - 30களில் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலருடன் இணைந்து ஈரோட்டுப் பாதையை அமைத்து ஒரு சோசலிச சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் பயணித்தவர் பெரியார். பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். இந்த இரண்டு சிகரங்களும் ஒன்றிணைந்த புள்ளிகளும் - விலகிய புள்ளிகளும் சீர்தூக்கிப் பார்த்து. இன்றைக்கு பெரியார் இருந்திருந்தால் அவரது இலக்கு எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதை நின்று நிதாணித்து சிந்திக்க வேண்டியது அவசியம். நிச்சயம் அவர் இடதுசாரி முகாமிலேதான் இருப்பார். (இது கற்பனா வாதம் ஆகாது) பெரியாரிய சிந்தனையின் எதார்த்தம்.

அந்த அடிப்படையில் இன்றைக்கு பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிட சித்தாந்தம் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு முனை மழுங்கிப் போய் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற புதிய சீரழிவிற்கு இட்டுச் சென்றது.

பெரியாருக்குப் பின் பெரியாரின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் பரவலான வெகுஜன மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வதற்கு மாறாக அவரது திராவிடர் கழகம் ஒரு கார்ப்பரேட் அலுவலகமாக மாறியதோடு, அவரது பெயரில் கல்லூரிகளைத் துவக்குவது, பெனிபிட் பண்ட் நடத்துவது, பெரியார் புறா நடத்துவது... என்று திசை மாறி அவரது கொள்கையிலிருந்து முற்றிலுமாக விலகி இன்றைக்கு வீரமணியின் சிந்தைக்குள் அடைப்பட்டு கிடக்கிறது திராவிடர் கழகம்.

பெரியாரின் கொள்கைகள் இன்றைக்கு மக்கள் மத்தியில் பேசப்படுவதில்லை. பெயருக்கு ஒரிரு மாநாடுகள் நடத்துவதும், பொதுக்கூட்டங்கள் நடத்துவமாக நின்று விடுகிறது. மேலும் தமிழகத்தில் ஆட்சியில் வரும் அதி்முக, திமுக என மாறி, மாறி தனது சொத்திற்கு பாதுகாப்பு தேடும் கழகமாக மாறிவிட்டது.

தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்க வேண்டிய திராவிடர் கழகம் பல நேரங்களில் வெறும் அறிக்கையோடு நின்று விடுகிறது. அதற்கான களப்பணிகள் எதனையும் செய்வதில்லை.

இந்நிலையில் வீரமணியோடு கருத்து வேறுபாடு கொண்டு வேறு களம் கண்டு பெரியார் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல முனைந்திருக்கும் பெரியார் திராவிடர் கழகத்தின் மீது வழக்குத் தொடுப்பதும். பெரியாரின் கொள்கைகளை - கருத்துக்களை முழுக்க முழுக்க தனதாக்கிக் கொண்டு உரிமைக் கொண்டாடுவதும் பெரியாருக்கு இழைக்கும் துரோகமாக கருத முடிகிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உப்புச் சப்பில்லாத சொத்தை காரணம் மட்டுமே. அதாவது, யார் வேண்டும் என்றாலும் பெரியார் கருத்தை வெளியிடலாம் என்றுச் சொன்னால் அவரது கருத்தை திரித்து விடுவார்களாம்.

திரு வீரமணி அவர்கள் இதுவரை அப்படி எந்த வகையில் பெரியாரின் கருத்துக்களை அவரது எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் திரித்திருக்கிறார்கள்? அல்லது வேறு யார் திரித்திருக்கிறார்கள் என்று உலகுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளார்.

மொத்தத்தில் ஒரு புரட்சிக்கரமான சிந்தனையாளரின் கருத்துக்களை கழகத்திற்குள் பூட்ட முனைவது பெரியாரின் சுதந்திர கொள்கைக்கு எதிரானது. எனவே தமிழக மக்கள் பெரியாரின் கருத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைக்க வரவேண்டும். அப்போதுதான் பெரியாரையே நாம் மீட்க முடியும். பெரியாருக்கு சிலை வைத்தால் போதாது அவரது சிந்தனையை விதைக்க வேண்டும் அதுவே தமிழகமும் - இந்தியாவும் எதிர்பார்க்கிறது. அதற்கு தடையாக இருக்கும் சக்திகள் பெரியாரிய எதிர் சிந்தனை சக்திகளே!

இணையத்தில் திராவிடம் பேசுபவர்கள் - அல்லது பெரியார் பெயரை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் இதுபற்றி சிந்திப்பார்களா? செயல்படுவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்! அது வரை பெரியாரை மீட்கும் சக்திகளுடன் துணை நிற்போம். இணையத்தில் இதற்காக தமிழச்சி அவர்கள் சிறப்பான போராட்டத்தை தொடுத்து வருகிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

விரைவில் இணையத்தில் "பெரியார் சிந்தனை மீட்பு கழகம்" ஏதாவது ஒன்று உருவானால் நாட்டுக்கு நல்லது என்று முடிக்கிறேன்.

May 05, 2007

சுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேல்!


சுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேல்! இந்த தலைப்பை பார்த்ததும் பலருக்கு கடும் கோபம் பொத்துக் கொண்டு வரும். வேண்டுமென்றே திட்டமிட்டு பெரியாரையும், பெரியாரிய இயக்கத்தை தாக்கும் நோக்கோடு எழுதப்பட்டுள்ளது என்ற ஆத்திரம் வெளிப்படும். மேற்கண்ட தலைப்பும் - கீழே உள்ள கருத்தும் என்னுடையதல்ல; 1932-இல் சாட்சாத் தந்தை பெரியாரால் ‘சுயமரியாதை-சமதர்ம’ கூட்டத்தில் வெளிப்படுத்திய கருதே இங்கே முன்வைக்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் பெரியாரிய கருத்துக்களை தங்களுக்கு ஏற்ப பொருத்திக் கொள்ளும் நிலைதான் நீடிக்கிறது. அதன் உள்ளார்ந்த சாரத்தை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப வளர்த்தெடுக்கும் நிலை இதில் தெரியவில்லை. மேலும் பார்ப்பனர்களுக்கு எதிரான - வறட்டு கடவுள் மறுப்பு - இனவாத அடிப்படையில் மட்டுமே அணுகப்படுகிறது. இந்நிலையில் பெரியாரின் கருத்துக்களை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும்.




‘சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை இயக்கமாகி விட்டது. அதை அடக்காவிட்டால் நாட்டிற்கு இன்னல்கள் நேரும் என்று காங்கிரசுகாரர்களும் ஈ.வெ.ரா. அவர்களைத் தாக்கத் தொடங்கினர்’


பெரியார் கூறினார் : பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல், சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்திற்குப் பொருளாதாரமும் - அரசியலும் அவசியமானதா? அல்லவா? இந்த இரண்டையும் விட்டு விட்டுச் செய்யும் முற்போக்கிற்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக, வேடிக்கையாகப் புராண முட்டாள்தனத்தையும், பார்ப்பனச் சூழ்ச்சியையும் பேசிக் காலங் கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால், அது அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன்.”




- பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா., பக்கம் 12 - இந்த நூலில் உள்ள வேறு சில கருத்துக்களை மேற்கோள் காட்டி பேசினார் தி.க. தலைவர் கி. வீரமணி, கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டு - சிங்காரவேலர் சிந்தனைகள் புத்தக வெளியீட்டின் போது.