December 01, 2005

ஐ.ஐ.டி. வெளியேறும் அறிவு!

ஐ.ஐ.டி. மாணவர் ஒருவருக்கு வெளிநாட்டு நிறுவனம் மாதம் ரூ. 36 லட்சம் சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்ள சம்மதித்துள்ளது. இதுமட்டுமின்றி 150 பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஆண்டு இந்திய ஐ.ஐ.டி.க்களில் “கேம்ப° இன்டர்வியூ - கேம்ப° பிளே°மெண்ட்” செய்வதற்கு விண்ணப்பித்துள்ளன. இதில் 50 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தினமணியில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

உலகளவில் கல்வித்துறையில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது இந்திய ஐ.ஐ.டி.க்கள். இந்திய அரசு உயர் தொழில்நுட்பத்திற்காக இந்திய நாடு முழுவதிலும் 7 ஐ.ஐ.டி.க்களை 1950களில் உருவாக்கியது. இத்தகைய ஐ.ஐ.டி.க்களில் படித்து வெளிவரும் மாணவர்கள் விஞ்ஞானிகளாகவும், சிறந்த கல்வியாளர்களாகவும், நிர்வாகிகளாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் வெளி வருகின்றனர்.இத்தகைய திறமை வாய்ந்த மாணவர்களை இந்திய அரசும் - மாநில அரசுகளும் பயன்படுத்திக் கொள்கிறதா? என்றால் அதுதான் இல்லை! உண்மையில் நம்முடைய மக்கள் பணத்தில் பெரும் தொகை இத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. (சாதாரண அடிப்படை கல்விக்கு ஒதுக்கப்படுவதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.) அதுமட்டுமின்றி ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் மிகதரமான கல்வியை பெறுகின்றனர். இத்தகைய மாணவர்கள் தங்களது கல்வியை முடிக்கும் தருவாயில் வெளிநாட்டு நிறுவனங்கள் கழுகுப்பார்வையாக கொத்திக் கொண்டு செல்கின்றன.

குறிப்பாக ஐ.ஐ.டி. மாணவர்கள் 25,000க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். உலகம் முழுவதிலும் பல லட்சம் இந்திய அறிவாளிகள் வெளி நாடுகளில் நமது அறிவை விற்றுக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான வாய்ப்பை நமது இந்திய ஆட்சியாளர்கள்தான் உருவாக்கித் தர வேண்டும்! இதற்கான குற்றவாளிகள் நமது ஆட்சியாளர்களே தவிர இந்த மாணவர்கள் இல்லை!

ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் = நூறு கோடி) மதிப்பு இந்திய அறிவு வெளியேற்றப்படுவதாக “2001ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு மனிதவள மேம்பாட்டு” அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தற்போது இம்மதிப்பு பல மடங்கு அதிகரித்திருக்கும். இதிலிருந்தே நம்முடைய இந்திய அறிவுச் செல்வம் எவ்வளவு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொள்ளை போகிறது என்பதை அறியலாம்.

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -
கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!”

மகாகவி பாரதியின் கனவு இங்கே தகர்க்கப்படுகிறது.



இந்திய நாட்டில் பணிபுரியும் நேர்மையான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுகிறதா என்பதை பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒரு உதாரணம்:‘கான்பூர் ஐ.ஐ.டி.யில் பயின்ற ஏழை மாணவன் சத்தியேந்தர் துபே - தங்க நாற்கர சாலை அமைக்கும் பணியில் அதிகாரியாக பணி புரிந்த போது, காண்ட்டிராக்டர்களின் கொள்ளைகயைம், ஊழல்களையும் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். இக்கடிதத்தை ரகசியமாக வைக்கும்படியும் வலியுறுத்தப்பட்டிருந்தது. நிலைமை என்னவென்றால் பிரதமர் அலுவலக்ததில் இருந்தே இக்கடிதம் காண்ட்டிராக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சத்தியேந்தர் துபே காண்ட்டிராக்ட் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார்” இதுதான் நேர்மையான அதிகாரிகளுக்கும் - சிறந்த மாணவர்களுக்கும் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட அங்கீகாரம். இவர்கள் இந்துக்களின் மேன்மையான ஆட்சியைக் கொண்டுவரப்போவதாக கூறுவது “காண்ட்டிராக்ட் கொள்ளையர்களின் - பெரு முதலாளிகளின் ஆட்சிதான்” என்பதை நிருபித்துள்ளனர்.

இந்த படுகொலையைக் கண்டித்து ஐ.ஐ.டி. மாணவர்கள் சத்தியேந்தர் துபே பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.skdubeyfoundation.org/index.php

மது மத்திய - மாநில ஆட்சியாளர்களின் கல்விக் கொள்கை பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவை செய்வதே தவிர வேறில்லை! நமது அறிவுச் செல்வத்தை பயன்படுத்திட தேவை சமூக மாற்றம்! இந்திய நாட்டில் உள்ள மென்பொருள் வல்லுனர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநனர்களை நமது நாட்டில் பயன்படுத்தினால் இந்திய நாட்டின் முன்னேற்றம் எட்டாத தொலைவில் நிற்கும். இதை யார் செய்வது? தேவை மாற்றம்! நல்ல சமூகம் உருவாக்கிட சங்கமிப்போம்!

5 comments:

Muthu said...

நம்ம அரசாங்கம் எல்லாரையும் பயன்படுத்த முடியாது. அப்படியே பயன்படுத்த முயன்றாலும் மாணவர்கள் ஒத்துழைப்பதில்லை.(பாதுகாப்பு இல்லை என்பது ஒரு சோகம்).

எதையாவது உருப்படியாக சாதிப்பது என்பதை விட்டு பணம் சம்பாதிப்பது(அதுவும் உருப்படியானது தான்.ஆனால் சமுதாயத்திற்கு பயனில்லை) தான் சாதனை என்ற நிலைக்கு நாம் மாறி பல ஆண்டுகள் ஆகின்றன.

சில காலம் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தாய்நாட்டில் தொழில் துவங்க கூட இவர்கள் முன்வருவதில்லை என்பது வருந்ததக்கது. கம்ப்யூட்டர் வல்லுனர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சந்திப்பு said...

முத்து சார் சரியா சொன்னீங்க...

இதற்கு என்ன காரணம்? நம்ம அரசு சமூக கல்வியை கொடுக்காததும், அதுபற்றியெல்லாம் நம்ம ஆட்சியாளர்களுக்கு கவலையில்லாததும்தான்.

கே. செல்வப்பெருமாள்

மணியன் said...

சமீபத்தில் கொலைசெய்யப்பட்ட மஞ்சுநாத் சண்முகமும் ஐ.ஐ.எம் லக்னோ பட்டதாரி.பெட்ரொல் பங்கில் நடக்கும் ஊழலை தடுக்க முயற்சித்து உயிர் விட்டவர். இலட்சங்கள் வரும் வேலையைவிட இலட்சியமே இந்தியாவில் பணியாற்றுவது என்பவருக்கெல்லாம் இக்கதி யென்றால் யார் வருவார்கள் ?

சந்திப்பு said...

சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள் மணியன். வருகைக்கு நன்றி! நம்நாட்டில் நேர்மையாளர்கள் பொதுவாழ்வில் பங்கெடுப்பது மிகக் குறைவாக இருப்பதே இதுபோன்ற அநியாயங்களுக்கு காரணம். பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்போல் பொதுவாழ்வில் ஈடுபடுவதன் மூலம் சாக்கடைகளை முற்றிலும் இல்லாமலாக்கலாம்.

கே. செல்வப்பெருமாள்

நிலா said...

முத்து,
தொழில் தொடங்க இந்தியா சென்று கையை சுட்டுக் கொண்டவர்கள் எத்தனையோ பேரை நானறிவேன். அனைவரும் சலித்துக்கொள்ளும் விஷயம் என்னவென்றால் அரசாஙத்திடமிருந்து ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்பதுதான். அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறதுதான்.

மேலும் பல சமயம் மேல் நாட்டில் நமக்குக் கிடைக்கும் தனி மனித மரியாதையும் சுதந்திரமும் நம் சொந்த நாட்டில் நமக்கு கிடைப்பதில்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு உணர்ந்திருக்கிறேன். சுகாதாரம், வசதி என்பதை எல்லாம்விட இதுபோன்ற அடிப்படைப் பிரச்சனைகள்தான் இந்தியர்களைத் தாய் நாடு திரும்பாமல் துரத்துகின்றனவோ என்னவோ?