November 30, 2005


உதிரும் தாமரை



சன்னியாசி உமா பாரதி பா.ஜ.க.வின் °டண்ட் மா°டர் என்பதை நாம் அறிவோம்! மத்திய பிரதேச மாநிலம் ஒரு வருடத்தில் மூன்று முதல்வர்களை கண்டுள்ளது; உமாபாரதி, பாபுலால் கவுர், சிவராஜ் சிங் சவுகான். “உமா பாரதி நான் சன்னியாசியாக இருந்தாலும், நானும் மனிதன்தான்” எனக் கூறியுள்ளார். அவரது பதவியாசையை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பா.ஜ.க. கட்டுப்பாடான கட்சி, தூய்மையான கட்சி, சிறந்த நடத்தைகளை கொண்ட கட்சி என்று நீண்ட காலமாக கூறிவந்தாலும், அதனுடைய ஆதரவாளர்களே இன்று அதை மறுப்பார்கள்! பா.ஜ.க.வும் சுயநல, ஊழல், ஜனநாயகமற்ற, தலைமைக்கு கட்டுப்படாத தொண்டர்களைக் கொண்ட கட்சி என்பதை நாடே அறிந்து கொண்டது.

நானே உண்மையான பா.ஜ.க. என்று உமா பாரதி கூறியுள்ளார்; ஆடிக்கொண்டிருக்கும் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கும் அத்வானி விழிபிதுங்கி நிற்கிறார். ரத யாத்திரை மூலம் மதக்கலரவரங்களை தூண்டுவதில் புகழ்பெற்ற அத்வானி “ராம்-ரொட்டி யாத்திரை” எங்களுடைய அதிகாரப்பூர்வமான யாத்திரையல்ல என்று அறிவிக்கிறார். அவருக்கு தெரியும் இது வெறும் “பதவி பித்து யாத்திரை” என்று. இந்தியா ஒளிர்கிறது என்று கூறிய உமாபாரதிக்கு “ரொட்டி”கூட கிடைக்கவில்லை என்ற நிதர்சனத்திற்கு இப்போதுதான் வந்திருக்கிறார்!

பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன் கட்டுக் கட்டாக பணம் பெற்றபோதே அவர் மீது எந்தவிதமான சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாகத்தான் வாஜ்பாய் ஆட்சி இருந்தது. தற்போது உமா பாரதி மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறுவதெல்லாம் பா.ஜ.க.வின் நாடகமே தவிர வேறல்ல!

சமீபத்தில் ஆர்.எ°.எ°. தலைவர் சுதர்சன் “இந்துப் பெண்கள்” அதிகமான பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மு°லீம் மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். ஒரு வேளை ஆர்.எ°.எ°.க்கு உமா பாரதி போன்ற பெண்கள் சன்னியாசிகளாக இருப்பது வருத்தமாகக் கூட இருக்கலாம். ஆர்.எ°.எ°.சில் பெண்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்வதில்லை என்பதில் இருந்தே அது எந்தளவிற்கு ஆணாதிக்க அமைப்பு என்பது புரியும்.


இதே உமா பாரதி ஒரு முறை பகிரங்கமாக “பா.ஜ.க. உயர் சாதியினர் கட்சி” என்று குற்றம் சாட்டினர். இந்துத்துவா என்ற பெயரில் வர்ணாசிர கொடுமையை மீண்டும் நிலை நாட்டுவதற்கு துடித்துக் கொண்டு இருக்கும் அமைப்பே பா.ஜ.க. எனவே இவர்களுக்கு பெண்கள் முதல்வர் போன்ற உயர் பொறுப்பு வகிப்பது எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும்!

“இந்துத்துவா இந்துக்களின் தத்துவம்” என்று கூறிக்கொள்ளும் ஆர்.எ°.எ°. - பா.ஜ.க. - வி.எச்.பி. கும்பல் ஹரியானாவில் ஐந்து தலித்துக்களை பசுமாட்டை கொன்றார்கள் என்று கூறி கல்லால் அடித்தே கொன்றது. இதுதான் இவர்களின் இந்துத்துவா - உண்மையில் இந்துத்துவா என்றால் பிராமண மேலாதிக்கம் என்பதைத் தவிர வேறென்ன?

தாமரையின் இதழ்கள் உதிர ஆரம்பித்து விட்டதன் அடையாளமே உமா பாரதி - அத்வானி - வெங்கய்யா - வாஜ்பாய் மோதல்களின் வெளிப்பாடு. பாசிச சக்திகளின் கருத்தியலுக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்துவதன் மூலம், இவர்களை இந்திய மண்ணில் இருந்து வேறோடு வீழ்த்திட இதுவே தருணம்!

நாமனைவரும் இந்திய மக்கள் - நமது அண்டை நாடுகளில் இருப்போர் நமது சகோதரர்கள் உலக உழைக்கும் மக்களை ஒன்றினைப்போம் பாசிச சக்திகளை - கருத்தாக்கத்தை வீழ்த்துவோம்!

November 29, 2005

தினமலருக்கு நன்றி!


தினமலரில் வெளியாகும் “டாட் காம்” பகுதியில் என்னுடைய “சந்திப்பு” தளத்தினை வெளியிட்டு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

அன்புடன் - சந்திப்பு

November 27, 2005

மனித உரிமையும் - மனிதவள மேம்பாடும்


மனித உரிமை குறித்து சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில், ‘தேசிய மனித உரிமை கமிஷன்’ தலைவர் ஏ.எ°. ஆனந்த் பேசும் போது, உலகிலேயே முதன் முதலில் “மனித உரிமை தத்துவம்” தோன்றியது இந்தியாவில்தான் என்றும், சுதந்திரப் போராட்டத்தின் போதே லோகமான்ய திலகர் மனித உரிமைகள் குறித்து குரலெழுப்பியதையும் குறிப்பிட்டு பெருமிதடைந்தள்ளனர்.
அத்துடன் மனித உரிமைகள் என்றால், எழுத்துரிமை, பேச்சுரிமை, பாலின சமத்துவம்... போன்றவைகள் மட்டுமல்ல; “நம் நாட்டில் கோடிக்கணக்கானவர்கள் வறுமையில் வாடுகின்றனர். இதுவும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளதோடு, உலகில் உள்ள 40 கோடி ஏழைகளின் மொத்த வருமானம் 500 பணக்காரர்களின் வருமானமாக உள்ளது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இது இன்றைய உலகமய உலகில் நிலவும் ஏற்றத் தாழ்வை மிகத் தெளிவாக அம்பலப் படுத்துவதாக உள்ளது.
சமீபத்தில் ஐ.நா. சபை “மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005”-யை வெளியிட்டது. இதில் 177 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொரு நாட்டு மக்களின் மனித வளத்தையும், எட்ட வேண்டிய இலக்கையும் சுட்டிக்காட்டி வருகிறது. இந்த வரிசையில் நம்முடைய இந்திய நாடு 127வது இடத்தில் இருக்கிறது. இதிலிருந்தே நம்முடைய நாட்டின் மனிதவளத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம். நமக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய இலங்கையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இனச்சண்டைகள் நடந்து வருவதை நாம் அறிவோம். இருப்பினும் கூட மனிதவளத்தில் நம்மை விட அவர்கள் முன்னிற்கின்றனர்; இலங்கை இப்பட்டியலில் 93வது இடத்தை பிடித்துள்ளது.‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பிரச்சாரம் செய்த அத்வானி, வாஜ்பாய், மோடி வகையறாக்கள் நமக்கு பின்னால் 135வது இடத்தில் பாகி°தானும், 139வது இடத்தில் வங்காளதேசமும் இருப்பதைக் கண்டு திருப்தியடையலாம்.



வருங்கால மன்னர்களின் இன்றைய நிலைஅறிக்கை மிக முக்கியமாக சுட்டிக்காட்டியுள்ளது இந்திய குழந்தைகளின் இன்றைய நிலை குறித்தே! “குழந்தை பிறப்பு - இறப்பு விகிதம் மிக கவலையளிப்பதாக உள்ளது; மில்லினிய இலக்கில் இருந்து இந்தியா விலகியிருக்கிறது.


இந்தியாவின் தெற்கத்திய நகரங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி ஓங்கியிருக்கிறது; ஆனால், 11 குழந்தைகளில் 1 குழந்தை அதன் 5 வயதை எட்டுவதற்குள் இறக்கிறது. இதற்கு ஊட்டச்சத்துக் குறைவு, சொற்பத் தொகை ஒதுக்கீடு, குறைந்த தொழில் நுட்பம் போன்றவைகளே! மேலும் 4 பெண் குழந்தைகளில் 1 குழந்தைக்கும், 10 ஆண் குழந்தைகளில் 1 ஒரு குழந்தைக்கும் ஆரம்பக் கல்வி கிடைப்பதில்லை. மொத்தத்தில் இந்திய குழந்தைகளில் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.”
இது வெறும் வெற்று கோஷமல்ல! இந்திய நாட்டின் உயிர் நாடி பிரச்சினை!!குழந்தை இறப்பு உண்மை நிலை!“உலகில் குழந்தை இறப்பில் 5 வது இடத்தை வகிக்கும் இந்தியாவில், ஆண்டுதோறும் 25 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.” மேலோட்டமாக படிப்பவர்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கும்! இது சரியாக இருக்குமா என்ற கேள்விகூட எழும்! உண்மை இதுதான்!சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வரும் குழந்தை இறப்புச் சம்பவங்களை ‘டெக்கான் க்கிரானிக்க போன்ற ஒரு சில ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளது.


மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடி மக்கள் வசிக்கக்கூடிய விதர்பா மாவட்டங்களில், குறிப்பாக அமராவதி, நாசிப், தேண், நான்-தர்பர், காச்சிரோலி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஏப்ரல் - ஜூலை, 2005 மாதங்களில் மட்டும் 2675 குழந்தைகள் இறந்துள்ளன. இந்த புள்ளி விவரம் கூட மகாராஷ்டிர அரசு கொடுத்ததே.சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தில் திரு. கிரண் பதுக்கூர் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில் மேற்கண்ட குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் இறந்துள்ளன.


மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் எந்தவிதமான அக்கறையுமின்றி இருக்கின்றன என்று தொடுத்த வழக்கின் மூலம் இது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது தவிர 33,000 குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் சூம்பி, வயதிற்கேற்ற எடையின்றி சோமாலியாவில் கண்ட எலும்புக்கூடு குழந்தைகளாகவே இருக்கின்றனர். இதில் 16,000 குழந்தைகள் இறக்கும் தருவாயில் இருக்கின்றன.


இக்குழந்தைகளின் படத்தை காணும் எந்தஒரு மனித இதயமும் திடுக்கிடாமல் இருக்க முடியும் நம்முடைய முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ இரக்கமற்ற ஆட்சியாளர்களைத் தவிர.மகாராஷ்டிர அரசு சமர்ப்பித்த புள்ளிவிவரங்களின் படியே 1085 குழந்தைகள் முதல் பிறந்தநாளை எட்டுவதற்குள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டன. 1590 குழந்தைகள் 6 வயதைக்கூட எட்டவில்லை.நம்முடைய தமிழ் பத்திரிகை உலகம் இப்பிரச்சினை குறித்து பெரும் மவுனமே சாதித்தது. பாகி°தான் தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவல் என்று ஏதாவது ஒரு உளறுவாயன் கூறினால் போதும், அது குறித்து பக்கத்திற்கு பக்கம் வண்ணப்படங்களுடன் விளக்கும் பத்திரிகை உலகம், நம்முடைய இந்திய குழந்தைகளின் சுவாசத்தை நிறுத்தும் அரசு பயங்கரவாதத்தை குறித்து மவுனமே சாதிக்கிறது.
மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் கவலையெல்லாம் மும்பை பங்குச் சந்தை சென் செக்° 8000 புள்ளிகள் உயர்ந்துள்ளதும், அதை கீழே விழாமல் பார்த்துக் கொள்ளும் ‘வாட்ச் டாக்’ ஆக செயல்படுவதுமே!மகாராஷ்டிர சம்பவம் ஏதோ திடீரென்று முளைத்த சம்பவமல்ல; கடந்த 5 ஆண்டுகாலமாகவே இதுபோன்ற சம்பங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சமூக ஆர்வலர்கள் இதற்கெதிராக தொடர்ந்து குரலெழுப்பியும் வருகின்னர். ஏன் அமெரிக்க ஆதரவு பத்திரிக்கையான ‘டைம்’ இதழ் கூட டிசம்பர் 2004இல் இது குறித்து ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.



அதில் ‘இந்தியாவில் 61,000 மில்லினிய பணக்காரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் புதியதாக 11,000 பணக்காரர்கள் இப்பட்டியலில் சேர்ந்துள்ளனர். அதே சமயம் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானம் பெறுவர்கள் 30 கோடி பேர்’ என சுட்டிக்காட்டியுள்ளது. இதுதான் உலகமயமாக்கலின் உண்மையான வெற்றி!பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை போகவோ!நாங்கள் சாகவோ! என்ற பாரதியின் ஆவேசக் கனல் நெஞ்சத்தில் முட்டாமலில்லை. வேலைவாய்ப்பற்ற வளர்ச்சிமனிதவள மேம்பாட்டு அறிக்கையில் அதிகரித்து வரும் வேலையின்மை குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. “குறிப்பாக கிராமப்புற வேலையின்மை என்பது கடந்த காலத்தை விட தற்போது அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. விவசாய உற்பத்தி என்பது ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்து வருகிறது. அதே சமயம் விவசாய கூலியில் தேக்க நிலை நிலவுகிறது.



குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் “வேலைவாய்ப்பற்ற” வளர்ச்சி நிலவுகிறது. 1980, 1990களில் தேசிய அளவில் ஒரு சதவீத வளர்ச்சி இருந்தால், அது 3 சதவீத வேலைவாய்ப்பை உருவாக்கியது.”“குறிப்பாக பாலின (ஆண் - பெண்) ஏற்றத்தாழ்வு என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல் மாநிலங்களுக்குள் ஏற்றத்தாழ்வு என்பது நிலவுகிறது.” என்று இந்தியாவின் இன்றைய நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005.நாடு முழுவதிலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதை பல்வேறு ஊடகங்கள் படம் பிடித்து வருகின்றன. அதே போல் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு பிழைப்பைத் தேடி விவசாயிகள் இடம் பெயர்வது என்பது அன்றாட நிகழ்வாகி விட்டது.



பாலின ஏற்றத்தாழ்வு குறித்து கூறும் அறிக்கை, “ஒரு வயது முதல் ஐந்து வரை உள்ள குழந்தை இறப்புகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது” மனிதவளத்தை எவ்வாறு அளக்கிறார்கள் என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச அளவில் “உயிர் வாழ்தல், கல்வி, வருமானம், சுகாதாரம், சொத்து, வர்த்தகம், அறிவு” என அந்தந்த நாடுகளில் பல்வேறு அமைப்புகள் மேற்கொள்ளும் கருத்தாய்வுகளை வைத்து சர்வதேச தர அடிப்படையில்தான் இந்த மனிதவள மேம்பாட்டு அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்கிறது.இதன்படி 127வது இடத்தில் உள்ள இந்திய மக்களின் உயிர் வாழ்தல் காலம் 64 ஆண்டுகள் மட்டுமே, அதே சமயம் சோசலிச நாடுகளான கியூபாவில் இது 87 ஆண்டுகளாக உள்ளதோடு, மனிதவள மேம்பாட்டில் 52வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் சீனாவில் 78 ஆண்டுகளாக உள்ளதோடு, மனித வளத்தில் 85வது இடத்தைப் பிடித்துள்ளது.



மக்கள் தொகையில் உலகிலேயே சோசலிச சீனா முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வியட்நாமில் 76 ஆண்டுகளாகவும், மனித வளத்தில் 108வது இடத்திலும் உள்ளது. மனிதவளத்தில் 93வது இடத்தில் உள்ள இலங்கை உயிர் வாழ்தலுக்கு 82 ஆண்டுகளாக உள்ளது.மேற்கண்ட விவரத்தின் மூலம் இந்திய நாட்டில் மனித உயிர் வாழ்தலுக்கான உத்திரவாதம் என்பது மிக குறைந்த ஆண்டுகளாக உள்ளதை அறிய முடிகிறது.


மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான நிலம், உணவு, வேலை ஆகியவற்றை உத்திரவாதம் செய்வதன் மூலம்தான் மனிதவளத்தை உண்மையிலேயே மேம்படுத்த முடியும். சோசலிச நாடுகளில் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நமது நாட்டில் செல்வந்தர்களை உற்பத்தி செய்வதிலும், அதில் உலக நாடுகளோடு போட்டியிடுவதற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. உலக பணக்காரர்கள் குறித்து பட்டியலிடும் “போர்ப்°” 2003ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 5 இந்தியர்களின் சொத்து மதிப்பு 24.8 பில்லியன் டாலர்கள். (1,24,000 கோடி ரூபாய்) இது பிரிட்டனில் உள்ள 5 கோட்டீ°வரர்களின் சொத்து மதிப்பை விட அதிகம். அவர்களது சொத்து மதிப்பு 24.2 பில்லியன் டாலர் (1,21,000 கோடி ரூபாய்).இந்தியா 2020ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய இந்தியா 2020 புத்தகம் இந்திய நாட்டில் மிக புகழ்பெற்றது. படித்த இளம் தலைமுறையினரிடைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
“இந்தியா ஒளிர்கிறது” என்று பிரச்சாரம் செய்தவர்கள், “விஷன் 2020”, “வல்லரசு இந்தியா” என்று பல விதங்களில் மீடியாக்கள் மூலம் பெரும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டாலும், உண்மையில் இவர்களது நலன் யாருக்கானது என்பதை “ஐ.நா. மனிதவள மேம்பாட்டு” அறிக்கையே அம்பலப்படுத்தியுள்ளது.



இவர்களது திட்டங்கள், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற மாயவலைகள் அனைத்தும் பிரம்மையை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்தியா நாட்டில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை நாள்தோறும் அதிகரித்து வருகிறது என்பதே உண்மை!



ஏன்! சுதந்திரம் பெற்று 58 ஆண்டுகள் முடிந்தும் கூட இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரம்ப கல்வி என்ற இலக்கை கூட எட்டவில்லை. “சமீபத்தில் பேராசிரியர் அசக் அஹமது அவர்கள் எழுதிய கட்டுரையொன்றில் இந்திய நாட்டில் ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்பத்தான் கல்வித் திட்டங்கள் அமைகிறது. உயர் கல்வியில் அரசு செலுத்தக்கூடிய பெருங்கவனத்தை, மிகச் சிறிய அளவில் கூட ஆரம்பக் கல்வியில் செலுத்தவில்லை” என்று அம்பலப்படுத்தியிருந்தார். இன்றைக்கும் மூன்றில் இரண்டு பகுதியினர் எழுத்தறிவில்லாத சமூகமாக இந்தியச் சமூகம் இருக்கிறது என்பதை கண்டு வெட்கப்படுவார்களா இந்திய ஆட்சியாளர்கள்.



புதிய சமூகம் படைத்திட - நம் மக்கள் ஆரோக்கியமான வாழ்வு பெற்றிட - முதலில் தேவை விவாதங்கள், நாம் எந்த திசையை நோக்கிச் செல்ல வேண்டும்? படித்தவர்கள் - உயர் கல்வியைக் பெற்றுள்ளவர்கள் - சமூகத்தில் நல்ல அந்த°தில் உள்ளவர்கள் என்று கூறிக் கொள்ளும் நாம் “சமூகத்தில் நிலவும் இத்தகைய ஏற்றத் தாழ்வான நிலையை” மாற்றிட கரங்கள் இணைவோம்! மாற்றங்களை நோக்கி மாற்றுப் பாதையமைப்போம்!

November 26, 2005

அணு சக்தி அரசியல்!
நாட்டாண்மை செய்யும் அமெரிக்கா!




உலகளவில் தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருப்பது “ஈரான் அணு சக்தி பிரச்சினை” ஈரான் அரசு தங்களது நாட்டு வளர்ச்சிக்கு - மின்சாரத் தயாரிப்பு உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அணுசக்தியை பயன்படுத்திட திட்டமிட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்° உட்பட வலரசு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவர்களது எதிர்ப்புக்கு காரணம் ஈரான் அணு சக்தியை பயன்படுத்தி அணு ஆயுதங்களை தயாரிக்கும் என்ற அச்சமே! உண்மை என்ன?
உலகில் முதன் முதலில் அணு குண்டை பயன்படுத்தி ஜப்பானிய நகரங்களான ஹீரோஷிமாவையும் - நாகாசாகியையும் கூண்டோடு அழித்து, 3.5 இலட்சம் மக்களை புல் பூண்டாக்கியது அமெரிக்கா என்பதை உலக மக்கள் நன்கு அறிவர். மேலும் இன்றைக்கு உலகில் சூப்பர் பவராக வலம் வந்துக் கொண்டிருக்கக்கூடிய அமெரிக்காதான் உலகிலேயே அதிக அளவிலான அணு ஆயுதங்களையும், அணுக் குண்டுக்களையும் வைத்திருக்கிறது. இதுமட்டுமின்றி இ°ரேலுக்கும் இத்தகைய தொழில்நுட்பத்தை கொடுத்து மத்திய ஆசியாவில் இ°ரேலை வைத்து மற்ற நாடுகளை மிரட்டி வருகிறது. ஏற்கனவே வடகொரியாவை மிரட்டிய அமெரிக்கா அதனிடம் தோற்றுப் போனது.
இந்நிலையில் ஈராக்கிடம் பேரழிவு மிக்க ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி, ஈராக் நாட்டையும் - அதன் எண்ணெய் வளத்தையும் கொள்ளை கொண்டுள்ள அமெரிக்காவும் - புஷ்ஷூம் தற்போது “கடவுள் ஆணையிட்டதால்தான் ஈராக்கை தாக்கினேன்” என்று புதிய பொய்க்குண்டை போட்டுள்ளார்.
இதேபோல் ஈரான் மீதும் பொல்லாத நாடு என்ற பொய்ப்பிரச்சாரத்தை பரப்புவதன் மூலம், ஈரானையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் அமெரிக்காவின் கனவு!



அமெரிக்காவின் இந்த கெடு புத்திக்கு நமது இந்திய அரசும் இறையாகிப் போனதுதான் வெட்கப்பட வேண்டியது! அமெரிக்காவின் பொருளாதார - கடன் ஆசைக்காக இந்தியா இதுவரை பெற்றிருந்த நடுநிலை நாடு என்ற நிலையில் இருந்து மாறி அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக மாறிட துடித்துக் கொண்டதன் ஒரு பகுதியாகத்தான் ஈரானுக்கு எதிராக அணு சக்தி கவுன்சில் முன் வாக்களித்தது! தற்போது இப்பிரச்சினை பாராளுமன்றத்தில் பெரும் விவாதமாக முன்னுக்கு வந்துள்ள நிலையில் அமெரிக்காவின் தீவிர ஆதரவாளர்களான வாஜ்பாய் - அத்வானி வகையாறாக்கள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் - ஜனநாயகத்தின் குரல்வளையை மறைமுகமாக நெறித்து வருகின்றனர்.



நம்முடைய இந்திய நாடும், சகோதர நாடான பாகி°தானும் அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றன! ஏற்கனவே அமெரிக்கா நாம் அணு குண்டு சோதனை செய்தபோது, பல்வேறு பொருளாதார தடைகளை விதித்ததையும் நாம் மறக்க முடியாது!



விதி என்று சொன்னால் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவிற்கும் - ஐரோப்பாவிற்கும் இது வேறாக இருக்கிறது. உலகில் எந்த நாடும் மனித குலத்தை அச்சுறுத்தும் அணுகுண்டுகளை வைத்திருக்கக்கூடாது! இத்தகைய அணுகுண்டுகளை அழித்து விட வேண்டும். இதனை முதலில் நிறைவேற்ற வேண்டியது அமெரிக்காதான்!



அணுசக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் எந்தவொரு நாட்டிற்கும், தடைஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உலக மக்களின் கருத்தினை திரட்டுவதே இன்றைய நமது கடமையாக இருக்கும்.

November 25, 2005

தண்ணீருக்காக கண்ணீர் விட்டோம்! இன்று?



தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மழை பெய்துள்ளதால், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் பெரும்பாலான மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்களின் இயல்பான வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. தமிழக கிராமப்புற பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது இன்றைய நிலை!




தமிழகத்தின் முக்கிய நரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெரும்பாலான கிராமங்களில் கூட மக்கள் குடிநீருக்காக அலையாய் அலைந்ததை நாம் கடந்த காலங்களில் கண்டோம். குடிநீரும், குடமும் அரசியலை தீர்மானிக்கும் விஷயமாகிப்போனது; நம் வீட்டுப் பெண்களின் பெரும் பகுதி நேரம் குடிநீர் பிடிப்பதிலேயே கழிந்தது! இரவு - பகல் என கண்களும், கால்களும், மனமும் குடிநீர் பிடிப்பதிலேயே குறியாய் இருந்தது.



இதே நேரத்தில் தனியார் குடிநீர் நிறுவனங்களுக்கு மட்டும் எந்தவிதமான பஞ்சமும் இல்லாமல் குடிநீர் வியாபாரம் கனஜேராய் நடந்தது. ஏன் நம் தாமிரபரணி, வைகை ஆறுகள் கூட பெப்சிக்கும் - கோக்குக்கும் விற்கப்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல; இந்திய நாடு முழுமையிலும் தண்ணீர் வியாபாரம் கார்ப்பரேட் வர்த்தகமாக மாறியது. ஆட்சியாளர்களும் - காண்ட்டிரக்டர்களும் குடிநீர் லாரிகள் மூலம் தங்களது மூலதனத்தை பெருக்கிக் கொண்டனர்.



இந்திய நதிகள் இணைப்பு கோரிக்கை



இதே நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறைப் போக்க! விவசாயத்தை காக்க! இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோஷமும் புதுப்புது அரசியல்வாதிகளாளும், அறிவாளிகளாலும் எழுப்பப்பட்டது. இவர்களது சிந்தனை நியாயமானதாக இருந்தாலும், நடைமுறையில் இது சாத்தியமா? என்ற வினாவும் எழத்தான் செய்தது! ஏனெனில் அநேகமாக இந்திய நாட்டில் உள்ள நதிகளையெல்லாம் இணைக்க வேண்டும் என்றுச் சொன்னால் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் செலவாகும்! இவ்வளவு பெரிய செல்வாதாரம் நம்நாட்டில் தற்போது இல்லை! இதற்காக அந்நியர்களிடம் கையேந்தவேண்டிய நிலை ஏற்படும் - மீண்டும் வெளிநாட்டு கொள்ளைக்கும், கட்டுப்பாட்டுக்கும் இந்த நதிகள் போகும் என்பது ஒரு வாதம்! இது மட்டுமா? ஒவ்வொரு மாநிலத்திலும் ஓடும் நதிகளின் போக்கு, புவியியல் அமைப்பு ஏற்ற இறக்கங்கள், விதவிதமான நீரினங்களின் புழக்கம், தண்ணீரை சிராக கொண்டுச் செல்லத் தேவைப்படும் கனரக ஜெனரேட்டர்கள் - இதற்காக செலவிடவேண்டிய மின்சாரம், என... இன்னும் பல விஷயங்கள் கூறப்பட்டது!



இதில் எது சரி! தவறு என ஆராய்ந்து முடிவு காணவேண்டியது அவசியம் என்றாலும், இந்திய நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தையும், கிடைத்துள்ள மழை நீரையும் முறையாக சேமிப்பதற்கோ-அவற்றையெல்லாம் முறைப்படுத்துவதற்காக தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்? என்பதே நம் கேள்வி! தமிழகத்தின் பண்பாடு பேசுபவர்கள், ஏரியைத் தூர் வாருபவர்கள் எல்லாம் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது கல்லணை என்று சொன்னால் போதுமா? தற்போது என்ன நிலைமை! தமிழகத்திலும், வீடுகளில் மழைநீர் சேமிக்கச் சொன்னவர்கள், நாட்டில் சேமிக்க என்ன செய்தார்கள்?தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீர தேவை உண்மையான தண்ணீர் கொள்கை! அரசும் - ஆட்சியாளர்களும் - அரசியல்வாதிகளும் உணருவார்களா?



நம்முடைய சிவில் சமூகம்தான் இதற்குத் தீர்வு காண வேண்டும்.

November 24, 2005

சாய்பாபா 80வது பிறந்தநாள் கொண்டாட்டம்
உணர்த்துவது என்ன
?





ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபாவின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டம் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நம்மூர் தினமலர் பத்திரிகை இச்செய்தியினை இரண்டு பக்கங்களில் பல வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் டெண்டுல்கர், ஹைடெக் முதலமைச்சர் (முன்னாள்) சந்திரபாபு நாயுடு ஆகியோர் அவரிடம் ஆசிபெற்றதையும் அழகாக வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் சிறப்பாக இருந்தாலும், சிந்தித்தால் சிறப்பாக இல்லை.



புட்டபர்த்தி சாய்பாபா அமர்ந்திருந்த இருக்கையைப் பார்த்தாலே இது புரியும்! அநேகமாக தங்கம் - வெள்ளி போன்ற உயர்ரக உலோகங்களால் வடிவமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். இது மட்டுமே பல லட்சம் மதிப்பிருக்கும். அவருடன் இருக்கக்கூடிய சிஷ்யர்களைப் பார்த்தால், கோர்ட், ஷூட் போட்டுக் கொண்டு மிக கவர்ச்சிகரமாக, ஏதோ நாஸா விஞ்ஞானிகளும், மைக்ரோசாப்டில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர்களும், பல்கலைக்கழக இளம் பேராசிரியர்களும் அவருக்கு சிஷ்யர்களாக வந்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது.
மொத்தத்தில் சாப்பாபாவின் மாயைகளில் இதுவும் ஒரு மாயைதான். சாதாரண ஏழை - நடுத்தர - அப்பாவி மக்களின் நம்பிக்கைகளை மூலதனமாக்கிக் கொண்டு மதம் - பக்தி என்ற போர்வையில் ஒரு மிக மெல்லிய நூலிழையிலான வலுவான அதிகார மையத்தை கட்டியமைப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.



சாமியார்கள் என்றுச் சொன்னால் மக்களின் மனத் திரைக்குள் இன்றைக்கும் பொந்திருப்பது, மிக எளிமையாக காட்சியளித்த, எதன் மீதும் உண்மையாகவே பற்றவர்களாக இருந்த வள்ளலார், பட்டினத்தார் போன்றவர்களையும், பல சித்தர்களையும் (இவர்கள் உண்மையில் சாமியார்கள் அல்ல; மருத்துவம் உட்பட, சமூக முன்னோற்றத்திற்காக இருந்தவர்கள்) தான். ஆனால், இதற்கு மாறாக சங்கராச்சாரியார், சாய்பாபா, ஆனந்தமாயி... போன்றவர்கள் இதற்கு நேர்மாறாக பல கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புகளைக் கொண்ட - நிறுவனமயமான மடமாகவும், அறக்கட்டளைகளை அமைத்துக் கொண்டு, செய்தி ஊடகங்களையும், அரசியல்வாதிகள் - அதிகாரிகள் போன்றவர்களை பக்தியின் பெயரால் ஈர்த்துக் கொண்டு செயல்படுவது சமூகத்தில் உள்ள அடித்தட்டு - நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்படவா?



சாய்பாபா ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்தார்; அப்படி ஒரு புகைப்படமும் பிரசுரமாய் இருந்தது. என்ன நிலைமை என்றால், மிகவும் நொடிந்துபோன நிலையில், வாழ்க்கையை இழந்து விட்டநிலையில் உள்ள முதியவர் அன்று ஒரு நாள் மட்டும் நல்ல சாப்பாடு சாப்பிட்டார் என்பதைத் தவிர அவரது வாழ்க்கைத்தரம் அடுத்த நொடியோ அதாளா - பாதாளத்திற்கு சென்று விடும். இவர்களது மாயை தத்துவம் இதுபோன்ற மக்களை கரைசேர்ப்பதில்லை என்பதே உண்மை.



சமீபத்தில் நான் படித்த ஒன்றையும் இங்கு நினைவூட்டி முடித்துக் கொள்கிறோன். அருட்திரு வள்ளலார் அவர்கள் “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” எனக் கூறினார். இது சமூகத்தில் உள்ள ஏழ்மையை கண்டு இரங்கி எழுந்த மனக்குமுறலாகவே கருதுகிறோம். இதற்கு ஒருவர் பதிலளித்துள்ளார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினால் போதாது? அதை எப்படி வாழ்விப்பது என்பதுதான் பிரச்சினை!



சங்கராச்சாரியார், சாய்பாபா, அமிர்தானந்தமயி, மேல்மருவத்தூர் அம்மா... இவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியுமா!



மக்களது வாழ்க்கையை, நல்ல சமூகத்தை உருவாக்கிட கரங்கள் இணைவோம் - மாயையில் இருந்து விடுவிப்போம்!

November 23, 2005

தலிபான் தீவிரவாதிகள் வெறிச்செயல் : இந்தியர் படுகொலை



இந்திய நாட்டைச் சேர்ந்த டிரைவர் மணியப்பன் என்பவரை ஆப்கானி°தான் தலிபான் தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தலிபான் தீவிரவாதிகளின் வெறிச்செயல் இந்திய உள்ளங்களை மட்டுமல்ல; உலக மக்களின் நெஞ்சங்களையும் அதிர்வடையச் செய்துள்ளது.


தலிபான் இயக்கம் ஒரு மதவாத இயக்கம், மத அடிப்படையில் இயங்கக்கூடிய மத அடிப்படைவாத இயக்கம். இவ்வியக்கத்தின் நோக்கமே! மத அடிப்படையிலான ஆட்சி என்பதே இவர்களின் குறிக்கோள்: இவர்கள் ஆப்கானி°தானில் ஆட்சியில் இருந்தபோது உலகப்புகழ்பெற்ற பாமியான் புத்தர் சிலைகளைக் கூட வெடி வைத்தும், பீரங்கிகளைக் கொண்டும் தாக்கி அழித்தவர்கள். மதச் சகிப்புத் தன்மையோ அல்லது சுதந்திர சிந்தனைகளையோ கிஞ்சிற்றும் ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஆப்கா°தானில் உள்ள இ°லாமிய சகோதரிகளின் பாதங்கள் கூட தெரியக்கூடாது என்று கடும் கட்டுப்பாடுகளை விதித்தவர்கள்.


இத்தகைய மத அடிப்படைவாதிகளுக்கு மக்களின் உயிர்கள் மிக துச்சமானது. இதை நாம் இந்திய நாட்டிலும் கண்டோம். ஆர்.எ°.எ°. - வி.எச்.பி. - பஜ்ரங்தள் - சிவசேனா - பா.ஜ.க. போன்ற மதவாத இயக்கங்கள் இந்திய நாட்டில் இ°லாமியர்களின் புனித °தலமான பாபர் மசூதியை இடித்துத் தள்ளியதையும், அதேபோல் குஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடியதையும் இதயமுள்ள இதயங்களில் இருந்து இன்னம் அகல வில்லை.


இன்றைக்கு அமெரிக்கா “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகலாவிய போர்” என்ற பெயரில் போராடுவதாக கூறிக் கொண்டு எண்ணெய்வள நாடுகளை ஆக்கிரமித்து வருவதையும், மறுபக்கம் சங்பரிவார் - தாலிபான் - போன்ற மனித கொலைகளைப் புரியும் பயங்கரவாதிகளோடு கொஞ்சிக்குலாவுவதையும் உலக மக்கள் நன்றாகவே அறிந்து வருகிறார்கள்.


நமது கருத்தியல் போர் மக்களை கொல்லும் இத்தகைய மதஅடிப்படைவாதிகளுக்கு எதிரானதாக அமையட்டும்! மதச்சார்பின்மை - மனிதநேயம் - சுரண்டலுக்கு எதிராக தொடர்ச்சியான கருத்தியல் போரை நடத்துவதன் மூலம் மட்டுமே இவர்களின் கருத்தாக்கத்தை வேறோடு கிள்ளியெறிய முடியும்!

November 22, 2005

பீகார் தேர்தல் உணர்த்தும் பாடம்!
திருந்துவார்களா! மதச்சார்பின்மை பேசுபவர்கள்!!



பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்திய தேசத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த பாசிச பா.ஜ.க. - சங்பரிவார் வகையாறாக்கள் குஜராத்தில் பாசி°ட் நரேந்திர மோடி தலைமையில் சிறுபான்மை மக்களை நரவேட்டையாடியதை மறக்க முடியாது. நவீன ஜனநாயக உலகில் எங்கும் கண்டிராத கோரமான படுகொலையை இந்திய தேசம் சந்தித்தது. அத்துடன் தேசத்தின் இறையாண்மையை அடகு வைக்கக்கூடிய வேலையிலும் வாஜ்பாய் அரசு ஈடுபட்டது. உலகமயமாக்கல் கொள்கையை மிக வேகமாக அமலாக்கி இந்திய மக்களை ஓட்டாண்டிகாளக்கியது. பொதுத்துறையை சீரழித்தது; வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க சார் நிலையெடுத்து இந்திய சுயச்சார்பை அடகு வைத்தது. இப்படி எத்தனையோ பிரச்சினைகள் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது.



கடந்த பாராளுமன்றத் தேர்தலில் “இந்தியா ஒளிர்கிறது” என்ற பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பதவியேற்றது. இந்திய மதச்சார்பின்மை தத்துவம் காப்பாற்றப்பட்டு, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் “உணவுக்கு வேலைத் திட்டம்”, “கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம்”, “தகவல் அறியும் உரிமை”... என சரியான பார்வையில் ஒடிக் கொண்டிருக்கிறது தற்போதைய மத்திய அரசு.



தற்போது பீகார் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சங் பரிவாரங்கள் இந்திய நாட்டில் பெரும்பான்மை மக்களின் மத உணர்வை பயன்படுத்திட தீவிரமாக முனைந்து வரும் வேலையில், இந்த வெற்றியின் மூலம் அவர்களது இரத்த தேரோட்டத்தை தொடங்குவதற்கான களமாக பீகார் அமைந்து விட்டது. எந்த பீகாரில் அத்வானி ரத்த யாத்திரை நடத்தியபோது, மதச்சார்பின்மையை பாதுகாக்க கைது செய்யப்பட்டாரோ, அந்த இடத்தில் மீண்டும் அவர்களுக்கு ஆட்சியதிகாரம் கையில் சென்றது, மீண்டும் ஒரு குஜராத்திற்கு அடித்தளமிட்டதாக அமைந்து விட்டது.



“ராம்விலா° ப°வான், இந்திய கம்யூனி°ட் கட்சி போன்ற மதச்சார்பற்ற கட்சிகளின் தவறான - சுயநல நிலைபாட்டால், மதச்சார்பின்மை என்ற கொள்கை அடிப்படையிலான நிலைபாட்டிற்கு பின்னடைவை ஏற்பட்டுள்ளது.” இந்திய நாட்டில் உள்ள பாசிச அபாயத்தை முதலாளித்துவ - முற்போக்கு கட்சிகள் மனதில் கொள்ளாமல் ஹீரோயிசம் செய்ய முனைந்தால், இந்திய நாட்டில் முசோலினிகளும், ஹிட்லர்களும் தோன்றுவதை தவிர்க்க முடியாது! இனியாவது திருந்துவார்களா!



2006ஆம் ஆண்டு மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி என இந்திய தேசத்தின் மிக முக்கியமான மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. பாசி°ட் பா.ஜ.க. பெரும் பின்னடைவை சந்தித்து உள்ள இந்த நேரத்தில் பீகார் தேர்தல் டானிக்காவே அமைந்து விட்டது. மேற்கண்ட மாநிலத்தில் உள்ள ஜனநாயக கட்சிகள் - பீகார் அனுபவத்தை உணர்ந்து செயல்பட்டால்தான் உண்மையான மதச்சார்பின்மையை பாதுகாக்க முடியும். நிறைவேற்றுவார்களா! மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

November 21, 2005

எது பண்பாடு? காப்பவர்கள் யார்?






நடிகை குஷ்பு - சுகாசினி - சானியா மிர்சா ஆகியோர் வெளியிட்ட கருத்தை வைத்துக் கொண்டு பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டு கனஜோராக பத்ரிகை வியாபாரம் செய்யும் பத்ரிகை வியாபாரிகளின் வேடம் நகைப்புக்குரியதாகவே உள்ளது. நச்சுன்னு இருக்கு... பத்திரிகையைப் பார்த்தாலே தெரியும் தமிழ் பண்பாட்டின் மீது எத்தகைய காதல் கொண்டிருக்கிறது என்று. நாலாந்தர படத்தினை பக்கத்திற்கு பக்கம் போடும் பத்திரிகைகள்தான் தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காப்பாற்றப்போகிறதா? குடும்ப நாடகம் என்ற பெயரில் சன் தொலைக்காட்சி வெளியிடும் நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே இவர்களின் பண்பாடு புரியும். இரண்டு மனைவிகள், இரண்டு கனவன்மார்கள் அல்லது கணவன் மீது ஆசைப்படும் இளம் பெண்... என்று வக்கரித்துப் போன காட்சிகளை வெளியிட்டு பண்பாட்டை அரிக்கும் புல்லுரிவிகள்தான் பண்பாட்டை காப்பார்களா?