Showing posts with label RSS. Show all posts
Showing posts with label RSS. Show all posts

December 01, 2008

ஹேமந்த் கார்க்கரேவுக்கு வீரவணக்கம்!



தேசத்தை உலுக்கிய மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தாஜ் ஓட்டல், நரிமன் இல்லம், ஓபராய் போன்றவற்றில் பிணைய கைதிகளாக வைத்திருந்த அப்பாவி மக்களையும், வெளிநாட்டு பயணிகளையும் மீட்பதற்காக 60 மணி நேர ஓய்வு ஒலிச்சலில்லாத கடுமையான போராட்டத்திற்கு பின் நமது வீரர்களின் அளப்பரிய உயிர்களை தியாகம் செய்து அந்த பயங்கரவாத மிருகங்களை முறியடித்து மீட்டுள்ளனர்.

இந்த பணியில் ஈடுபட்ட நமது தேசிய பாதுகாப்பு படையினரின் சாதனையும், தியாகமும் போற்றப்பட வேண்டியது. மெச்சத் தகுந்தது. இந்த தேசம் காக்கும் பணியில் முதல் பலியானவர் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தலைவர் ஹேமந்த் கார்க்கரே! இவரது இழப்பு மகாராஷ்டிரத்திற்கு மட்டுமின்றி தேசத்திற்கே பெரும் இழப்பாகும்.

இந்த ஒப்பற்ற மாவீரரின் தியாகத்திற்கு தலை வணங்கி வீரவணக்கம் செலுத்துவோம்.

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் பல வருடங்களாக துப்பு துலங்காத நிலையில் ஹேமந்த் கார்க்கரே பொறுப்பேற்ற பின்னர் அதன் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, அந்த சம்பவத்தில் காவியுடை பயங்கரவாதிகளின் இருண்ட முகங்கள் - காவியுடையால் மறைக்கப்பட்டிருந்ததை அம்பலப்படுத்தினார். இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து வட மாநிலங்களில் அதுவும் குறிப்பாக மகாராஷ்டிராவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொதுவாக இதுபோன்ற பயங்கரவாத நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் மதிப்பிற்குரிய வாஜ்பாய் அவர்களும் அத்வானி அவர்களும் இசுலாமிய பயங்கரவாத அமைப்பின் கையிருப்பதாகவும், இதில் ஐ.எஸ்.ஐ. பங்கு இருப்பதாகவும் உடனடியாக கதை கட்டி விடுவார்கள். நாடும் இதை நம்பித்தான் வந்தது. இப்படியான பயங்கரவாத நடவடிக்கையின் வாயிலாக குறிப்பாக இசுலாமிய சமீபத்தின் மீதே ஒரு பயங்கரவாத முத்திரையை திணிப்பதற்கு இந்துத்துவவாதிகளும், இந்துத்துவ ஆதரவு மீடியாக்கவும் கடுமையான முயற்சிகளை - கோயபல்சு பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது.

இந்த சூழ்நிலையில்தான் முதல் முறையாக சாத்வி பிரக்யா என்ற இந்து துறவி இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை அம்பலப்படுத்தியதோடு, சங்பரிவாரம் நடத்தும் இராணுவ பள்ளியின் மூலமாகத்தான் இதுபோனற் சதிச் செயல்கள் அரங்கேற்றப்பட்டது என்பதையும் நாட்டிற்கு அம்பலப்படுத்தினார் ஹேமந்த் கார்க்கரே! அது மட்டுமா? இன்றைக்கு தேசத்தை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்காக தமது விலை மதிக்க முடியாத உயிரை பணயம் வைத்து போராடிய இராணுவ வீரர்களை நாடே புகழ்ந்து கொண்டிருக்கையில் - அத்தகைய மதிப்புமிக்க இராணுவத்திற்குள்ளேயே இந்துத்துவ ஓநாய்கள் இராணுவத்தின் உயர்மட்டம் வரைச் சென்று நமது தேசத்திற்கு எதிராகவே, நமது இந்திய மக்களுக்கு எதிராகவே பயங்கரவாத வன்முறைச் செயல்களை நிகழ்த்தியதை நினைக்கும் போது, இந்த சங்வரிவார பயங்கரவாதிகளுக்கு நாட்டையும், நாட்டு மக்களையும் விட அவர்களது வெறி பிடித்த பாசிச தத்துவம் எந்த அளவிற்கு அவர்களது மூளையை ஆட்டு வித்துள்ளது - ஆக்கிரமித்துள்ளது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

பாசிச சிந்தனை எப்படி செயல்படும் என்பதற்கு அடையாம்தான் - முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். இருவரும் நாசிக் அருகே, 'இந்து ராணுவப் பயிற்சிக் கழகம்' என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். மேஜர் குல்கர்னி, 'ஹிந்து சைனிகி சன்ஸ்த்தா' என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுதப் பிரிவில் செயலாளராகத் தொண்டு(!) ஆற்றி வருபவராவார்.

இந்த வழக்கில் இன்னும் தோண்டத் தோண்ட பல புதைகள் கிடைக்கவுள்ளன. இந்த நிலையில்தான் இந்த வழக்கின் கதாநாயகனாக செயல்பட்டு எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் தேசத்தின் முன் மேற்கண்ட பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தினார் ஹேமந்த் கார்க்கரே!

ஆனால், மேற்கண்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டனர் அத்வானியும் - ராஜ்நாத் சிங்கும். அதாவது மேற்கண்ட நேர்மையான அதிகாரிகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு பொய்களை வாரியிறைத்தனர். அவதூறுகளை அள்ளி வீசினர். சாத்வீ துன்புறுத்தப்படுவதாக கூக்குரல்களை எழுப்பினர். இந்த தேச மக்களுக்கு வேட்டு வைத்த ஒரு குற்றவாளியை துன்புறுத்தாமல் எப்படி விசாரிக்க முடியும் என்ற கலையை அத்வானிதான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டில் சிறுபான்மை மதத்தைச் சார்ந்த அமைப்புகளோ, நபர்களோ ஈடுபட்டிருந்தால் இந்நேரத்தில் அவர்களை உடனே தூக்கிலிடு என்று பெருத்த குரலெழுப்பியிருப்பார்கள் இந்த போலி பயங்கரவாத எதிர்ப்பு பாசாங்குவாதிகள்.

பயங்கரவாதம் என்பது வெளியிலிருந்து மட்டும் வருவதல்ல அது உள்ளிருந்தும் வரும் என்பதை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்திச் சென்றிருக்கும் ஹேமந்த் கார்க்கரே, தனது இறுதி சில மணி நேரங்களில் தனது நன்பரும் - துறைச் சார்ந்தவருமான கோவர்த்தனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மும்பையில் தேசத்தையே உலுக்கிய பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடச் செல்லும் நேரத்தில் கூட, தனக்கு என்ன நேர்ந்தாலும் இந்த தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தை மிகத் தெளிவாக தனது இறுதி சில மணி நேரத்தில் கூட கடமையாற்றியிருக்கும் இந்த மகத்தான வீரரின் வீரம் போற்றப்பட வேண்டியது. இது தேசத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.

அதேபோல் பயங்கரவாத எதிர்ப்பு போரில் ஹேமந்த் கார்க்கரே மறைந்து விட்டார் என்ற உடன் குஜராத் முதல்வர் மோடி அந்த குடும்பத்திற்கு ஒரு கோடி தருவதாக கூறினார். ஆனால் அந்த குடும்பத்தினர் மோடியின் நிவாரணத்தை வாங்க மறுத்து விட்டனர்.

மோடி யார்? என்பது உலகிற்கே தெரியும் போது? அந்த தாய்குத் தெரியாமலே போகும்! எனது கணவர் இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். அதற்கு மோடியின் ஒரு கோடி ஈடேறுமா? இந்த தியாகம் ஈடு இணையற்ற தியாகம் என்றே அவர் நினைத்திருக்கலாம்!

அது மட்டுமா? தேசமே இந்த சோகத்தை எப்படி எதிர் கொள்ளுவது என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூட்டப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அத்வானியும் - ராஜ்நாத் சிங்கும் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ளதன் மூலம் இவர்களது அரசியல் சதிராட்டம் மீண்டும் அம்பலத்திற்கு வந்துள்ளது. பயங்கரவாதத்தை எப்படி எதிர்கொள்வது என்று பொறுப்புள்ள எதிர் கட்சி வெளியில்தான் பேசுவோம்! ஆனால் உள்ளரங்கில் ஜனநாயக ரீதியாக விவாதிக்கும் கூட்டத்தில் விவாதிக்க மாட்டோம் என்று சண்டித்தனம் செய்வதுதான் தேச பக்தியா? என்ற கேள்வி எழுகிறது.

அத்வானியும் - ராஜ்நாத் சிங்கும் இவ்வாறு கலந்து கொள்ளாதது யாரை காப்பாற்றுவதற்காக? என்ற கேள்வி இந்திய மக்கள் மனதில் எழுகிறது.

மொத்தத்தில் காவி பயங்கரவாதமும் இந்தியாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே என்பதை தனது நியாயமான புலன் விசாரணை மூலம் அம்பலப்படுத்தி - மும்பை பயங்கரவாதிகளையும் எதிர்த்து தனது உயிரை தியாகம் செய்துள்ள ஹேமந்த் கார்க்கரேவுக்கு எனது வீர வணக்கங்கள்.

October 25, 2008

மலேகான் குண்டு வெடிப்பும் மாட்டிக் கொண்ட சங்பரிவாரமும்!


9/11 உலகை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம். பின்லேடனின் - தாலிபான் அமைப்பினர் நடத்திய இரட்டை கோபுரத்தின் மீதான தாக்குதல் யாராலும் மறக்க முடியாத பயங்கரவாத சம்பவம். உலகமே இதற்கு கண்டனக் குரல் எழுப்பியது. பின்னர் இதை வைத்தே அமெரிக்கா பல நாடுகளை கபளிகரம் செய்து வருகிறது. இது ஏகாதிபத்திய பயங்கரவாத அரசியல்.
9/8 இது இந்தியாவை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. மகாராஷ்டிரர்களை நடுங்க வைத்த சம்பவம். மும்பையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில உள்ள மலேகனில் செப்டம்பர் 8, 2006 - வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணியளவில் இசுலாமயர்கள் தொழுகை நடுத்தும் இடமும், அடக்கம் செய்யப்படும் கல்லறைகளுக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்... இசுலாமிய மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். சைக்கிள்களில் குண்டு வைத்து வெடிக்கப்பட்டது. சைக்கிள்கள் சாதாரண மக்களின் வாகனம் என்பதிலிருந்து அது பயங்கரவாதிகளின் ஆயுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. மலேகன் நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.
இந்த சம்பவம் நடைபெற்றவுடன் இது வெளிநாட்டு இசுலாமிய பயங்கரவாதிகளின் சதி என்று கதை கட்டி விடப்பட்டது. இதில் ஐ.எஸ்.ஐ. அமைப்பினர் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டதோடு, அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கைதும் செய்யப்பட்டனர். லஷ்கர் - ஈ - தொய்பா போன்ற அமைப்புகளுக்கும் தொடர்பு இருந்தது என்று கூறப்பட்டது. நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் இசுலாமிய பயங்கரவாதம் என்று கூக்குரல் எழுப்பினர். இருப்பினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை சரியாக அடையாளம் காண முடியாத நிலை இருந்தே வந்தது.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு குறித்த விசாரணை ATS - Anti-Terrorist Squad பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்தக் குழுவினர் மலேகன் குண்டு தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் யார் என்று கண்டு பிடித்து அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்துள்ளனர்.
அதாவது, இந்தக் குண்டுப் வெடிப்பை நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான இந்து ஜாக்ரன் மன்ச் என்ற பயங்கரவாத அமைப்புதான் இந்த பயங்கரவாத நாசவேலையில் ஈடுபட்டுள்ளது.
இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சாத்வீ புரூனா என்ற பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இவர் யார் என்றால், தற்போது சன்னியாசியாக வேடம் தரித்துக் கொண்டுள்ள இந்துத்துவ பயங்கரவாதி. இந்த சாத்வீ புரூனா இவர் ஏற்கனவே பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பில் வேலை செய்துள்ளார். தற்போது இவர் இந்து ஜாக்ரன் மன்ச்சில் சன்னியாசியாக பணிபுரிந்து வருகிறார். அதாவது இவர் சன்னியாசி என்றால் ஏதோ அமைதியை விரும்பும் சன்னியாசியல்ல. மக்களின் அமைதியைக் குலைக்கும் பயங்கரவாதியாக காவியுடையில் வேடம் தரித்துள்ளார்.
அதாவது, இந்த இந்துத்துவவாதிகளின் மதவாத அரசியல் இந்தியாவில் காலாவதியாகிக் கொண்டிருப்பதால் தங்களது இசுலாமியர்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு எதிரான குரூரக் குரலை சாதாரண இந்து மக்கள் மத்தியில் விதைப்பதற்காக இதுபோன்ற வெடிகுண்டுகளை இவர்களே வெடித்துக் கொண்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முனைவதுதான்.
இது ஏதோ மலேகனில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் - திருநெல்வேலி மாவட்டம் - தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அருகிலும் இதுபோன்ற குண்டு வெடிப்பைச் செய்ததும் ஆர்.எஸ்.எஸ். மதவாதிகள்தான் என்று கண்டுப் பிடிக்கப்பட்டு அவர்களது பயங்கரவாத தீச் செயல் கிழிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இந்து முன்ன‌னியை சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதான் நவீன இந்துத்துவா இவர்கள் கோட்சேவின் வாரிசுகள்தான் என்பதை நமக்கு அடிக்கடி நினைவூட்டி வருகிறார்கள். தேசப் பிதா மகாத்மாவை கொலை செய்த கோட்சே தனது பெயர் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டதோடு, சுன்னத்தும் செய்துக் கொண்டுதான் மகாத்மாவை சுட்டுக் கொன்றான். இதன் மூலம் இசுலாமிய மக்கள்தான் காந்தியைக் கொன்றாலர்கள் என்று பழியை சுமத்தி இசுலாமியர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக கொலை வெறித் தாக்குதல் தொடுக்க திட்டமிட்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். எனவே இந்த முகாமிலிருந்து வெளிவரும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களிடம் நாம் அகிம்சையை எதிர்பார்கக் முடியுமா? அவர்கள் விதைப்பது உள் மனதில் இம்சைதானே.
குறிப்பாக கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பல இடங்களில் வெடிகுண்டு தயாரிப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அங்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அவர்கள் ஈடுபடும் கொலை வெறிச் செயல்களை உலகம் அறியம். இருப்பினும் அந்த மண்ணில் இவர்களால் கால் வைக்க முடியவில்லை. எனவே பாசிஸ்ட்டுகளின் வளர்ச்சி இந்திய மக்களின் அழிவு என்று அர்த்தம். எனவே இந்த இந்துத்துவா என்பது மக்களின் - மதச்சார்பின்மையின் - சகிப்புத்தன்மையின் எதிரி என்பதை நாம் மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும். இதன் தத்துவம் மனிதத்திற்கு விரோதமானது என்பதையும் சொல்ல வேண்டியுள்ளது. இவர்கள் ஹீட்லரின் தத்துவத்தை கடன் வாங்கிக் கொண்டு வந்து அதனை இந்தியாவில் செயலாக்க துடிக்கும் இந்துத்துவ பயங்கரவாதிகள் என்பதை உலகம் அறிந்துக் கொண்டது. இதற்கு எதிராக பன்முகப்பட்ட மக்களை திரட்ட வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம்.
மேற்கண்ட பயங்கரவாத செயல்களைத்தான் மனிதாபிமானத்தின் உயர்ந்த தத்துவம் இந்துத்துவா என்று இல. கணேசன் கூறியுள்ளார் நேற்றைய தினமணியில். இந்துத்துவ பயங்கரவாதிகள் தங்களை மனிதாபிமானிகளாக வேடம் தரித்துக் கொண்டு தங்களது மதவெறியை விற்பனை செய்ய முனைகிறார்கள். எனவே இவர்களின் முகமூடியை மக்களிடம் காண்பிக்க வேண்டியது முற்போக்குவாதிகளின் கடமையாகிறது.