May 18, 2007

தமிழ் செம்மொழியா? செத்த மொழியா!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அக்கோவிலில் ஆதிக்கம் செலுத்தும் தீட்சிதர்கள் தமிழை நீச பாசையாக, தீண்டத்தகாத மொழியாக கருதுவதும், தங்களது பிராமணீய மேலாதிக்கத்தை - மொழியாதிக்கத்தை இக்காலத்திலும் கடைப்பிடித்து வருவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைக்கு எதிராக மாநில அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திமுக, தமிழகத்தில் நிலவும் மொழித் தீண்டாமைக்கு எதிராக கை கட்டி வேடிக்கை பார்ப்பது ஏற்புடையதன்று.
நேற்றைய தினம் ஓதுவார் ஆறுமுகச்சாமி தலைமையில் தேவாரம், திருவாசகம் பாடச் சென்றவர்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்துள்ளது காவல்துறை, இதனை கண்டித்து மறியல் செய்தவர்களை கைது செய்துள்ளது. இது தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி. சமSகிருத மொழியின் அர்த்தத்தை அறியாமல், புரியாமல் வெறும் மனப்பாடம் செய்து பிழைப்பை ஓட்டுவதும், சமSகிருதம் மட்டுமே தேவ பாசை மற்ற பாசைகள் எல்லாம் கடவுளுக்கு தீண்டாத மொழி என தங்களது பிராமணீய மொழியாதிக்கத்தை நிலைநாட்டுதை ஜனநாயக சக்திகள் தொடர்ந்து கண்டித்து வருவதோடு, அதற்கு எதிரான போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். வழக்கம் போல் நம்முடைய ஆளும் வர்க்க நீதிமன்றம் தமிழில் இறைவனை பாடுவதற்கு கூட தடை விதித்துள்ளது.இதற்கு எதிராக தமிழக அரசு, 50 ஆண்டு பொன் விழா கண்ட கலைஞர் உறுதியான சட்ட ரீதியான நடவடிக்கையினை எடுப்பதுதான் தமிழுக்கு செய்யும் நீதியாக இருக்க முடியம்.
தமிழ் செம்மொழி என உலகம் முழுவதும் அதன் பெருமைகளை கூறிக் கொண்டிருக்கையில், தமிழகத்திலேயே அதனை புறக்கணிப்பதன் மூலம் தமிழ் செம்மொழியா? அல்லது செத்த மொழியா? என்ற கேள்வி எழுகிறது, தமிழக முதல்வர் இதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
தமிழ் பேச்சு மொழியாக மட்டும் அல்லாமல், ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், அறிவியல் மொழியாகவும், உயர் கல்வி மொழியாகவும் மலர்ந்திட வேண்டும் அப்படிப்படட வளர்ச்சியின் மூலம்தான் சீரான சிந்தனை வளர்ச்சிக்கும் வழியேற்படும் தமிழை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இந்த வழியில் தமிழை நடைபோடுவதற்கு எடுத்த முயற்சிகள் போதுமானதல்ல. இரயிலில் தமிழகத்தில் தமிழில் எழுதுவது குறித்து பெருமைப்படும் ஆட்சியாளர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழுக்கு கதவு சாத்தப்படுவது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

No comments: