Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

April 08, 2009

அழகிரி நர்த்தனம் ஆடும் கருணாநிதி!


மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் மகன் அழகிரியை நிற்க வைத்து, முடிசூட்டு விழா நடத்திட கனா கண்டு கொண்டிருக்கும் கருணாநிதி, எளிமையின் இலக்கணமாக திகழும் பி. மோகன் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பிணி பிடித்தவர்போல், பித்துபிடித்து அஞ்சாநெஞ்சருக்கு ஆபத்பாந்தவனாக தொடைதட்டி உடன்பிறப்புகளை உசுப்பிவிட்டுள்ளார். இதற்கு அண்ணாவையும் துணைக்கழைத்து தேர்தல் களம் காண அல்ல மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராக போர்க்களம் புகுவதற்கு கூர் தீட்டியுள்ளார் கருணாநிதி.

இன்று முரசொலியில் "பூச்சாண்டி பொம்மை" என்ற தலைபில் அவரது எழுதுகோல் சிந்திய மைக்கு எத்தனை பேர் இரத்தம் சிந்த வேண்டியிருக்குமோ? அல்லது எத்தனை உயிர்கள் இதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்குமோ? என்றே எண்ணத் தோன்றும் யாருக்கும்! எப்போதெல்லாம் இவர்கள் அரசியலுக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் அண்ணாவை துணைக்கு அழைப்பது வாடிக்கை! தோற்றால் பெரியார் வழி! வெற்றி பெற்றால் அண்ணா வழி என்று முழங்கிய கருணாநிதி எத்தனைமுறை தோல்வி கண்டாலும் உடன்பிறப்புகளின் கட்டளைக்கு இணங்க பணியாற்றுவதாக பிதற்றும் நவீன தசரதனாய் உலாவருபவர்தானே! ஆனால் இப்போது அண்ணாவை துணைக்கு அழைத்திருப்பது அஞ்சாநெஞ்சருக்கு ஆலவட்டம் சூட்டுவதற்காக. இதற்காக தங்களது உடன்பிறப்புகளை தியாகத்திற்கு அறைகூவி அழைக்கிறார்! எதற்காக அழகான தோட்டத்தில் மாங்கனிகளை பறிப்பதற்காக, பூக்களை கொய்வதற்காக அல்ல! தேர்தலில் போட்டியிடும் மகன் வெற்றியை ஈட்ட திருமங்கலத்தில் செய்திட்ட திருகுதாளங்களுக்கு தடையேதும் வந்தால் அவற்றை எப்படியேனும் முறியடித்திடுங்கள் என்ற அழைப்புதான் கருணாநிதியின் உணர்வில் கலந்து உடன்பிறப்புகளுக்கு கட்டளையாய் பிறப்பித்திருக்கிறது "பூச்சாண்டி பொம்மை".

கருணாநிதியின் அறிக்கையைப் பாருங்கள்! மிகுந்திருக்கும் கவலை நாட்டைக் காப்பதற்காக அல்ல. அழகிரியை காப்பதற்காக என்று தெரியும்!

"அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா அச்சமாக இருக்கிறது! போட்டிக்கு நாள் குறிப்பதற்கு முன்பே புஜங்களைத் தட்டிக் கொண்டல்லவா; பொய்ப் புகார்களை அடுக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள்; வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள்!

அழகிரியை என்ன செய்வார்களோ; ஏது செய்வார்களோ; அழகிரி எதற்கும்- எந்தத் தியாகத்துக்கும் தயார்-என் மகன்களில் ஒருவன்; மதுரையில் சிலரது கண்களை உறுத்துவதை இந்த மாநிலம் அறியும். "இருப்பது ஓர் உயிர்; அது போகப் போவதும் ஒரு முறை; அது ஒரு நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே'' என்று அறிஞர் அண்ணா சொன்ன வாசகம் நம் செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது."


வங்கத்தில் துப்பாக்கியேந்தி வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள் என்று அவதூறுகளை அள்ளி வீசியிருக்கும் இந்த பட்டா கத்தி பைரவர்களின் சுயமுகம் உள்ளாட்சித் தேர்தலில் நாறிப்போனதை நாடறியும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலல்ல - உள்ளாட்சித் தேர்தலில் பட்டாக் கத்திகள்தானே வாக்காளர்களாய் மாறியது.


ஜனநாயகத்தின் காவலராய் வேடம் பூண்டிருக்கும் கருணாநிதியின் கபட வேடம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவன் உதயகுமாரின் வடிவில் தமிழக மக்களின் கண்முன் எப்போதும் நிழலாடிக் கொண்டேயிருக்கும். "டாக்டர்" கலைஞர் என்பதற்கு பின்னாள் மறைந்திருக்கும் உதயகுமாரின் "தியாகத்தை" நாடறியும். பெற்றவர்களையே விற்றவர்களாக்கிய கருணாநிதி வங்கத்தில் துப்பாக்கி ஏந்தி வாக்கு சேகரிப்பதற்காக சிந்துபாத் கதை கூறுவதை பாலகரும் நகைப்பர்.


மத்தியிலே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் கூட்டாளியாய் இருந்த ஆட்சியாளர் கருணாநிதி மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது வாக்குபதிவு அதிகாரிகள் உட்பட வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நடத்தப்பட்டதும், நான்கு நாள் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டு பகுதி பகுதியாய் நடத்தப்பட்டபோதும் துப்பாக்கியேந்திய வாக்கு சேகரிக்கும் தொண்டர்களையோ அல்லது வாக்குப் பெட்டிகளை கடத்திச் செல்லும் அஞ்சாநெஞ்சர்களையோ காண முடியவில்லை தேர்தல் கமிஷனால். அவர்கள் காணாததை கருணாநிதி கண்டு விட்டார் என்றால் அவரது கண் நல்லகண்தான்!


சென்னை மாநகர தேர்தல் உட்பட உள்ளாட்சி தேர்தல் களம் அஞ்சாநெஞ்சர்களின் அடியாட்களால் அமர்க்களமாய் நடத்தியதை தமிழகம் அறியும். அதற்கு விலை கொடுக்க தற்போது தமிழக மக்கள் தங்களது புத்தியை கூர் தீட்டிக் கொண்டுதான் உள்ளார்கள். சென்னையிலேயே ஓட்டை ஏற்பட்டு 14-ல் 7 தொகுதி காணாமல் போன கருணாநிதிக்கு மதுரையில் அழகிரியின் டெபாசிட் காணாமல் போகுமோ என்ற அச்சத்தால் வந்த எச்சம்தான் அந்த அறிக்கை.

அடுத்து கூறுகிறார் கருணாநிதி, "மதுரையில் சங்கரராக நின்று சவுராட்டிரர்களின் வாக்குகளைப் பெற்றிட அள்ளிக் கொட்டிய வெள்ளிப்பணம் பற்றித் தெரியாதா யாருக்கும்-அந்தத் தொகுதியில் மனம் கூசாமல் இஸ்லாமியர் வாக்குகளைப் பெற்றிட குல்லாய் அணிந்து சென்ற காட்சியை மதுரை மக்கள் தான் மறக்க முடியுமா?"

தேர்தலுக்கு தேர்தல் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தையும், கள்ளப் பணத்தையும், ஸ்பெக்ட்டிரம் ஊழல் பணத்தையும், ஏன் வீராணம் பணத்தையும் கூட விட்டு வைக்காமல் தண்ணீராய் செலவழிக்கும் கட்சியெது என்று தமிழக தாய்மார்கள் அறிவார்கள்! குல்லாய்களை மட்டுமல்ல, சிலுவைகளையும் சுமந்து காவடி தூக்கி பா.ஜ.கவுக்கு வெஞ்சாமரம் வீசி, குஜராத் பாசிச படுகொலைகளை கண்டிக்காமல் மவுனம் காத்து இந்துக்களின் ஓட்டுக்களை பத்திரமாய் காத்திட அத்வானியையும் - வாஜ்பாயையும் - மோடியையும் காவடியாய் சுமந்த கதையை நாடு அறியும். பதவிக்காய் குல்லா போடுபவர்கள் யாரென்று! நாய் கவிதை பாடி நட்பு பாராட்டிய உலகத் தமிழனின் ஒப்பற்ற பிரதிநிதியாரென்று உலகத் தமிழர்களுக்கு நன்றய் தெரியும்! கூடா நட்பின் பிரதிநிதி கருணாநிதியே என்று!

பாவமாம் அஞ்சாநெஞ்சர். மதுரையில் அவரது கைங்கரியம் மதுரை மக்கள் நன்றாக அறிந்தது தானே! அட்டாக் பாண்டியனும் - அஞ்சாநெஞ்னும் ஒரே உரையில் உள்ள இரு கத்திகளென்று. தினகரன் பத்திரிகையில் கொலையுண்ட 3 பத்திரிகையாளர்களுக்கும், தினகரன் ஊழியர்களுக்கும் அட்டாக்பாண்டியனை ஏவிய கை எதுவென்று தெரியாதா? முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணனின் கொலைக்கு பின்னணியில் இருந்தவர் யாரென்று போலீசாருக்குத்தான் தெரியாதா! 59வது வட்ட மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியின் கொலைக்கு பின்னிருந்த - ஊக்கம் கொடுத்த அஞ்சாநெஞ்சன் யார் என்று தெரியாதா?


மதுரை மக்களே வாக்களியுங்கள் உங்களிடம் வாக்கு எனும் கூர்மையான ஜனநாயக வாள் இருக்கிறது. அதனை தைரியமாக பயன்படுத்துங்கள் ஜனநாயகம் தழைத்திட, மதுரையை காப்பாற்றிட! பணத்தை வைத்து அரசியல் நடத்துபவர் மோகன் அல்ல! பணத்தை மட்டுமே வைத்து அரசியல் நடத்துபவர் அஞ்சாநெஞ்சரே! என்று உறக்கச் சொல்லும் மதுரை மக்களே உங்களது வாக்கு எதிர்கால சமூகத்தை நல்ல வழியில் செலுத்தப்போகும் துடுப்புச் சீட்டு.






January 07, 2008

மதுரையில் தொழில் வள(ரு)மா?


தமிழகத்தின் பழம் பெருமை நகரங்களில் ஒன்றான மதுரை கோவில்களுக்கு புகழ்பெற்றது. முத்தமிழ் நர்த்தனம் ஆடும் மதுரையில் எங்கெங்கு கானினும் அஞ்சாநெஞ்சர்களின் ஆளுமையே காட்சியளிக்கிறது. ஏன் தென் மாவட்டங்கள் அஞ்சாநெஞ்சரால்தான் ஆளுப்படுவதாகக் கூட கூறப்படுகிறது. இருப்பினும் என்ன?

மதுரைவாசிகள் மதுரையைப் பற்றி கூறுவதென்ன? மதுரையை அவர்கள் நக(ர)மாக கருதுவதில்லை. அது ஒரு பெரிய கிராமம் அவ்வளவுத்தான் என்று பம்முகின்றனர்.

20 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட மதுரையில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லை என்பதுதான் உண்மை. மதுரா கோட்ஸ் இங்கே வெறும் 200க்கும் குறைவான தொழிலாளர்களே வேலைபார்ப்பதாக கூறப்படுகிறது. அப்புறம் என்ன? டி.வி.எஸ். - மின்சாரவாரியம் - போக்குவரத்து போன்று சொல்லிக்கொள்ளும் சில முக்கியமான தொழில்சார்ந்த தொழில்களே உள்ளன.

தமிழகம் சிங்கப்பூராக மாறப்போவதாக கதைக்கும் நம்மூர் ஆசாமிகள் மதுரை பக்கம்போனால்தான் தெரியும் அங்கே மூன்றடுக்கு மாடிகளைக் காண்பதுகூட அரிதாகத்தான் இருக்கிறது. அவ்வளவுத்தான்?

ஒரு பக்கம் விவசாயம் - அதுவும் இப்போ சரியில்லாத நிலைமை? மறுபக்கம் இட்லி கடைகள்தான் மிகப்பெரிய தொழிலாக காட்சியளிக்கிறது. மதுரையை தலைநகராக மாற்றப்போவதாக ஒரு காலத்தில் பரிசீலிக்கப்பட்டது. அந்த மதுரையில் தற்போது உயர்நீதிமன்றத்தின் கிளை வந்ததே இந்த ஆட்சியாளர்களின் பெரிய சாதனைதான் (மக்களின்) என புளங்காகிதம் அடைந்தாலும் - தங்கள் மாவட்டத்து படித்த பிள்ளைகளுக்கு உள்ளுரிலேயே வேலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்தான் மதுரை வாசிகளிடம் மிஞ்சுகிறது.

அஞ்சாநெஞ்சர்கள் கூட மதுரையை ஒரு தொழில் நகரமாக மாற்றுவதில் அஞ்சுவதாக கூறப்படுகிறது. என்னமோ - மதுரை மக்களுக்கு விடிவு வந்தால் சரி!

எப்படியோ அரசியல் களம் பல கண்ட நமது பேரறிஞரின் வாரிசான கலைஞரின் கடைக்கண் பார்வை மதுரைக்கு விழுமா?

May 14, 2007

கிரிமினல்மயமாகும் அரசியல்!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்புமுனைகள் நடந்தேறி வருகிறது. குறிப்பாக, கலைஞரின் சட்டமன்ற பொன்விழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திமுகவிற்குள் நடந்து வரும் மாற்றங்கள் தயாநிதி மாறன் நீக்கம் போன்ற தொடர் சம்பவங்கள் திமுகவினரிடையே பரபரப்பாக பேசப்பட்டும், மக்களிடையே விவாதிக்கப்பட்டும் வருகிறது. திமுக தொண்டர்களிடம் கலைஞரின் நடவடிக்கைக்கு ஆதரவான குரல்கள் ஒலித்தாலும், மக்கள் மத்தியில் திமுகவின் நடவடிக்கை குறித்து பல விதமான சந்தேகங்கள் நிலவுவதை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

‘தினகரன் கருத்து கனிப்பு’ அதைத் தொடர்ந்து மதுரையில் மு.க. அழகிரியின் அடியாட்களால் நடத்தப்பட்ட தாக்குதல், மூன்று உயிர்கள் பலி - சன் டி.வி., தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்குதல், தீ வைப்பு சம்பவங்கள் மதுரையை மட்டுமல்ல; ஜனநாயகத்தை விரும்பும் மக்களை கலக்கமடையச் செய்துள்ளது.

இந்த சம்பவத்தை நிகழ்த்தியது மு.க. அழகிரியின் அடியாட்களான அட்டாக் பாண்டியன் போன்ற கிரிமினல்கள் மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர்கள், மதுரை மேயர் தேன்மொழி, அவரது கனவர் போன்றவர்கள் நேரடியாக களத்திற்கு வந்து இந்த தாக்குதலுக்கு தலைமையேற்று நடத்தியுள்ளது அதைவிட கொடுமையானது; ஏற்க முடியாதது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அண்ணாதுரையால் வகுக்கப்பட்ட கொள்கை முழக்கத்தை ஏந்தி செயல்படும் திமுக தொண்டர்கள் தற்போது யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறார்கள் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.

மதுரை லீலாவதி படுகொலை, முன்னாள் அமைச்சர் த. கிருஷ்ணன் படுகொலை, தற்போது தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் படுகொலை ஆகியவற்றில் மு.க. அழகிரிக்கும் அவரது அடியாட்களுக்கும் தொடர்பு இருப்பதாக சன் டி.வி. குற்றம் சாட்டியது. மொத்தத்தில் மதுரையில் அழகிரியின் ராஜ்யமே நிலவுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவங்களின் தொடர் நிகழ்ச்சியும், கலைஞரின் பொன் விழாவில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.க. அழகிரிக்கு வி.ஐ.பி. அந்த°து கொடுத்து, சட்டமன்ற லாபியில் உட்கார வைத்ததும் மக்கள் மத்தியில் மேலும் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு இப்படிப்பட்ட அந்த°தை வழங்கப்பட்டுள்ளதன் மூலம் வன்முறை - கொலைவெறியாட்டத்தை அரசியல் அதிகாரத்தின் மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற சூழல் நிலவினால், அரசியலில் கிரிமினல்களைத் தவிர வேறு யாருக்கு இடமிருக்க முடியும்!

அரசியல் கிரிமினல்மயமாவது குறித்து தொடர்ந்த பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் திமுக உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை மற்றும் புறநகரில் உள்ளாட்சி தேர்தலில் நடத்திய பெரும் வன்முறை, வாக்குச் சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற நடவடிக்கையை அரங்கேற்றியதன் மூலம் சென்னையில் உள்ள ரவுடிகளுக்கும், கிரிமினல்களுக்கும் இது நம்ம ஆட்சி! என்ற எண்ணத்தையும், நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற எண்ணத்தை தோற்று வித்துள்ளது. திமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த சம்பவம் கிரிமினல் நடவடிக்கைகளுக்கான ஒரு வேராக அமைந்து விட்டது.

மேலும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் படுகொலைகள், சென்னை சென்டிரல் ரயில்வே °டேஷனில் பட்டப் பகலில் நடந்த படுகொலை போன்ற சம்பவங்கள் இன்னும் மக்கள் மத்தியில் நெஞ்சில் இருந்து அகலவில்லை!

அதேபோல், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி மற்றும் அவரது சகோதரர்கள் மீது கே.வி.கே. குப்பத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் மீது உயர்நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதும், சமீபத்தில்கூட அமைச்சரின் தம்பி ஒருவர் டிராபிக் போலீசாரை தாக்கியது தொடர்பான செய்தியையும் பத்திரிகையில் பார்க்க முடிந்தது. அரசியல் அதிகாரத்தின் மூலம் எதைச் செய்தாலும் நம்மை கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற சிந்தனையே இந்த சம்பவங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

50 ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தை முடித்துள்ள கலைஞர், நீண்ட நெடிய அரசியல் பாரம்பர்யம் உள்ளவர், திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவராக வரலாற்றில் பதியப்பட்டுள்ளார். இந்த சூழலில், மக்கள் மத்தியில் எழும் பல்வேறு கேள்விகளுக்கு அவர் விடையளிப்பதைப் பொறுத்துதான் வரலாற்றில் அவரது இடம் தீர்மானிக்கப்படும்.

குறிப்பாக தயாநிதி மாறன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவரது குடும்ப சண்டையாக மட்டுமே பார்க்க முடிகிறது. தினகரன் அலுவலகத்தை தாக்கிய - மூன்று உயிர்களை பலிவாங்கியவர்கள் மீது, குறிப்பாக மதுரை மேயர் தேன்மொழி மற்றும் திமுக கவுன்சிலர்கள் இதற்கு மூலகாரணமான மு.க. அழகிரி இவர்கள் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளதோடு, குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அனைவர் மீதும் அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதன் மூலமே இந்த சம்பவத்திற்கு உண்மையான நீதி வழங்கியதாக அமையும்! முதல்வர் இதனை நிறைவேற்றுவார் என்று நம்புவோம்!

கலைஞரின் ஓராண்டு ஆட்சியில் இரண்டு ஏக்கர் நில விநியோகம், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ரேஷன் கடையில் எண்ணெய், பருப்பு விற்பனை, கூட்டுறவு கடன் ரத்து போன்ற நல்ல திட்டங்களின் மூலம் மக்களின் நல்லாதரவை பெற்றுள்ள அரசிற்கு இந்த சம்பவங்கள் ஒரு கரும்புள்ளியாக அமைந்து விடக்கூடாது என்பது ஜனநாயக விரும்பிகளின் நல்லெண்ணமாக இருக்கிறது.