Showing posts with label காந்தி. Show all posts
Showing posts with label காந்தி. Show all posts

April 01, 2009

அத்வானியின் புதிய இந்துத்துவா!

பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி ஒவ்வொரு நாளும் ஆர்எஸ்எஸ்-இன் கோலாட்டத்திற்கு குரங்காட்டம் போட்டு வருகிறார். வருண்காந்தியின் முகத்தை காட்டி இந்து வாக்காளர்களை கவர திட்டம் போட்ட பாஜக அவரை கம்பி எண்ண வைத்துவிட்டது.
தற்போது அத்வானி வருண்காந்தி விட்ட இடத்திலிருந்து இந்துத்துவா ரிலேவை தொடங்கி வைத்துள்ளார். ஒரே மாற்றம் இது "புதிய இந்துத்துவா"! பழைய இந்துத்தவா மோடியின் முகத்தை அணிந்துக் கொண்டதால், புதிய இந்துத்துவா காந்தியின் முகத்தை தேடுகிறது. இதுதான் அத்வானியின் புதிய கணக்கு.
நேற்று (மார்ச் 31) புதுதில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அத்வானி, "பல கட்சிகளை எங்கள் பக்கம் ஈர்க்க கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் சொல்லும் ஹிந்துத்துவா என்பது மதம் சார்ந்தது அல்ல, தேசியம் சார்ந்தது." என்று கொள்கை விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் அவர் என்ன வருகிறார் என்று கூர்ந்து நோக்கும் அரசியல் விமர்சகர்களுக்கு ஒரு விசயம் தெளிவாக புரியும். இந்தியாவில் உள்ள பல மதச்சார்பற்ற கட்சிகளுக்கு பாஜகவின் இந்துத்துவா புளித்து விட்டது. அதனால் இந்த தேர்தலில் ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று "டூ" விட்டு விட்டனர். அதைத்தான் மேற்கண்டவாறு அத்வானி இவ்வளவு பவ்வியமாக விளக்கியுள்ளார். அத்துடன் அவர் மேலும் அழுத்தமாக கூறியிருக்கும் விசயம் என்ன என்று பார்த்தால், சங்பரிவாரத்தின் உயிர்நாடியான இந்துத்துவா கொள்கையை நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்பதுதான் அதன் அர்த்தம்.
சரி, இவர்களின் இந்துத்துவா என்றால் என்ன என்று சங்பரிவார கும்பல்கள் ஒவ்வொருவரும் ஒரு விளக்கத்தை கொடுப்பார்கள். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் இந்துத்துவா குறித்து கூறும்போது, "இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை." என்று கூறியிருப்பதி லிருந்தே அது எவ்வளவு உயர்ந்த தத்துவம் என்பதை உணர முடியும்.
உண்மையில் இவர்களது இந்துத்துவா என்பது இவர்களின் தத்துவார்த்த குருவான கோல்வால்கரின் இந்துத்துவாதான்: இந்த கோல்வால்கர் யாருடைய சீடர் தெரியுமா? உலகையே ஆளப் பிறந்த அரிய இனம் என்று கொக்கரித்து யூதர்களை நரவேட்டையாடிய ஹீட்லரின் சீடர். ஹீட்லரிடம் இருந்து கடனாக பெற்ற கொள்கைதான் இந்துத்துவா, அது நாஜீயிசம் என்றால் இது இந்துத்துவாயிசம். அது யூதர்களை வேட்டையாடியது என்றால் இவர்கள் இசுலாமியர்களை வேட்டையாடினார்கள். தற்போது கிறித்துவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடுவார்கள். மொத்தத்தில் நமது பாரம்பரியமான மதச்சார்பற்ற பாரம்பரியத்தையும், சகிப்புத்தன்மையையும், மனிதாபிமானத்தையும் வேட்டையாடுவார்கள். இவர்களது இந்துத்துவாவில் வேற்றுமையில் ஒற்றுமையில்லை. இந்துத்துவா என்ற குடுவைக்குள்தான் எல்லாம் அடக்கம். இந்தச் சிந்தனைக்கு உடன்படாதவர்கள் இந்தியத்திற்கு எதிரானவர்கள் - பாரதீயத்திற்கு எதிரானவர்கள் என்று அழித்தொழிக்கப்படுவர். இதைத்தான் அத்வானி இந்த தேர்தல் காலத்தில்கூட மறக்காமல் தான் ஆர்.எஸ்.எஸ். சீடன்தான் என்று தனது சங்பரிவார கும்பலுக்கு நம்பிக்கையூட்டும் சிக்னல் தருகிறார். இவர் இவ்வாறு உண்மையான சீடனாக இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ். இவரை சீண்டி விடும் அல்லவா? அதுதான் இதுவும் என்று இருக்க முடியாது.
அதே பேட்டியில் அத்வானி கூறுகிறார்: "எங்கள் பக்கம் சிறுபான்மைச் சமூக மக்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் எங்களுடைய அரசியல் எதிரிகள் எங்களுக்குக் குத்தியிருக்கும் முத்திரைதான் ஹிந்துத்துவா." என்று.
அஹா... கோயபல்ஸ் புளுகு என்று கூறுவார்களே அது இதுதான். ஹீந்துத்துவா என்ற வார்த்தையை கண்டுபிடித்ததே நீங்கள்தானே. அதற்கு தத்துவார்த்த முலாம் கொடுத்து கழுவி சுத்தப்படுத்தி பத்திரப்படுத்தி வைத்திருப்பதும் நீங்கள்தானே அப்படியிருக்கும் போது ஏதோ எதிர் கட்சிகள் எல்லாம் இவர்களை இந்துத்துவா என்று முத்திரைக்குத்தி விட்டதாக அலறுவது ஏனோ? ஒரே விசயம் இதுதான். இந்துத்துவா என்றால் ஓட்டு கிடைக்காது! அதனால் பழியை எதிர் கட்சிகள் மீது போட்டு தப்பிக்க பார்க்கிறார் எதிர்கால பிரதமர்.
அடுத்து அத்வானி தனது கொள்கைக்கு ஆதரவாக யாரை துணைக்கு அழைக்கிறார் பாருங்கள், "தேசப்பிதா மகாத்மா காந்தி ""ராமராஜ்யம்'' அமைய வேண்டும் என்று விரும்பினார். அது மதம் சார்ந்த அரசு நிர்வாகம் அல்ல. தன்னை ""சனாதன ஹிந்து'' என்றே காந்தி அழைத்துக் கொண்டார்." என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது அத்வானியின் இந்துத்துவம் தற்போது காந்திய வடிவில் புதிய முகத்தை பெற முயற்சிக்கிறது. காந்தியின் ராமராஜ்யமும் - பாஜகவின் இந்துத்துவாவும் ஒன்றா? ஆர்எஸ்எஸ் இதை ஏற்றுக் கொள்கிறதா? பிறகு ஏன் மகாத்மாவை கோட்சே கொன்றான்? ராமராஜ்யம் அமைய வேண்டும் என்று கனவு கண்ட சனாதன இந்து பக்தரும், புல்லுக்கும் தீங்கு செய்யக்கூடாது என்று கருதும் சாத்வீ போராளியும் ஆன மகாத்மா தனது போராட்டங்களைக் கூட அகிம்சை வழியிலேயே மேற்கொண்டார். இத்தகைய எளிய உடம்மை சுதந்திரப் போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்த அந்த மாமனிதனின் உடலை சாய்த்தது இந்துத்துவாதானே - வீரசவர்க்கரின் மூளையில் உருவாகி, கோட்சேவின் துப்பாக்கிக்கு இரையாக்கியது உங்களது சங்பரிவார தத்துவமும் - பாசிச வெறித்தனம்தானே!
காந்தியின் ராமராஜ்யத்தில் வன்முறையில்லை; ஆனால் உங்களது இந்துத்துவா தத்துவமே வன்முறைகளை உயிர்ப்பிக்கும் ஆக்டோபஸ்தானே! அதனால்தானே குஜராத்தில் ஒரு மோடியும், கர்நாடகத்தில் ஒரு முத்தலிக்கும், ஒரிசாவில் லட்சுமணானந்த சாமியாரும் என்று இந்தியாவையே ரத்தகளறியாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இத்தகைய இரத்தக்கரையை வரலாற்றின் பக்கங்களிலிருந்து யாராலும் அகற்ற முடியாது. அதற்கு பாவமன்னிப்பும் யாராலும் வழங்க முடியாது! எந்த காந்தியின் பிறந்த குஜராத் மண்ணில் அவரையும், அவரது கொள்கைகளையும் குழிதோண்டி புதைத்தீர்களோ அப்போதே இந்தியாவில் காந்தியின் கனவான ராமராஜ்யத்தையும் அல்லவா சேர்த்துப் புதைத்தீர்கள், எரித்தீர்கள். இப்போது அதே காந்தியின் முகத்தை மோடிக்கும் - அத்வானிக்கும் பயன்படுத்த துடிப்பது ஆட்சிக் கட்டிலுக்காகத்தானே ஒழிய இந்த நாட்டிறக்காக அல்ல!
முஸ்லீம்கள் காந்தியை எதிர்த்தாக கூறி தனது நயவஞ்சக பிரச்சாரத்தை அத்வானி திசை திருப்பவும் இந்த நேரத்தில் தவறவில்லை. மகாத்மாவே இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிவது எனது இதயத்தைப் பிளப்பது போல் என்று கூறினார். அதற்காகவே ஆர்.எஸ்.எஸ். அவரைக் கொன்றது. பிரிவினையை விரும்பிய ஒரு பிரிவினரின் நம்பிக்கையின்மைக்கு அடிப்படையாக இருந்தது ஆர்.எஸ்.எஸ்.தானே ஒழிய மகாத்மா அல்ல. எனவே வருண்காந்தி இசுலாமியர்களின் தலையை எடுப்பேன் என்று பேசி தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளே இருக்கிறான். இந்தப் பேச்சிற்கும் தற்போது அத்வானி பேசியிருப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. இரண்டும் ஒன்றுதான், அதாவத தேர்தல் காலத்தில் கூட தனது மதவெறி அஜண்டா மூலம் மதவெறியைத் தூண்டி குளிர்காய நினைக்கும் ஓநாய்த்தனத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள். மாறாக சொந்த நாட்டு மக்களை எதிரிகளாக்க முனையும் இந்துத்துவாவுக்கு சாவு மணி அடிக்கத்தான் போகிறார்கள் இந்தத் தேர்தலில்! வாக்காளர்களே உஷார் இந்துத்துவா எச்சரிக்கை. ஜனநாயகம், மதசார்பின்மை காப்போம்!

September 18, 2008

காவிப் படையில் மகாத்மா!



இந்திய சுதந்திரப் போரினை மக்கள் இயக்கமாக மாற்றியவர் மகாத்மா. இவரது அகிம்சை தத்துவம் இன்று உலகமயமாகி வருகிறது. இது குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது குறித்த அலசல் இல்லை இங்கே. குறிப்பாக இந்திய நாட்டையும் - இந்திய மக்களையும் நேசித்த மகாத்மா தனது இறுதி மூச்சு வரை மிகவும் எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்து காட்டியவர். இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிவதை இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்தவர். நமது தேசத்தை இரு கூறாக பிரிப்பது எனது இதயத்தை பிளப்பது போல் என்று மிகவும் நொந்து உருகி தனது கருத்தினை வெளிப்படுத்தியவர்.

இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இத்தகைய மிக எளிய அகிம்சாவாதியை இந்துத்துவ வெறியன் - ஆர்.எஸ்.எஸ். பரிவார பாசிஸ்ட் கோட்சே சுட்டுக் கொன்றான். அகிம்சையை இம்சித்த தத்துவமே இந்துத்துவம் என்பதை உலகுக்கு உணர்த்தியவன். இதன் மூளையாக செயல்பட்டவன் சவர்க்கார். இவன் ஒரு பச்சை துரோகி. இந்திய தேசத்தை காட்டிக் கொடுத்தவன். வெள்ளையனின் சிறையிலிருந்து விடுதலையாக எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்தவன். இத்தகைய பாரம்பரியத்தில் வந்த இந்துத்துவவாதிகளின் தற்போதைய வாரிசுகள் ஏதோ இந்த நாட்டின் மீது தாங்கள்தான் பெரிய நேரம் செலுத்துவது போல் வேஷம் காட்டுகின்றனர்.

இந்த பாசிச வெறியர்கள் கேரளாவில் கூத்துப்பறம்பா என்ற இடத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காவி நிறம் பூசி மகிழ்ந்துள்ளனர். அந்த பேருந்து நிலையம் முழுவதும் காவி நிறம். மகாத்மாவுக்கும் காவி நிறப் பூச்சு. அதாவது, மகாத்மாவை கூட இவர்கள் தங்களுடைய கொள்கை காப்பாளராக மாற்றி விட்டார்கள் இந்த மாபாவிகள். கேரளாவில் இவர்கள் செய்யும் பாசிச வெறித்தனத்திற்கு அளவேயில்லை. இந்த இம்சைவாதிகள் அகிம்சா மூர்த்தியான மகாத்மாவுக்கு அதுவும் தங்களது கொள்கைக்கு விரோதமாக நின்றதால் சுட்டுக் கொல்லப்பட்டவருக்கு. சிலை வைத்து காவி நிறம் பூசியுள்ளது வெட்கக்கேடானது. அங்குள்ள காங்கிரஸ்காரர்களுக்கும் இது குறித்து வருத்தமோ - எதிர்ப்போ எதுவுமேயில்லை. ஏனென்றால் அவர்கள் கூட சில நேரங்களில் இடது முன்னணியை தோற்கடிக்க இந்துத்துவவாதிகளின் வாக்கு வங்கியோடு கள்ளுக் கூட்டுச் சேருபவர்கள்தான். அதாவது சாப்ட் இந்துத்துவாவாதிகள்.

மொத்தத்தில் மகாத்மாவின் சிலையை மட்டுமல்ல இந்த தேசத்தையே இந்த இந்துத்துவவாதிகளிடம் இருந்து மீட்க வேண்டும். இதற்காக விடப்பிடியான கொள்கைப் போராட்டம் தேவை.