April 19, 2008

அடிமைக்கு மகாராஜா பட்டம் சூட்டும் ம.க.இ.க.!

ம.க.இ.க. மறைமுகத் தலைமை எஸ்.ஓ.சி. - யின் கட்சித் திட்டத்தை வாசிக்கும் எந்தக் குழந்தைக்கும் அதிலுள்ள ஏராளமான முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் நகைப்பைத்தான் ஏற்படுத்தும். இந்தியாவை (மன்னிக்கவும் அவர்கள் இந்தியா என்ற ஒரு நாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை) நான்கு நாடுகளின் அரை அடிமையாக இருப்பதாக சித்தரித்து விட்டு பின்னர் அதற்கு பவுடர் பூசி, பொட்டு வைத்து, அழகுபார்த்து சீவி, சிங்காரித்து, கிரீடமெல்லாம் வைத்து அதனை அரியாசனத்தில் ஏற்றி வைத்து மகாராஜா பட்டம் சூட்டி அழகு பார்க்கின்றனர்.
அவர்களது கட்சித் திட்டத்தின் 26வது பாரா கீழ்க்கண்டவாறு கூறுகிறது. அதற்கு விளக்கமே தேவையில்லை! நீங்களே புரிந்து கொள்ள முடியும்!
"இந்திய அரசு நமது நாட்டின் பொருளாதாரத்தை இராணுவமயமாக்கியிருக்கிறது. படுவேகமாகப் போர்த் தயாரிப்பு செய்வதில், ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டிருக்கிறது. தெற்கு ஆசியாவில் இந்தியாவைச் சுற்றிலுமுள்ள சிறு நாடுகளைப் பொருத்தவரை விரிவாக்கக் கொள்கையையும் பிராந்திய துணை வல்லசுக் கொள்கையையும் கடைப்பிடிக்கிறது. அவற்றைத் தனது சொந்தச் சார்பு நாடுகளாக அல்லது துணை நாடுகளாக மாற்றும் நோக்கத்துடன் அவற்றின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றது. பிற்போக்கு இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. அந்நாட்டைத் துண்டாடியது. சிக்கிமை அபகரித்துக் கொண்டது. பூடானையும், நேபாளத்தையும், இலங்கையையும், வங்கதேசத்தையும் அச்சுறுத்துகிறது. இவை அனைத்தும் நமது நாட்டைச் சுற்றிலுமுள்ள சிறிய ஆசிய நாடுகளின் சுதந்திரமும், பிரதேச ஒருமைப்பாடும் தொடர்ந்து இந்திய பிராந்திய விரிவாக்கக் கொள்கையின் அபாயத்தில் இருப்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன....."
அன்பர்களே, நண்பர்களே இந்தியா ஒரு அரை அடிமை நாடு. அதுவும் நான்கு நாட்டு அடிமை நாடு. மேலும் இந்திய முதலாளிகள் முதுகெலும்பில்லாத பிச்சைக்கார முதலாளிகள் அதாவது தரகு அதிகார வர்க்க முதலாளிகள். சொந்த மூளை இல்லாதவர்கள். இப்படிப்பட்ட படு வீக்கான நோயாளியான இந்திய அரசு ஆசிய பிராந்தியத்தில் துணை வல்லரசாக செயல்படுகிறதாம்! அதாவது அடிமை மகாராஜா பட்டம் சூட்டியுள்ளது ம.க.இ.க. தலைமை. ஆஹா என்ன அரசியல் முதிர்ச்சி! அரசியல் நிலைபாடு.
இவர்கள் வாதப்படி எதிர்காலத்தில் இந்த சூரப்புலிகள் ஆட்சிக்கு வந்தால் சிக்கிமை கழற்றி விட்டு விடுவார்கள். அதை எந்த நாட்டிடம் தாரை வார்ப்பார்கள் என்பதுதான் புரியவில்லை. அல்லது நான்கு நாடுகளில் எது அதற்கு உரிமைக் கொண்டாடும் என்பதும் மர்மமாக உள்ளது. இல்லையென்றால் ம.க.இ.க. தலைமை ஒரு துணை கிரகமாக இருப்பது போன்று சிக்கிமை அந்தரத்தில் தொங்க விட்டு விடுவார்கள் போலும்.
இந்தியாவின் எல்லைப் புறங்களையே காப்பாற்ற முடியாத நிலையில் திணறிக் கொண்டிருக்கும் இந்தியா குட்டி நாடுகளையெல்லாம் ஆக்கிரமிக்கிறதாம்! அதை விட கொடுமை நேபாளத்தை இந்தியா அச்சுறுத்துகிறதாம்! தற்போது ஆட்சிப்பொறுப்பேற்கும் மாவோயிஸ்ட்டுகள் கூட இந்த நிலையைக் கேட்டால் கெக்கலிப்பார்கள். மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூட கூறியிருப்பதென்ன இந்தியாவுடன் எங்களுக்கு பாரம்பரியமான உறவு உள்ளது. எனவே சீனாவை விட அதிகமான நெருக்கத்தை இந்தியாவுடன் வைத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். இங்கே இருக்கக்கூடிய ம.க.இ.க. போலி நக்சலிசவாதிகள் போல் அவர் கருதியிருந்தால் இந்தியாவை குட்டி ஏகாதிபத்தியம் என்று விமர்சித்திருக்க மாட்டாரா?
அதைவிட கொடுமை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்ததாம்! பிரச்சினையே இங்கே தலைகீழாக இருக்கும்போது இந்தியா ஆக்கிரமிக்கிறது என்று ம.க.இ.க. கூறுவது அதன் அரசியல் பழுத்த முதிர்ச்சியினையே வெளிப்படுத்துகிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை உட்உட ஆசிய பகுதியில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குவது ஏகாதிபத்திய நாடுகளின் சதியே! கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காஷ்மீரை அமெரிக்க ஏகாதிபத்தியம் தனி நாடாக்குவதற்கான முயற்சியில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது. இந்நிலையில் அது பாகிஸ்தானுக்கு கொம்பு சீவி விட்டு... இந்தியாவுக்கு எதிராகவும் - பொருளாதார ரீதியாக பலம் பெற்று வரும் சீனாவுக்கு எதிராகவும் பயன்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வலையில் இந்தியாவைம் தற்போது இழுப்பதற்கு முயற்சித்து வருகிறது. இந்திய ஆட்சியாளர்களின் இந்த கேடுகெட்ட கொள்கையை எதிர்த்து இந்தியா மக்கள் இடதுசாரிகள் தலைமையில் வீரமுடன் எதிர்த்து வருவததால் அணுசக்தி திட்டம் ஈராக்கிற்கு படை அனுப்புவது உள்ளிட்ட திட்டங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கின்றன. உண்மை இவ்வாறிருக்க இந்தியா ஒரு துணை வல்லரசாக - பேட்டை ரவுடியாக வலம் வருகிறதாம்!
அது சரி, இந்தியா ஒரு அரை காலனி நாடு என்றால், நான்கு நாட்டு அடிமை நாடு என்றால் பாகிஸ்தான் என்ன சுதந்திர நாடா? இது பற்றி ம.க.இ.க. நிலை என்ன?
இந்தியாவின் இறையாண்மைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆபத்து ஏற்படுகிறது என்று நாம் கூச்சல் எழுப்பினால் அய்யய்யோ இந்தியாவால் சுற்றியிருக்கும் குட்டி நாடுகளுக்கு எல்லாம் ஆபத்து என்று ஓலக் குரல் எழுப்புவது எந்த வர்க்கத்தின் நலனை காப்பதற்காக?
மேலும் இந்திய சுதந்திரப்போரில் ஈடுபட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் எந்த தலைமையையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. அதாவது அனைவரும் இந்திய சுதந்திரத்திற்கு துரோகம் இழைத்தவர்கள். மேலும் ஏகாதிபத்திய அடி வருடிகள் யார்? இந்திய கம்யூனிஸ்ட் தலைமை உட்பட. அப்படியென்றால் இவர்கள் யாருடைய வாரிசுகள்! இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட - தியாகவும் புரிந்தவர்களின் தியாகத்தை நாங்களே உயர்த்திப் பிடிக்கிறோம் என்று டமாரம் அடிக்கும் இந்த அல்பவாதிகளின் கட்சித் திட்டம் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி விடுகிறது.
எனவே இவர்களுக்கும் இந்திய சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இவர்களது உண்மையான வர்க்க குணம் ஏகாதிபத்திய சீர்குலைவுவாத சேவை செய்வதே அதை உறக்க கத்தி வியாபாரம் செய்ய துணியும் தலைமையே ம.க.இ.க.

No comments: