April 17, 2008

விலை உயர்வு! யெச்சூரி எச்சரிக்கை!!


Cartoons: Thanks Webulagam

விலை உயர்வு ஒரு சாதாரண பிரச்சனை அல்ல என்றும், அதனால் ஏற்படும் அனைத்து விதமான சமூக விளைவுகளையும் முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார்.
புதனன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:
‘‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருந்தபடி விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் தொடங்கி இருக்கிறது. விலைவாசிப் பிரச்சனை என்பது நாட்டு மக்களை மிகவும் பாதித் திருக்கக்கூடிய பிரச்சனை என்பதால்தான், இதற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, இது பல்வேறு முனைகளிலும் மக்களைத் தாக்கும் ஒரு பிரச்சனையுமாகும். குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பது, ‘‘ஒளிர்கின்ற” இந்தியா வுக்கும் ‘‘துன்பப்படுகின்ற’’ இந்தியாவுக்கும் இடையில் உள்ள இடைவெளியை மேலும் கடுமையான முறையில் அதிகமாக்கும்.
உதாரணமாக மத்திய அரசு, குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கியிருக்கிறது. இப்போதுள்ள விலைவாசி உயர்வி னால், அந்தக் குழந்தைகளுக் காக அரசு ஒதுக்கியுள்ள ஒதுக் கீடும் உயரப்போவதில்லை. அது அப்படியேதான் இருக்கும். விளைவு, குழந்தைகளுக்கு வாங்கக்கூடிய அத்தியாவசியப் பொருள்களின் அளவு குறையும். இதனால் அக்குழந்தைகளுக்கு போதிய அளவுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பது குறையும்.
அதேபோன்று இன்றைய தினம் நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களில் 70 முதல் 80 சதவீதம் வரை போதிய அளவிற்கு உணவு உட்கொள்ள இயலாததால் ரத்தச் சோகையால் பீடிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வினால் அவர்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவர். எதிர்கால இந்தியாவை சுமந்திருக்கும் அவர்கள் இவ்வாறு பாதிக்கப்படு வது, எதிர்கால இந்தியாவையே பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு விலைவாசி உயர்வினால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தையும் முழுமையாக நாம் மதிப்பிட்டாக வேண்டும்.
அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலை உயர்வால் மக்கள் அப்பொருள்களை வாங்க முடியாமல் மிகவும் கொடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள் ளனர்.
எனவேதான் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறோம். சமையல் எண்ணெய் உட்பட 25 அத்தியாவசியப் பொருள்களை ஊக வர்த்தகத் தில் ஈடுபடுத்துவதிலிருந்து தடை விதிக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணிகளில் ஊக வர்த்தக முறையும் ஒன்று என்பதால் இதனைச் செய்திட அரசு உடனடியாக முன்வர வேண்டும்.
இரண்டாவதாக, விலைவாசி உயர்வு என்பது உலக அளவில் உள்ள ஒரு பிரச்சனை என்று சொல்லி மத்திய அரசு தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது. அமெரிக்காவில் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைச் சரிக்கட்டிட அங்கு விலைவாசி உயர்வு செயற்கையாக ஏற்படுத் தப்பட்டிருக்கிறது. பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்கள் நஷ்டத்தைச் சரிசெய்வதற்காக அங்கு அத்தியாவசியப் பொருள்களில் ஊக வர்த்தக முறை அமல்படுத் தப்பட்டிருக்கிறது. சர்வதேச நிதி நிறுவனங்கள் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஊக வர்த்தக முறை மூலம் அத்தியா வசியப் பொருள்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. உலக அளவில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
எனவேதான் ஊகவர்த்தக முறையை நம் நாட்டில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அடுத்து, மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்து வந்த அத்தியாவசிய உணவுப் பொருள்களின் அளவைக் கடுமையாக வெட்டிச் சுருக்கி இருக்கிறது. அதனை சரி செய்து ஏற்கனவே அளித்திட்ட அளவிலேயே உணவுப் பொருள்களை வழங்கிட வேண்டும். குறிப்பாக கேரளா வுக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் டன் அரிசி வழங்கப்பட்டு வந்தது. அதனை வெட்டிச் சுருக்கி இப் போது வெறும் 21 ஆயிரம் டன்னாகக் குறைத்திருக்கிறது. அதே போன்று மேற்கு வங்கத்திற்கும் 2 லட்சம் டன் கோதுமை அனுப்பப்பட்டு வந்தது. இப்போது வெறும் 62 ஆயிரம் டன்னாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. இவற்றைச் சரி செய்து முன்பு அனுப்பிய அள விற்கு அனுப்பிட வேண்டும். பொது விநியோக முறையில் அனைவருக்கும் உணவுப் பொருள்களை வழங்கிட வேண்டும்.
அடுத்து, முந்தைய பாஜக கூட்டணி அரசு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் முக்கிய ஷரத்துக்களை எல் லாம் நீக்கிவிட்டது. இதனால் அந்தச் சட்டத்திற்கு கள்ளச்சந் தைக்காரர்கள் எவரும் இப் போது பயப்படுவது கிடையாது. எனவே அச்சட்டத்தை மீண்டும் முன்பிருந்தது போலவே கடு மையானதாக மாற்ற வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோரைக் கடுமையான முறையில் தண்டிக்கக்கூடிய வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
நான்காவதாக, நாங்கள் தொடர்ந்து சொல்லிவருவது போல், பெட்ரோலியப் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டு வரியை மாற்றி அமைத்திட வேண்டும். இதன் மூலம் மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மட்டும் 90 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள் ளது. அனைத்து மாநிலங்க ளும் தங்களுடைய விற்பனை வரி மூலம் பெற்றுள்ள வருவாய் வெறும் 60 ஆயிரம் கோடி ரூபாய் என்பதுடன் இதனை ஒப்பிட்டால் இதன் தன்மை யைப் புரிந்து கொள்ள முடியும். பெட்ரோலியப் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டு வரி விதிப்பதனால், அதன் விளைவாக பல் வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாய நிலை உருவாகி விடுகிறது. எனவேதான் இதனை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியைக் குறைத்திட இந்நான்கு நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

No comments: