May 04, 2009

கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு! கருணாநிதியின் புளுகு 2 நாளைக்கு!


"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு" என்பது தமிழ் சொல்வழக்கு. அதுபோல ஆளும் திமுக அரசு எதைத் தின்றாவது பித்தம் தெளிய வேண்டும் என்பது போல், எதைச் செய்தாவது தேர்தலில் வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தில்லு முல்லுகளை செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் மூன்று முன்னர் மாநகர பேருந்துகளின் கட்டம் குறைக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறய திமுக மீது அனைத்து எதிர்க்கட்சிகளும், ஜனநாயக உள்ளங்களும் கடுமையாக கண்டித்தன. தமிழக தேர்தல் கமிஷனும் இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்று தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் இது குறித்து புகார் செய்தது.
மறுபுறத்தில் இது குறித்து கருணாநிதியும், கே.என். நேருவும் ஆளுக்கு ஆள் மாறி, மாறி "நாங்கள் ஏற்றவும் இல்லை இறக்கவும் இல்லை" என்று லாலி பாடியதோடு 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்த நடைமுறையைத்தான் கடைப்பிடிக்கிறோம் என்று அபாண்டமான பொய்யை சுமத்தினார்கள்.
மறுபுறத்தில் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தான் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் இது குறித்து வலுவான கண்டனத்தை தெரிவித்ததோடு, இவ்வளவு நாள் ஏற்றிய கட்டணங்களை திமுகவினர் கொள்ளையடிப்பதற்கும், பொய் கணக்கு எழுதி அந்தப் பணத்தை சுருட்டிக் கொள்வதற்கும் செய்யப்பட்ட சதி வேலை என்பதை அம்பலப்படுத்தினார்.
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் மே தினக் கூட்டத்தில் சென்னையில் உரையாற்றியபோது, சென்னை மாநகரத்தில் மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு நாளைய வருமானம் 1.75 கோடி என்றும், தற்போது கட்டணம் குறைக்கப்பட்ட பின்னர் அது 1.25 கோடி மட்டுமே வருமானமாக உள்ளது என்று கூறியதோடு சென்னை மாநகரத்தில் மட்டும் நாள்ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்படுவதாக அம்பலப்படுத்தினார்.
இதன் மீது மத்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளரை அழைத்து விசாரித்தது. தற்போது இன்று காலை முதல் திடீரென்று ஏற்கனவே இருந்த அதே நிலைக்கு பேருந்து கட்டணங்கள் உயர்ந்து விட்டது. டீலக்ஸ் பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்றும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாய் என்றும், எம். சர்வீசில் குறைந்தபட்ச கட்டணம் 2.50 ரூபாய் என்றும் மாறிவிட்டது. நாங்கள் ஏற்றவும் இல்லை இறக்கவும் இல்லை என்று வசனம் பேசியவர்கள் தற்போது முகத்தில் கரியை பூசிக் கொண்டுள்ளனர். இது யாரை ஏமாற்றுவதற்காக இந்த நடவடிக்கை. அதுவும் போக்குவரத்து மந்திரி நேரு கூறும்போது, பேருந்துகளை தேவைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அதிகப்படுத்தி பயன்படுத்தினோம் என்று வினோதமான விளக்கம் கூறினார். அது சரி தற்போது ஏன் அதைச் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் வெள்ளை கலர் போர்டு பேருந்துகளையாவது அதிகமாக இயக்கலாமே! ஏன் முடியவில்லை. கொள்ளைக்காரன் புத்தி கொள்ளையடிக்கத்தான் போகும் என்பதுபோல தமிழக அரசு மறைமுகாக பிக்பாக்கெட் அடிக்கத் துணிந்து விட்டது. மக்கள் உங்கள் முகத்தில் கரியை பூச காத்திருக்கிறார்கள்.
கால் முளைத்து, சிறகு முளைத்து பறக்கும் பேருந்து கட்டணம் தமிழக அரசின் சாதனைகளிலேயே தலயாய சாதனைதான்! யாருமே ஏற்றாமலேயே தானாக ஏறிக் கொள்ளும் அதிசயம் தமிழகத்தில் மட்டும்தான் - அதுவும் கருணாநிதி ஆட்சியில் மட்டும்தான் நடக்கக்கூடியது.

May 01, 2009

மே தின வாழ்த்துக்களும்! நாம் சந்திக்கும் நெருக்கடிகளும்!!

உலகம் 123வது மே தினத்தை சிறப்போடு கொண்டாடி வருகிறது. மே தினம் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாள். எட்டு மணி நேரத்தை பெற்றெடுத்த வீரத் திருநாள். 1886-இல் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரத்தில் உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தால் பெற்றெடுத்ததே எட்டு மணி நேர வேலை. உழைக்கும் வர்க்கம் தனது உயிர் வாழ்தலுக்காக முதலாளித்துவத்துடன் ஓயாது, ஒழிச்சலின்றி போராட வேண்டியிருக்கிறது. அன்று மட்டுமல்ல; இன்றும்தான். முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டும் வரை இந்தப் போராட்டத்திற்கு ஓய்வே கிடையாது!

உலகம் இன்றைக்கு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்று பிரச்சாரப்படுத்தப்படுகிறது. இது ஏதோ, திடீரென்று யாருக்கும் தெரியாமல் ஏற்பட்டதுபோல் ஊடகங்களின் வழியாக ஊடுருவுகிறது. யாரால் தோற்றுவிக்கப்பட்டது இந்த நெருக்கடி? இதனால் பாதிக்கப்படப்போவது யார்? என்ற கேள்விகள்தான் மக்கள் மனதில் முட்டி மோதவேண்டியவை. ஆனால், மக்களின் மனங்களில் எல்லாம் ‘பொருளாதார நெருக்கடி’ என்று கண்ணீரை கசிய வைத்து விட்டது முதலாளித்துவம்.

உலக ‘நிதி மூலதனத்தை’ தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ள, பன்னாட்டு பெரு முதலாளிகளும், ஏகாதிபத்திய சுரண்டல் சக்திகளும், பணத்தை வைத்து பணத்தை பெருக்க வைத்தன. பணங்கள் அனைத்தும் பணம் காய்க்கும் மரங்களாக மாறின அவர்களுக்கு, பணம குட்டிப்போடும் அபூர்வ எந்திரமாக மாறியது முதலாளிகளுக்கு; அதாவது, பணத்தை உற்பத்தி மூலதனமாக மாற்றுவதற்கு பதிலாக, பணத்தையே பெருக்க வைக்கும் கலையை கற்றதன் விளைவே இன்றைய நெருக்கடி.

உதாரணமாக, 10 ரூபாய் மட்டுமே விலை மதிப்பு கொண்ட பென்சில் ஒன்றை 100 ரூபாய் மதிப்புக் கொண்டதாக மாற்றினர். இந்த பணம் பெருக்கும் மந்திர சூதாட்டம் நடைபெற்றது பங்கு வர்த்தகத்தில், 10 ரூபாய் பொருளின் மதிப்பு ஒவ்வொரு நாளும் செங்குத்தாக உயர்ந்துக் கொண்டே சென்று அது 100 ரூபாயை எட்டியதும்; பணத்தை வைத்து பணத்தை பெருக்கிய பங்கு வர்த்தக சூதாடிகளான - காளைகளும், கரடிகளும் தாங்கள் பெற்ற கொள்ளை லாபத்தை மாயமாய் வேறு ஒரு தொழிலில் திருப்பும்போது திடீரென்று பென்சிலின் உண்மை விலையான ரூ. 10-லிருந்து ரூ. மூன்றுக்கு மாறிவிட்டால் என்ன நடக்கும் பென்சிலின் மீது 100 ரூபாய் மூலதனம் இட்டவரின் பணம் திடீரென மயமாய் 97 ரூபாய் காணாமல் போய்விடும். இது எங்கே போனது? யாருக்கு போனது? என்பதுதான் கேள்வி! இப்படித்தான் பெரும் நிறுவனங்களும், பன்னாட்டு வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் பணத்தை வைத்து சூதாட ஆரம்பித்து மதிப்பிழந்த மண்ணுக்கு கூட விண்ணை விலைக்கு வாங்கும் அளவுக்கு உயர்த்தி பின்னர் அதை அப்படியே தொப்பென்று போட்டு விட்டன. இப்படி ஏற்பட்டதுதான் இந்த முதலாளிய நெருக்கடி. அதாவது, இதனை உருவாக்கியது சொத்தாசை பெற்ற முதலாளிகள். இதில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடமில்லை! எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்தான்.


அமெரிக்காவில் இப்படித்தான் வங்கிகள் ஏராளமானவர்களுக்கு வீடு வாங்குவதற்கு கடன் கொடுக்கிறோம். அதற்கு நீங்கள் எந்த டாக்குமெண்டும் காட்ட வேண்டாம்! ஏன் எங்களுக்கு அதனை திருப்பி அடைக்க வழியிருக்கிறதா? என்று கூட நாங்கள் பார்க்க மாட்டோம் என்று ஆசை வார்த்தைகள் காட்டி. கடனை தலையில் கட்டி, அந்த வீட்டையும் பங்கு மார்க்கெட்டில் ஏலம் விட்டு பணத்தை பெருக்கி... பெருக்கி... ஊதி... ஊதி.... ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறியதுதான் இந்த நெருக்கடி. தற்போது பணம் கொடுத்த வங்கிகள் திவாலாகி விட்டது. 10 கோடி ரூபாய் விற்ற வீடுகள் இன்றைக்கு ஒரு லட்சத்திற்கு விலை போகிறது என்றார் பாருங்கள்! பணத்தின் விளையாட்டை! தற்போது இந்த ஒரு லட்சம் கொடுத்து வீடு வாங்குவதற்கு கூட அமெரிக்காவில் ஆள் இல்லையாம்! அதாவது அவர்கள் உருவாக்கிய நெருக்கடி சூறைக்காற்றாய் அவர்களை பூமராங் போன்று தாக்குவதோடு உழைக்கும் மக்களையும், அப்பாவிகளையும் வீதிக்கு தள்ளி விட்டது.

இதனால் என்னென்ன விளைவுகள் தற்போது ஏற்பட்டுள்ளன?
உலகின் கோடீஸ்வர நாடான அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளைக்கு 17,000 வேலைகள் காலியாகின்றன. அதாவது, 17,000 பேர் வீதிக்கு தள்ளப்படுகிறார்கள். வேலை பார்த்த நிறுவனங்களிலிருந்து கழுத்தை பிடித்து தள்ளுகிறார்கள். இந்த எண்ணிக்கை டிசம்பர் 2008லிருந்து துவங்கி கடந்த 5 மாதங்களில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் வேலையிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு 800 பேர் வேலையிழப்பதாக பத்திரிகையாளர் பி. சாய்நாத் கூறுகிறார்.

அமெரிக்காவில் தொடங்கிய இந்த வேலை பறிப்பு நடவடிக்கை - அதாவது முதலாளிகளின் சிக்கன நடவடிக்கை என்றாலே அது தொழிலாளிகளின் கழுத்தில் சுருக்கு கயிற்றை மாட்டுவது என்று அர்த்தம். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 7,72,000 பேர் வேலையிழந்துள்ளனர் அமெரிக்காவில். உலகிலேயே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா மாறிக் கொண்டிருக்கிறது. 7.2 சதவிகிதம் வேலையின்மை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. உண்மையில் இது 15 சதவிகிதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பொருளாதார நெருக்கடியால் அனைத்து தொழில்களும் ஆட்டம் கண்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் இதன் தாக்கம் எந்த அளவிற்கும் குறையாத வகையில் சுனாமி அலைகளைப் போல் தாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் ஐ.டி. துறையில் மட்டும் இரண்டு லட்சம் வேலைகள் பறிபோயுள்ளனர். மேலும் ஒரு லட்சம் பேர் வரும் ஆண்டுகளில் வேலையிழப்பர் என்று கூறப்படுகிறது. இது தவிர, டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் என்று பெருந்தொழில்கள் எல்லாம் இன்றைக்கு தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இதன் பக்க விளைவாக 5 பேர் முதல் 100 பேரை வரை செய்யும் சிறு தொழில்கள் எல்லாம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உற்பத்தியில்லாமல் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இது தவிர பல இடங்களில் கடுமையான சம்பளவெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வேலை! ஓ.டி., இன்சென்டிவ் என்று வேலைபார்த்த அசோக் லேலண்ட் தொழிலாளர்களின் வருமானம் 20,000த்திற்கும் குறையாமல் இருந்தது. இன்றைக்கு அவர்களின் வருமானம் 5,000த்திற்கு சென்று விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைச் சூழலுக்கு பழக்கப்பட்டு விட்ட தொழிலாளர்கள். தற்போதைய பண நெருக்கடியால் குடும்பத்தில் நிம்மதியிழந்து தவிப்பது பெரும் கதையாக மாறிக்கொண்டுள்ளது. இவைகள் ஒருபுறம் என்றால், சென்னை - ஸ்ரீ பெரும்புத்தூரில் உள்ள ஹூண்டாய் மோட்டர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலளிகள் தங்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை வேண்டிய இரண்டு - மூன்று ஆண்டுகளாக களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். விளைவு என்ன? சங்கம் வைக்க உரிமையில்லை என்று நிர்வாகம் மறுக்கிறது. இதனால் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் பந்தாடப்படுகின்றனர். பழிவாங்கப்படுகின்றனர். 65 பேரை வேலை நீக்கம் செய்துள்ளது நிர்வாகம். 34 பேரை இடைநீக்கம் செய்துள்ளனர். 7 பேரை வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளது. 1500 கேஷூவல் தொழிலாளிகளை பணி நீக்கம் செய்துள்ளது. தற்போது சங்கம் வைக்கும் உரிமை வேண்டி கடந்த ஒரு வாரகாலமாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளிக்கு ஆதரவாக சிஐடியூ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் நின்று போராடி வருகிறது. அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நேரடியாக இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, இதற்காக நாடு தழுவிய முறையில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தை ஓயாமல் ஒளிபரப்பிய ஊடகங்கள் பாதிக்கப்படும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக சில நிமிடங்கள் கூட ஒளிபரப்ப முன்வருவதில்லை என்பதிலிருந்தே இவர்களின் வர்க்கத்தன்மையை அறிய முடியும்! முர்டோக் போன்றவர்களின் முரட்டுக்கரங்கள்தான் ஊடகங்களை கட்டுப்படுத்துகின்றன. இதற்கு இந்திய ஊடகங்களும் எந்தவிதத்திலும் சளைக்காதவர்கள் அல்ல.


எனவே, இந்த மே தினம் என்பது சவால்கள் மிகுந்த மே தினமாக நம்முன் நிற்கிறது. முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்டது கரையோர அப்பாவி மீனவர்கள் என்பதுபோல் தொழிலாளிகளும், உழைக்கும் மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் மன்மோகனாமிக்ஸ், சிதம்பர நடனம் மற்றும் அத்வானி வகையறாக்களை இந்த தேர்தலில் தோல்வியடைச் செய்வது இந்த மே தினக் கடமையாக நம் முன் நிற்கிறது. மாற்று அரசு ஒன்று மத்தியில் ஆட்சியமைப்பதன் மூலமே இந்த நெருக்கடியிலிருந்து சிக்கித் தவிக்கும் மக்கள் மூச்சு விடுவதற்கான ஆரோக்கியமான காற்று சுவாசிப்பதற்கு கிடைக்கும்! மே தின சபதமேற்போம்! பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கொள்கை ஏஜண்டுகளான காங்கிரஸ் - பாஜகவை வீழ்த்துவோம்! மூன்றாவது மாற்றை மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவோம்!