Showing posts with label அண்ணா. Show all posts
Showing posts with label அண்ணா. Show all posts

October 02, 2008

அண்ணா நூற்றாண்டுக்கு அனுமதி மறுப்பா?




பேரரறிர் அண்ணாவின் நூற்றாண்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் பெரியார் - அண்ணாவின் முற்போக்கு கருத்துக்கள் வெகு மக்களிடம் கொண்டுச் செல்லப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரசை மூட்டை முடிச்சுகளோடு ஓட விட்டவர் அண்ணா. 1967க்குப் பின் காங்கிரசால் தமிழகத்தில் கால் வைக்க முடியவில்லை. தற்போது எப்படியாவது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையின் மூலம் மீண்டும் தங்களை தமிழக ஆட்சியின் பங்காளிகளாக மாற்ற முனைந்துக் கொண்டிருக்கின்றனர். இருக்கட்டும்.

அண்ணாவின் ஆரிய மாயை - இந்துத்துவ சக்திகளுக்கு இன்றும் ஒரு சவால், அதே போல் அவரது செவ்வாழை சிறுகதை நிலப்பிரபுத்துவ கோரத்தை எளிய மக்களிடம் கொண்டுச் சென்ற இலக்கிய ஆயுதம். மதவாதிகள் - குறிப்பாக இந்துத்துவ சங்பரிவாரத்தை தனது இறுதிக்காலம் வரை சமரசம் இன்றி தோலுரித்தவர் அண்ணா.

இன்றைக்கு அதே அண்ணாவின் தம்பியின் ஆட்சியில் அண்ணா நூற்றாண்டை சிந்தாதரிப்பேட்டையில் கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவையில் சீமான் கலந்து கொண்ட கூட்டத்தில் தாக்குதல் தொடுத்த இந்துத்துவவாதிகளை கண்டித்து சிந்தாதரிப்பேட்டையில் கூட்டம் நடத்துவதற்கு சிந்தாதரிப்பேட்டை காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டதாம். ஆனால் அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர். அதற்கு அவர்கள் எழுத்து மூலமாக சொல்லப்பட்ட காரணம்தான் வேடிக்கையானது.

இங்கே இராமகோபாலன் தங்கியிருக்கிறார். மேலும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகமும் இங்கேதான் இருக்கிறது. எனவே கூட்டத்திற்கு அனுமதியில்லை என்று கூறப்பட்டதும்.

இதனையடுத்து அதே அமைப்பின் சார்பில் அண்ணா நூற்றாண்டு கொண்டாடுவதற்கும் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டதும். அப்போதும் மேற்கண்ட அதே சுலோகத்தை அச்சரம் பிசகாமல் சொல்லியிருக்கிறது காவல்துறை.

இராமகோபாலன் தங்கியிருப்பதாலும் - ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் இருப்பதாலும் அனுமதியில்லை என்று சொல்லுவதுதான் வேடிக்கையானது - வேதனையானது.

யார் எங்கிருந்தாலும் உரிய பாதுகாப்பு கொடுத்து கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டிய காவல்துறையே இப்படி கூறினால், இனி அவர்கள் எங்குபோய் அனுமதி கேட்பார்கள். ஒருவேளை அத்வானியும் - வாஜ்பாயும் இந்தியாவில் உள்ளூரில் இருப்பதால் பா.ஜ.க.கவுக்கு எதிராக யாரும் பேசக் கூடாது, யாரும் கூட்டம் போடக் கூடாது என்று சொன்னால் எப்படியிருக்குமோ? அதுபோலத்தான் இருக்கிறது.

அண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்,  ஜனநாயகம் என்பது வெறும் ஆட்சிமுறை மட்டுமன்று, அது ஒரு வாழ்கை நெறி என்று மக்களுக்கு அறிவுறுத்தி ஜனநாயகம் பேசியவர். கடைப்பிடித்தவர். ஆனால், ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் இந்த காவிக் கும்பலுக்காக ஜனநாயகம் பலியிடப்படுகிறது அண்ணாவின் தம்பியாட்சியில்.