September 16, 2006

அமெரிக்க சர்வாதிகாரம்: கியூபா கடும் தாக்கு

"பொருளாதார வல்லமையை பயன்படுத்தி உலக நாடுகளின் மீது அமெரிக்கா முழுமையான சர்வாதிகாரம் செலுத்தி வருகிறது,''
என்று அமெரிக்கா மீது கியூபா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அணி சாரா நாடுகள் இயக்கத்தின் ("நாம்') உச்சி மாநாடு கியூபா தலைநகர் ஹவானாவில் நடைபெற்று வருகிறது.
இம்மாநாட்டை நடத்தும் கியூபா, அமெரிக்காவின் "சர்வாதிகாரப் போக்கை' ஒரு பிடிபிடித்தது.
நாம் வாழும் இன்றைய உலகம் நீதியற்ற, நெறியற்ற, சமத்துவமற்ற நாள்களாக நாளுக்குநாள் மாறிக்கொண்டிருக்கிறது. யுத்தம் மற்றும் பொருளாதார பலத்தைப் பிரயோகித்து உலக நாடுகளின் மீது முழுமையான சர்வாதிகாரம் செலுத்தப்பட்டு வருகிறது என்று கியூபா துணை அதிபர் கார்லோஸ் லாகி கூறினார்.
அணி சாரா நாடுகள் மாநாட்டு பிரதிநிதிகள் கூட்டத்தில் புதன்கிழமை பேசினார் கார்லோஸ் லாகி.
மேலும் அவர் பேசியதாவது: ஒரு நாடு (அமெரிக்கா) மற்றொரு நாட்டின் மீது பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் நெருக்கடி கொடுப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இதனால் எந்த நாட்டின் மீதும் ஊடுருவி தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக எத்தகைய அழிவையும் அந்த நாடு மேற்கொள்ளும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய, நியாயமான, பொருளாதார சமத்துவம் ஏற்பட அணி சாரா நாடுகளாகிய "நாம்' பாடுபட வேண்டும். இந்நோக்கில் இன்றைய காலகட்டத்தில் "புதிய உலகம்' அமைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது சாத்தியமும் கூட. சர்வதேச உறவுகளுக்கான புதிய கொள்கைகளை "நாம்' உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
யுத்தம், பயங்கரவாதம், அநீதி, சமத்துவமின்மை, இரட்டை நிலைப்பாடு போன்ற காரணங்களுக்காக "நாம்' இணைந்து செயல்படவில்லை. அமைதி மற்றும் பொதுநீதிக்காக "நாம்' செயல்படுகிறோம்.
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் இழைக்கும் கொடுமைகள் போன்றவற்றை "நாம்' அனுமதிக்கக்கூடாது என்றார் லாகி.
உச்சி மாநாட்டின் தீர்மானங்களை உருவாக்குவதற்காக உலகின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அணி சாரா இயக்க நாடுகளின் ("நாம்') தலைவர்கள் புதன்கிழமை விவாதித்தனர்.
அதன்படி, "நாம்' வெளியிடவுள்ள வரைவு பிரகடனத்தில், "காஸôவில் இருந்து இஸ்ரேல் தனது துருப்புகளை விலக்கிக்கொள்ள வேண்டும்; சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன அதிகாரிகளை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒரு நாடு அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்த தடை செய்யப்படுகிறது; அதேவேளையில், மற்றொரு நாடு அணு ஆயுதங்களை சேகரித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இத்தகைய அநீதியான போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.
நாடுகளிடையே ஒற்றுமையும் சமாதானமும் ஏற்பட உண்மையாக பாடுபடும் அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை மாற வேண்டும்; மாற்றியாக வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறை, பாகுபாடு, போதை மருந்து கடத்தலுக்கு எதிரான சர்வதேச சவால்கள், சுற்றுச்சூழல் சீர்கேடு, உள்நாட்டு மக்களுக்கான பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் "நாம்' தலைவர் விவாதித்தனர்.
Thanks : Dinamani

No comments: